Friday, July 6, 2018

இந்தப் பையனை ஞாபகமிருக்கா? இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

By சரோஜினி | Published on : 04th July 2018 01:01 PM |



சிலரது டிரான்ஸ்ஃபர்மேஷனைக் கண்டுபிடிக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் பிரபல ஆன்லைன் இணைய இதழொன்றில் சலங்கை ஒலி விமர்சனம் வாசித்தேன். அதில், அப்படத்தில் பெரிய நாட்டியக் கலைஞனாக விரும்பும் கமல்ஹாசன் அதற்காக இரு புகைப்படக் கலைஞனை வரவழைத்து விதம், விதமாக புகைப்படங்கள் எடுக்கச் சொல்வார். அந்தக் புகைப்படக் கலைஞன் ஒரு சிறுவன். அவன் கமலை அவர் குனியும் போது, நிமிரும் போது என ஏடாகூடமான நேரங்களில் ஏடாகூடமான விதங்களில் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி மொத்த புகைப்படங்களையும் வீணாக்கி விடுவான். இந்தக் காட்சி படம் பார்க்கும் போது சிரிப்பை வரவழைக்கும். அந்தச் சிறுவனை அதன் பின் கே.பாக்யராஜின் சின்ன வீடு திரைப்படத்தில் நாயகியான கல்பனாவின் தம்பியாகக் கண்டு களித்திருப்போம். அக்காவின் திருமணத்தில் பரீட்சையின் காரணமாகக் கலந்து கொள்ள முடியாத சிறுவன் சக்கி, பிறகு முதல்முறையாக அக்காவையும், மாமாவையும் காண வேண்டி அவர்களது வீட்டுக்கு வருகை தருவான். வந்தவனைப் பார்த்து மாமியாரான கோவை சரளா, கன்னத்தைத் கிள்ளி, தன் கணவரிடம், ஏனுங்க, நாளைக்கு நமக்குப் பேரன் பிறந்தாலும் அவன் இப்படித்தான் இருப்பாம் போல நல்லா மொழு, மொழுன்னு’ தலைகாணிக்கு உறை தச்சுப் போட்டாப்ல’ என்பார். அந்தப் பையனை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியுமா? முடியாது, ஆனாலும், அந்தப் பையனைப் பற்றி அதைத் தாண்டி பெரிதாக எதுவும் நமக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இப்படித்தான் பலரை நாம் ரசித்திருப்போம். ஆனால் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது அந்தச் சிறுவனைப் பற்றித்தான்...

அந்தச் சிறுவன் இன்று ஒரு பிரபல இயக்குனர்.

அவர் பெயர் சக்ரி டுலெட்டி.



கமலின் உன்னைப் போல் ஒருவன், இதையே தெலுங்கிலும் ‘ஈநாடு’ என்ற பெயரில் மோகன்லால் கேரக்டருக்கு வெங்கடேஷை வைத்து இயக்கியிருக்கிறார், அஜித்தின் பில்லா 2, சோனாக்‌ஷி சின் ஹாவை வைத்து வெல்கம் டு நியூயார்க் என்ற பெயரில் ஒரு இந்தித் திரைப்படமும் இயக்கியிருக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை வைத்து ‘கொலையுதிர்காலம்’ மற்றும் தமனா நடிப்பில் உருவாகி வரும் ‘காமோஷி’ இந்திப்படமும் இவரது இயக்கத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் அளவில் பணிகள் முடிக்கப்பட்டு வெளியீடுக்காகக் காத்திருக்கின்றன.

சக்ரி அமெரிக்காவில் VFX டிகிரி முடித்தவர். படிப்பை முடித்து விட்டு டிஸ்னி நிறுவனத்தில் VFX துறையில் பணியில் இருந்த போது... கமல் தசாவதாரத்துக்காக அமெரிக்கா சென்றவர் சக்ரியின் திரைப்படத் தொழில்நுட்பத்திறமையை அறிந்து தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார். குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் அதன் பின் சக்ரியை தமிழ் சினிமா மீண்டும் அடையாளம் கண்டு கொண்டது உன்னைப் போல் ஒருவனில் இயக்குனராகத்தான். தசாவதாரத்தில் கமலின் நண்பராக ஓரிரு காட்சிகளில் வந்து போனாலும் சலங்கை ஒலி காலத்து குழந்தை நட்சத்திரம் தான் இவர் என எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சக்ரியின் அப்பா தம்பு தொழில் அடிப்படையில் டாக்டராக இருந்தாலும், திரைப்படத்துறையின் மீதிருந்த மோகத்தால், அவ்வப்போது திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதித் தந்து தனது ஆர்வத்தைத் தணித்துக் கொள்வார். அப்படித்தான் அவருக்கு பிரபல இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நெருக்கமானார்கள். அப்பா மூலமாகத்தான் சக்ரிக்கு திரைப்பட உலகம் பரிச்சயமானது. அப்படித்தான் முதல்முறையாக கே.விஸ்வநாத்தின் (தெலுங்கில் சாகர சங்கமம்) சலங்கை ஒலியில் குழந்தை புகைப்படக்காரராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமானார்.

தமிழ் ரசிகர்களுக்கு அந்தச் சிறுவனை மறந்திருந்தாலும்... கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் அக்காவையும், அவளது கணவரையும் பார்க்க வந்து விட்டு அட்சர சுத்தமாக ஆங்கிலம் பேசும் கொழு, கொழு சிறுவனை மறந்திருக்காது. சக்ரியின் தெளிவான ஆங்கிலத்துக்கு காரணம் அவரது குடும்பம் அந்தக் காலத்திலேயே மெத்தப் படித்த குடும்பம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவரது குடும்பத்தில் இதுவரை 30 முதல் 40 டாக்டர்கள் இருக்கலாம் என சக்ரி தனது நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் ஒரு டாக்டர்!
இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவக்கம்

Added : ஜூலை 06, 2018 01:48

சென்னை:இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு மட்டும், ஒற்றை சாளர கவுன்சிலிங் நேரில் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு கவுன்சிலிங் துவங்குகிறது. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை மறுநாள் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00, 10:30 மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, 'இ - மெயில்' மற்றும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்பட்டுஉள்ளன.
மெட்ரோ உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி

Added : ஜூலை 06, 2018 01:47

சென்னை:மெட்ரோ ரயில் பயணியருக்கு, நிலையங்களில் உள்ள தனியார் ஓட்டலில், 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரல் வரையும், விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும்,மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில்பயணியர் வருகையைஅதிகரிக்க, பல்வேறு ஏற்பாடுகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துவருகிறது.

இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் ஓட்டலில், பயணியருக்கு, பாதி கட்டணத்தில் உணவுகள் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.இதன்படி, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள, உடுப்பி ருசி ஓட்டல்களில் சாப்பிடும் பயணியருக்கு, நேற்று முதல், 20ம் தேதி வரை, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது.

திருடனை பிடித்த நிஜ, 'ஹீரோ'வுக்கு டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை

Added : ஜூலை 06, 2018 00:41




சென்னை : செயின் பறிப்பு திருடனை, சினிமா, 'ஹீரோ' போல, துணிச்சலாக, தனி நபராக விரட்டிப்பிடித்த சூர்யாவுக்கு, சென்னை மாநகர போலீசார், டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளனர்.

சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர், அமுதா, 50; டாக்டர். வீட்டின் கீழ் தளத்தில், 'கிளினிக்' நடத்தி வருகிறார். இவர், ஏப்ரல், 17ம் தேதி இரவு, 8:40 மணிக்கு கிளினிக்கில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த, 10 சவரன் செயினை பறித்து தப்பினான். கிளினிக்கை விட்டு வெளியே வந்த, அமுதா கூச்சலிட்டார்.

அப்போது, அங்கு நின்றிருந்த, அண்ணாநகர், சி.வி.நகர், பாரதி தெருவைச் சேர்ந்த சிறுவன், சூர்யா 17, துணிச்சலாக, சினிமா ஹீரோ போல, செயின் பறிப்பு திருடனை, மின்னல் வேகத்தில் துரத்தினான். திருடனை கீழே தள்ளி, நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, செயினை மீட்டான். அவனது துணிச்சல் நடவடிக்கையால் வியந்த, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது, 'ஏசி மெக்கானிக் கடையில் வேலை பார்க்கிறேன். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லை. உடன் பிறந்தோரும் கிடையாது. ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுங்கள்' என, கமிஷனரிடம், சூர்யா கேட்டுள்ளான்.

ஒன்பதாம் வகுப்பு படித்துள்ள அவனை, போலீசார் தொடர்ந்து படிக்க வைக்க முயன்றனர். ஆனால், அவன், 'வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' என, தெரிவித்து விட்டான். எனவே, அவனுக்கு, 18 வயதாகட்டும் என, போலீஸ் கமிஷனர் காத்திருந்தார்.

தற்போது, அண்ணா சாலையில் உள்ள, டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'ஏசி மெக்கானிக்' வேலை வாங்கி தந்துள்ளார். சென்னை, வேப்பேரியில், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், நேற்று, டி.வி.எஸ்., நிறுவன, மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர், சீனிவாசன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

சூர்யாவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 'ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ்' நிர்வாகிகள் மற்றும் எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் தலைவர், ரவி பச்சமுத்து ஆகியோர், மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

'ஒளிவீசும் எதிர்காலம்!'

டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலை பெற்ற சூர்யா கூறியதாவது: திருடனை பிடிக்கும் போது, பலர் உதவி செய்வர்; பாராட்டுவர் என, நினைத்து பார்க்கவில்லை. போலீஸ் கமிஷனர், தன் மகன் போல், என் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளார்.

அண்ணா நகர் காவல் நிலைய போலீசார், தங்களின் செல்லப்பிள்ளை போல பார்த்துக் கொள்கின்றனர். டாக்டர் மல்லிகாவும், அவர்களது குடும்பத்தில் ஒருவன் போல் பாசம் காட்டி வருகிறார். அறிமுகமே இல்லாதவர்கள் பாராட்டுகின்றனர். போலீசார் என் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, மூன்று லட்சம் ரூபாயை, 'டிபாசிட்' செய்துள்ளனர்.

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான், போலீசாரால் குற்றங்களை குறைக்க முடியும். திருடனை துணிச்சலுடன் பிடிக்கும் போது, வேகம், விவேகம் இரண்டும் முக்கியம். செருப்பு இல்லாமல், பள்ளிக்கு சென்றுள்ளேன். 'ஏசி மெக்கானிக்' கடையில் வேலை பார்த்த போது, என் வருமானத்திற்கு ஏற்ப, செருப்பு வாங்கி அணிந்து வந்தேன். ஒரு நாளாவது, 'ஷூ' போட மாட்டோமா என, ஏங்கியுள்ளேன்.

சென்னை மாநகர போலீசாரால், 'ஷூ' போட்டு, காக்கி சீருடை அணிந்து, டி.வி.எஸ்., நிறுவனத்தில் வேலைக்கு செல்லப் போகிறேன். நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவன் கூறினான்.
கேரளாவில் படித்த மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

Added : ஜூலை 06, 2018 05:28


மதுரை: கேரளாவில் பிளஸ் 2 படித்த மாணவர்களை தமிழக மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி எரும்பிலி அதுல்சந்த் தாக்கல் செய்த மனு: எட்டாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருவனந்தபுரத்தில் படித்தேன். நீட் தேர்வை கேரளாவில் எழுதினேன். 'நீட்' தேர்வில் 339 மதிப்பெண் பெற்றேன். தமிழக மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தேன். மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு வெளியிட்ட பட்டியலில் எனது பெயர் இல்லை.
எனது பெற்றோர் தமிழகத்தில் பிறந்தவர்கள். இங்குள்ள கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள். தற்போதைய இருப்பிடச் சான்று சமர்ப்பித்தேன். கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வழக்கு முடிவுக்குவரும்வரை எம்.பி.பி.எஸ்.,சேர்க்கையில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதுல்சந்த் மனு செய்தார்.
கேரளாவில் பிளஸ் 2 படித்து, தமிழகத்தில் நீட் எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த 2 மாணவர்கள் கவுன்சிலிங்கில் அனுமதிக்க உத்தரவிட மனு செய்தனர். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''மனுதாரர்களை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

'சான்றிதழை பறி கொடுத்த மாணவனுக்கு உதவ தயார்'

Added : ஜூலை 06, 2018 05:34


சென்னை:சான்றிதழ்களை பறி கொடுத்த மாணவன், அரசை அணுகினால், உதவிகள் அளிக்க தயாராக இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர், பூபதிராஜா; மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, சென்னை வந்தார். படிப்பு சான்றிதழ்கள் வைத்திருந்த பையை, பறி கொடுத்து விட்டார். சான்றிதழ்கள் இல்லாததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இது குறித்து, பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்த, உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரலை அழைத்து, அந்த மாணவனுக்கு உதவும்படி தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் முன், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''சான்றிதழ்களை பறி கொடுத்த மாணவனுக்கு, உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால், மாணவன் இதுவரை அதிகாரிகளை அணுகவில்லை,'' என்றார்.
அதற்கு, நீதிபதி வைத்தியநாதன், ''அரசிடம் உதவி கேட்டு, மாணவன் வரும் பட்சத்தில், விரைந்து செய்து கொடுக்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.
காஸ் சிலிண்டர்கள் வெடித்து குடும்பமே பலி கடன்தொல்லையால் மதுரையில் விபரீதம்

Added : ஜூலை 06, 2018 01:36




திருப்பரங்குன்றம்:மதுரையில் கடன் தொல்லையால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து மனைவி, மகளை கொலை செய்த மிட்டாய் வியாபாரி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 37. இவரது மனைவி காஞ்சனா,30, மகள் அக் ஷயா,6. மூன்றரை ஆண்டுகளுக்கு முன், மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் வாடகை வீட்டில் குடியேறினர். மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை வாங்கி சில்லரையில் ராமமூர்த்தி விற்றுவந்தார். காஞ்சனா கடை ஒன்றில் வேலை செய்தார். அக்ஷயா தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 3:00 மணிக்கு வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அருகில் வசிப்பவர்கள் வந்தபோது ராமமூர்த்தி தீக்காயங்களுடன் சத்தமிட்டபடி ஓடிவந்து ரோட்டில் விழுந்தார். '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில விநாடிகளில் வீட்டிற்குள் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டதுடன், தீ வீட்டின் வெளியே பரவியது. அதற்குள் அங்கு வந்த ஆம்புலன்சில் ராமமூர்த்தியை அனுப்பிவிட்டு, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், மணிகண்டன், எஸ்.ஐ., க்கள் மணிக்குமார், சாந்தா ஆகியோர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் காஞ்சனா, அக் ஷயா கருகி கிடந்தனர். இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்த நிலையில் கிடந்தன.

தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்தது தெரிந்தது. துாங்கிக்கொண்டிருந்த மனைவி, மகளை காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொலை செய்த ராமமூர்த்தியும் தீ விபத்தில் சிக்கி இறந்தார்.

போலீசார் கூறியதாவது: ராமமூர்த்திக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். சிலிண்டர் வெடித்த சத்தம் ஒரு கி.மீ., சுற்றளவிற்கு கேட்டுள்ளது. 50 அடி உயரத்திற்கு தீ பரவியுள்ளது.சிலிண்டர் வெடித்ததில் வீட்டு கதவின் ஒரு பகுதி உடைந்து 20 அடி துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டது. வீட்டினுள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை சூழ்ந்திருந்தது, என்றனர்.

கடன் தொல்லையால்ஓராண்டில் 13 பேர் பலி

மதுரையில் கடந்த ஓராண்டில் 13 பேர் கடன்தொல்லைக்கு ஆளாகி இறந்துள்ளனர். கடந்த 2017 செப்., 25ல் மதுரை யாகப்பா நகரில் தனியார் பள்ளி நர்சரி பள்ளி நிர்வாகி குறிஞ்சிகுமரன் மற்றும் குடும்பத்தினர் 8 பேர் விஷம் குடித்தனர். இதில் 7 பேர் இறந்தனர். இந்தாண்டில் ஏப்.,2ல் மதுரை பழங்காநத்தத்தில் மூர்த்தி என்பவரின் மனைவி பிரியா தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த பட்டியலில் ராமமூர்த்தி குடும்பமும் சேர்ந்தது பரிதாபம்.

NEWS TODAY 26.01.2026