Thursday, September 13, 2018

180 மருத்துவ மாணவர், 'அட்மிஷன்' அதிரடியாக ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Added : செப் 12, 2018 22:29

புதுடில்லி: கேரளாவில், விதிமுறைகளை மீறி, இரண்டு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 180 மாணவர்களை சேர்த்ததற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த கருணா மருத்துவக் கல்லுாரி மற்றும் கண்ணூர் மருத்துவக் கல்லுாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டதால், அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு, கடந்த ஆண்டு, கேரள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தன.இதற்கிடையே, அந்தத் தீர்ப்புக்கு எதிராக, மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில், கேரள அரசு, அவசர சட்டம் இயற்றியது. அதன்படி, கருணா மருத்துவக் கல்லுாரியில், 30 பேரும், கண்ணுார் மருத்துவக் கல்லுாரியில், 150 பேரும் சேர்க்கப்பட்டனர். இந்த அவசர சட்டம், பின், அமலாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கும் கேரள அரசின் சட்டம் செல்லாது' என, நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.இதையடுத்து, இந்த, 180 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறியதாக, புதுச்சேரியைச் சேர்ந்த, ஏழு நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த, 700 மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவில், 180 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து ஆந்திர கோயில்களுக்கு சுற்றுலா ரயில்

Added : செப் 13, 2018 00:53

சென்னை : இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், ஆந்திரா கோவில்களுக்கு, சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் மதுரையில் இருந்து வரும் 27ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக, ஆந்திரா செல்லும். ஆந்திர மாநிலத்தில் உள்ள, பத்ராச்சலம், சிம்மாச்சலம், அன்னாவரம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீபீமேஸ்வரசுவாமி, மாணிக்யம்பா, கனக துர்கா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில்களுக்கு, பக்தி சுற்றுலா சென்று வரலாம்.ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு நபருக்கு 7,050 ரூபாய் கட்டணம். ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூரில் சுற்றிப் பார்க்க வாகன செலவு, இதில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 90031 40682 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ம.பி.,யில் தேர்தல் பரீட்சை 323 அதிகாரிகள், 'பெயில்'

Added : செப் 12, 2018 22:28


போபால்: விரைவில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 323 அரசு அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை.மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், 230 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், இந்த மாநிலத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான தேர்வை, தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்த தேர்வை, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ள, 700 அதிகாரிகள் எழுதினர்.இதில், 323 அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், போபால், சிஹோர், குணா, இந்துார் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், துணை கலெக்டர், சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், தாசில்தார் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் கூட, இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒருசில அதிகாரிகளுக்கு, அடிப்படை பற்றி கூட தெரியவில்லை.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்னை. தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களால், எப்படி நியாயமான தேர்தலை நடத்த முடியும்?இது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
பான் கார்டில் தந்தை பெயர் தேவையில்லை

Added : செப் 12, 2018 21:38

புதுடில்லி: விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, 'பான் கார்டு' பெறும்போது, அவர்களது தந்தை பெயரை குறிப்பிட தேவைஇல்லை என்று, விதிகளில் திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும், பான் கார்டு எனப்படும், நிரந்தர கணக்கு அட்டையை, மத்திய நிதி அமைச்சகம் வழங்கி வருகிறது.இந்த அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், தங்கள் தந்தையின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதில், முன்னாள் கணவரின் பெயரை குறிப்பிடுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே, அதில் திருத்தம் செய்யும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, இந்த நடைமுறையில், திருத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை கள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.
மாநில செய்திகள்

சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த ‘மனிதநேய விருது’




சென்னை முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருது பிலிப்பைன்சில் நடந்த மாநாட்டில் வழங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 13, 2018 03:45 AM

சென்னை,

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பல் டாக்டர்களை கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வேறு கூட்டங்களை நடத்தி, பல் மருத்துவ கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான செயல்களை ஒருங்கிணைத்தும், சமூகத்துக்கு சேவை செய்யும் பல் டாக்டர்களை கவுரவித்தும் வருகிறது.

ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் நடத்திய மாநாட்டில் சென்னையை சேர்ந்த பிரபல முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் திறமையை அறிந்த பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் தங்கள் நாட்டுக்கும் வந்து விரிவுரையாற்றுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டு பல் மற்றும் முகச்சீரமைப்பு துறைகளில் பல் டாக்டர்களுக்கும், பல் மருத்துவ மாணவர்களுக்கும் எஸ்.எம்.பாலாஜி விரிவுரையாற்றியுள்ளார். மேலும் சிக்கலான முகக்குறைபாடுகளை உடைய சிறுவர்களை கடந்த 2010-ம் ஆண்டு முதல் எஸ்.எம்.பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காகவும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பி வருகிறது.

பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் அனுப்பும் சிறுவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதனால் எஸ்.எம்.பாலாஜி இலவசமாக அந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார். அந்தவகையில் எஸ்.எம்.பாலாஜியின் சேவை மனப்பான்மையினால் ஏராளமான ஏழை பாகிஸ்தான் நாட்டு சிறுவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

எஸ்.எம்.பாலாஜியின் தன்னிகரற்ற மனிதநேய சேவையை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் கருதியது. இந்தநிலையில் ஆசிய-பசிபிக் பல் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் சார்பில் 40-வது சர்வதேச மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடந்தது.

இந்த மாநாட்டில் எஸ்.எம்.பாலாஜி பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் சார்பில் பாகிஸ்தானில் மிக உயர்ந்த விருதான மனிதநேய விருது எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மகமூத் ஷா, துணைத்தலைவர் டாக்டர் ஆசிப் அரெய்ன் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் நாசிர் அலி கான் ஆகியோர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கி கவுரவித்தனர்.

பாகிஸ்தானின் மிக உயர்ந்த மனிதநேய விருதினை பெற்றுள்ள முதலாவது இந்திய டாக்டர் என்ற பெருமையையும் எஸ்.எம்.பாலாஜி தட்டிச்சென்றுள்ளார். மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பல் டாக்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்

உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்



சென்னை குரோம்பேட்டையில் உலகத்தரம் வாய்ந்த டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 05:00 AM

சென்னை,

சென்னை குரோம்பேட்டை ஒர்க்ஸ் சாலையில் 36 ஏக்கர் பரப்பளவில் டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் இந்த மருத்துவ மையத்தின் நிறுவனராகவும், மகள் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா நிர்வாக தலைவராகவும் உள்ளார். மருத்துவ மையத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் ரேலா இருக்கிறார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர், கட்டிடத்தின் உள்ளே குத்துவிளக்கேற்றினார்.

அப்போது டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன், அவருடைய மனைவி அனுசுயா, மகன் சந்தீப் ஆனந்த்(பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்), மகள் டாக்டர் ஸ்ரீநிஷா, மருமகன் இளமாறன், டாக்டர் ரேலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் எம்.சி.சம்பத், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு உயர்தரத்தில் 14 அரங்குகளும், டயாலிசிஸ் செய்வதற்கு சமீபத்திய தொழில்நுட்பத்திலான 40 எந்திரங்களும் இருக்கின்றன.

மேலும், வெளிநோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவதற்கு 75 அறைகள், பரிசோதனை கூடங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிகப்பெரிய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவு இந்த மருத்துவ மையத்தில் உள்ளது.

தொடக்க நிலையில் இருந்து உடல்நிலை மேம்பட உயர்தரத்திலான சிறப்பு கவனம் செலுத்துதல், நவீன ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து மருத்துவ சேவைகளையும் நோயாளிகளுக்கு அளிக்க உள்ளனர். மருத்துவ மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவ மையத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் ரேலா கூறியதாவது:-

மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்கு தேவையான மருத்துவ சேவைகள் இங்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினம் என்று சொல்லும் நோயாளிகளையும் குணப்படுத்துவதற்கு தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய உயர்ரக தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது. மேலும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து வகையான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது.

எங்கள் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சர்வதேச அளவில் இருக்கும். இதனால் சார்க் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

உயர்தரத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ளவர்களின் மருத்துவ தேவையை கருத்தில்கொண்டே ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சை வழங்குகிறோம். ஆனால் அதே சமயத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. மருத்துவ மையத்துக்கு அருகில் 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாக கவனம் செலுத்த உள்ளோம். அவர்களிடம் ஆதார் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் இருந்தால் உயர்மதிப்பு கொடுத்து சர்வதேச அளவிலான சிகிச்சை மிகவும் குறைவான விலையில் அளிக்கப்படும்.

தெற்கு ஆசியாவிலே இதுபோன்ற நவீன வசதிகள் உடைய ஆஸ்பத்திரி இல்லை என்று நான் கருதுகிறேன். அனைத்து வகையான சிகிச்சைகளும் எங்கள் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும். புற்றுநோய்க்கு உயர்தரமான சிகிச்சை எங்களிடம் இருக்கிறது.

‘ரேடியாலஜி’, எம்.ஆர்.ஐ., நவீன வசதியுடன் ஸ்கேன் செய்யும் எந்திரங்கள், ‘ரோபாட்டிக்ஸ்’ அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிநவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

ஆஸ்பத்திரியின் நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், ‘இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி உங்கள் கையில் ஒப்படைக்கப்போகிறேன். உங்களிடம் எதிர்பார்க்கிறது எல்லாம் தமிழகத்திலும், இந்தியாவிலும் இதுதான் சிறந்த ஆஸ்பத்திரியாக இருக்கவேண்டும். வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார். அதற்கான முழு முயற்சியையும் நான் எடுப்பேன்.

லாபத்துக்காக மட்டும் இல்லாமல் சேவையை கருத்தில்கொண்டே இந்த ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளது. புது பிரிவு தொடங்கியிருக்கிறோம். அதில் 96 அறைகள் உள்ளன.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அங்கு தங்கலாம். அது ஓட்டலை போன்றே இருக்கும். தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் 140 படுக்கைகள் உள்ளன. இதை வைத்துதான் நாங்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம் என்று கூறுகிறேன். இதையும் சேர்த்து மொத்தம் 450 படுக்கைகள் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளிலும் என்னுடைய சேவை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையத்தின் நிர்வாக தலைவர் டாக்டர் ஸ்ரீநிஷா கூறுகையில், ‘சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளை கொண்ட, மிகவும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களால் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இது இருந்தாலும், சாதாரண ஏழை எளிய மக்கள் வந்து சாதாரண கட்டணத்தில் சிகிச்சை பெறும் வகையில் இருக்கும்’ என்றார்.

மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.
மாவட்ட செய்திகள்

“கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்



“கணவர் எப்போதும் வாட்ஸ்-அப்பில் மூழ்கி இருந்ததால் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” என்று கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 12, 2018 05:01 AM மங்கலம்,

குழந்தை சிவன்யாஸ்ரீயை கொலை செய்த தாயார் தமிழ் இசக்கி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரை அடுத்த சாமளாபுரத்திற்கு குடிவந்தனர். நான் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது அந்த கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய நாகராஜ் வருவார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் எங்களுக்குள் காதலாக மலர்ந்தது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சிவன்யாஸ்ரீ என்ற குழந்தை பிறந்தாள்.

நாகராஜ் அந்தபகுதியில் உள்ள தனியார் மில்லில் மூடை தூக்கும் வேலை செய்து வருகிறார். நான், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்லும் நாகராஜ், இரவு தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவார். அப்போது நான் போன் செய்தால் போனை எடுத்து பேச மாட்டார். மேலும் செல்போனில் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கூறும். அப்போது தான் அவர் வேறு ஒருவருடன் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசுவது தெரியவந்தது. இதனால் அவருக்கும் வேறு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு வந்ததும், அவருடன் சண்டைபோடுவேன். அப்போது எனது மாமியார் தலையிட்டு சமரசம் செய்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தோம். உடனே நாகராஜ் வெளியில் சென்றார். அப்போது இரவு 7 மணிக்கு நானும், குழந்தை சிவன்யாஸ்ரீயும் வீட்டில் இருந்தோம். இதற்கிடையில் வெளியூர் சென்று இருந்த எனது மாமியார் தனலட்சுமி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் குழந்தைக்கு புதுத்துணியை அணிவித்து, பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது நான் வைத்து இருந்த ஸ்மார்ட் போன் மூலம் எனது கணவர் நாகராஜை தொடர்பு கொள்ள முயன்றேன். 6 முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால் யாருடனோ வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசுவது மட்டும் தெரியவந்தது. இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

அவருக்காக குடும்பத்தை உதறிவிட்டு வந்தேன். ஆனால் நான் இனி நடுத்தெருவுக்கு சென்று விடுவேனோ? என்று பயம் ஏற்பட்டது. எனவே இனி இந்த உலகில் வாழ வேண்டாம் என்று, குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி முதலில் ஒரு குச்சியை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது. பின்னர் குழந்தையின் வாயை பொத்தி அருகில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தேன். 5 அடி உயரம் கொண்ட அந்த பிளாஸ்டிக் தொட்டியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. இதனால் குழந்தை மூச்சுவிட திணறியது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.

உடனே குழந்தையை வெளியில் தூக்கி கட்டிலில் போட்டு விட்டு நானும், தற்கொலை செய்ய முடிவு செய்து கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் எனது கணவர் நாகராஜ் வந்து விட்டார்.

இதனால் தற்கொலை முயற்சியை கைவிட்டு, அவசரமாக தூக்குப்போட பயன்படுத்திய சேலையை பீரோவில் வைத்து விட்டு கதவை திறந்தேன். குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விவரத்தை என்னிடம் கேட்டார். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து விட்டு, என்னையும் தாக்கி விட்டு சென்று விட்டான் என்று கூறினேன். இதை உண்மை என எனது கணவர் நம்பினார். உடனே நானும், அவரும் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொன்னார்கள். அதன்படி ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் எனது மாமியார் மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் குழந்தையை கொல்லவில்லை என்று மறுத்தேன். ஆனால் கணவர் மீதுள்ள சந்தேகத்தில் நான்தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இவ்வாறு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கணவர் மீது உள்ள சந்தேகத்தால் 2½ வயது குழந்தையை தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் போனால் வந்த வினை

தற்போது குடும்பங்களில் ஸ்மார்ட் போன்களால் தான் பிரச்சினை உருவாகிறது. கணவன் செல்போனில் பிசியாக இருந்தால் மனைவிக்கும், மனைவி செல்போனில் பிசியாக இருந்தால் கணவனுக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.

அதுபோல்தான் நாகராஜூம், தமிழ் இசக்கியும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக நாகராஜின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வருவதும், யாருடனோ செல்போனில் ஷாட்டிங் செய்வதும் தமிழ் இசக்கிக்கு தெரியவந்தது.

மேலும் கடந்த ஒரு மாதமாக செல்போனை யாரும் திறந்து பார்க்காதவாறு அவர் லாக் செய்து வைத்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியதால் குழந்தையை கொன்று விட்டு தமிழ் இசக்கி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 21.12.2025