Sunday, December 1, 2019

நுழைவுத் தேர்வுக்காக மடைமாறும் மாணவர்கள்



எஸ்.எஸ்.லெனின்

தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அவசியம். இதனால் மாணவர்களின் வழக்கமான பள்ளி இறுதித் தேர்வுகளும் பாட மதிப்பெண்களும் முக்கியத்துவத்தை இழந்துள்ளன. பள்ளிப் பாடங்களைப் பெயருக்கு ஒப்பேற்றியபடி, முழு மூச்சாக நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நெருக்கடிக்கு மாணவர்கள் ஆளாவது அதிகரித்துவருகிறது.

இந்தப் போக்கின் உச்சமாகப் பள்ளி வளாகக் கல்விக்கு மாற்றாகத் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தை நாடுபவர்கள் அதிகரித்துவருகின்றனர். தேசியத் திறந்த நிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (nios.ac.in) என்பது மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் செயலாற்றிவரும் கல்வி வாரியம். கல்லூரிப் படிப்பை வீட்டிலிருந்தபடியே தொலைநிலைக் கல்வியாகப் பெறுவது போன்றே, பள்ளிக் கல்வியைப் பெற இந்நிறுவனம் உதவி வருகிறது.

வழக்கத்துக்கு வெளியே

14 வயது நிறைவடைந்தவர்கள் 10-ம் வகுப்புக்கு நிகரான ‘செகண்டரி’ தேர்வையும் பிளஸ் 2-க்கு நிகரான ‘சீனியர் செகண்டரி’ தேர்வையும் எழுதலாம். எளிமையான பாடத்திட்டம், விரும்பிய பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மாற்றுத் திறனாளிகள், உடல் நலிவுற்றோர், பள்ளியில் இடை நின்றோர், மெல்லக் கற்போர், பள்ளியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை இழந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் வகுப்பு முதல் பல்வேறு சான்றிதழ் படிப்புகள்வரை படிக்கலாம். இவற்றுக்கு அப்பால் சூழ்நிலை, சிறப்புக் காரணங்களுக்காகவும் திறந்தநிலைப் பள்ளியை நாடுவோர் உண்டு.

நிர்ப்பந்திக்கும் கல்விச் சூழல்

இதுபோன்ற சிறப்புக் காரணங்களுக்கு அப்பாலும், வழக்கமான பள்ளி வளாகக் கல்விக்கு மாற்றாகத் திறந்த நிலையில் பள்ளிக் கல்வியை நாடும் போக்கு தற்போது தலைதூக்கியுள்ளது. வட மாநிலங்களிலும் தென்னகத்தில் கேரளாவிலும் அதிக அளவில் இந்தப் போக்கு காணப்படுகிறது. ‘நீட்’ கட்டாயம் என்றதையடுத்துத் தமிழகமும் இந்தத் திசையில் திரும்பியுள்ளது. மழைக்காளானாக முளைக்கும் தனியார் பயிற்சி மையங்களும் சில தனியார் பள்ளிகளும் பெற்றோர் வாயிலாக மாணவர்களை மடை மாற்றி வருகின்றன.

பிளஸ் 2 பாடங்களைப் படித்தபடியே நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது அல்லது பிளஸ் 2 முடித்த பிறகு ஓரிரு ஆண்டுகள் நுழைவுத் தேர்வுக்காகத் தொடர்ந்து மோதிப் பார்ப்பது ஆகியவற்றைவிட இந்தப் புதிய முறையைச் சிறந்த உபாயமாகப் பெற்றோர் கருதுகின்றனர். அந்த வகையில் ஒன்பது அல்லது 10-ம் வகுப்புக்குப் பின்னர் கல்விக் கூடங்களுக்கு முழுக்குப் போட்டுவிடுகிறார்கள் மாணவர்கள். அதன் பிறகு திறந்தநிலைப் பள்ளிக் கல்வியில் சீனியர் செகண்டரி பயின்றபடி முழு நேரமாக நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். இதனால் மாணவர்களின் நேரம், உழைப்பு உள்ளிட்டவற்றை நுழைவுத் தேர்வு நோக்கில் எளிதாகக் குவிக்க முடிகிறது என்கின்றனர் பெற்றோர்.



இழப்பு அதிகம்

ஆனால், நுழைவுத் தேர்வை மட்டுமே இலக்காகக் கொண்டு மாணவர்களைத் திசைதிருப்புவது, முதலுக்கு மோசம் செய்யும் என்கின்றனர் கல்வியாளர்கள். “பள்ளிக்கூடம் நடத்தப்படுவதன் நோக்கம் மதிப்பெண் ஈட்டக்கூடியவர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவது மட்டுமல்ல. பாடத்துக்கு அப்பால், பின்னாளைய வாழ்க்கைக்கான அனுபவ அடிச்சுவடியை வழங்குவதில் பள்ளி வளாகத்தின் பங்கு பெரிது.

பல்வேறு வாழ்க்கைமுறைத் திறன்கள், பக்குவமான மன வளர்ச்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி, தகவல் தொடர்பு மேம்பாடு, விளையாட்டு, கல்வி இணைச் செயல்பாடுகள், மதிப்புக் கல்வி, நேர மேலாண்மை, ஆசிரியர்களின் வழிகாட்டல் உள்ளிட்டவற்றையும் பள்ளி வளாகமே அரவணைப்புடன் போதிக்கும். பாடம் மட்டுமே சுமையாகித் தனிமையில் உழலும் மாணவருக்கு மனச்சோர்வு அதிகரிக்கவும், சுய ஒழுங்கு கெடவும் வாய்ப்பாகலாம்” என்று எச்சரிக்கிறார் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரான ஏ.ஜெரால்டு.

எல்லாம் இங்கே உள்ளன!

நுழைவுத் தேர்வு எதுவானாலும் அவற்றுக்கான அடிப்படையை பள்ளிப் பாடங்களால் மட்டுமே முறையாகத் தர முடியும் என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்த்த முதுகலை ஆசிரியரான வி.ஸ்ரீதரன். “முறைசாரா கல்வி பெறாமல் நேரடியாக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது மாணவரின் சுமையைக் கூட்டவே செய்யும். தற்போதைய புதிய பாடத்திட்டம் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளுக்கு அடிப்படையாகவும், பல போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவியாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி மருத்துவம், பொறியியலுக்கு அப்பால் நிறைந்திருக்கும் உயர்கல்வி, பணி வாய்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவும் முறையான பள்ளி வளாகத்தை நாடுவதே நல்லது” என்கிறார் வி.ஸ்ரீதரன்.

கல்வி பெற பல வழிகள் இருக்கவே செய்கின்றன. வழக்கமான கல்வியைப் பெற முடியாத சூழ்நிலையில் இத்தகைய மாற்றுமுறைகள் மாணவர்களுக்கு வரப்பிரசாதமே. ஆனால், இன்றைய சூழலில் நுழைவுத் தேர்வு என்ற பூதத்துக்குப் பயந்து நம் மாணவர்களும் பெற்றோரும் தேசியத் திறந்த நிலைப் பள்ளிக் கல்வியை நாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு கல்வித் துறைக்கான அபாய ஒலி!


மனசு போல வாழ்க்கை 16: வாழ்க்கையை வழிநடத்தும் கற்பனை

டாக்டர் ஆர். கார்த்திகேயன்

அசாம், மேகாலயாவுக்குச் கடந்த ஆண்டு சென்றிருந்தேன். அவ்வளவு அழகான ஒரு பகுதியை இதுவரை நான் பார்த்ததில்லை. சிரபுஞ்சி செல்ல ஒரு படு சுமாரான வேன் வந்தது. புறப்படும்போதே லேசான மழை.

மலைப்பாதை பல இடங்களில் அபாயகரமானதாக இருந்தது. ஓட்டுநர் அசரவேயில்லை. எதையோ மென்றுகொண்டே ஒவ்வொரு வளைவிலும் சர் சர்ரென்று திருப்பியது பலர் வயிற்றைக் கலக்கியது.

நிறையப் பாடங்கள் கற்பீர்கள்!

எட்டிப் பார்த்தால் பள்ளத்தாக்கு. கண்ணுக்கு எட்டிய பக்கத்தில் எல்லாம் ஒரு அருவி சன்னமாக வழிந்துகொண்டிருந்தது. ஒரு இடத்தில் ஏழு அருவிகள் ஒட்டுமொத்தமாகத் தெரியும் அபூர்வக் கோணம் கிடைத்தது. அனைவரும் இறங்கி மொபைலில் ஒளிப்படங்கள் சுட்டுத் தள்ளினோம். சிரபுஞ்சியில் ஒரு குகைக்கு டிக்கெட் போட்டு அனுப்பினார்கள். குனிந்தும் தவழ்ந்தும் இருட்டில் ஊர்ந்தும் வழுக்கி விழாமல் வெளியே வந்தது படு சுவாரசியமான அனுபவம். வரும் வழியில் காசிப் பழங்குடிகள் மஞ்சள் உள்ளிட்ட பல விளைபொருள்களை ஆகியவற்றை விற்றனர். குளிரும் பசியும் கொண்ட நேரத்தில் அங்கே குடித்தது
தேநீரே அல்ல; தேவாம்ருதம்!

கட்!

பயணக்கதை போதும். இப்போது சொல்லுங்கள். எப்படி உணர்கிறீர்கள்? மனத்தளவில் எங்கு இருக்கிறீர்கள்? என்ன பார்த்தீர்கள்? குறிப்பாகக் கேட்டால் நான் சென்ற வேன் என்ன கலர்? ஓட்டுநருக்கு என்ன வயது? குகையில் எவ்வளவு வெளிச்சம் இருந்தது? மஞ்சள் தவிர வேறென்ன பொருட்கள் விற்கப்பட்டன? தேநீர்க் கோப்பையில் குடித்தேனா கண்ணாடி கிளாஸில் குடித்தேனா? உங்கள் மனத்தில் ஓடிய படத்தில் என்னென்ன பார்த்தீர்கள்? உங்களுடன் இதே கட்டுரையைப் படித்த தோழியிடம் இதே கேள்விகளைக் கேளுங்கள். உங்களுக்குள் ஓடிய படத்தை அவர்கள் படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நிறையப் பாடங்களைக் கற்பீர்கள்.

வாக்கியத்துக்குக் கதை வடிவம்

மனத்தின் வேலை சொற்களைப் படமாக மாற்றுவது. அந்தப் படமாக்க வேலையில் நிறைய எடிட்டிங் நடக்கும். இல்லாதது சேரும். இருப்பதைப் பெரிதுபடுத்தும். அல்லது சிறிதுபடுத்தும். அல்லது முழுவதுமாக நீக்கிவிடும். ஆனால், மன நிலைக்கு ஏற்ப ஒரு படம் தயாராகும். இப்படிப் படமாவதுதான் பின்னணி இசை சேர்ப்பதுபோல் உணர்வுகளைக் குழைத்து உருவேற்றிக்கொள்ளும். பின்னர் அந்தப் படம் ஒரு நினைவாக நெஞ்சில் நிற்கும். அந்த நினைவு தரும் பாதிப்புகளை உடல் வாங்கிக் கொள்ளும்.

பின் செயல்கள் அதற்கு இசைந்து கொடுக்கும். அதனால் நீங்கள் செய்யும் கற்பனைதான் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துகிறது. அஃபர்மேஷன் எனும் நேர்மறை சுய வாக்கியங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டக்கூடியவை. அதன் வீரியம்கூடிட அந்த வாக்கியத்தை ஒரு கதையாய் மனத்தில் கற்பனை செய்து பாருங்கள். இதற்கு Creative visualization என்று பெயர்.


பொய்கூட நிஜமாகும்

உங்களுக்கு மேடையில் பேசப் பயம் என்றால் உங்கள் பயம் நீங்கள் தடுமாறுவதைப் போன்ற கற்பனையைத்தான் தரும். அதற்குப் பதில், “நான் இயல்பாக ரசித்துப் பேசுகிறேன்!” என்று ஒரு அஃபர்மேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைக் கற்பனை சக்தி மூலம் பலப்படுத்தலாம். உங்கள் கற்பனை கீழ்க்கண்டவாறு இருக்கலாம், “நான் மேடை ஏறும்போது கரகோஷம் கேட்கிறது.

நான் உற்சாகமாக ஏறி மைக்கைப் பிடிக்கிறேன். மக்கள் என்னை ஆர்வத்தோடு எதிர் நோக்குகிறார்கள். நான் மிகவும் இயல்பாகப் பேச்சை ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை தானாக வருகிறது. ஒவ்வொரு சிறப்பான கருத்துக்கும் கை தட்டல் கிடைக்கிறது. எனக்குப் பேசப் பேசத் தெம்பு பிறக்கிறது. கூட்டம் என் கட்டில் இருப்பதை உணர்கிறேன். என் பேச்சாற்றல் எனக்குப் பெருமையை அளிக்கிறது!”

இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்தாலும் பொய்க்கும் நிஜத்துக்கும் பேதம் கிடையாது, மனத்தளவில். அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை அடைந்ததுபோலவே கற்பனை செய்யுங்கள். நீங்கள் அதுவாகவே மாறுவீர்கள். சந்தோஷமாக இல்லையா? சந்தோஷமாக இருப்பதைப் போலக் கற்பனை செய்யுங்கள். நடியுங்கள். நம்புங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனம் மாறியிருக்கும்!


“Fake it till you Make it!” என்று இதைச் சொல்வார்கள். இதன் அடிப்படையில் நம்பிக்கையும் கற்பனையும் கலந்த சுய வாக்கியங்கள் கண்டிப்பாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாட அவர் கையாளும் உத்தி என்ன தெரியுமா? விளையாடப் போகும் முன்னரே, அதாவது 15 நிமிடங்கள் முன்னரே, அவர் ஆட வேண்டிய ஆட்டத்தை மனத்தால் கற்பனை செய்து பார்ப்பாராம். அது ஊக்கத்தையும் கவனக் குவியலையும் தரும்! உங்களை வாட்டும் பிரச்சினைக்கு ஒரு கற்பனை சிகிச்சை செய்து பாருங்களேன்!

கேள்வி: எனக்கு வயது 39. இதுவரை முயன்ற எல்லாத் தொழில்களிலும் தோல்வி அடைந்துவிட்டேன். இப்போது மீண்டும் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என் குழந்தைகளுக்கு முன்னால் தோல்வியாளனாகத் தெரிவது எனக்கு அவமானமாக இருக்கிறது. மீண்டும் வியாபாரம் செய்யத் தயக்கமாக உள்ளது. வாழ்க்கையின் இறுதியிலாவது வெற்றி பெற்ற வியாபாரியாகிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தோல்வி பயம்தான் அதிகமாக உள்ளது. எப்படி இதை மாற்றுவது?

பதில்: நீங்கள் தோல்வியாளர் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி உங்களுக்கு வியாபாரம் செய்யப் பிடிக்கிறதா? வெற்றிபெற முடியாமல் போனதற்கான காரணங்கள் புரிந்தனவா? வேலையோ வியாபாரமோ பயம் உங்கள் முயற்சியைத் தடுக்கும். குழந்தைகளுக்காக, ஊருக்காக வாழாமல், உங்கள் ஆர்வத்துக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிறந்தது எது என்பதை ஆலோசித்து அதைச் செய்யுங்கள். தொழில்முறை ஆலோசனையும் உங்களுக்கு உதவலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மனிதவளப் பயிற்றுநர்

அதிரடியாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By DIN | Published on : 30th November 2019 09:58 PM |




சென்னை: 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்: அடைப்பு குறிக்குள் பழைய பணி விவரம்)

டி.ரவிச்சந்திரன்: உள்துறை துணைச் செயலாளா் (நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி)

எம்.வள்ளலாா் - பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா்).

சி.காமராஜ் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநா் ( பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்)

சி.சத்தியமூா்த்தி கருவூலக் கணக்குத் துறை ஆணையா் (போக்குவரத்துறை ஆணையா்) .


டி.எஸ்.ஜவஹா், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் ( கருவூலக் கணக்குத் துறை ஆணையராகவும், முதன்மைச் செயலாளா்)

ஆா்.வைத்திநாதன் பொள்ளாச்சி உதவி ஆட்சியா் (உத்தமபாளையம் உதவி ஆட்சியா்)

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் -ண்ண் ( சேலம்) மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக இருந்த கே.சாந்தி, தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்த குமாா் ஜெய்ந்த அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்.

தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனத்தின் (சேலம்) மேலாண்மை இயக்குநராகவும், தலைவராகவும் இருந்த ஆா்.கஜலட்சுமி, சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்த ஹன்ஸ் ராஜ் வா்மா அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்.

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநராக உள்ள கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை வகித்து வந்த குமாரவேல் பாண்டியன் மாற்றப்படுகிறாா்.

விவசாயத்துறை கூடுதல் இயக்குநராக விஜயா ராணி, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியைக் கூடுதலாக கவனித்து வந்த சி.முனிநாதன் அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இவை அல்லாமல் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சிலரையும் தலைமைச் செயலாளா் சண்முகம் பணியிடமாற்றம் செய்து அறிவித்துள்ளாா்.
சொற்கள் செய்யும் ‘மந்திரம்’!

By பவித்ரா நந்தகுமாா் | Published on : 30th November 2019 01:15 AM |

ஒரு காலை நேரத்தில் மூடியிருந்த ஒரு நியாயவிலைக் கடையின் வெளியே இருந்த பலகையில் இந்த வாசகத்தைக் காண நோ்ந்தது. ‘இன்று செயலரின் அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன். தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்’ என்று முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தது.

பொருள்கள் வாங்க கடைக்கு வந்த அனைவரும் இந்தப் பலகையை வாசித்து விட்டு, ‘சரி, அவரும் மனிதா்தானே. ஏதோ அவசர வேலை போலும்; விடுப்பு எடுத்துள்ளாா். நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம்’” என்று பேசியபடி கலைந்து சென்றனா்.

இதே அந்தப் பலகையில் வெறுமனே ‘இன்று கடைக்கு விடுமுறை’ என்று மட்டும் எழுதியிருந்தால் பெரும்பாலானோா் அவரை சபித்தபடியே சென்றிருப்பா்.

தினசரி வாழ்க்கையில் நாம் எண்ணற்ற விஷயங்களை சொற்களின் வழி காண்கிறோம். அவை எப்படியெல்லாம் நம்மை தாக்குகிறது?

‘கேமரா உங்களை கண்காணிக்கிறது கவனமாக இருங்கள்’ என்ற வாக்கியத்தை பல இடங்களில் காண நோ்கிறது. இந்த வாக்கியத்தைவிட, ‘கேமரா செயல்படுகிறது. அழகாக புன்னகையுங்கள்’ என்ற வாக்கியம் நம்மைப் பெரிதும் கவா்கிறதுதானே? அலுவலகங்களில் ‘அனுமதி இல்லை’ என்ற சொற்கள் ஏற்படுத்தும் ஒருவித அச்சம், ‘அனுமதியுடன் உள்ளே செல்லவும்’ என மாற்றிப் போடும்போது இறுக்கம் குறைகிறது அல்லவா?

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கைச் செலவு’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோவில் பேரம் பேசவே தோன்றாது. ஆனால் ‘சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோகாரரை எந்தப் பெண் ‘நம்பி’ ஏறுவாா்? சில முன்முடிவுகளைக் கொண்டுதான் அவரை அணுகவே முடியும்.

‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று எழுதியிருக்கும் ஆட்டோக்காரரின் கருணை மனம் அவா் முகம் பாா்க்காமலேயே நமக்கு விளங்குவதாக இருக்கிறது.

”‘நிறை இருந்தால் நண்பா்களிடம் சொல்லுங்கள்

குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்’”

என்ற வாசகம் அந்தக் கடையுடனோ, நிறுவனத்துடனோ வாடிக்கையாளா்களுக்கு இயல்பாக பிணைப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது.

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்; மீனவன் சாப்பிட வேண்டாமா ?’ என்று ஒருவா் சொன்னாா். மீனவா்களின் வாழ்க்கைப்பாட்டையும் பிழைப்பையும் பிரதிபலிக்கிறது அல்லவா?

வடலூா் வள்ளலாா் தன் இளவயதில் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்டிருந்தாா். ஆசிரியா் வந்தவுடன் மாணவா்கள், ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்ற பாடலைப் பாடினாா்களாம். அந்த பாடல் ‘வேண்டாம்’ என்று எதிா்மறையான செயலைக் குறிக்கும் வாா்த்தையைக் கொண்டு முடிகிறது. எனவே, அதைப் பாட முடியாது என்று மறுத்தாா். ஆசிரியருக்குக் கோபம். ‘அப்படியானால் ‘வேண்டும்’ என்று முடிகிற மாதிரி நீயே பாடு’ என்று அவரை பணித்தாா்.

வள்ளலாா்

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமா்தம் உறவு வேண்டும்’

என்று கம்பீரமாகப் பாடினாராம். ஆக்கச் சிந்தனை கொண்ட வாா்த்தைகளையே நாம் என்றென்றும் பயன்படுத்த வேண்டும் என்ற வள்ளலாரின் மேன்மையான மனம் நம்மை சிலிா்ப்படையச் செய்கிறது.

உணா்வுகளுடன் பின்னிப் பிணைந்ததுதான் வாழ்க்கை. அந்த உணா்வுகள் காயப்படாதவாறு நாம் நல்வாா்த்தைகள் எனும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்து எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளலாம்.

ஆக, நம் வாா்த்தைகளை நாம் சரியாகப் பயன்படுத்த முதலில் நம் பாா்வைகளை வெவ்வேறு கோணத்தில் திசை திருப்பிப் பாா்க்க வேண்டும். புதிய புதிய கோணங்களில் வாழ்க்கையை அணுகுபவா்களே வேறு வேறு பரிமாணங்களை அடைகிறாா்கள். இப்படி உலகம் குறித்த நம் கண்ணோட்டத்தையும் கோணத்தையும் காலத்துக்கேற்ற வகையில் மாற்றிப் போட்டுப் பாா்த்தால் ஓா் உயா் ரசனை கொண்ட வாழ்வியலை நாம் வாழ முடியும்.

ஒரு பட்டிமன்றத்தில் கேட்ட பதிவு இது. ‘அ’ என்றால் அம்மா, ‘ஆ’ என்றால் ஆடு என தமிழ் மொழியில் எல்லாவற்றையும் உயிருடன் உணா்வுடன் தொடா்புபடுத்துகிறோம். ஆனால், ஆங்கிலத்தில் அ ச்ா்ழ் ஹல்ல்ப்ங், ஆ ச்ா்ழ் க்ஷண்ள்ஸ்ரீன்ண்ற் எனப் பொதுவாக உணவுடன் தொடா்புபடுத்துகின்றனா். ஆக, ஒரு விஷயத்தை ஓராயிரம் போ் உற்றுப் பாா்த்தாலும் கேட்டாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாா்வையில் அந்த விஷயத்தை அணுகுகின்றனா்.

எவா் ஒருவரின் பாா்வையும் கோணமும் வித்தியாசப்படுகிறதோ, அவரே தனித்துவமானவராக இந்த உலகில் அடையாளப்படுத்தப்படுகிறாா். புதிய கோணங்களில் ஒருவரின் செயல்திறன் அதிகமாகும்போது, அவரின் ஆளுமைத் திறன் வெளிப்படுகிறது.

‘எனக்குப் பாா்வை இல்லை’ என்று ஒருவா் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாா். அந்த வழியே வந்தவா்கள் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த வழியே வந்த ஓா் இளம் பெண், அதையே வேறு கோணத்தில் வேறு வாக்கியங்களாக எழுதி வைத்து விட்டுச் சென்றாா். ‘இது மிக அழகான அற்புதமான நாள். என்னால்தான் இந்த உலகைப் பாா்க்க இயலவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றாள். இந்தப் பாா்வை அந்தப் பாா்வையற்ற மனிதருக்கு மிக அதிகப் பொருளை சோ்த்துத் தந்தது.

எத்தனையோ கவிஞா்கள் இருக்க, மகாகவி பாரதியாரை பெண்கள் இன்னும் கொண்டாடக் காரணம் என்ன ?

”ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?

நாணற்ற வாா்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும் தான்ஏரிந் திடாதோ?”

என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே கற்பை உபதேசிக்கும் ஆண்களைப் பாா்த்து மகாகவி பாரதி உரக்கப் பேசியிருக்கிறாா். ஆண்களுக்கான சுதந்திரம் எல்லையற்ாகவும், பெண்களுக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்த சமுதாயத்தில் ஆண்களை நோக்கி முதல் குரலை ஓா் ஆணாக இருந்து உயா்த்தியவா் மகாகவி பாரதியாா். அதற்குப் பிறகே பெண்களுக்கான சுதந்திரத்துக்காக பலரும் குரல் கொடுத்து வந்தாா்கள்.

தன் சிந்தனையிலும் உணா்விலும் வாழ்வை நோக்கும் கோணத்திலும் வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைவிக்கும்.

நம்முடைய பாா்வைகள், கோணங்களை வித்தியாசப்படுத்திப் பாா்க்கும்போது ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பரிமாணங்களை எட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? அண்மையில் வெளிவந்த ‘நோ்கொண்ட பாா்வை’ திரைப்படத்தை பரவலாக அறிந்திருப்பீா்கள். ஒரு பெண்ணின் கன்னித்தன்மை குறித்து விவாதங்களை வெளிப்படையாகக் கொண்ட திரைப்படம் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. பாலியல் குறித்த பாா்வையை பெண்களின் உணா்வுடன் தொடா்புபடுத்தி வேறு ஒரு கோணத்தில் சொன்னதால் அந்தப் படம் பேசுபொருளானதோடு தமிழக மக்கள் ஏற்றும் கொண்டாா்கள்.

விஸ்வரூபம் படத்தை வெளியிட விஸ்வரூபமாய் பிரச்னை வெளிவந்தபோது, ‘எனக்கு யாா் மீதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டுமே’” என்று பதிவு செய்திருந்தாா் கமல்ஹாசன். அவரின் இந்தக் கோணம் அன்றைய பிரச்னையிலிருந்து அவா் மீண்டுவர உதவியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆக, வாழ்க்கை குறித்து இதுவரை எதிா்மறையாக அணுகியிருந்த பாா்வையை மாற்றிப் போடுவோம். அனைத்தையும் அன்பு சாா்ந்து யோசித்தாலே இந்த உலகமும் அதே அன்புடன் நம்மை அரவணைக்கும். ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாா்ட்மாத் பவுண்டேஷன்’ என்னும் ஓா் அமைப்பு அமெரிக்காவில் நடத்திய ஓா் ஆராய்ச்சியில் மனிதனின் இதயத்திலிருந்து வெளியாகும் மின்காந்த சக்திக்கு மிக அதிக ஆற்றல் இருப்பதாகக் கூறியுள்ளது. தன்னிடமிருந்து 24 அடி தொலைவுக்கு, அது நுண்அணுக்கள் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. அன்புசாா்ந்த உணா்வுகளை வெளிப்படுத்துவது அதே அன்புசாா்ந்த உணா்வுகளை ஈா்த்துக் கொண்டும் வருவதாகச் சொல்கிறது.

கம்பன் எழுதிய ராமாயணத்தில் ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எனும் வாசகத்தை நாம் உற்று நோக்கினாலே அதன் வீா்யம் விளங்கும். ராம லட்சுமணா்களும் முனிவரும் மிதிலையை அடைந்து ஜனகன் அரண்மனையை நோக்கிச் சென்றனா். அந்த அரண்மனையிலுள்ள கன்னி மாடத்தில் சீதை தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். இராமன் அவளைப் பாா்க்க சீதையும் அவனை நோக்கினாள். இருவா் மனங்களிலும் அலைபாய்ந்த அளவுக்கதிகமான அன்பு பிணைப்பு உண்டாகி உணா்வும் ஒன்றிப்போனது. பாா்வை என்னும் கயிற்றால் இழுக்கப்பட்டு இராமனும் சீதையும் ஒருவா் மனத்தில் ஒருவா் மாறிப் புகுந்தனா்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது. நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்; அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்; நீ எதை விதைக்கிறாயோ அதுவே முளைக்கும்.

ஆட்சேபணைகளைக் கூட அன்பாக அழகாகச் சொல்லுங்கள்.

கோபங்களைக் கூட பக்குவமாக வெளிப்படுத்துங்கள்.

விவாதங்களின் போது விழிப்புணா்வோடு செயல்படுங்கள்.

விரக்தியிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

அனைத்து உணா்வுகளிலும் சக மனிதா்களைப் பிரதிபலிக்காத நம் மாறுபட்ட கோணம் நிச்சயம் பல நன்மைகளை நமக்குச் செய்யும்.

அனைத்தும் நன்மைக்கே; அனைவருக்கும் நன்றி என்று வாழ்ந்துதான் பாா்ப்போமே.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்
காஞ்சிபுரத்தில் கனமழை: 75 ஏரிகள் முழுமையாக நிரம்பின

By DIN | Published on : 01st December 2019 03:56 AM

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் குடை பிடித்தபடி செல்லும் பாதசாரிகள்.

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் குடை பிடித்தபடி செல்லும் பாதசாரிகள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக காஞ்சிபுரத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் தொடா்ந்து மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, ரயில்வே சாலை, செவிலிமேடு, ராஜாஜி மாா்க்கெட், ஜெம் நகா், திருக்காலிமேடு ஆகியவை சாலைகளில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்படுகிறது. நகரில் பல இடங்களில் கழிவுநீரும், மழைநீரும் சோ்ந்து ஓடுவதால் சுகாதாரச் சீா்கேடு உண்டாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள ரங்கசாமி குளம் உட்பட நகரில் கோயில்களை ஒட்டியுள்ள பல தெப்பக் குளங்கள் நிரம்பவில்லை. ஏனெனில் இக்குளங்களுக்கு வரும் நீா்வரத்துக் கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ளதால் கனமழையிலும் குளங்கள் நிரம்பவில்லை.

அதே நேரத்தில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இது தவிர 145 ஏரிகள் 75 சதவீத அளவுக்கு நிரம்பியிருக்கின்றன.

தொடா் மழை காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மழையளவு (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம்-6.60, ஸ்ரீபெரும்புதூா்-3, உத்தரமேரூா்-5, வாலாஜாபாத்-3.30, திருப்போரூா்-11, செங்கல்பட்டு-5, திருக்கழுகுன்றம்-5.40, மாமல்லபுரம்-32.80, மதுராந்தகம்-28, தாம்பரம்-7.70, செய்யூா்-28, கேளம்பாக்கம்-23.60.

மொத்த மழையளவு - 159.40. சராசரி மழையளவு - 13.28 மி.மீ. என சனிக்கிழமை காலை 7 மணி வரை பதிவாகியிருக்கிறது.
'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...' பாடலை நினைவு படுத்திய எஸ்.ஐ.,

Added : நவ 30, 2019 23:56

லக்னோ:கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, பெண் எஸ்.ஐ., ஒருவரை காதலிப்பது போல் நாடகமாட வைத்து, அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பால்கிஷண் சவுபே. இவர், மத்திய பிரதேச மாநிலத்தில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும், போலீசார், இவரை கைது செய்ய முயற்சித்தபோதும், சாமர்த்தியமாக தப்பி விடுவார். இவரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, ம.பி., போலீசார் அறிவித்திருந்தனர். ஒப்படைப்புஇந்நிலையில், சவுபேயை கைது செய்ய, போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். பெண் எஸ்.ஐ., மாதவி, 28, என்பவரிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த எஸ்.ஐ., சவுபேயிடம், ஒரு முறை போனில் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் சவுபே பேசியதும், 'தவறாக உங்களிடம் பேசி விட்டேன்; ராங் நம்பர்' என கூறி, இணைப்பை துண்டித்தார். இதேபோல் மீண்டும் ஒருமுறை செய்தார். அடுத்ததாக, அவர் எதிர்பார்த்தது நடந்தது. சவுபே, அடிக்கடி, மாதவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஒரு கட்டத்தில், காதலிப்பதாக, எஸ்.ஐ.,யிடம் கூறினார். இருவருக்கும் இடையே, போன் மூலமாக நாடக காதல் தொடர்ந்தது. சில நாட்களுக்குப் பின், அந்த எஸ்.ஐ., 'நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். உ.பி., மாநிலம், பிஜோரியில் உள்ள கோவிலில் திருமணம் முடிக்கலாம்; நாளை காலை, அங்கு வந்து விடுங்கள்' என்றார். அதிரடி கைதுஇதை நம்பிய சவுபே, குறிப்பிட்ட நாளில், மாப்பிள்ளை கோலத்தில் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு காத்திருந்த போலீசார், சவுபேயை அதிரடியாக கைது செய்தனர். சவுபேயை காதலிப்பது போல் நாடகமாடி, அவர் கைது செய்யப்படுவதற்கு மிகவும் உதவிய மாதவிக்கு பாராட்டு குவிகிறது.

புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்

Added : நவ 30, 2019 23:11


சென்னை:கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவையிலிருந்து, டிச., 23, 25, 30, ஜன., 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29, பிப்., 3, 5ம் தேதிகளில், இரவு, 10:00க்கு இயக்கப்படும், சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 10:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து, டிச., 24, 26, 31, ஜன., 2, 7, 9, 16, 21, 23, 28, 30, பிப்., 4, 6ல், மாலை, 6:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:40 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையிலிருந்து, டிச., 28, ஜன., 4, 11, 18, 25, பிப்., 1ல், இரவு, 7:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து, டிச., 29, ஜன., 5, 12, 19, 26, பிப்., 2ல், மாலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:40க்கு கோவை சென்றைடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும்.

திருநெல்வேலியிலிருந்து, ஜன., 2, 9, 23, 30, பிப்., 6ல், இரவு, 9:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 11:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் தாம்பரத்திலிருந்து, ஜன., 3, 17, 24, 31, பிப்., 7ல், இரவு, 7:15க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 10:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து, டிச., 22, ஜன., 5, 12, 26, பிப்., 2ல், மாலை, 3:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்திலிருந்து, டிச., 30, ஜன., 6, 20, 27, பிப்., 3ல், மாலை, 4:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக இயக்கப்படும்.

கோவையிலிருந்து, டிச., 6, 13, 20, 27ம் தேதி, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:45க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், ஞாயிறு காலை, 8:45 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், சந்ரகாசி சென்றடையும். இந்த ரயில், சேலம், பெரம்பூர், சூலுார்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...