Thursday, December 4, 2014

வரவேற்கத்தக்க மாற்றங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் சில அதிரடித் திட்டங்களில் முதியோருக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் "ஜீவன் பிரமாண்' எனப்படும் கணினி வழி இருத்தல் தற்சான்றை தானே வழங்கும் நடைமுறையும் ஒன்று. நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தால், நாடு முழுவதிலும் ஓய்வூதியம் பெறும் ஒரு கோடி முதியோர் பயனடைவர்.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சம் பேர் தற்போது ஓய்வூதியம் பெறுகின்றனர். இதற்கு இணையாக மாநில அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்களும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோருமாக சுமார் 75 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் நீங்கலாக, ராணுவ வீரர்கள் சுமார் 25 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த "ஜீவன் பிரமாண்' நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதுள்ள நடைமுறைப்படி, ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு நேரடியாக வந்து, தாங்கள் உயிருடன் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இந்தக் கடமையைச் செய்யாவிட்டால், அடுத்து வரும் ஜனவரி முதல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிடும். ஆகவே, ஓய்வூதியம் பெறுவோர் நேரடியாக வங்கிக்கு வந்து, தங்கள் இருத்தலை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பல முதியோருக்கு அவர்கள் சேமிப்புக் கணக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கிளைக்கு நேரடியாக வருவது சிரமமானது. முதுமையும் நோயும் முக்கியக் காரணம். சிலரால் துணை இல்லாமல் வருவது சாத்தியமே இல்லை. பெரும்பாலோர் பணி ஓய்வுக்குப் பிறகு மகன் அல்லது மகளைச் சார்ந்து வாழ்வதால் அவர்கள் செல்லும் ஊர்களுக்குத் தாங்களும் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இந்த இருத்தல் சான்றுக்காக மட்டுமே வங்கிக் கிளைக்கு வந்து செல்வது, உடல், மனம் இரண்டையும் சோர்வடையச் செய்யும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது இந்த சிரமத்தைப் பிரதமர் இல்லாமல் செய்திருக்கிறார்.

இந்த நடைமுறை ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்தது. விரல் ரேகை, கண்பாவை போன்ற உயிர்மை அடையாளங்கள் (ஆண்ர் ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ) மூலம் ஒருவரது இருத்தலை கணினி வழியாக உறுதி செய்ய வல்லது. தற்போது நவீன செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாலும், கணினி மையங்கள் பலவற்றிலும் இதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாலும் இந்த நடைமுறை எளிதாக இருக்கும். முதியோருக்கு அதிக சிரமங்களைத் தராது.

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்யப்படும் வேளையில், அனைத்து விரல்களின் ரேகை, கண்பாவை போன்ற உயிர்மை அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் கணினி வழியாக இவற்றை உறுதிப்படுத்துவது எளிது. அலுவலகங்களில் வருகைப் பதிவேடு, திருப்பதி கோயிலில் வழிபாட்டு முன்பதிவு போன்றவற்றில் உயிர்மை அடையாளம் எவ்வாறு மிக இயல்பாக உள்ளதோ, அதேபோன்றதுதான் கணினி வழியாக இருத்தல் தற்சான்று வழங்குவதும்! விரைவில் ஏ.டி.எம். மையங்களில் ரகசிய எண்களுக்குப் பதிலாக உயிர்மை அளவுகோல் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்த நடைமுறை முதியோருக்குச் சிரமங்களைக் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்ற அக்டோபர் மாதம், வருங்கால வைப்புநிதி தொடர்பான இன்னொரு நல்ல மாற்றத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (யு.ஏ.என்.) எனப்படும் ஒரேயொரு வருங்கால வைப்புக் கணக்கு எண் திட்டம்! இது சற்றொப்ப நான்கு கோடிப் பேருக்கு நன்மை பயக்கும்.

தற்போதைய நடைமுறைப்படி, ஓர் ஊழியர் வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்லும்போது, ஒவ்வொரு நிறுவனத்திலும் அவருடைய பி.எப். கணக்கு எண், புதிய நிறுவனத்தின் மூலம் புதிதாக வழங்கப்படும். முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய காலத்துக்கான பி.எப். தொகையை வரவு வைக்க, பல படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களில் சிலவற்றை முந்தைய நிறுவனம் பூர்த்தி செய்து, செலுத்திய தொகையை உறுதிப்படுத்தாமல் வரவு வைத்தல் சாத்தியமில்லை.

வெளியேறிவிட்ட ஊழியர் மீது முந்தைய நிறுவனம் கரிசனம் காட்டாது. இதனால், தனியார் நிறுவன ஊழியர்கள் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர். இப்போது ஒருவர் தனக்கான ஒரேயொரு பி.எப். கணக்கு எண் (யு.ஏ.என்.) வைத்திருந்தால் போதும். எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் இந்தக் கணக்கில் பி.எப். தொகையை வரவு வைக்க முடியும். வரவேற்கத் தக்க மாற்றங்கள்!

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...