Monday, May 25, 2015

திறந்திடு சீசேம்: குரலை மட்டுமே பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை- ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நவீன வசதி

வாடிக்கையாளர்களின் குரலை 'பாஸ்வோர்ட்' ஆக பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமாக, தங்களது அடிப்படை வாடிக்கையாளர் எண், கடவு எண் (பாஸ்வோர்ட்) உள்ளிட்ட ரகசிய விபரங்களை குறிப்பிட்ட பின்னரே நெட் பாங்கிங், டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால், இதற்கு மாற்றாக வாடிக்கையாளரது குரலை மட்டுமே வைத்து பணப் பரிவர்த்தனைகளை செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இன்று தெரிவித்துள்ளது.

இதற்காக, வாடிக்கையாளர்களின் குரல் பதிவுகள் கொண்ட ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட கைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் குரலை அடையாளம் கண்டு, பணப் பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கும் நவீன தொழில்நுட்பம் கையாளப்படுகின்றது.

ஒவ்வொரு வாடிக்கையாளரின் குரலின் ஏற்றத்தாழ்வு, அவரது உச்சரிப்பு, பேசும் வேகம்- பாணி ஆகியவற்றை வைத்து முந்தைய ஒலிப்பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன இயந்திரங்கள், இந்த குரலையே பாஸ்வோர்டாக பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்ளும்.

இந்த புதிய வசதியின் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சுமார் 3.3 கோடி சேமிப்பு கணக்கு மற்றும் கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்கள் பலனடைவார்கள் என இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அலுவலருமான சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025