Friday, February 10, 2017

ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் : பதிவு செய்ய ஜூன் 30 வரை அவகாசம்

புதுடில்லி: 'நாடு முழுவதும், ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களை வாங்க, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது. ஜூன் 30ம் தேதிக்கு பின், ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள்வழங்குவது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும், உணவு வழங்குவதை அடிப்படை உரிமையாக வரையறை செய்யவும், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொருவருக்கும், 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ, ஒன்று முதல் மூன்று ரூபாய் விலையில் வழங்கப்படும். இந்த சட்டம், 2013ல் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன; 'மானிய விலையில் அரிசி வழங்கி வரும் தங்களுக்கு, இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படும்' என, அம்மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.எனினும் நீண்ட இழுபறிக்கு பின், 2016 நவம்பரில், அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 'போலிபயனாளிகளை கண்டறியும் வகையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணெய் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில், இந்த பணி சரிவர நடக்கவில்லை. இதையடுத்து, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மத்திய அரசு இறுதிக்கெடு விதித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மானிய விலையில் ரேஷனில் பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்குவதற்கான ஒதுக்கீடு, இதை பொருத்தே முடிவு செய்யப்படும்.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்படும். அதன் பின், ஆதார் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு, மானிய விலை உணவு பொருட்கள் ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிக்கை, பிப்ரவரி 8ல் வெளியிடப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களை தவிர, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இந்த உத்தரவு கட்டாயம் பொருந்தும். புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். சமையல், 'காஸ்' மானியம், ரயில் பயண சலுகை என பலவற்றிக்கும், ஆதார் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரேஷனில் பொருட்கள் வாங்கவும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகும் ரேஷன் கடைகள் : மத்திய உணவுத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில், 17 ஆயிரத்து, 250 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில், வாடிக்கையாளர்களின் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை பெறலாம். ரேஷன் பொருட்களுக்கான தொகையை, 'ஏடிபி' என்னும் 'ஆதார் கார்டு பேமென்ட்' முறையில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 'ஏடிபி' மூலம் ரயில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், எல்.ஐ.சி., தவணையை செலுத்தும் வசதியும் உள்ளதால் பொதுமக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனை செய்ய முடியும். மார்ச் 31ம் தேதிக்குள், மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், ஏடிபி திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அதனால் உணவுப் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...