Saturday, July 15, 2017

சிங்கப்பூர் பல்கலைத் தலைவராக இந்திய விஞ்ஞானி தேர்வு



அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானியான
சுப்ரா சுரேஷ்(61) சிங்கப்பூரின் புகழ்பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக நேற்று (ஜூலை,13)தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தலைவர் பெர்டில் ஆண்டர்சன் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அதைத் தொடர்ந்து சுப்ரா சுரேஷ் 2018 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

சுப்ரா சுரேஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக பிட்ஸ்பர்க் நகரில் கார்னகி மெல்லன் பல்கலைக்கழத்தின் தலைவராக இருந்து வந்தார்.

பல்கலைக்கழகங்களின் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, சிங்கப்பூர் மற்றும் சர்வதேச அளவில் அதன் அடுத்த ஜனாதிபதியின் உலகளாவிய தேடலை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதற்கான திட்டமிடல், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய பதவிக்கு திரு. கோ தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட தேடல் குழு, பேராசிரியர் சுரேஷைத் தேர்ந்தெடுத்தது. அவருடைய இந்த நியமனம் என்.டி.யு. (நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் வலுவாக அங்கீகரிக்கப்பட்டது.

சுரேஷ் ஒரு கல்வியாளர், விஞ்ஞானி, ஆலோசகர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர். சிங்கப்பூர் தேசிய அறிவியல், தொழில்நுட்பக் கழகத்திலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் சுரேஷ் சிங்கப்பூரின் உயர்கல்வி, ஆய்வு முறைகளை நன்கறிந்தவர். மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நடைமுறைகளையும் அவர் நன்கறிந்திருப்பவர்’ என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கோ பூன் ஹ்வீ தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுப்ரா சுரேஷ் அவர்களை அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய தேசிய மருத்துவக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். புற்றுநோய், இரத்த நோய்கள் மற்றும் மலேரியா செல்களின் இயக்கமுறைகள் பற்றிய சுப்ரா சுரேஷின் ஆராய்ச்சிக்காகத் தேசிய மருத்துவக் கல்வி நிறுவனம் அவருக்கு இந்த அங்கீகாரத்தை அளித்தது. 19 அமெரிக்க விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் மட்டுமே, 3 தேசிய கல்வி நிறுவனங்களின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுப்ரா சுரேஷ் அமெரிக்காவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு, இந்திய ஜனாதிபதி பத்மஸ்ரீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025