Friday, July 14, 2017

எம்.பி.பி.எஸ்., தரவரிசை இன்று வெளியாகுமா?

பதிவு செய்த நாள்
ஜூலை 14,2017 00:08



சென்னை: 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், இன்று பிற்பகலுக்குள், அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594 இடங்கள்; சுயநிதிக் கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170 இடங்கள்; சுயநிதிக் கல்லுாரியில், 1,710 இடங்கள் உள்ளன. 'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்; 17ல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், திட்டமிட்டப்படி, இன்று தரவரிசை பட்டியல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு பல சிக்கலை சந்தித்து உள்ளது. சேர்க்கை தாமதமாவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஒரு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

அப்போதும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழக்குகளை, விரைந்து முடிக்கும்படி, நீதிமன்றத்தை தமிழக அரசு வலியுறுத்தும்.

தற்போதைய சூழலில், இன்று பிற்பகலுக்குள், தமிழக அரசுக்கு சாதகமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்தால், மாணவர்களின் நலன் கருதி, சட்ட நிபுணர்களின் ஆலோசனைபடி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, 17ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025