Saturday, August 11, 2018

'2ஜி' வழக்கு விசாரணை ராஜாவுக்கு அவகாசம்

Added : ஆக 11, 2018 00:00

புதுடில்லி:'2ஜி' ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 17 பேரும் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மத்தியில், காங்., தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர், தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
இதன் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதில், ராஜா, கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமலாக்கத் துறைதொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில், மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில், நீதிபதி நஜ்மி வாஜிரி முன்னிலையில் நடந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய, கனிமொழி, ராஜா உட்பட, ௧௭ பேரும் அவகாசம் கோரினர். இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை, அக்., 9க்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...