Tuesday, February 11, 2020

மூன்று மாதங்களுக்கு பின் கிடைத்த விடைத்தாள் கட்டு ; பல்கலையில் நடந்த 'வினோதம்'

Added : பிப் 11, 2020 00:53

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பீடு செய்ய பஸ்சில் கொண்டு வரப்பட்ட விடைத்தாள் கட்டு மாயமாகி மூன்று மாதங்களுக்கு பின் அதே பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதம் நடந்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகரில் இப்பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட 90 கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் செமஸ்டர் தேர்வுகள் நவம்பரில் நடந்தன. விடைத்தாள்கள் பல்கலைக்கு சொந்தமான பஸ் மூலம் மதிப்பீடு செய்ய பல்கலைக்கு கொண்டு வரப்பட்டன. பிப்ரவரி முதல் வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து தேர்வு முடிவுகள் அறிவிக்க இருந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லுாரி ஒன்றின் விடைத்தாள் கட்டு ஒன்று மாயமானது தெரிந்தது.

அதில் 360 விடைத்தாள் இருந்தன.மாயமான கட்டை தேடும் பணியை பல்கலை தீவிரப்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட பஸ்ஸில் அந்த கட்டு இருந்ததாக சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வாணையர் அலுவலகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பேராசிரியர்கள் கூறியதாவது: அந்த பஸ்சில் தினம் 40 பேர் பல்கலை வந்து செல்கின்றனர். மூன்று மாதங்களாக யார் கண்ணிலும் தென்படாத அந்த கட்டு, பல்கலையால் தீவிரமாக தேடப்படுகிறது என்றதும் அதே பஸ்சில் கிடைத்துள்ளது வினோதமாக உள்ளது.

சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. துணைவேந்தர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிடைத்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்து நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவை ஒரு வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின் கட்டு மாயமான சர்ச்சை குறித்து விசாரிக்கப்படும்," என்றார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...