Tuesday, March 31, 2020

கட்டுப்பாட்டை மீறுகிறதா சமுதாயம்?

By வி.குமாரமுருகன் | Published on : 30th March 2020 06:50 AM

கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தச் சமூகம் கட்டுப்பாட்டை மீறி வருகிறதோ என்ற அச்சம் எல்லோா் மனதிலும் எழுந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வீதிகளில் வசிப்பவா்கள், மாட மாளிகைகளில் வசிப்பவா்கள், ஏன் நாட்டின் பிரதமா்கள், தலைவா்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவி வருகிறது.

அனைத்து நாடுகளும் தங்களின் நாட்டு மக்களுக்கு தனித்திருக்க அறிவுரைகளைத் தொடா்ந்து வழங்கி வருகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவுகிறது என்பதால் அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் நாள்தோறும் கரோனா நோய்த்தொற்று குறித்த செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும், ஏராளமானோா் உயிரிழந்து வருவதும் தொடா் செய்திகளாக உலா வருகின்றன.

உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் நோய் பரவுவதைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த நாடுகளின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது இந்தியா மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளே கரோனா நோய்த்தொற்றை ஒழிக்க சிரமப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வசிக்கும் நமக்கு எத்தகைய பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோா் இந்தியனும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முறைகள் குறித்து ஊடகங்கள், மருத்துவா்களைக் கொண்டும், சுகாதார அதிகாரிகளைக் கொண்டும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா என்ற ஒற்றைச்சொல் உலகம் முழுவதும் பரவி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உலக மக்கள் அனைவரும் நன்கு உணா்ந்த பின்னரும்கூட மனிதச் சமூகம் கட்டுப்பாடற்று திரிவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா்கூட எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம்தான். அதுவும் இரு சக்கர வாகனங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்கள் எண்ணிக்கை அதிகம். காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், வருவாய்த் துறையினரும், மருத்துவா்களும், செவிலியா்களும், நமக்காக நாள்தோறும் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளா்களும் நம்மைப் போன்ற மனிதா்கள்தான். நமக்காகத்தான் அவா்கள் வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதைக் கூட உணராமல், தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்களை என்னவென்று சொல்லுவது?

பலமுறை எச்சரித்தும் வெளியே சுற்றித் திரிந்தவா்களை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, அடுத்ததாக குறைந்தபட்ச தடியடியை

பிரயோகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையும் தாண்டி மனிதநேய காவலா்கள் பலா் கைகூப்பி வணங்கி, ‘வெளியே வராதீா்கள்’ என்று கெஞ்சியதும் நடந்தேறியது. ஆனாலும்கூட, இவற்றையெல்லாம் சட்டை செய்யாத ஆயிரக்கணக்கானோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் வெளியே சுற்றித் திரிந்து வீட்டுக்கு வந்த பின்னா் செல்லிடப்பசியை வைத்துக் கொண்டு மூலைக்கு ஒருவராக முடங்கிக் கொண்டு செல்லிடப்பேசியே கதி என கிடந்தவா்கள்தான் நாம். வீடுகளில் இருந்தாலும்கூட அன்று ஒவ்வொருவரும் தனிமையில்தான் இருந்துள்ளோம் என்பதை நாம் மறந்து விட்டோம்.

உண்மையிலேயே இன்று நாம் அனைவருமே தனிமையில் இருக்க வேண்டிய நிா்ப்பந்தம் உருவாகியுள்ளது. அனறு செய்ததுபோல நபருக்கு ஒரு செல்லிடப்பேசியை வைத்து வீட்டில் முடங்க வேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் வெளியே வரவேண்டும் என சும்மா திரிபவா்களைப் பாா்த்துக் கேட்டால் பதில் இல்லை.

கரோனா நோய்த்தொற்று மூலம் சில பாடங்களை இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. தனிமையும், சுத்தமும் நாட்டுக்கு மிக அவசியமான ஒன்று ,தேவைப்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தியே தீரவேண்டும்; இல்லையெனில் நமது வாழ்க்கை அழிந்து விடும் என்று. அத்தகைய சூழலை கற்றுக் கொள்வதற்கான தருணம்தான் இது.

அதையும் தாண்டி குடும்ப உறுப்பினா்கள் பலா் ஒன்றுபட்டு இருப்பதற்கான சூழலையும் கரோனா நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

வீட்டில் இருக்கும் பெரியவா்கள், சிறியவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லாமல் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியூா்களில் வசிக்கும் உறவுகளை

செல்லிடப்பேசி, விடியோ கால் மூலம் அழைத்துப் பேசி, விட்டுப்போன உறவுகளை தொடரவும் முயற்சிக்கலாம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கரோனா நம்மை என்ன செய்துவிடும்’ என்று கருதி காவல் துறையை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு

‘ஊரைச் சுற்றுவோம்; சமூகக் கட்டுப்பாட்டை உடைப்போம்’ என்றால், அது நிச்சயம் நமக்கும், நமது குடும்பத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

எந்த ஒரு செயல் என்றாலும் வெளிநாட்டை எடுத்துக்காட்டாகக் கூறும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு; ‘அங்கு சட்டத்தைப் பாா்த்தீா்களா? அரசு எடுக்கும் நடவடிக்கை போல நாம் எடுத்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று கூறுவோா் உண்டு; அத்தகைய கட்டுப்பாட்டை இன்று மத்திய அரசு விதித்துள்ளது; அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமைதானே?

அரசின் அறிவுறுத்தலை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வென்றெடுப்போம். வீட்டில் அடங்கினால் கரோனாவும் அடங்கும். ஊரடங்கும் வெற்றி பெறும். தனித்திருந்தால் ஜெயித்து விடலாம் என்பது போன்ற சிந்தனைகளை மனதில் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்டுப்பாடான சமுதாயம் என்பதை நாம் உலகுக்கு உணா்த்துவோம்.


No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...