Wednesday, August 11, 2021

ஓ.பி.சி., இட ஒதுக்கீடு வழக்கு உயர் நீதிமன்றம் கேள்வி


ஓ.பி.சி., இட ஒதுக்கீடு வழக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Added : ஆக 10, 2021 23:15

சென்னை:'அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை, மத்திய அரசுக்கு வழங்கிய பின், தமிழக இட ஒதுக்கீடு முறை எப்படி பொருந்தும்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அவமதிப்பு வழக்கு

'மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும்' என, 2020 ஜூலையில், மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.'இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, தி.மு.க., தரப்பில், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க., சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன், ''அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ''இந்த இட ஒதுக்கீடு என்பது, மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக கல்லுாரிகளுக்கு பொருந்தாது,'' என்றார்.

அப்போது, 'அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை, மத்திய அரசுக்கு வழங்கிய பின், தமிழக இட ஒதுக்கீடு முறை, அதற்கு எப்படி பொருந்தும்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இட ஒதுக்கீடு

மேலும், 'மத்திய அரசு தான் இது குறித்து முடிவு செய்ய முடியும். தமிழக இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த கூற முடியாது. அந்த இடங்கள், மாநிலங்களுக்கு திரும்ப வழங்கப் பட்டால் மட்டுமே, தமிழக அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற முடியும்' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் நடராஜன் வாதாடியதாவது:மருத்துவ படிப்புகளில், அனைத்து மாநில மாணவர்களும் பயனடைய, உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, அகில இந்திய ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தகுதி அடிப்படையில் மட்டுமே, அந்த இடங்கள் நிரப்பப் பட்டன.

கடந்த, 2007 -- 08ம் ஆண்டு முதல், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு, 15 சதவீதமும், பழங்குடியினருக்கு, 7.5 சதவீதமும் இட ஒது க்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அகில இந்திய ஒதுக்கீடு என்பது, தேசிய கொள்கை என்பதால், அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கு தான் பொருந்தும்; மாநில அரசு இட ஒதுக்கீடு பொருந்தாது.இவ்வாறு, அவர் வாதாடினார்.இரு தரப்பு வாதங்களும் நிறைவடையாததால், வழக்கை, 17ம் தேதிக்கு, தலைமை நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...