Tuesday, March 31, 2015

தேர்வு முறைகளில் பெரிய மாற்றம் தேவை

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு முறைகளில் பெரிய மாற்றம் தேவை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பிளஸ்–2 தேர்வில் தமிழ்நாட்டில் விஞ்ஞான ரீதியாக நடந்த ஒரு பெரிய முறைகேடு மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு இன்று முடிகிறது. கடந்த 18–ந்தேதி கணிதத்தேர்வு நடந்தது. கணிதத்தில் 200–க்கு 200 வாங்கினால்தான், என்ஜினீயரிங் கல்லூரிகளில் ‘பிரி சீட்’ நிச்சயம் என்ற உணர்வில், இந்த தேர்வுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 323 மாணவர்கள் தேர்வு எழுதினர். அங்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பு, அந்த வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஒரு ஆசிரியர், கணித வினாத்தாளை அப்படியே தனது செல்போனில் படம்பிடித்து, அதை ‘வாட்ஸ் அப்’ மூலம் தன்னுடைய நண்பர்களான வெளியே உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்ப, அவர்கள் அந்த வினாக்களுக்குரிய விடைகளை தங்கள் வாட்ஸ் அப் மூலம் தேர்வு அறைக்குள் இருக்கும் ஆசிரியர்களுக்கு அனுப்பி, அந்த செல்போன் தகவல்கள் மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில், இப்போது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் தேர்வு மையங்களில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதி அளிக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கிருஷ்ணகிரியில் ஒரு ஆசிரியை வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து, அதில் விடைகளை ‘டிக்’ செய்து மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்தது நன்றாக படிக்கும் மற்ற மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை அற்ற நிலையை இப்போது ஏற்படுத்திவிட்டது. நாம் கஷ்டப்பட்டு படித்து தேர்வை எழுதும்போது, படிக்காத மாணவர்களும் இப்படி முறைகேடுகளால் நமக்கு இணையாக மார்க் எடுக்கிறார்களே என்ற சலிப்பு வந்துவிடும். இந்த சம்பவங்கள் ஒரு சந்தேகப்பார்வையை நமது தேர்வுத்துறை மீது ஏற்படுத்திவிட்டது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது செல்போன்களுக்கு தடை உள்பட வினாத்தாள்கள் வெளியே செல்லாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று தீவிரமாக ஆராய்ந்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், வினாத்தாள்களிலேயே பல தவறுகள் இருப்பதும் வெளியே வந்துவிட்டது. வினாத்தாள்களில் உள்ள தவறுகளை தேர்வு எழுதிவிட்டு வெளியேவரும் மாணவர்களே வெளியே சொல்லி குறைப்பட்டுக்கொள்ளும்போது, வினாத்தாள் தயாரிப்பு, அதை சரிபார்ப்பு ஆகிய நேரங்களில் ஏன் கற்றறிந்த ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் தெரியாமல் போய்விட்டது.

மாணவர்களின் அறிவாற்றலை சோதிப்பதற்குத்தான் தேர்வு, வினாத்தாள்கள் என்றால், அதிலேயே தவறு என்றால் எங்கு செல்வது என்பதுதான் இப்போது சமுதாயத்தில் உள்ள பெரிய கேள்வி. பொதுவாக நமது கல்வி முறையிலேயே பெரிய மாற்றம் தேவை. வினாத்தாள் லீக் ஆகிறது, வாட்ஸ் அப்பில் வெளியே தகவல்கள் அனுப்பப்படுகிறது என்பது போன்ற குறைபாடுகளைத்தவிர, விடைத்தாள்கள் மதிப்பீடு, மார்க் பட்டியலில் கூட்டலில் தவறு என்று தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. அதனால்தான் பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், மறுமதிப்பீடு, மறுகூட்டல் போன்றவற்றுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகள் எதுவுமே பள்ளிக்கூட, பல்கலைக்கழக தேர்வுகளில் இல்லாத ஒரு நிலையை உருவாக்க, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், தேர்வு முறைகளிலேயே நம்பிக்கை இல்லாத நிலை உருவாகிவிடும்.

Monday, March 30, 2015

தொலைதூர அரசு பஸ்களில் ஏப்ரல் 1 முதல் ‘வை-ஃபை’

தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் வரும் 1-ம் தேதி முதல் தொலை தூரம் செல்லும் அரசு பஸ்களில் கம்பியில்லா இணையதள (வை-ஃபை) வசதி வழங்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித் துள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில அரசு பஸ் ஊழியர் சங்க தலைவர் ஸ்ரீஹரி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்க ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் அரசு சொகுசு பஸ்களில் வை-ஃபை வசதி வழங்கப்படும்.

இந்த வசதியை பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து இந்த வசதி தேவைப் படும் பயணிகளிடம் கூடுதலாக மணிக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக விசாகப்பட்டினம், குண்டூர், திருப்பதி ஆகிய நகரங் களில் இருந்து புறப்படும் அனைத்து அரசு சொகுசு பஸ்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

மேலும் இந்த வசதி உள்ள பஸ்களில் ஒரு கணினியும் இருக்கும். இதில் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் 500 சி.டி.கள் இருக்கும். இதில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான படத்தைக் காணலாம்.

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்? by திண்ணை வாத்தியார்

Return to frontpage


சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி. யாருக்காக? எதற்காக? என்பதுதான் முக்கிய விஷயம்.

கற்றல் திறன் குறைவான மாணவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவ்வப்போது அவர்களின் பெற்றோரிடம் மாணவரின் பயிற்சியைக் குறித்து விவாதிக்கவேண்டும். அதிகாலையில் வாசிக்க, மாணவன் அல்லது மாணவியை எழுப்ப வைக்கவேண்டும். இரவு 9 மணிக்குத் தொலைபேசியில் அழைத்து, மாணவர் கற்கிறாரா என்பதை உறுதிபடுத்தவேண்டும். தலைமையாசிரியிடம் ஒவ்வொரு வாரமும் எந்தெந்த மாணவருக்கு, எத்தனை முறை, எந்தெந்த நேரத்தில் தொலைபேசியில் உரையாடப்பட்டது என்கிற விவரத்தை ஆசிரியர்கள் கையால் எழுதி அளிக்கவேண்டும். இதுதவிர. ஆசிரியர்கள் கூட்டாகவோ, தனியாகவோ ஒரு மாணவ, மாணவியரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது பார்க்கவேண்டும். அதாவது உங்களின் முழுசிந்தனையும் மாணவரை நோக்கி இரவு பகல் அமையவேண்டும் என்பதே கல்வித்துறையின் விருப்பம்.

என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?

சமீபத்தில் ஒரு விழிமாற்றுத்திறனாளி ஆசிரியர் தன் ஊரிலிருந்து தனியாகக் காலை 5 மணிக்குப் பேருந்து பிடித்து, தான் பணிபுரியும் பள்ளிக்குக் காலை 6 மணிக்கு வந்து வகுப்பு எடுக்கிறார். உண்மையில் அவர் வந்து சேரும்வரை அவருக்கு எதுவும் துர்சம்பவம் நடக்கவில்லை என்பது ஓர் ஆறுதல். பிறகு அவர், மாலை வகுப்பு முடிந்தபின் சமுதாயக்கூடத்தில் இரவு 9 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்புகிறார். அவருக்குச் சர்க்கரை நோய். ஏதாவது அவருக்கு விபரீதம் ஏற்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பு. வீடு திரும்பும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டால் அவர்தான் பொறுப்பு.

மற்றொரு ஆசிரியர் குழு மாணவர்களின் இல்லம் நோக்கிச் செல்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை அந்த ஊரில் வைத்துத் தனிப்பயற்சி தருகிறது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். நீங்கள் இல்லம் நோக்கிச் சென்று கற்பிக்கவேண்டும். ஏன் வருவதில்லை? என்று கேட்கக்கூடாது. அதற்காகத் தான் இல்லம் நோக்கிப் பள்ளி என்ற திட்டம். இது ஒரு புதிய உத்தி. இந்த உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களைத் தேடித் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவேண்டும்.

இன்னொரு ஆசிரியர், இரவு 7 மணி முதல் 11 மணி வரை வகுப்பு எடுத்துவிட்டு, மாணவர்களுடன் அங்கேயே தூங்கிப் பின் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வகுப்பைத் தொடங்கி காலை 7 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்பி, ஓய்வு எடுத்துவிட்டுக் காலை 9 மணிக்குப் பள்ளி திரும்புகிறார். மாணவர்களும் அவ்வண்ணமே. இதற்கிடையில் மாணவருக்குத் தேவையான உணவை ஆசிரியர்தான் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தாகவேண்டும்.

ஒரு பெண் ஆசிரியர் மாணவர்களைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உணவு அளித்துக் கற்பிக்கிறார். சனி, ஞாயிறுகளில் தன் வீட்டில் உணவளித்துப் பயிற்சி அளிக்கிறார்.

இன்னொரு ஆசிரியை தன்னுடைய பணிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தன் குடும்பத்தை மறந்துவிட்டு, ஞாயிறு முழுவதும் மாணவர்களுக்குக் கற்பிக்கவருகிறார். அவருடைய குடும்பத்தைப் பற்றிய முழுசிந்தனையையும் அவர் ஒதுக்கிவிட்டுக் கற்பிக்கிறார். இரவு வீடு திரும்பியபின், அவருக்குத் தொலைபேசி ஒன்று வருகிறது. மது அருந்திய ஒருவர், அவரிடம் தவறாகப் பேசும் நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது மாணவரின் தந்தை. மறுநாள் காலை அவர் மன்னிப்பு கோருகிறார். இதையும் அந்த ஆசிரியை சகித்துக்கொள்ளவேண்டும். ஒரு ஆசிரியையின் தொலைபேசி எண் ஏன் பொதுமக்களுக்குரியதாக வேண்டும்?

ஒரு ஆசிரியர் தன் மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு ஊராகச் சென்று, அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல, மாணவர்களைச் சேர்த்துவந்து, கட்டாயமாக உட்காரவைத்துத் தேர்ச்சிக்காகக் கற்பிக்கிறார். மீண்டும் அவர் அந்த மாணவர்களை ஊரில் விட்டுவிட்டு தன் வீடு திரும்ப இரவு 10 ஆகிவிடுகிறது. வரும் வழியில் மாணவர்களுக்கு ஏற்படும் அசாம்பாவிதத்திற்கு அவரே பொறுப்பு. அவருக்கு ஏற்படும் அசம்பாவிதத்திற்கு யாரும் காரணம் ஆகமுடியாது. காரணமும் கோரமுடியாது.

காலை 6-9 வரை சிறப்பு வகுப்பு, பின் 9.00 - 4.30 வரை வழக்கமான வகுப்பு, பிறகு 4.30 - 5.30 வரை சிறப்பு வகுப்பு, பின்பு 6-9 வரை இரவு வகுப்பு, காலை 4-6 வரை சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு முழுவதும் சிறப்பு வகுப்பு என மாறி மாறி சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மாணவன் மூச்சுவிடவும், ஆசிரியர் ஓய்வு எடுக்கவும் நேரம்தான் இல்லை. இத்தனை சிறப்பு வகுப்புகள் எதற்காக?

ஏன் இந்த ஓட்டம்..?

ஒரு கற்பவரின் தேர்ச்சி ஒரு பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துகிறது. ஒரு பள்ளியின் உயர்ச்சி, மாவட்டத்தின் உயர்ச்சி அதாவது மாநில அளவில் அதன் தரம் உயர்கிறது. ஒரு வேளை கற்பவர் தோல்வி அடைந்தால் ஒரு பள்ளி, மாவட்டத்தின் தரம் வீழ்கிறது. எனவே ஒரு பள்ளி உயரவேண்டும், ஒரு மாவட்டம் மாநில அளவில் தரம் உயரவேண்டும் என்று ஒட்டம்தான் இதற்குக் காரணம். இந்த ஓட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிகழ்கிறது. மாணவர், ஆசிரியர், பள்ளி, மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் என்ன? என்று கேள்வி எழுதாதபோது, ஏன் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஏன் இந்த ஓட்டம் நிகழவில்லை? என்பதுதான் கேள்வி.

இந்த சிறப்பு வகுப்புகள் எத்தனை மாதங்கள் நடக்கின்றன என்ற கேள்வி எழுந்தால், தேர்வுக்கு இரண்டு மாதம் முன்புதான் என்பது பதில். உடனடி உணவு என்பதுபோல் உடனடி பயிற்சி. இந்த உடன் அடி பயிற்சியில் மாணவர்களைத் தேரவைக்கவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களைத் தன்பிள்ளைபோல், மாணவர்களின் வறுமைக் குடும்பத்தைத் தன் குடும்பம்போல் பாவித்து. சகிப்புத்தன்மையுடன், எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் பொறுமையுடனும், ரோஷத்தையும் கவுரவத்தையும் விட்டுவிட்டு, இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவேண்டும். இது எல்லாம் எதற்காக?

ஒரு மாணவர் தேர்ச்சி அடைய போதுமான மதிப்பெண் 35-க்காக. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே அந்த மாணவர் தேர்ச்சி அடைந்துவிடுவார். பள்ளி நாட்கள் மொத்தம் 205. இந்த நாட்களில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டுமே படிக்க ஒரிரு வாரம்போதும். ஆனால் என்ன நடக்கிறது? ஆசிரியர் கற்று தரும் பாடங்களைத் தினமும் நேரம் ஒதுக்கி வாசிக்காமல், சமூகச் சீர்க்கேட்டிற்கும் விளையாட்டுக்கும் பொழுதுபோக்குக்கும் நேரத்தை வீணடித்த மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் அயராது பாடுபடவேண்டும். கோடிக்கணக்காகப் பள்ளிக்குச் செலவழிக்கும் அரசை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது. அது பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நன்றாகத்தான் வைத்துள்ளது. ஆனால், ஓர் அரசுப் பள்ளியில் கால் சதவீத மாணவர்களின் பொறுப்பின்மையால் அரசும் ஆசிரியர்களும் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் உதவிகளும் கேலிக்குரியதாகின்றன.

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

சொல்லத் தோணுது 27: பலி கேட்கும் பயணங்கள்....by தங்கர் பச்சான்

Return to frontpage

பலருக்கும் பயண அனுபவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பயணம் செய்ய முற்படும் போதெல்லாம் மரணபயமும் வந்து தொற்றிக் கொள்கின்றன. வீட்டை விட்டுப் புறப்படும் போது கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் தெரிவதில்லை. தொடர்வண்டி, வானூர்தி விபத்துகள் எப்பொழுதோ ஒன்று ஏற்படுவதைப் போல அல்ல சாலைவழிப் பயணங்கள். விபத்து செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

வெறும் செய்தியாகவே அதனை ஊடகங்களில் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும், அந்த விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க நேரமோ தேவையோ இருப்பதில்லை. வெறும் புள்ளி விபரங்களுக்குள் அவர்களின் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஒரு சாலை விபத்து ஏற்படும் போது எதனால் அது நிகழ்ந்தது என்பதற்கான காரணங்கள் ஆராயும் முன்னரே அரசாங்கம் உதவித் தொகையை மட்டும் அறிவித்துவிட்டு தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

விபத்து என நடந்தால் வாகனம் ஓட்டிவந்தமுறை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லா விபத்துகளும் வெறும் வாகன ஓட்டிகளால் மட்டுமே நிகழ்வதில்லை. சாலையின் ஒழுங்கு, வாகனத்தின் இயங்குநிலை, வாகன ஓட்டியின் உடல்நிலை என அனைத்துமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சாலையின் ஒழுங்கு மற்றும் சீர்கேட்டினால் ஏற்படுகின்ற விபத்துக்கள் பற்றி இதுவரை ஆராயப்பட்டதாகவோ, அவ்வாறு ஆராயப்பட்டாலும் அதனை உருவாக்கியவர் மீதும் மேற்கொண்டு பராமரித்த ஒப்பந்ததாரர் மீதும் அதற்குக் காரணமாக பின்புலத்தில் இயங்கும் அதிகாரிகள் மற்றும், அரசாங்கத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

ஒரு சாலை என்பது உருவாக்கப்படும் போதும், பின் அது பராமரிக்கப்படும்பொது மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் இங்கு கடைபிடிக்கப்படுகின்றதா? பொறுப்பிலுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, தங்களுக்கு சேரவேண்டியதைக் கொடுத்தால் போதும் எவருக்கும் அந்தப் பணியைக் கொடுத்துவிடலாம் என்னும் நிலையில் தான் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒழுங்கான, நேர்மையான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஒரே ஒரு சாலையாவது நம் நாட்டில் தேறுமா?

இவைகளெல்லாம் முறையாக மேற்கொள்ளப்பட்டன என கையெழுத்திடும் அமைச்சர்களும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளும், சாலை உருவாக்கிய ஒப்பந்ததாரரும் நீதிமன்றத்தால் என்றைக்காவது ஒருநாள் தண்டிக்கப்படும் பொழுதுதான் இவைகள் தொடர்பான குற்றங்கள் குறையும். அதுவரை முடித்து வைக்கப்படும் கணக்காகவே அனைத்து விபத்துக்களின் காரணங்களும் காணாமல் போகும். மனிதக் கொலை வழக்குகளுக்கு நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விபத்துத் தொடர்பான வழக்களுக்கு தரப்படுவதில்லை.

அதேபோன்று விபத்துக்குக் காரணமாகும் வாகனங்கள் பெரும்பாலும் அதன் தன்மையை இழந்து போன சாலைகளில் இயக்கத் தகுதியற்ற மிகப்பழைய வாகனங்களாகவும், பராமரிப்பு அற்றவைகளாகவும் இருப்பது இன்னொரு முதன்மையானக் காரணம். போக்குவரத்து அதிகாரியிடமிருந்து உரிமம் பெறுவதிலிருந்து நேர்மையான முறைகளைப் பின்பற்றப்படுவதில்லை. அதன் தரக்கட்டுப்பாட்டையும், தகுதி கட்டுப்பாட்டையும் நேர்மையாகவும், கண்டிப்புடனும் செயல்படுத்தினாலே முக்கால்வாசி விபத்துக்கள் தவிர்க்கப்படும். அந்தப் பதவியைப் பெறுவதற்காகவும், பணி இடமாற்றத்திற்காகவும் அந்த அதிகாரிகள் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தங்களின் நேர்மையை இழக்க வேண்டியிருக்கிறது. விபத்துக் காரணங்களை உண்மையுடன் ஆராய்ந்தால் எத்தனை அதிகாரிகள் தப்புவார்கள் என்பது தெரியவரும். அவைகளெல்லாம் இனி எக்காலத்துக்கும் நடக்கப் போவதில்லை.

குடிப்பழக்கம் பெறுகிவிட்ட கடந்த ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டேப் போகிறது. நெடுஞ்சாலை மற்றும் உள்ளூர் சாலைகளின் ஓரமாக மதுக்கடைகள் இயங்கக்கூடாது என வழக்குப் போட்டுப் பார்த்தார்கள். நீதிமன்றமும் கட்டளைப் பிறப்பித்தது. நீதிமன்றத்தின் ஆணைகள் எத்தனையோ கண்டுகொள்ளப்படாமல் மீறப்பட்டு கொண்டிருப்பதுபோல் மதுக்கடைகளும் நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றப்படவில்லை. சில இடங்களில் வெறும் வாசல்படிகளை மட்டும் வேறுப்பக்கம் மாற்றி வைத்துக் கொண்டார்கள்.

எல்லா விபத்துக்களும் குடிமக்களின் தலையிலேயே அவர்களின் குடும்பத்திலேயே ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பதுபோல விழுந்து கொண்டிருக்கின்றன. மக்களால் முடிந்ததெல்லாம் எலுமிச்சம்பழத்தை சக்கரத்தில் ஏற்றிவிட்டு சாலையோக் கடவுரை வேண்டுவது மட்டும்தான்.

தங்களின் வாகனத்தை வேறொரு வாகனம் கடப்பதை எவருமே விரும்புவதில்லை. என்னையா மீறினாய்? என்னுடைய வாகனத்தின் மதிப்பு என்ன? சுண்டைக்காய், நீ முந்துகிறாயா என வேகக்கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமலேயே ஒருவரையொருவர் முந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரித்ததால் வாகனங்கள் அதிகரித்திருக்கிறது. அதனால் விபத்துக்களும் அதிகமாகும்தானே எனச் சொல்லலாம். விலை மதிப்பற்றவை உயிர்கள் மட்டுமே. இவை அயல்நாடுகளில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. சாலை விபத்து ஒன்று நிகழும்போது அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடியான நடவடிக்கைகள் உடனுக்குடனாக செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல் இங்கு இதனை சரி செய்யக்கூடியவர்கள் உயர்நிலையிலுள்ள அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான்.அவர்கள் ஒருபோதும் இதில் அக்கரை செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களிடம் ஹெலிகாப்டர் இருக்கிறது, சிவப்பு விளக்கு பொருத்திய மக்களை விரட்டியடிக்கும் வாகனங்கள் இருக்கின்றன. இங்கு பயந்து பயந்து பயணம் செய்பவர்களெல்லாம் இவர்களை பதவியில் அமர்த்தும் மக்கள்தான்.

சாலை விபத்துக்கள் குறித்த செய்திகளை கண்ணுறும் போதெல்லாம் அதனால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள்தான் என் கண் முன் வந்து நிற்பார்கள். தந்தையை இழந்து வாழ்க்கைத் தவறவிட்டப் பிள்ளைகள், கணவனை இழந்து, மனைவியை இழந்து குழந்தைகளுடன் போராடும் குடும்பத்தலைவனும் தலைவியும், உடன்பிறந்தவர்களை இழந்து வாடும் அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்கள், திருமணத்துக்கு நாள் குறித்துவிட்ட மணமக்கள், மணம் முடிந்து கற்பனைகளுடன் வாழ்வைத் துவக்கவிருந்த இளம் கணவன், மனைவி, வாழ்க்கை என்னவென்றே வாழ்ந்துப் பார்க்காத பள்ளிச் செல்லும் இளம் பிஞ்சுகள் என எத்தனையோ உறவுகள் பாதிப்பையும், இழப்பையும் அடைந்து கொண்டிருக்கிறார்கள் . காரணமானவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? பலிகள் கேட்கும் கடவுளுக்கு பலி கொடுக்கவும் யாகங்கள், பூசை செய்யவும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், பலிகள் கேட்கும் பயணங்களுக்கு தங்களுக்கு தொடர்பே இல்லாத தங்களின் உயிரைத் தர வேண்டியிருக்கிறதே எனும் கேள்விக்கு பதிலை சிந்திக்க நமக்குத் தெரியவில்லை.

அந்த சாலைப்போட்ட நாளிலிருந்து அந்த குறிப்பிட்ட பாலத்தில் இதுவரை நடந்த விபத்துக்களைக் கணக்கெடுத்தால் நூறுக்கு மேலே கூடப் போகலாம். எத்தனை உயிர்கள் இழப்பு, எவ்வளவோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன.

கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நெய்வேலி வளைவிலிருந்து வடலூருக்கு செல்லும் வழியில் ஒரு ஓடையின் குறுக்கே எந்தக் காலத்திலோ அமைத்த அந்த ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்லும் ஒருவழிப் பாலம் பலி வாங்கிய உயிர்கள் கணக்கற்றவைகள்.இந்த வழியாக எத்தனை முறைகள் எத்தனை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்து போயிருப்பார்கள்?

தீர்வுதான் இல்லை.இதுதான் நம்நாடு!

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

ரூ.5-க்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு 10 ரூபாய் பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளிக்கலாமா? - ‘திட்டத்துடன்’ வரும் பயணிகளுக்கு அபராதம் நிச்சயம்



ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு வரும் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ரூ.5-க்கான பயண டிக்கெட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதே நேரம், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய்தான். அது மட்டுமின்றி, பிளாட்பார டிக்கெட் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், பாசஞ்சர் ரயில் டிக்கெட் அந்த நாள் முழுக்க செல்லுபடியாகும். புறநகர் ரயில் டிக்கெட்கூட 1 மணி நேரம் வரை செல்லுபடியாகும். எனவே, 5 ரூபாய்க்கான பயணச் சீட்டை எடுத்து வைத்துக்கொண்டு, பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளித்துவிடலாம் என்ற மனநிலையில் சில பயணிகள் உள்ளனர்.

இதற்கு வாய்ப்பு இல்லை. ரயில்வே நிலையங்களில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்கின்றனர் ரயில்வே உயர திகாரிகள். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 7 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பயணிகள், அவர்களை வழி யனுப்ப வருபவர்களைவிட மற்றவர்களின் கூட்டம் அதிகம் உள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் ரகசிய ஆய்வு நடத்தியது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக தங்கியிருப்பவர்கள் பலர் தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்து காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டுப் போகின்றனர். கட்டிட வேலைக்கு செல்பவர்கள் பலர், ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கி, காலையில் எழுந்து குளித்துவிட்டுச் செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து சொந்த வேலைக்காக வருபவர்கள் பலரும் ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், பல பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் பயன்பாட்டில் இல்லை.

இவர்கள் நடமாட்டத்தைக் குறைக்கவே பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பிளாட்பார டிக்கெட் இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறை ஏப்.1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த ரயில்கள் வரும் இடத்துக்கு மட்டும் செல்லவேண்டும். புற நகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த பகுதிக்கு மட்டும் போய் வர வேண்டும். பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் ரூ.10-க் கான பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். ரூ.5 கட்டணம் கொண்ட பயணச் சீட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VALLIAMMAI COLLEGE WINS "A" GRADE FROM NAAC

CHETTINAD ADMISSION NOTIFICATION 2015-15


NEWS TODAY 06.12.2025