Thursday, October 8, 2015

நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!

நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!

அனுபுதி கிருஷ்ணா

"ஹலோ எழுத்தாளரே, எப்படி இருக்கிறீர்கள்?"

பழைய நண்பன் ஒருவனின் குரலை, காலையிலேயே கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் பேச ஆசைதான். ஆனால் அதிகாலை நேரத்தில், பல மாதங்களுக்குப் பின்னர், பழைய நண்பனின் குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் வருடத்துக்கு ஒரு தடவை (என்னுடைய பிறந்தநாளுக்கோ அல்லது அவனுடைய பிறந்தநாளுக்கோ), அதிகபட்சமாய் மூன்று நிமிடங்கள் பேசும் நண்பனின் குரல் அது!

பேராவலுடன் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தேன். பெரியதாக ஒன்றுமில்லை. அவன் க்ரூப் அழைப்பை அனுப்பியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கூப்பிட்டிருக்கிறான். சீரியஸான பல கேள்விகள் மற்றும் பதில்களுக்குப் பிறகு, அது 'வாட்ஸ்ஆப் க்ரூப்' என்பது புரிந்தது. அதில் என்னைத்தவிர எல்லா முன்னாள் வகுப்புத் தோழர்களும் இருக்கிறார்களாம். ''நீ மட்டும் அதில் இல்லை, அதன் சந்தோஷங்களில் கலந்துகொள்ளவில்லை" என்றான் அவன். என்னால் சிரிக்கமட்டுமே முடிந்தது.

முதன்முதலாக நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன்; அதுவும் துளிகூட விருப்பமே இல்லாமல். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால், புதிதாக வரும் விஷயங்களைத் தெரிந்து கொள்வது கடினமாகி விடுகிறது. எனக்கு ஆர்க்குட் அறிமுகமான சமயத்தில், உலகமே ஃபேஸ்புக்கை நோக்கி நகரத்தொடங்கி இருந்தது. கஷ்டப்பட்டு ஃபேஸ்புக் அக்கவுண்டைத் திறந்தபோது, கூகுள் ப்ளஸ் வந்திருந்தது. அதுசரி டிவிட்டருக்கு என்ன ஆனது என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகாமலே இருப்போமே. அதனால் இயல்பாகவே வாட்ஸ்ஆப்பைப் பற்றிய எந்த அறிகுறியும் எனக்கு வரவில்லை. உறவுக்காரி ஒருத்தி அதை அறிமுகப்படுத்தி வைத்த பின்னரும், வாட்ஸ்ஆப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.

சகாக்களின் நெருக்கடியை எந்த வயதிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. 35 வயதே ஆனாலும் கூட. என்னுடைய மருத்துவர், செவிலி, டெய்லர் என எல்லாருமே 'இதை வாட்ஸ்ஆப் பண்ணி விடுங்கள்' என்கின்றனர். அவர்கள் யாருமே வழக்கமான குறுஞ்செய்திகளை கண்டுகொள்வதாகக் கூடத் தெரிவதில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பல மாத வற்புறுத்தலுக்குப் பின்னர், என்னுடைய மருத்துவரையும், கடைக்காரர்களையும் நோக்கி ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன். ஒரு அழகான காலையில், உலகத்தையே பெருந்தன்மையுடன் பார்த்த தருணம் அது.

ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப்பில் எதுவுமே எனக்குப் புரியவில்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ளவே பல நாட்களானது. நிலத்தை, உடையை, ஏன் அழகை வாங்கச் சொல்லிக் கூவும் விளம்பரங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சம்பந்தமே இல்லாத க்ரூப்புகளில் இணைக்கப்பட்டேன். நாய்க்குட்டிகள், பூனை, குழந்தை, சமயத்தில் பன்றிக்குட்டிகளின் படங்கள் மட்டுமே அதில் பகிரப்பட்டன. நான் புதிதாகச் சேர்ந்ததற்கான எந்த அடையாளமும் அதில் காண்பிக்கப்படவில்லை.

''உன்னுடைய வருகையை முதலில் அறிவிக்க வேண்டும்'' என்றாள் ஒருத்தி. எனது முதல் நிலைத்தகவலை அதில் இட்டேன். "தவலை இப்போது கிணற்றின் வெளியே வந்துவிட்டது!" என்று. அந்த யுக்தி பலித்தது. ''பைத்தியம், அது தவலை இல்லை; தவளை'' என்று ஏராளமான செய்திகள் வந்து குவிந்தன. தொடர்ந்த சில நாட்களில் வருடக்கணக்காக என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள், போனில் வெறும் நம்பர்களாகிப் போனார்கள். செல்பேசியின் திரையை விட்டு கண்ணை எடுக்காத போதை, என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.

ஸ்மார்ட் போனையோ அல்லது சமூக ஊடகங்களையோ நான் எதிர்த்ததற்கான முக்கியக் காரணமே, உள்ளங்கையில் மறைந்துவிடும் ஒற்றைச் சாதனம் நம்மை அடிமையாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். உண்மையான உலகத்தை விட்டுவிட்டு மெய்நிகர் உலகத்தில் வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால் எதை நினைத்து பயந்தேனோ அது நன்றாகவே நடந்தது.

ஒரு சில மாதங்களிலேயே, எதுவும் பேசுவதற்கு இல்லாத நிலையிலிருந்து, பேசுவதற்கும், எழுதுவதற்கும், டைப்புவதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் குவிந்தன. வீட்டு வேலைகளை தள்ளிப்போட்டேன். தூக்கம் குறைந்தது; கணவரையும், வீட்டையும் சேர்த்து குழந்தைகளையும் புறக்கணித்தேன். செல்பேசியோடு சேர்ந்து உறங்கி, அதனுடனேயே எழுந்தேன். சில நேரங்களில் தூக்கத்திற்கு இடையில் விழித்து போனைப் பார்க்கத் தொடங்கினேன். செல்பேசியை விட்டுத் தள்ளி இருக்கும் சமயங்களில்கூட, அதன் ஞாபகமாகவே இருந்தது. இவைகளோடு இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது.

குறுஞ்செய்தி அனுப்புவது, பகிர்ந்துகொள்வது, பேசுவது, அழுவது, சிரிப்பது என எல்லாமே மெய்நிகர் உலகத்தில் மட்டுமே நடந்தது. அன்றாட வாழ்க்கைப் பேச்சுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இனி இதைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஒருமுறை, நெடு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பனைப் பார்த்தேன். வெகு நேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவன் போனையே நோண்டிக் கொண்டிருக்க, நான் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில்தான் இந்த வலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வாட்ஸ்ஆப்பினுள் நுழையாமல், தனியாக அமர்ந்து, சுவர்களையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். 'அங்கே அவர்கள் எல்லோரும் பேசுவார்கள்; சிரிப்பார்கள்; சண்டை போட்டு ரசிப்பார்கள்' என்று தோன்றியது. உண்மையே இல்லாத மெய்நிகர் உலகம் என்னைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம், புத்தகம் படித்தேன்; கேக் தயாரித்தேன்; பேசாமல் தவறவிட்டிருந்தவர்களிடம் பேசினேன். அடிக்கடி அம்மா, மாமியாரின் நலம் விசாரித்தேன். கிசுகிசு பேசத் தோன்றிய போதெல்லாம், என் பெண்களுடன் கதை பேசினேன்.

ஒரு வழியாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லோரிடமும் இயல்பாகப் பேச முடிந்தது. வழக்கமான அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. முன்னர் பேசியதைவிட இன்னும் தெளிவாக, ஆழமாக, அழகாக பேச முடிந்தது. அன்று தொடங்கி இப்பொழுது வரைக்கும், எல்லா சந்தோஷங்களையும் நிஜ உலகத்திலேயே பெற்றுக் கொள்கிறேன்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்!

Return to frontpage

பிராணிகளில் சாதுவானது மாடு. தவிர, மனித இனத்துக்கு மிக நெருக்கமானதும்கூட. வயல்களில் உழவுக்கு உதவும் காளைகளாகட்டும், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட பாலைத் தரும் பசுக்கள், எருமைகளாகட்டும்; இதில் விதிவிலக்கு இல்லை. அப்படிப்பட்ட மாடுகள் இப்போது வகுப்புவாத அரசியலின் மையப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

சாலையில் பஸ்ஸில் ஒரு ஆடோ, மாடோ அடிபட நேரும்போது, மனிதத்தன்மையுள்ள யாரும் அதை வேடிக்கை பார்ப்பதில்லை. உத்தரப் பிரதேசத்தின் முஹம்மது ஜகி ஒரு உதாரணம். கிணற்றில் விழுந்த ஒரு பசுங்கன்றுக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து இறங்கி மீட்டிருக்கிறார். கிணற்றில் விழுந்து தவிப்பது ஒரு பசு, கோமாதா, தெய்வம் என்றெல்லாம் இல்லை. அடிப்படையில் அது ஒரு உயிர். அது பரிதவிக்கிறது. நம்மால் முடிந்த வரை காப்பாற்ற வேண்டும் என்கிற மனிதாபிமானம்; அக்கறை. பசுங்கன்று விழுந்த இடத்தில் ஆட்டுக்குட்டி விழுந்திருந்தாலும் முஹம்மது ஜகி அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார் என்பது தெளிவு. அதேசமயம், பிரியாணி சாப்பிடும்போது அவர் ஆட்டையோ, மாட்டையோ நினைத்துக்கொண்டிருக்க மாட்டார். அது தேவையும் இல்லை.

உலகம் முழுவதும் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு சமூகத்துக்குப் பசு மாமிசம் ஆகாது. ஒரு சமூகத்துக்குப் பன்றி மாமிசம் ஆகாது. ஒரு சமூகத்துக்குக் குதிரை மாமிசம் ஆகாது. எல்லோர் நம்பிக்கைகளும் முக்கியம். ஆனால், இந்த நம்பிக்கைகளுக்கான மதிப்புக்கு ஒரு எல்லை இருக்கிறது. நமக்குப் பிடிக்காததை நாம் சாப்பிடாமல் இருக்கலாம்; அடுத்தவரும் சாப்பிடக் கூடாது என்பது அநாகரிகம் மட்டும் அல்ல; அத்துமீறலும்கூட.

எப்படியும் மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில், அவர்களுடைய உணவுக் கலாச்சாரத்தில் தலையிடவும் நிர்ப்பந்திக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது; முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு. அதிலும் இந்தியாவில், ‘இந்துக்களுக்கு எதிரானது’, ‘இந்துக்களின் மனங்களைப் புண்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவது’ என்றெல்லாம் சொல்லி மாட்டுக்கறிக்குத் தடைச்சூழலைக் கொண்டுவர சங்கப் பரிவாரங்கள் முற்படுவது அபத்தத்திலும் அபத்தம். கேரளத்தில் மாட்டுக்கறி நுகர்வில் பேதங்கள் இல்லை; முஸ்லிம்களைப் போலவே தலித்துகளும் தங்கள் பண்பாட்டுக்கூறுடன் ஒட்டியதாக அதைக் கருதுகின்றனர். அப்படியென்றால், இவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்து மதம் என்பதே எல்லையற்ற கலாச்சாரங்களை உள்ளடக்கியது அல்லவா?

அடிப்படையில் உணவு என்பது உணவு. அவ்வளவுதான். இந்தியாவில் மக்களுக்கு இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு உச்சகட்ட உதாரணம் ஆகியிருக்கிறது தாத்ரி சம்பவம். உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில், முகம்மது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டுக் கறியைச் சாப்பிட்டதாகக் கூறி, அவரை வீடு புகுந்து அடித்துக் கொன்றிருக்கின்றனர்.

இந்துக் கோயிலில் கீர்த்தன் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது, அங்கேயிருந்த சிலர், ‘நம்மை அவமதிப்பதற்காகவே பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பசுவைக் கொன்று கறி சமைத்திருக்கிறார்கள்’ என்று வெறியூட்டும் விதத்தில் கூறியிருக்கின்றனர். அதன் பிறகு, வெறிகொண்டு கிளம்பிய கும்பல், அக்லக்கின் வீட்டுக்குச் சென்று, அவர்கள் சொன்னது எதையும் காதில் வாங்காமல் அடித்துக் கொன்றிருக்கிறது.

நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்தே ‘உணவுக் கலாச்சாரத்தின் மீதான அடையாள அரசியல் வன்முறைகள்’ பெருகிக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதலே, ‘பசுவதையைத் தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. இந்தச் சட்டம் இயற்றும் அதிகாரம் இப்போது மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

ஜைனர்களின் பண்டிகையை முன்னிட்டு, ‘யாருமே இறைச்சி சாப்பிடக் கூடாது’என்று தடை விதித்ததும் விநாயக சதுர்த்தியின்போதும் இறைச்சி விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இறைச்சி என்பது சாப்பாட்டு மேஜையிலிருந்து இடம்பெயர்ந்து, ஊடகங்களின் மத்தியில் விவாதப் பொருளானது. பசிக்காகவும் ருசிக்காகவும் உண்ணப்படும் உணவு, இன்னொரு சமூகத்தவரின் மனங்களைப் புண்படுத்துவதற்காகத்தான் என்று அர்த்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சமூகங்களுக்கிடையேயான கசப்புணர்வையும் வெறுப்புணர்வையும் வளர்த்தெடுக்கும் கருவியாக உணவு உருமாற்றப்படுகிறது.

அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் மத அடிப்படையில் மக்களைத் தூண்டிவிடும் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இத்தகைய சூழலில், “இந்தச் சம்பவத்துக்கு வகுப்புவாத முலாம் பூசாதீர்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

வதந்தி ஒரு உயிரைப் பலிவாங்கியிருப்பதோடு மட்டுமல்ல; நாடு முழுவதும் தேவையற்ற சர்ச்சைகளைப் பரப்புகிறது. இதையெல்லாம் எப்படி சாதாரணமானதாகவோ, மதச்சாயங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பார்க்க முடியும்? இதுபோன்ற அராஜகங்களுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதும், தொடர்ந்து இத்தகைய அடாவடிகள் நடக்காமல் தடுப்பதும்தானே அரசின் கடமையாக இருக்க முடியும்?

அக்லக் கொல்லப்பட்டதற்கு வகுப்புச் சாயம் பூசக் கூடாது என்று கோரிக்கை விடுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உண்மை வெளிவராமல் தடுப்பதுடன், பிரச்சினையைத் திசை திருப்பவும் பார்க்கிறார். எந்தவிதமான அரசியல் சூழலில், எந்தவிதமான சமூகப் பின்னணியில் இது நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புறக்கணிப்பதானது இந்துத்துவாவினால் எழும் வகுப்புவாத வெறுப்புணர்வையும், மதச் சகிப்பற்ற தன்மையையும் புறக்கணிப்பதாகவே ஆகிவிடும். வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்துக்குத் தீனி போடுவோர், அவற்றின் வன்செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

அரசாங்கம் மாடுகளை விட்டுவிடட்டும், அவை பாவம்! மாறாக, மக்கள் நலனில் கவனம் திரும்பட்டும். அதற்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்!

நெறிமுறை வேண்டும்

Dinamani


By ஜெ. ராகவன்

First Published : 08 October 2015 02:35 AM IST


நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.க்கள்) ஊதியம் மற்றும் இதர படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நிறுவியுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த யோசனை ஒன்றும் புதிது அல்ல. 2005-ஆம் ஆண்டு அப்போது மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, எம்.பி.க்களின் ஊதியம், இதர படிகளை உயர்த்துவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு எம்.பி.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான்.
எம்.பி.க்களின் ஊதியம் கடைசியாக 2010-இல் உயர்த்தப்பட்டது. அதாவது, எம்.பி.க்களுக்கு ஊதியமாக ரூ.50 ஆயிரம், தொகுதிப் படி மற்றும் அலுவலகப் படி தலா ரூ.45 ஆயிரம் என மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை இரண்டு மடங்காக அதாவது, ரூ.2.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
இதுதவிர, அவர்களுக்கு தங்குமிடம், விமானம், ரயில் பயணம், மூன்று தொலைபேசி இணைப்பு, இரண்டு செல்லிடப்பேசி இவற்றுக்கான செலவுகளும் சலுகைகளாக வழங்கப்படுகின்றன.
இது இப்படியிருக்க, மக்களின் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காதவர்கள், நாடாளுமன்றத்தை சரிவரச் செயல்படவிடாமல் செய்பவர்கள், தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த அளவு ஊதிய உயர்வு தேவையா என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்குப் போட்டியிடும் ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தவுடன் மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இந்தநிலையில், அவர்களது ஊதியம் மற்றும் இதர படிகளை கணிசமாக உயர்த்தித்தர வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நேர்மையாகச் செயல்படும் எம்.பி.க்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தற்போது வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர படிகள் மற்றும் சலுகைகளே போதுமானது. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மட்டும் அவ்வப்போது உயர்த்தினால் போதும் என்ற கருத்தும் சில எம்.பி.க்களிடம் உள்ளது.
முன்பு ஊதியத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டே அரசியல் மற்றும் அரசியல் சாராத பிரமுகர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால், இன்று எப்படியாவது எம்.பி.யாகிவிட்டால் நல்ல சம்பளம், படிகள் கிடைக்கும். அதிகாரமும் கைக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் பலரும் எம்.பி. பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
நமது நாட்டில் எம்.பி.க்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம், மற்றும் இதர படிகள் மற்ற நாடுகளில் வழங்கப்படுவதைவிட குறைவாக இருக்கலாம். அவர்களின் பதவிக்கு ஏற்ப ஊதியம் இருக்க வேண்டும் என்பதும் நியாயமானதாக இருக்கலாம்.
அதற்காக அவர்களாகவே தங்களது ஊதியத்தை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல. எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதில் ஒரு நெறிமுறை வேண்டும்.
ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசில் உயர் அதிகாரியாக பதவி வகிப்பவர்களின் ஊதியத்தை தொடர்புபடுத்தி எம்.பி.க்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
மெக்ஸிகோவில் எம்.பி.க்களுக்கு கணிசமான தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்பது அந்த நாட்டு விதி. அமெரிக்காவில் எம்.பி.க்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களின் வெளி வருமானம் வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் பெறும் விஷயத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
நம் நாட்டில் மொத்தம் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கோடீஸ்வரர்கள். மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள்.
ஒருமுறை எம்.பி.யானவர் மீண்டும் எம்.பி. தேர்தலில் போட்டியிடும்போது அவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக தோராயமான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளும், ஊழியர்களும் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்வதுபோல, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வராத நாள்களிலும் அப்படியே வந்து நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுத்தாலும் அதை வேலை செய்யாத நாள்களாக கருத்தில் கொண்டு அவர்களின் ஊதியம் மற்றும் படிகளை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற யோசனையும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
நாடாளுமன்றம் என்பது மதிப்பு மிக்க இடம். அங்கு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குரல் கொடுக்கவும்தான் மக்கள் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் செல்கின்றனர். ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவதும், அவையைச் செயல்படவிடாமல் செய்வதும் அவர்களுக்கு அழகல்ல.
எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வை வழங்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும் என்பதையும் வரவேற்கும் அதேசமயத்தில், அவைக்கு ஒழுங்காக வராத எம்.பி.க்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யவேண்டும், நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்க வேண்டும் போன்ற யோசனைகளையும் விவாதித்துப் பரிசீலிக்க வேண்டும்.
எம்.பி.க்கள் விஷயத்தில் இது சாத்தியமா என்று சிலர் கேட்கலாம். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

விருதுக்கு அவமரியாதை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 08 October 2015 01:57 AM IST


உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி அருகே பசுவின் கறியை உண்டதற்காக ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார் பண்டித நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷகல். அவரைத் தொடர்ந்து அசோக் வாஜ்பாயும் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதேபோன்று, இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய எழுத்தாளர் கலபுர்கி கொலையில் தீவிர விசாரணையை வலியுறுத்தி, அவருடன் ஒரே மேடையில் கர்நாடக சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற ஆறு பேர் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த சாகித்ய அகாதெமி விருது பெற்ற இடதுசாரி சிந்தனை எழுத்தாளர்கள் தங்களது விருதையும் பரிசுப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றுகூடக் கோரிக்கைகள் எழுகின்றன.
சாகித்ய அகாதெமி விருது அரசியல் கட்சிகளின் பரிந்துரையால் வழங்கப்படுபவை அல்ல என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். ஓர் எழுத்தாளன் ஏதாவது ஓர் அரசியல் கட்சியையோ, சித்தாந்தத்தையோ சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், விருது வழங்கப்படுவது அவரது படைப்புக்காகத்தானே தவிர, அவரது அரசியல் தொடர்புக்காக அல்ல.
சில நேரங்களில் சில எழுத்தாளர்களின் அரிய நூல்களுக்கு விருது அளிக்கப்படாமல், அவர் எழுதிய சாதாரண புத்தகத்துக்கு விருது அளிக்கப்படும்போதும்கூட, விருதுக்கான நிபந்தனைக்காக அப்படி அமைந்து விடுகிறது என்பதே உண்மை. ஆயினும்கூட, அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த படைப்பாக்கத்துக்கான விருதாகவே, கௌரவமாகவே அது கருதப்படுகிறது.
இந்தியாவில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, கிலாபத் விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசின் அநீதியான போக்கைக் கண்டித்து, அன்றைய பிரிட்டிஷ் அரசால் தனக்கு போயர் போர், ஜூலு போர், தென் அமெரிக்காவில் சமூக சேவை ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்டிருந்த விருதுகளைத் திருப்பித் தந்தார். அன்றைய காலகட்டத்தில், மகாத்மா காந்தியைப் பின்பற்றி, பலரும் தங்கள் விருதுகளை பிரிட்டிஷ் அரசுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். ராவ் பகதூர் பட்டங்களைத் துறந்தவர்களும் நிறையப் பேர். ஆனால், அது ஓர் அரசியல் போராட்டம். பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிரான அந்தப் போராட்டத்தில் விருதுகளைத் தூக்கியெறிவதும்கூட, எதிரியின் மீது வீசப்படும் ஆயுதம்தான்.
ஆனால், இப்போது இந்தியாவில் நடப்பது மன்னராட்சி இல்லை. மக்களாட்சி. எல்லாரும் இந்நாட்டு மன்னர். இந்நிலையில் விருதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் எந்த அரசை, அல்லது எந்த அரசியல் கட்சியை, எந்த அரசியல் தலைவரை ஓர் எழுத்தாளர் அவமானப்படுத்துவதாகக் கருத முடியும்?
ஓர் அரசியல்வாதி தனக்கு அளிக்கப்பட்ட பதவியை, கொடுக்கப்பட்ட விருதைத் தூக்கி எறிவதில் அர்த்தமுள்ளது. ஆனால், ஒரு படைப்பாளி தனக்கான விருதைத் திருப்பிக் கொடுத்த பிறகு, அவர் படைப்பாளி அல்ல என்றாகி விடுவாரா? அல்லது விருது பெற்ற அவரது படைப்பு இலக்கியஅங்கீகாரத்தை இழந்துவிடுமா?
ஓர் இலக்கியவாதியின் கடமை தொடர்ந்து எழுதுவதுதான். படைப்பாளிக்கு எழுத்து மட்டுமே ஆயுதம். சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, அரசியல் அநீதிகளை இன்னும் படு தீவிரமாக, காத்திரமான எழுத்தில் முன்வைக்க வேண்டும். விருதுகளைத் திருப்பித் தருவதைக் காட்டிலும், இத்தகைய எழுத்துதான் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தரும்.
எந்தவொரு நாடும், சர்வாதிகார நாடு உள்பட, எழுத்தாளனின் காத்திரமான எழுத்துகளைத்தான் சகித்துக்கொள்ள முடியாமல் திணறும். அதை ஒடுக்க நினைக்கும். உலக வரலாற்றில் கவிகளும், படைப்பாளிகளும் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் எழுத்தும் படைப்பும்தான் காரணம்.
அரசினால் எதிர்கொள்ள முடியாத ஆயுதம் எழுத்துதான். மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஓர் ஆளும் கட்சி அநீதியை நிகழ்த்துமானால், ஒரு படைப்பாளி அதைத் தன் எழுத்தாலும் படைப்பாலும் எதிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். விருதுகளைத் திருப்பித் தருவதால் அரசுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. மாறாக, அந்த விருது வேறொரு கட்சியின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருந்தால், அரசு அதை மகிழ்ச்சியுடன் வேடிக்கையாகவே பார்க்கும்.
தாத்ரி அருகே நடந்திருக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும்கூட காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற வன்முறைகள் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்து வந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும்கூட இந்தியாவில் இத்தகைய தாக்குதல்கள் நடக்கவே செய்யும். இதற்காக இலக்கியவாதிகள் அனைவரும் எல்லா விருதுகளையும் திருப்பித் தருவது என்பது விருதை அவமதிப்பதாக இருக்குமே தவிர, அரசை எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இருக்காது.
மத்தியில் ஆளும் கட்சி மதவாத அரசியலுக்கு ஆதரவாக நிற்பதால்தான் தாத்ரி கொலை அல்லது கலபுர்கி கொலை என்று படைப்புலகம் கருதுமேயானால், அவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை எழுத்தின் மூலம்தான் நடத்த வேண்டும். ஒரு படைப்பாளிக்கு எழுத்துதான் கூரிய வாள். விருது, வெறும் தாள்.

Tuesday, October 6, 2015

ஆதலினால் அன்பு செய்வீர்!


By அ. கோவிந்தராஜூ

First Published : 06 October 2015 01:27 AM IST


அன்பு ஆற்றல் மிக்கது. ஒரு குழந்தையின் அன்பால் பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேர்வது உண்டு. காதலனுக்கு மண்ணில் மாமலையும் ஒரு சிறு கடுகாய் தோன்றக் காரணம், காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.
மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறி கெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பதற்குக் காரணம், அன்னை பொழியும் அன்பின் வலிமைதான். குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிடக்கும் அன்பின் பேராற்றலால்தான்.
சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப் பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.
இந்த அன்பு நெறியைத்தான் நின்னோடு ஐவரானோம் என்று குகனையும், நின்னோடு அறுவரானோம் என்று அனுமனையும், நின்னோடு எழுவரானோம் என்று விபீடணனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக் காட்டுகிறான்.
இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தர் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு, பின்னர் துன்பப்படுவதுண்டு.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும்.
மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது. மதத்தின் மீது அன்பு இருக்க வேண்டும். ஒரு போதும் மதவெறியாக மாறுதல் கூடாது.
நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும், அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம்.
செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, "அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு' என்று கூறுவதைப்போல, அன்பு காட்டி மணம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும்.
வள்ளுவர் கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருகின், நாட்டில் நலம் பெருகும், அமைதி நிலவும்.
கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் அன்பு பெருகும்.
பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தைச் சுவைக்க வேண்டும். இவ்வின்பத்தைச் சுவைத்தவர் தாயுமானவர். "அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே' என்று கூறுகிறார்.
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு நெக்குருகப் பாடியவர் வள்ளலார்.
ஒரு முறை காந்தியடிகளின் சீடர்கள் சிலர், இரவு நேரத்தில் பசுந் தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், மரங்களும் நம்மைப்போல் உயிருடையன. நம்மைப்போலவே வளர்கின்றன, முகர்கின்றன, உண்கின்றன, பருகுகின்றன, உறங்குகின்றன; அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும்போது தழைகளைப் பறித்தல் தவறு என்று கூறினார்.
முன்னர் ஒருசமயம், அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர், சகோதர அன்போடு, "அமெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளே' என்று தொடங்கி உரையாற்றியபோது, அங்கிருந்தோர் தம் மெய்மறந்து செவிமடுத்தார்கள்.
நாடு, மொழி, இனம் கடந்து எல்லா நாட்டினரும் நம் உடன் பிறந்தார் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால், உலகில் போர் ஏது, பூசல் ஏது?
அண்மைக் காலமாக மனித மனங்கள் பாலைவனங்களாக மாறி வருகின்றன. இறைவன் அன்பு மயமானவன் என எல்லா மதங்களும் போதிக்கின்றன.
மனித நேயமும் அன்பும் மீண்டும் பெருக்கெடுக்க வேண்டும், அதற்கான வழிகளைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது உள்ளோம்.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகை உண்டு. இது மிகவும் ஆபத்தானது. மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது.

கையறு நிலை!


Dinamani


By ஆசிரியர்

First Published : 06 October 2015 01:24 AM IST


நாடு முழுவதும் காய்கனி, உணவு தானியங்கள், பால் உள்ளிட்ட இருபதாயிரம் மாதிரிகளை மத்திய வேளாண் துறை ஆய்வு செய்ததில், அவற்றில் 18.7% மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் 2.6% காய்கனி, பால், தானியங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. 12.5% மாதிரிகளில் இருந்த பூச்சிக்கொல்லி எச்சம், இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட பூச்சி மருந்துகளைச் சார்ந்தது என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சம் அங்கக வேளாண்மையில் விளைந்த பொருள்களிலும் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. காரணம், மண் முழுவதும் ரசாயன உப்பாகிக் கிடக்கிறது. புதிதாக உரம் போடவில்லை என்றாலும், நிலம் தன்னில் விளைவிக்கப்படும் பயிரின் மூலம்தான் ஏற்கெனவே கொட்டப்பட்ட உப்பை வெளியேற்ற முடியும். ஆகவே, அங்கக வேளாண்மையிலும் பூச்சிக்கொல்லி நச்சை அப்புறப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
கடந்த பிப்ரவரி மாதம் தில்லி நீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சகம் அளித்த அறிக்கை போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிமன்றம் அமைத்திருந்த குழுவானது, தில்லி நகரச் சந்தைகளில் பெற்ற உணவுப் பொருள், காய் கனிகளின் மாதிரிகளைத் தனியாக ஆய்வு செய்து, அனைத்திலும் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது.
சென்ற ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அல்போன்சா மாம்பழம் அனுப்ப முடியாமல் போனது. காரணம், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சம். பல நாடுகளுக்கு நமது கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய் ஏற்றுமதி செய்யப்பட முடியாத நிலை இருக்கிறது. சவூதி அரேபியாவுக்கு நமது பச்சை மிளகாய் ஏற்பில்லை. காரத்தைவிட பூச்சிக்கொல்லி எச்சம் அதிகம்.
அண்மையில், கேரள வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கூடம் மேற்கொண்ட பரிசோதனைகளில் பல்வேறு காய், கனிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதைப் பட்டியலிட்டது. கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய் கனிகள் அனுப்புவது தமிழ்நாடு என்பதால், தமிழ்நாட்டு காய் கனிகளில் அதிக பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் என்பது தெளிவாகியிருக்கிறது.
பசுமைப் புரட்சியின்போது அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு இந்திய வேளாண்மையில் இல்லாத அளவுக்குப் புகுத்தப்பட்டது. அதன் விளைவாக, தானிய உற்பத்தி பெருகியது. நாளும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடுகொடுக்கவும், உர உற்பத்தியில் இந்தியா அன்னிய நாடுகளை எதிர்பார்க்காமல் தன்னிறைவு பெறவும் அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த பசுமைப் புரட்சி நடவடிக்கையைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற பிறகு ரசாயன உரத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, பாரம்பரிய விவசாயத்துக்கு நாம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. பாரம்பரிய வேளாண்மையில் அதிக விளைச்சல் கிடைக்காது என்ற ஒரு வாதம் மட்டுமே தொடர்ந்து 40 ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தொடர்ந்து உர மானியம் வழங்கப்பட்டு உர நிறுவனங்கள் பலனடைகின்றன என்பது மட்டுமல்லாமல், மண்ணும் முழுமையாகப் பாழ்பட்டுக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பூச்சிக்கொல்லி ரசாயன உரங்களால் உண்ணும் உணவு விஷமாகி, உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய், மலட்டுத்தனம் எல்லாமும் அதிகரித்த நிலைமை. உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் குறைக்க நாம் முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, முடியவுமில்லை.
மாறாக, சிறுநீரக சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. சிறுநீரகத் திருட்டு ஒரு வணிகமாயிற்று. புற்றுநோய் மருத்துவமனைகள், புற்றுநோய் அறியும் பயாப்ஸி சோதனைக்கான ஆய்வகங்கள் புற்றீசலாக உருவாகியிருக்கின்றன. மலட்டுத் தனத்தைப் போக்கவும், செயற்கை கருவூட்டு வழங்கவும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் நடக்கிறது. தம்பதிக்கு குழந்தைப்பேறு வழங்கும் செயற்கை கருவூட்டு மையங்கள் எல்லாமும் ஒவ்வொரு நகர்ப் பகுதியிலும் இரண்டு மூன்று உருவாகி, போட்டிப்போட்டு வியாபாரம் நடத்தின. இந்த நோய்களுக்கு அடிப்படைக் காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை தவிர்ப்பதை அரசோ, வேளாண் துறையோ யோசிக்கக்கூட தயாராக இல்லை.
கடந்த 40 ஆண்டுகளாகவே பாரம்பரிய வேளாண்மையில் அக்கறையுள்ள அமைப்புகள் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கு எதிராகக் குரல் கொடுத்து அதன் தீமையை மக்களிடம் எடுத்துச் சென்றன. ஆனால், பரந்துபட்ட அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை. இப்போது ஊடகங்களின் ஆதரவு சில ஆண்டுகளாகத்தான் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இயற்கை சாகுபடி, மாடித்தோட்டத்தில் காய்கனி உற்பத்தி, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் தகவல்கள், பேட்டிகள் என்று காட்சி ஊடகம், பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் இயற்கை வேளாண்மை குறித்த குரல் கேட்கிறது.
நமக்கு பாரம்பரிய வேளாண்மையின் நன்மை புரிகிறது. ஆனால், நமது மண் பாழ்பட்டுக்கிடக்கிறதே, என்ன செய்ய?

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, இது தேவையில்லையே

logo


மத்திய அரசாங்கம் திடீரென இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த தபால் தலைகளை வெளியிடுவதில்லை என்று எடுத்த முடிவு, நாட்டில் பொதுவாக இந்த வீண் சர்ச்சை எதற்கு?, இது தேவையில்லையே? என்ற உணர்வுகளைத்தான் ஏற்படுத்துகிறது. ஆதிகாலத்தில் இருந்து மனிதனுக்கு தகவல் தொடர்பு மிக முக்கியமாக இருந்தது. தபால் மூலம் கடிதம் அனுப்பும் சீரியமுறை மனிதனின் தகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக வந்தது. அதன்பிறகு, டெலிபோன், தந்தி என்று எத்தனையோ வந்தாலும், சாதாரண மனிதனுக்கு தகவல் தொடர்பில் ஆபத்பாந்தவனாக தபால்தான் விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதல் தபால் தலை 1947–ம் ஆண்டு நவம்பர் 21–ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படி நீண்டநெடிய வரலாறு கொண்ட தபால் தலைகளில், தொடர்ந்து பல தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள் இப்போது வெளியிடப்பட்டுகொண்டு வருகிறது. சிலருக்கு ஒருமுறை மட்டும் அச்சடிக்கும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும். சிலருக்கு தொடர்ந்து அவர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுவரும்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘‘இத்தகைய சிறப்பு தபால் தலையில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் இனி நிறுத்தப்படும். தபால் தலைகள் பற்றி முடிவெடுப்பதற்காக ஒரு ஆலோசனை குழு இருக்கிறது. அதில் பலதரப்பட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அந்த குழுதான் இந்த முடிவை எடுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். தபால்தலை மட்டுமல்லாமல், இன்லேன்ட் கடிதத்தில் இந்திராகாந்தியின் உருவத்திற்கு பதிலாக இனி யோகா படம் இருக்கப்போகிறதாம். இந்த ஆலோசனைக்குழு இனி 24 தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள்தான் வெளியிடப்படும் என்று பட்டியலிட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த பட்டியலில் உள்ள மகாத்மா காந்தி, ஜவஹர்லால்நேரு, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரசா படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. மற்ற தலைவர்களை பொறுத்தமட்டில், இந்த புதுப்பட்டியலில் சர்தார் வல்லபாய்படேல், மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராஜேந்திரபிரசாத், ஜெயபிரகாஷ் நாராயண், பகத்சிங், தீனதயாள் உபாத்யாயா, ஷியாமா பிரசாத் முகர்ஜி, ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், பாலகங்காதர திலகர், மகாராணா பிரசாத், சிவாஜி போன்றோர் படங்கள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு குடும்பமே இடம்பெற வேண்டுமா? என்று கேட்கிறார்கள். நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் பிரதமர்களாக இருந்தவர்கள். என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும், இப்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தில் யாரும் தபாலை பெரிதாக பயன்படுத்துவதில்லை. மிகக்குறைந்தபட்ச பயன்பாடுதான் இருக்கிறது. அப்படியிருக்க, இதை எடுப்பதில் என்ன வந்துவிடப்போகிறது. இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைப்பதே நல்லது. நாட்டில் தொழில்வளர்ச்சி போன்ற எத்தனையோ முன்னேற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசாங்கம், இதைப்போன்ற சிறிய விஷயங்களை ஒரு பொருட்டாக நினைக்கவேண்டாமே. மேலும், இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற பெரும்பங்காற்றிய தலைவர்களின் பெயர்கள் விட்டுப்போய்விட்டதே, அதையும் இந்த பட்டியலில் சேர்க்கலாமே என்ற உணர்வுதான் மக்களிடம் இருக்கிறது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...