Tuesday, December 22, 2015

பரிசோதனை ரகசியங்கள் 13 - எலிக் காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?.... டாக்டர் கு. கணேசன்

Return to frontpage

மழை, வெள்ளக் காலத்தில் ஏற்படுகிற தொற்றுநோய்களுள் எலிக்காய்ச்சல் மிக முக்கிய மானது. ‘லெப்டோஸ்பைரா' எனும் பாக்டீரியா கிருமிகள் நம்மைப் பாதிப்பதால் இது ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் எலி, பெருச்சாளி, ஆடு, மாடு, பன்றி, பூனை போன்ற பல்வேறு விலங்குகளின் உடலில் வசிக்கும். இந்த விலங்குகளின் சிறுநீர் வழியாகக் கிருமிகள் வெளியேறும்.

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீடு, வீட்டைச் சுற்றி வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருந்தால் ‘எலிக்காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற ‘லெப்டோபைரோசிஸ்' (Leptospirosis) நோய் வரும்.

நோய் வரும் வழி

பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைவதுதான் அதிகம். எனவே பாதங்களில் விரிசல், பித்தவெடிப்பு, புண், சேற்றுப்புண் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகிற வாய்ப்பு அதிகம். மாட்டுத் தொழுவங்களில் வேலை பார்க்கும்போது, ஆடு, மாடு மேய்ப்பிடங்களில் காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது விலங்குகளின் சிறுநீர்க் கழிவு மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து நோய் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு.

கிராமப்புறங்களில் விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே குளங்களில்தான் ஊர் மக்களும் குளிப்பார்கள். அப்போது அவர்களின் வாய், கண், மூக்கு வழியாகவும் இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து, எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

இந்த நோயின் தொடக்கத்தில் சாதாரணத் தடுமக்காய்ச்சல் போலத்தான் அறிகுறிகள் காணப்படும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாதத் தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முதல்கட்ட அறிகுறிகள். இவற்றில் ‘சிவந்த கண்கள்’ இந்த நோயை இனம் காட்டும் முக்கிய அறிகுறி. இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுவிட்டால் நோய் உடனே கட்டுப்படும். தவறினால், நோய் தீவிரமாகும்.

குறிப்பாகக் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை எனப் பல்வேறு முக்கிய உறுப்புகளை இந்த நோய் தாக்கும். இதன் விளைவாக நோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் தோன்றும். மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்தக் கட்டத்தின் முக்கிய அறிகுறிகள். இப்போதும் இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் இதயம் மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கு ஆபத்தைத் தரும்.

என்ன பரிசோதனை?

1. ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count):

# காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

# வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை செய்யப்படும்.

# ரத்த வெள்ளையணுக்களின் (Leucocytes) இயல்பான அளவு 4,000 11,000 / டெசி லிட்டர். நியூட்ரோபில் அணுக்களின் இயல்பான அளவு 60 - 70%. எலிக்காய்ச்சல் வந்தவருக்கு இந்த இரண்டு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

# தட்டணுக்களின் (Platelets) அளவு மிகவும் குறைந்திருக்கும்.

# இ.எஸ்.ஆர். (ESR) அளவு அதிகமாக இருக்கும்.

2. ‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test MAT):

# எலிக்காய்ச்சலை உறுதி செய்ய, இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான்.

# எலிக்காய்ச்சல் வந்தவருக்கு இந்தக் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

# இந்தப் பரிசோதனையில் இணையணுக்கள் விகிதம் 1 : 200 என்ற அளவுக்கும் 1 : 800 எனும் அளவுக்கும் இடைப்பட்டதாகவோ, அதிகமாகவோ இருந்தால் எலிக்காய்ச்சல் இருக்கிறது என்று அர்த்தம்.

3. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture Test).

# காய்ச்சல் ஏற்பட்ட பத்து நாட்களுக்குள் இதைச் செய்து கொண்டால் முடிவு சரியாக இருக்கும்.

# ரத்தத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

# எலிக்காய்ச்சலை உறுதி செய்யவும் சரியான சிகிச்சையைத் தரவும் இது உதவுகிறது.

# ஆனால், இந்த முடிவுகள் தெரியச் சில வாரங்கள் ஆகும். அதற்குள் நோய் முற்றிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவேதான், இதை இரண்டாம் நிலைப் பரிசோதனையாக வைத்துள்ளனர்.

4. சிறுநீர்ப் பரிசோதனை

# நோயாளியின் சிறுநீரில் எலிக்காய்ச்சல் கிருமிகள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ள உதவும் பரிசோதனை இது.

# நோய் தொடங்கிய எட்டு நாட்களுக்குப் பிறகுதான் இக்கிருமிகள் சிறுநீரில் வெளியேறும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் இதைச் செய்தால்தான் முடிவு சரியாக இருக்கும்.

# அதேநேரத்தில் ஒருமுறை பாசிட்டிவ் என இதன் முடிவு வந்துவிட்டால், பல மாதங்களுக்கு இது பாசிட்டிவ் என்றுதான் காண்பிக்கும். எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் இதை மேற்கொள்கிறவர்கள் நோய் இன்னும் இருப்பதாகத் தவறாக எண்ணிக்கொள்ள வாய்ப்புண்டு.

# இந்த விஷயத்தில் மருத்துவரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. பி.சி.ஆர். (PCR) பரிசோதனை

# ரத்தத்தில் எலிக் காய்ச்சல் கிருமிகளின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

# 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

# மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

# நோய் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் நோயை உறுதி செய்துவிடும். ஆனால், இதன் செலவு அதிகம்.

6. எலிசா ஐஜி.எம். (ELISA IgM) பரிசோதனை

# ரத்தத்தில் எலிக்காய்ச்சல் கிருமிகளுக்கான ஐஜி.எம். எதிர் அணுக்களைக் கண்டறியும் பரிசோதனை இது.

# அதிநவீனத் தொழில்நுட்பம் உடையது.

# காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாம் நாளில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# பணச் செலவு அதிகம்.

# நோயை 90 சதவீதம் உறுதிப்படுத்துகிறது.

7. ‘கல்லீரல் செயல்திறன் பரிசோதனைகள்’ (Liver Function Tests LFT) :

# எலிக்காய்ச்சலால் கல்லீரல் பாதிப்பை உறுதிப்படுத்தும் பரிசோதனை இது.

# கல்லீரல் பாதிக்கப்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படும். இதை உறுதி செய்ய உதவும் முக்கியமான ரத்தப் பரிசோதனை இது.

# எலிக்காய்ச்சல் வந்தவருக்கு ரத்தப் பிலிருபின் அளவு அதிகமாக இருக்கும்.

# இத்தோடு ஏ.எல்.பி. (ALP), ஏ.எஸ்.டி. (AST), ஏ.எல்.டி. (ALT) ஜி.ஜி.டி. (GGT) பரிசோதனைகள் செய்யப்படும்.

# ரத்தத்தில் கல்லீரல் சுரக்கிற என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.

# இந்த அளவுகள் அனைத்தும் அதிக அளவில் இருக்கும்.

8. மூளைத் தண்டுவட நீர்ப் பரிசோதனை (CSF Test).

# எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும் பரிசோதனை இது.

# நோயாளியின் முதுகுத் தண்டுவடத்திலிருந்து, மூளைத்தண்டுவட திரவத்தை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

# எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருந்தால் இந்தப் பரிசோதனையின் முடிவில் புரதம் அதிகமாக இருக்கும். குளுக்கோஸ் அளவு இயல்பாக இருக்கும்.

இவை தவிரச் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளனவா என அறியவும் பரிசோதனைகள் தேவைப்படும்.

பதின் பருவம் புதிர் பருவமா? 13 - சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் .......... டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

அவன்/அவள் ரொம்ப தைரியசாலிப்பா. இதுக்கெல்லாம் கலங்கிட மாட்டாங்க. ஒண்ணும் தப்பா நடக்காது. பார்த்துக்கலாம்’ என்று யாரைப் பற்றியும் தவறாகப் புரிதலை வைத்துக்கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தைரியமானவர்கள்கூடச் சில நேரம் தடுமாறக்கூடும்.

தற்கொலை முயற்சிக்குப் பல நோக்கங்கள் உண்டு. பெரும்பாலும் மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், உலகப் பிரச்சினைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், வீட்டிலுள்ளவர்களை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துவதுண்டு. சிலவேளைகளில் இந்த மிரட்டல் முயற்சிகள் உயிருக்கு ஆபத்தாகவும் முடிவடையும்.

எதிர்பாலினத்தின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதற்கு, தற்கொலை முயற்சியை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்திப் பார்ப்பது உண்டு. சிலர் தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே, ‘எதற்கும் ஒரு தற்கொலை முயற்சியைச் செய்துவிட்டால் பாதுகாப்பு’ என நினைத்து விபரீத முயற்சிகளில் இறங்குவார்கள்.

தற்கொலை ஒரு தியாகமா?

எமில் டர்ஹெய்ம் என்ற சமூக உளவியலாளர் தற்கொலைகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளார். அதில் ஒருவகை சமுதாய நலனுக்காகவோ, மற்றவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலோகூட சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிவது. சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அப்படிப்பட்டவன். தான் தற்கொலைக்கு முயற்சித்ததற்கு, அவன் சொன்ன காரணம் வித்தியாசமானது. பொதுவாகவே அதிகப்படியான சட்டதிட்டங்களைப் பேசும் அவன், வகுப்பில் ஆசிரியர் மொபைல் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளான். பின்பு, இந்தக் காரணத்தை எழுதி வைத்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொண்டால், தனது சாவுக்குப் பின்னாலாவது இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்படாது என்பதுதான் அவனுடைய எண்ணம்.

இதுபோலப் பல இடங்களில் விவாதங்களில் ஈடுபடுவது அவனுக்கு வாடிக்கை. விசாரித்ததில் மனநலப் பாதிப்புகளுக்கான பல அறிகுறிகள் அவனிடம் இருந்தன. இன்னொரு சிறுவன் தான் செத்தாலாவது தனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் விஷம் குடித்துள்ளான். இதுபோன்ற விபரீத முயற்சிகள் வளர்இளம் பருவத்தில் சில நேரம் வரலாம். ஆனால், இந்த முயற்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படு வதில்லை என்பதுதான் உண்மை.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

தற்கொலை எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ‘இவ்வளவு தைரியமானவனா இப்படிச் செய்தான்’ என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படிப்பட்டவரையும் சில வேளைகளில் சாய்த்துவிடும். ஆனால், வளர்இளம் பருவத்தினரில் சிலர் எப்போதும் ஆபத்தின் வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள். படிப்பில் மந்தம், தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை, தேர்வுகளில் அடிக்கடி தோல்வி, போதைப்பொருட்கள் பயன்பாடு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சின்ன வயதில் தாயை இழந்தவர்கள், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல்ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.

ஏற்கெனவே குடும்ப நபர்கள் யாரேனும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினர் அதிகப் பாதிப்புக்குள்ளாகலாம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் 5 - ஹைடிராக்சி டிரிப்டமைன் (5-HT ) என்ற ரசாயனத்தைத் தீர்மானிக்கும் மரபணுக் கள் முக்கியப் பங்கு வகிப்பதுடன், பரம்பரையாகப் பாதிக்கும் நிலையும் உள்ளது. ஒருவர் ஒருமுறை தற்கொலை மிரட்டலோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ வெளிப்படுத்தினால், அவர்கள் எப்போதுமே ஆபத்துக்கு உரியவர்கள்தான். அவர்களுடைய செயல்பாடுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

குணரீதியான மாற்றங்கள்

வளர்இளம் பருவத்தினர் சிலருக்கு வேலையே அவ்வப்போதுத் தற்கொலை மிரட்டல்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாகத்தான் இருக்கும்.

குறிப்பிட்ட குணத்தோடு ஒன்றிப்போன அவர்களிடம், வேறு பல மாற்றங்களும் காணப்படும். யாரிடமும் ஒத்துப்போகாமல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்துவிடுவது, எளிதில் உறவுகளை முறித்துக்கொள்வது, தனக்கு மட்டுமே வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற மனோபாவம், காதல் வலைகளில் மாறிமாறிச் சிக்கிக்கொள்வது, இளம் வயதில் பாலுறவு மற்றும் போதைப் பழக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி தங்கள் கையைப் பிளேடால் கிழித்துக்கொள்வது, சூடுபோட்டுக்கொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஆகிய குணநல மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து காணப்படலாம். இதற்குப் பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு (Borderline Personality Disorder ) என்று பெயர். இவர்களுக்கு மாத்திரைகளோடு மனநல ஆலோசனையும் கட்டாயம் தேவை.

எந்த வகை ஆபத்தானது?

விடலைப் பருவத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் இருக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்தால், அவர் செய்த முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கலாம். யாரும் இல்லாத, காப்பாற்ற வழியில்லாத இடங்களைத் தேர்வு செய்வது, ரயில் முன்னால் அல்லது மாடியிலிருந்து விழுவது, கடிதம் எழுதிவைப்பது, விஷம் அருந்தியதைக் கடைசிவரைக்கும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது போன்றவை தீவிரமான தற்கொலை எண்ணங்களின் வெளிப்பாடு.

ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்க மாத்திரை கேட்டிருக்கிறான். அவர்கள் இரண்டு மாத்திரைக்கு மேல் கொடுக்க மறுத்ததால், பல கடைகளில் இரண்டிரண்டு மாத்திரைகளாக, பல நாட்களாகச் சேகரித்துவைத்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இத்தகைய நபர்கள் கண்டிப்பாகத் தீவிர மனநல ஆலோசனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இவர்கள் மனநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பு அதிகம்.

(அடுத்த முறை: நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

Monday, December 21, 2015

பெண் எனும் பகடைக்காய்: அடைமழைக் காலத்தின் தவளைக் கச்சேரி .... பா. ஜீவசுந்தரி

Return to frontpage

பெண் என்பவள் புனிதம் மிக்கவள், தெய்வமாகப் போற்றப்பட வேண்டியவள், பொறுமையில் பூமா தேவி’ - இப்படியான வசனங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. பெண்கள் இங்கே இரண்டு விதமாகக் கையாளப்படுகிறார்கள். ஒன்று தெய்வ நிலைக்குப் பெண்ணை ஏற்றி மிக உயரத்தில் தூக்கி வைத்துத் தொழும் ரகம். இரண்டு அதற்கு முற்றிலும் மாறாக, எந்த அளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குக் கேவலப்படுத்தும் ரகம்.

அருவருக்கத்தக்க வார்த்தைகளால் ஏசுவதும், அடிப்பதும், உதைப்பதும், அநாகரிகமாக பெண்களிடம் நடந்துகொள்வதும், கேவலமான முறையில் நடத்துவதும் இந்த ரகத்தில் வரும். இங்கு பெண் என்பவள் ஒரு சக உயிரியாக, தனக்குச் சமமானவளாகப் பார்க்கப்படுவதில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்டு ஒரு சக உயிராக ஏற்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மனித சமுதாயம் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, பரிணாம வளர்ச்சி பெற்றதாகச் சொல்லிக்கொண்டாலும், சில நேரங்களில் காட்டுமிராண்டி நிலையை விட்டு இன்னமும் தாண்டவில்லையோ என்ற சந்தேகமே வருகிறது. அதில் ஒன்றுதான் சமீபத்திய சிம்பு - அனிருத் என்ற இரு விடலைப் பையன்களின் பாட்டுக் கச்சேரி. அடைமழைக் காலத்தில் எழும் தவளைகளின் வாத்தியக் கச்சேரிகளைப் போல இந்தப் பெருமழைக்காலத்தில் விளைந்திருக்கிறது.

இருக்கும் வேலைகளையெல்லாம் விட்டு, இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், கண்டனம் எழுப்பவும் எனச் சென்னையின் மழை வெள்ளத் துயரத்தையே மடை மாற்றியிருக்கிறது இந்தப் பாட்டு. இசையும் நல்கவிதையும் இணைந்தால் அது காதுக்கும் மனதுக்கும் விருந்து. ஆனால், கேட்கவே நாராசமாய் உள்ல இந்தப் பாட்டின் மூலம் இந்த இளைஞர்கள் இருவரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற கேள்வியும் ஆத்திரமும் எழுகின்றன.

‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்பது வெறும் பாடல் வரி மட்டுமல்ல, இசையின் உன்னதத்தைச் சொல்லும் வரியும்கூடத்தான். எத்தனை எத்தனை பாடல்கள் நம் வாழ்க்கையோடு இயைந்து ஒன்று கலந்திருக்கின்றன! என் நண்பர் ஒருவர், தூரத்து உறவினரும்கூட. ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதனுடன் ஒன்றிக் கலந்து ஒரு கணம் அதோடு ஐக்கியமாகிவிடுவார். அந்த நேரத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி அவருள் குடிகொண்டுவிடும். பாடல் நிறைவு பெற்றதும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்.

என் தோழி ஒருத்தி, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதனுடன் இணைந்து சன்னமான குரலில் பாடுவாள். பாடலின் முடிவுக்குப் பின் சற்றே அமைதி. பின் வேலைகளில் மூழ்கிக் கரைந்துபோவாள். இப்படி எத்தனை எத்தனை உதாரணங்களைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கக்கூடும்.

இப்போதும் இசைஞானி இளையராஜா இசையில் 80களில் வெளியான பாடல்கள் நம்மைக் கிறங்கடிக்கவில்லையா? எத்தனை எத்தனை லட்சம் ரசிக, ரசிகைகளின் மனங்களில் அந்தப் பாடல்கள் நிரந்தரமாகப் பதிவாகியிருக்கின்றன! எதைக் கொண்டு அதை எல்லாம் அழிக்க முடியும்? இரவு நேரங்களில் தாலாட்டித் தூங்க வைக்கும் மற்றொரு தாயாகவே அந்தப் பாடல்கள் திகழவில்லையா?

இரட்டை அர்த்தப் பாடல்கள், வசனங்கள் மலிவான பின் அவற்றை எல்லாம் கேட்கவே மனமும் காதும் கூசுகின்றன. நகைச்சுவை என்ற பெயரில் சில நடிகர்கள் பேசும் வசனங்களையும் கேட்டு அருவருத்தோம். ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’, ‘கொலை வெறி கொலை வெறிடா’, ‘அடிடா அவள’, ‘எவன்டி ஒன்னப் பெத்தான்’, ‘செல்ஃபி புள்ள… உம்மா…’ போன்ற ‘இலக்கியத் தரம்’ வாய்ந்த பாடல்களை எல்லாம் கேட்கவும் ரசிக்கவும் நாம் என்ன புண்ணியம் செய்தோம் என்றே சில நேரங்களில் தோன்றும்.

பெண்ணுறுப்பைக் குறிக்கும் ஒரு அருவருக்கத்தக்க ஆபாச வசைச் சொல்லை முதன்மைப்படுத்தி, பீப் ஒலியின் வழி அதை அரைகுறையாக மறைத்து, பாடல் நெடுக வாரி இறைத்திருக்கும் தன்மையை என்னவென்று சொல்வது? அருவருப்பின் உச்சம் இந்தப் பாடல். படத்தில் இடம் பெறவில்லை, அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை, தங்களுக்கே தெரியாமல் கசியவிடப்பட்டது என்று ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் பெண் பற்றிய, உங்களின் பார்வை என்னவென்பதை இந்தப் பாடல் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

இலக்கிய நயத்துடன் பாடல்கள் புனையப்பட்ட காலத்திலும் பெண்ணை இயற்கையுடனோ, பெண்ணின் அங்கங்களைக் காய் கனிகளுடனோ ஒப்பிட்டு வர்ணிக்கப்பட்ட பாடல்கள் ஏராளம் உண்டு. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்று எதிர்க் கேள்விகளும் எழுகின்றன. எவ்வளவு காலம்தான் பொறுத்திருப்பது? அதுவும் இந்த அளவுக்குப் போன பின்பும் எப்படிப் பொறூத்திருப்பது?

‘சமைந்தது எப்படி?’ என்று பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்பிய பாடல் வெளியானபோது, பெண்கள் அமைப்புகள் கொதித்தெழுந்து கண்டிக்கவே செய்தன. ‘பிரம்மாண்ட இயக்குநர்’ ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதியவர் சுஜாதா என்றாலும், பெண்களின் எதிர்ப்புகளுக்குச் செவி சாய்த்து, வசனங்கள் ஒலியிழந்தன. படமும் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணம் சொல்ல இப்படிப் பல படங்கள் உண்டு.

வரைமுறை தாண்டி, நாகரிக எல்லையைக் கடந்து செல்லும்போது அதைக் கட்டுப்படுத்த வேண்டிய, தட்டிக் கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எப்போதும் போல் ‘பூமா தேவி’களாகப் பொறுமை காத்துக்கொண்டிருக்க முடியாது. உடல் உறுப்புகள் சார்ந்து என்றில்லை, பெண்களுக்கு எதிராகக் கருத்தியல் ரீதியாக எழுதப்படும் பாடல்களையும் பெண்கள் புறக்கணிக்க வேண்டும். தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

பெண் உடல் என்பது வெறும் காமத்துக்குரியதாகவும், பெண்ணின் உடல் உறுப்புகள் கேளிக்கைக்கும் கேலிக்கும் உரியதாகவும் மாறிப் போயிருப்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது. சதைப் பிண்டமாக மட்டுமே பெண்ணைப் பார்க்கும் பார்வை மாறாமல் இருப்பதால்தான், பாலியல் வல்லுறவுகள் அவள் மீது நிகழ்த்தப்படுகின்றன. டீன் ஏஜ் பருவத்திலேயே குழந்தைகள் தடம் மாறிப் போகவும் ஆரம்பிக்கிறார்கள்.

நிர்பயா வழக்கில் நாம் கண்டதுபோல ‘டீன் ஏஜ்’ குற்றவாளிகள் உருவாகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுப்பது மிக மிக அவசியம் என்பதையே இந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. தவறு நிகழலாம்; ஆனால் அது தவறென்று சுட்டிக் காட்டப்படும்போது, அதை உணர்ந்து ஏற்பதற்கான மனோதிடம் வேண்டும். அதை விடுத்து மூர்க்கத்தனமாகப் பேசுவதும், சப்பைக்கட்டு கட்டுவதும் நியாயமாகாது.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

இவ்வளவு கட்டுப்பாடு தேவையில்லை

logo

மத்திய அரசாங்கம், வருமான வரி விதிப்பை எளிமையாக்கப்போகிறோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு வருகிறது. அதுபோல, எல்லா பண பரிமாற்றங்களுக்கும் ‘பான்’ என்று கூறப்படும் ‘பெர்மனண்ட் அக்கவுண்டு நம்பர்’ அதாவது, ‘நிரந்தர கணக்கு எண்’ வைத்திருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற அத்தாட்சிகளை வைத்திருந்தால், அதனால் தொல்லை இல்லை என்ற நிலை இருந்தால்தான், மக்களுக்கும் அதைப்பெற ஆர்வம் இருக்கும். ஆனால், இப்போது ‘பான்’ வைத்திருந்தால் அனைத்து வருமானவரி தொல்லைகளுக்கும் அடையாளம் காட்டுவதுபோல நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்குமேல் எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும், பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலேயே நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு லட்ச ரூபாய் என்பது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது, சாதாரண செலவுகள் குறிப்பாக, 4 சவரன் நகை வாங்கினாலே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் போய்விடும். இப்போது புதிதாக மேலும் ஒரு உத்தரவு அமலுக்கு வருகிறது. வருகிற ஜனவரி 1–ந் தேதி முதல் ஓட்டல் பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தாலோ, அல்லது வெளிநாட்டு பயண டிக்கெட்டு 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆனாலோ, கண்டிப்பாக ‘பான் எண்ணை’ குறிப்பிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 2 லட்ச ரூபாய்க்குமேல் உள்ள ரொக்கப்பரிமாற்றங்கள், 10 லட்ச ரூபாய்க்குமேல் உள்ள அசையா சொத்துகள் வாங்குதல் என்று கையை விட்டுச் செய்யும் எல்லா செலவுகளுக்கும் ‘பான் எண்ணை’ குறிப்பிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல, வங்கிக்கணக்குகள் தொடங்கவும் இனி ‘பான் எண்’ வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் எளிமையாக ஒரு சாதாரண குடும்பத்தினர், தங்கள் வீட்டு திருமணத்தை ஒரு திருமண மண்டபத்தில் நடத்தும் செலவைவிட, ஒரு சிறிய ஓட்டலில் நடத்தினால் செலவு குறையும் என்ற எண்ணத்தில் ஓட்டல்களில்தான் நடத்துகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக நடத்தினாலும், 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகிவிடும். அந்த பில்லுக்கான பணத்தை கட்டும்போது, ‘பான்’ எண்ணைக் குறிப்பிட்டு அதன்பிறகு வருமான வரித்துறை நோட்டீசுக்கு பதில் அளித்துக் கொண்டு இருக்கும் நிலை எங்களுக்கு தேவையா? என்பதே சாதாரண மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. மேலும், இதுபோல ரொம்ப கசக்கிப் பிழிந்தால் வரி ஏய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது போலாகிவிடும். இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பல செலவுகளை தாராளமாக அனுமதித்தால்தான் வர்த்தகம் உள்ளிட்ட தொழில்கள் வளரும். அந்த வரிவிதிப்பில் அரசுக்கும் வருமானம் பெருகும். மேலும், கிராமப்புற மக்கள், படிக்காதவர்களுக்கு ‘பான்’ என்பது பற்றிய விழிப்புணர்வு இன்னமும் இல்லை. அதனால்தான் இவ்வளவு உத்தரவுகளுக்குப் பிறகும் நாட்டில் ஏறத்தாழ 21 கோடி மக்களிடம்தான் ‘பான்’ இருக்கிறது. பணப்பரிமாற்றம் என்பது அரசால் கொண்டுவரப்பட்டதுதான். செக்கோ, டெபிட் கார்டோ பயன்படுத்துவதைவிட, உடனடி பரிமாற்றத்தை எளிதாக்கும் வசதிகளைக்கொண்டது. ‘செக்’ கொடுத்தால் அது வங்கியில் ‘பாஸ்’ ஆகும் வரையில் பரிமாற்றத்தை தாமதப்படுத்தும். ஆனால், இப்போது பணம் என்ற வார்த்தையே ஒரு கெட்டவார்த்தையாக அரசு கருதுவதைப்போல, பணப்பரிமாற்றத்தை தவிர்க்கும் வகையில், இப்படி கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. பணம் சுற்றி வந்தால்தான் பொருளாதாரம் வளரும். அதை இப்படி தடுப்பு அணைபோல தடுத்து விடக் கூடாது.

Saturday, December 19, 2015

வங்கிகளால் ஆன பயன்?

Dinamani


By வாதூலன்

First Published : 19 December 2015 01:21 AM IST


தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சென்னை உள்பட இதுவரை கண்டிராத பெருமழை அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.
தன்னார்வலத் தொண்டர்கள்; எதிர்க்கட்சிகள்; திரை நடிகர்கள்; அறக்கட்டளைகள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்தும் போர்வைகள், உணவுப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள் குவிந்தன.
பொதுத் துறை வங்கிகளின் பங்கு இந்த விஷயத்தில் அவ்வளவு குறிப்பிடும்படியாக இல்லை என்பதை உறுத்தலுடன் பதிவு செய்தாக வேண்டும்.
அதுவும், "வளமான நாட்களில் கண் சிகிச்சை முகாம், முதியோர் நலன், நீரிழிவு சோதனை முகாம் என்றெல்லாம் கண்காட்சிகள் நிகழ்த்தி, தங்கள் திட்டங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் வங்கிகள், இந்த வரலாறு காணாத வெள்ளத்தின்போது ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிர்.
ஒருவேளை, வங்கிகளுக்கே சிக்கல் நிறைய முளைத்தது காரணமாக இருக்கலாம் (உதாரணம்: வலைதள செயலிழப்பு; லாக்கருக்குள் நீர்.)
ஒரு சில வங்கிகள் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மைதான். இ.எம்.ஐ.யை கெடுத் தேதியில் செலுத்தாவிட்டால் அபராத வட்டி தொகை இல்லை; சேதமடைந்த கடன், டெபிட் அட்டைகளுக்கு மாற்று அட்டை, பிற வங்கிகளில் ஏ.டி.எம். பயன்படுத்தும்போது கட்டணம் கிடையாது. இத்தகைய சலுகைகள் வந்தபடியிருக்கின்றன. என்றாலும், நிகழ்ந்த சேதத்துக்கு இவை சோளப் பொறிக்கு ஒப்பானதுதான்.
ஒரு யதார்த்த நிலைமையை இங்கு குறிப்பிடலாம். குடும்பத்துக்குத் தூண் போலிருக்கும் தலைவர் இறந்து போனால், அந்தக் குடும்பத்துக்குச் சோகம் பதினைந்து நாள்கள்தான் இருக்கும்.
அதற்குப் பின்னர், கண் முன் பூதாகரமாக விரிந்து நிற்பது முதலில், நிதிநிலைமைதான். அத்தகைய "நிதிகளை' இருப்பில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு முதுகெலும்பு போலிருக்கும் தேசிய வங்கிகள், இதுபோன்ற பேரிடரில் முன்வந்து, இடுக்கண் களைய வேண்டாமோ?
ஒரு நிகழ்ச்சி நினைவு வருகிறது. அறுபது வயது எட்டினவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 1975-இல் இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, பலர் - குறிப்பாக வட நாட்டில் பாதிக்கப்பட்டார்கள்.
1977-இல் அவசரநிலை நீக்கப்பட்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் ஜனதா அரசு வெற்றி பெற்றது, அவசரநிலையால் ஜனதா அரசு வெற்றி பெற்றது. அவசரநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனி கடன் உதவி வழங்க வேண்டுமென்றும், அதற்கான "ஸ்டேட்மென்ட்' மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டுமென்றும் அரசு உத்தரவிட்டது.
இதேபோல், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் நேர்ந்த கலவரங்களில் பல சீக்கியர்கள் வீடு வாசலை இழந்தார்கள். அத்தகையவர்களுக்கும் வங்கி ஒத்தாசை புரிந்தது.
மேற்சொன்ன இரண்டும் அரசியல் சாயம் கொண்டவை. ஆனால், இப்போது நடந்தது இயற்கையின் வெறியான சீற்றம். பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பதில், அரசு வங்கிகளுக்கு முக்கியப் பங்குண்டு என அழுத்தமாகச் சொல்லலாம்.
என்ன தீர்வு? இன்றைய காலகட்டத்தில், ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் எல்லா வீடுகளிலும் நவீன நுகர் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சலவை இயந்திரம், கணினி, வாகனங்கள் இவை யாவற்றையும் பெற வங்கிகள் கடன் தருகின்றன.
நுகர்பொருள் என்றால் மூன்றாண்டு தவணை; வாகனம் எனில் நாலாண்டு; வீடு என்றால் இருபது ஆண்டு, கால அளவு வேறுபடும். இந்த வெள்ளத்தில் மிகப் பலருக்கு நுகர்பொருள்கள் முற்றுமாக அழிந்தே விட்டன. வங்கிகள் புதிய பொருள் வாங்க கடன் கொடுக்கலாம்:
= நுகர் பொருள்களுக்குக் காப்பீடு இருந்தாலும், 30 சதவீதமே கிடைக்கும்; அதுவும் தனியான 'Householders Policy' இருந்தால்தான்.
= வாகனங்களுக்கு உறுதியாகக் காப்பீடு இருக்கும். இருந்தால்கூட தேய்மானத்தைக் கணக்கிட்டுத்தான் தொகை கிடைக்கும். வாகனத்தைச் செப்பனிட குறுகிய காலக் கடன் வழங்கலாம்.
= வீட்டு வெளிச் சுவரில் சேதம்; வெளிவாசல் கதவு சேதம்; வீட்டுக் கூரை இடிந்து விழுந்திருப்பது - இவற்றைச் சரி செய்ய வங்கிகள் தாராளமாகக் கடன் தரலாம்.
சான்றுகள் காண்பிப்பது எளிதான காரியம்தான், தினத்தாளில் வந்த செய்தி; புகைப்படம்; தங்களது ரேஷன் அட்டை இவை போதுமே. ஒருவேளை ரேஷன் அட்டையும் நாசமாகியிருந்தால், வங்கிகள் PAN எண்ணை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவங்கிகள் எல்லாம், Flood Relief என்ற ஒரு பிரிவு வைத்து, குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, ஓரளவு குறைந்த வட்டியில் (8 சதவீதம்) கடன் வழங்கலாம்.
மேற்சொன்ன மூன்று பிரிவில், தொழில், விவசாயம் இவ்விரண்டையும் சேர்க்கவில்லை. ஏனெனில், இவ்வகைக் கடன்களை வழங்கிக் கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு வங்கியிலும் தனியே இலாகாக்கள் இயங்குகின்றன.
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யலாம்; யந்திர பிற அடமானக் கடனை மறு சீரமைப்பு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு கடனையும் தனித்தனியாக பாவித்துத் தான் கடன் வழங்கப்படும்.
நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய சேதம், "வங்கிகளால் ஆன பயன் என் கொல் பேரழிவில் நேசக் கரம் நீளாவிடில்' என்ற புதுக் குறளுக்கேற்ப, பொதுத் துறை வங்கிகள் செயல்பட்டால் உசிதம்.

தேவை, சட்டத்திருத்தம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 December 2015 01:15 AM IST


நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கு இந்தியா முழுவதும் பேசப்பட்டதைப் போலவே, இந்த வழக்கில் விடுதலையாகவுள்ள இளம்வயதுக் குற்றவாளியும் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறார். இவரை விடுதலை செய்வதா, தண்டனையை நீட்டிப்பதா? என்கிற விவாதம் இந்தியா முழுவதும் பலதரப்பிலும் பல விதமாக விவாதிக்கப்படுகிறது.
2012, டிசம்பர் 16-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த இச்சம்பவத்தில் நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைதான 6 குற்றவாளிகளில் ஒருவரான 18 வயதுக்கு உள்பட்டவர் வளரிளம்பருவக் குற்றவாளி, கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளைக் கழித்துள்ளபோதிலும் அவரை விடுதலை செய்யக்கூடாது என்று நிர்பயாவின் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தண்டனையை நீட்டிக்கவும் இயலாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த இளம்வயதுக் குற்றவாளிதான், அந்த 6 பேரில் மிகவும் மோசமாக நடந்துகொண்ட நபர். வல்லுறவுடன் நில்லாமல், இரும்புக் குழாய் மூலம் நிர்பயாவின் உறுப்பைச் சிதைத்த நபர். இச்செயல்தான் நிர்பயாவின் குடல் கிழியும்விதமாக படுகாயத்தை ஏற்படுத்தி, 13 நாள் சிகிச்சை பலனின்றி இறக்கக் காரணமாக இருந்தது. இந்த நபர், சம்பவம் நடந்த நாளில், 18 வயது நிரம்பாத இளம்வயதுக் குற்றவாளி என்பது இவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
மற்றவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தும், இந்த இளம் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோதே, இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்தன. கொடுங்குற்றம் புரியும் இளம்குற்றவாளிகளை, வயதுவந்தவர்களாகக் கருதி, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மத்திய அரசு கடந்த மே மாதம், சிறார் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மக்களவையில் மசோதா தாக்கல் செய்தது. "கொடுங்குற்றம் புரியும் சிறார்கள் 16 வயது நிரம்பியவராக இருந்தால், அவர் உளவியல் ரீதியாக சிறுவனாக இருக்கிறாரா, வளர்ந்த நபருக்குரிய மனப்பக்குவம் கொண்டிருக்கிறாரா என்பதை ஒரு உளவியல் குழு உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அறிக்கையில் அவரை 18 வயதுள்ளவராகக் கருதி, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்' என்கிற இத்திருத்தங்களுடன் சட்ட வரைவு மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறவில்லை.
சிறார் வயதைக் குறைக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கிறது. ஒரு வழக்குக்காக சிறார் வயதைக் குறைத்து, இளம்வயதுக் குற்றவாளிகளை வழக்கமான நீதிமன்றத்தில் நிறுத்தத் தொடங்கினால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என்று தன்னார்வ அமைப்புகள், சிறார் உளவியல் சார்ந்த ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வராத நிலையில், நீதிமன்றமும் இந்த விவகாரத்தில், இளம்வயதுக் குற்றவாளியின் விடுதலையைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தண்டனையை நீட்டிக்கவோ செய்யாது.
இந்த இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனையுடன் வெளியேறுவதை நிர்பயாவின் பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இளம்வயதுக் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என்றுதான் நிர்பயாவின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த தீர்ப்பின் இறுதியில் நிர்பயாவின் தாய், "குற்றவாளி வென்றான். நாங்கள் தோற்றுவிட்டோம்' என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வழக்கை நீதிமன்றம் விதிவிலக்காகக் கருதி, தண்டனை நீட்டிப்போ அல்லது விடுதலையை ரத்துசெய்யவோ உத்தரவிடுமெனில், இதே அளவுகோல் நாட்டின் அனைத்து சிறார்கள் மீதான பாலியல் வழக்குகளிலும் அளிக்கப்படும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அச்சம்.
இந்தியாவில் குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளைச் சந்திக்கும் சிறார்கள், மொத்தக் குற்ற அளவில் 1.2% மட்டுமே. இவர்களில் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை மிகமிக குறைவு. ஆகவே, வயது வரம்பைக் குறைக்கக் கூடாது என்ற வாதம் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடும் சிறார்களில் பெரும்பாலோர் ஏழ்மையில் உள்ளவர்கள். இவர்களது வாழ்க்கைச் சூழலும், அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்ட வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள்தான் அவர்களை மோசமானவர்களாக மாற்றுகிறது. இதற்கான தீர்வுகளும், இத்தகைய சிறார்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதிலும் கவனம் செலுத்தாமல், வெறும் வயது வரம்பைக் குறைக்கக்கூடாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆனாலும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய நவீன உலகில், பாலியல் குற்ற வழக்குகளுக்கு ஆளாகும் மாணவர்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என தினமும் சிலர் கைதாகிக் கொண்டே இருக்கின்றனர். இரு நாள்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளியில் 17 மடிக்கணினி திருடிய மூன்று மாணவர்களை விசாரித்தபோது, அவர்கள் ஒரு நாற்பது வயது நபரைக் கொன்று, 15 சவரன் திருடியதும் தெரியவந்துள்ளது.
16 வயது நிரம்பிய இளம்குற்றவாளியின் மனப்பக்குவம் 18 வயதைக் கடந்தவருக்கு உரியதா என்பதை உளவியல் குழு தீர்மானிப்பதும், அதன் பரிந்துரைப்படி வழக்கு விசாரணை நடத்தப்படுவதுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும். வல்லுறவுக் குற்றமாக மாற்றப்படும் இளம்வயது காதல்களுக்கும் இந்தக் குழு விசாரணையே நியாயம் கிடைக்கச் செய்யும்.
சிறார் சட்டத்தில் திருத்தங்கள் மிக மிக அவசியம்!

Friday, December 18, 2015

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை 56 ஆண்டுகளாக கணவர் பாசத்துடன் கவனித்து வருவது கேட்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது.

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran


பிஜீங்: கருத்து வேறுபாடு என்ற காரணம் காட்டி திருமணமான ஓரிரு ஆண்டுகளிலேயே விவாகரத்து வரை செல்லும் இளம்தம்பதிகள் மத்தியில, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை 56 ஆண்டுகளாக கணவர் பாசத்துடன் கவனித்து வருவது கேட்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது. கிழக்கு சீனாவின், ஷன்டாங் மாகாணம், சுஞ்சியாயூ பகுதியைச் சேர்ந்தவர் டூ யூவான்பா (89), இவரது மனைவி சோ யூவ். டூ யூவான்பா நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். திருமணம் நடந்த 5 மாதங்களில் சோ யூவ் மர்மநோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். பின்னர் அது முடக்குவாதம்போல் பாதிப்பை ஏற்படுத்தியது. அருகில் உள்ள டையன் நகரில் டூ யூவான்பா வேலை செய்து வந்தார். கடிதம் மூலம் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக மாறி உள்ளதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக டூ யூவான்பா வீடு திரும்பினார். தனது இளம் மனைவி தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார். அவரால் திரும்பக்கூட முடியாததோடு, ஒரு சிறிய பொருளை கூட கைகளால் பிடிக்க முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த டூ யூவான்பாவின் நண்பர்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும்படி பலமுறை அவருக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் டூ யூவான்பா இதனையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டதோடு கடைசி வரை தனது மனைவியை பராமரிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். தனது பணியில் இருந்து விலகிய முழு நேரத்தையும் நோய்வாய்ப்பட்ட மனவைியை கவனிப்பதிலேயே செலவழித்தார்.

விவசாயியாக இருந்து கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக அவர் தனது மனைவியை ஒரு குழந்தைபோல எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி கவனித்து வருகிறார். மனைவிக்கான உணவை ஸ்பூன் மூலமாக கொடுக்கும் டூ யூவான்பா, மனைவியின் இயற்கை உபாதைகளை கூட எந்த சலிப்பும் இன்றி தானே அகற்றி வருவது மனைவி மேல் கொண்டுள்ள அன்பின் உச்சம் எனலாம். பல்வேறு மருத்துவர்களிடமும் மனைவியை அழைத்து செல்லும் டூ யூவான்பா அவர் குணமடைவதற்காக 56 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.

டூ யூவான்பா தனது மனைவி மேல் கொண்டுள்ள பற்றை பார்த்து வியந்துபோகும் அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மூலிகை மருந்தை மனைவிக்கு கொடுப்பதற்கு முன்பாக அதில் விஷத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்வதற்காக முதலில் அதனை டூ யூவான்பா சுவைத்து விட்டுதான் மனவைிக்கு கொடுக்கிறார்.

NEWS TODAY 31.01.2026