Saturday, December 26, 2015

விழாக் காலம்: ஆச்சிக்கு மரியாதை! .............ரசிகா



திரையுலகில் பொக்கிஷமாய், கலையுலக ராணியாய் மங்காத புகழுடன் ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை ஆச்சி.மனோரமா. கலையுலகின் அனைத்து துறைகளிலும் மின்னிய அவரது ஆற்றலுக்கு மரியாதை செய்யும் ஓர் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியே ‘ஆச்சிக்கு மரியாதை’!

ஆச்சியின் ஐம்பது ஆண்டு காலத் திரைத்துறை சாதனையை ஏற்கெனவே ‘மனோரமா 50’ என்ற வெற்றிகரமான இன்னிசை நிகழ்ச்சியாக நிகழ்த்திக் கொண்டாடிய, 7,500-க்கும் அதிகமான மேடைகள் கண்டு உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திய சங்கர் ராமின் ‘சாதகப் பறவைகள்’ இசைக்குழுவே தற்போது ஸ்டார் ஈவன்ட் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஆச்சியின் ரசிகர்களை மகிழ்விக்க இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக, நேர்த்தியாகவும் நினைவுகளை கிளறித் தாலாட்டும் விதமாகவும் ‘ஆச்சிக்கு மரியாதை’எனும் மெகா இன்னிசை இரவை நிகழ்த்த இருக்கிறார்கள்

“வா வாத்தியாரே ஊட்டாண்ட”, “தில்லாலங்கடி ஆட்டம் போட்டு”, “முத்துக் குளிக்க வாரீகளா” என தன் வசீகர குரலால் அனைவரையும் கட்டியிழுத்த ஆச்சியின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் நடித்த படங்களின் மெட்லிகள், காமெடி கலாட்டா, சின்னத்திரை ஜூனியர் மற்றும் சீனியர் சிங்கர்களின் கலக்கல் ஃபெர்மான்ஸ் என வருகிற ஜனவரி 1, 2016 புதுவருட புத்தாண்டு நாளில் திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னணிக் கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மெகா இன்னிசை இரவாக சென்னை காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு அரங்கேற்றப் போகிறது. இதில் பங்கேற்று ‘ஆச்சிக்கு மரியாதை’ செய்ய அழைக்கிறது சாதகப் பறவைகள், ஸ்டார் ஈவண்ட் கூட்டணி.

மனசு போல வாழ்க்கை 36: நேசித்துப் பெறும் தோல்வி .... டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்புதான் என்பேன்.

உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம்.

அன்பு குறையும்போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமைதான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது.

நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.

சக்தியின் அடையாளம்

அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும்போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம்.

தன்னலம் கருதாமல் பிரதிபலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வுதான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.

பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரைவிடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறைசாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?

ஆள் பார்த்துதான்

இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?

இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில்தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.

நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதைபதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்துதான் அன்பு வருகிறது!

ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதைபதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.

அன்பைத் தின்னும் சுயநலம்

மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள். பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது.

பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர்மீதுகூடச் செலுத்த முடியாவண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.

‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித்தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியைவிடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.

அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.

அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும்போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும்போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும்போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!

பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும்.

எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவதுதான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!

பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!

(முற்றும்)

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

காற்று வாங்கப் போவோம்.


Dinamani


காற்று வாங்கப் போவோம்...!


By மன்னை. பாஸ்கர்

First Published : 25 December 2015 01:11 AM IST


சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.
இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள்.
காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். "விட்டாலிட்டி ஏர்' என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து வணிக முத்திரையுடன் விற்பனையைத் தொடங்கி விட்டது.
இப்போதைக்கு மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அந்நிறுவனத்தின் காற்று விற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் காற்று மாசு தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது சீன நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், வாகன உற்பத்திக் கூடங்கள் போன்றவற்றிலிருந்து பெருமளவு புகை வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர் காய்வதற்காக பெய்ஜிங் நகர வீடுகளில் நிலக்கரித் துண்டுகளை எரிப்பதால் வெளியேறும் அதிக அளவு புகையால் காற்று கடுமையாக மாசடைந்தது. இதனோடு பனிப்புகையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பல்வேறு சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். இதனால், கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெய்ஜிங்கில் பள்ளிக் கூடங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கனடாவின் விட்டாலிட்டி ஏர் நிறுவனம் சீனாவில் கால் பதித்து காற்று விற்பனையைத் தொடங்கியது. விற்பனை சூடுபிடிக்க உற்சாகமடைந்த அந்த நிறுவனம், சீனாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கள் நிறுவனத் தயாரிப்பை விற்க முகவர்களை நியமித்தது. ஒரு புட்டி காற்றின் விலை இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதாவது, சீனாவில் ஒரு தண்ணீர் புட்டியின் விலையை விட 50 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மலைத்தொடரின் உச்சியிலிருந்து அடைக்கப்பட்ட காற்றுப் புட்டிகளுக்கு மவுசும் விலையும் இன்னும் கொஞ்சம் அதிகம். இந்தக் காற்று 10 முதல் 12 மணி நேரம் வரை தூய்மையானதாக இருக்குமாம். இப்போது காற்று விற்பனை சீனாவில் கன ஜோராக நடக்கிறது.
தூய்மையான காற்றுப் புட்டிகளை வாங்கி பயன்படுத்துவதை ஓர் அந்தஸ்தாகவே கருதத் தொடங்கி விட்டனர் மேல்தட்டு மக்கள். குறிப்பாக பெண்களும், தொழில் அதிபர்களும் இந்த காற்றுப் புட்டிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
எங்கு சென்றாலும் தங்கள் கைப்பைகளில் காற்றுப் புட்டிகளை கையோடு எடுத்துச் செல்கின்றனர். காற்று மாசடைந்த பகுதிகளில் எப்போது தேவையோ அப்போது தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கைபேசிகளை எடுத்துச் செல்ல மறந்தாலும் காற்றுப் புட்டிகளை அவர்கள் மறப்பதில்லை. பெய்ஜிங்கில் சீனர்களின் நிலை அந்த அளவுக்கு பரிதாபகரமாகி விட்டது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதைப் பார்த்த கனடா நிறுவனம் தற்போது அதைப் பெருக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது. தூய்மையான காற்றின் அவசியம், மாசடைந்த காற்றால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளம்பரங்கள் செய்யத் தொடங்கி இருக்கிறது.
தங்கள் நிறுவனம் தூய்மையான காற்றை எப்படிப்பட்ட இடங்களில் இருந்து எடுக்கிறது? புட்டிகளில் எப்படி அடைக்கிறது? என்பதைப் பற்றி தனது இணையதளத்தில் புகைப்படங்களுடன் விரிவாக கூறியிருக்கிறது இந்த நிறுவனம்.
தனது நண்பருடன் சேர்ந்து விளையாட்டாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததாக கூறும் விட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மோசஸ் லாம், முதலில் ஒரு பாலிதீன் பையில் பான்ஃப் மலைத்தொடரின் காற்றைப் பிடித்து அடைத்து 50 பென்ஸ் என்ற விலைக்கு விற்றாராம்.
பின்னர், இரண்டாவது முறையாக ஒரு பாலிதீன் பையில் காற்றை விற்றபோது அதை விட மூன்று மடங்கு கூடுதல் விலை, அதாவது 160 பென்ஸ் கிடைத்ததாம். அப்போதுதான் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இப்போது விட்டாலிட்டி ஏர் நிறுவனம் பல நாடுகளில் கிளைகளையும் விற்பனை முகவர்களையும் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டது. உங்கள் ஊரில் நீங்களும் காற்று விற்பனை முகவராகலாம். அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் விண்ணப்பங்கள் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிறுவனம் காற்று மற்றும் ஆக்ஸிஜன் புட்டிகளை வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தீவிரமாக களமிறக்கியுள்ளது. சீனாவில் கொடி கட்டிப் பறக்கும் காற்று வியாபாரத்திற்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லையாம்.
ஆனாலும், தண்ணீர் புட்டிகள் இந்தியாவில் பெருமளவில் விற்பனையாவதால்,காற்றுக்கும் சந்தை கிடைக்கும் என்று காத்திருக்கிறது இந்நிறுவனம்.
அப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டு காற்று மாசு, வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்கால சந்ததியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
பொருள்களைத் தயாரித்து விற்று வந்த நிலை மாறி, இயற்கையாக கிடைப்பவற்றையும் காசாக்க முயற்சிக்கும் இந்த வணிக உலகத்தின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. ஓர் அளவுக்கு மேல் அவர்களை அனுமதிப்பதும் தவறுதானே!

டிஜிட்டல் மீட்டர் என்ன ஆச்சு?

logo

இந்திய பொருளாதாரம் இப்போது சீரடைந்து கொண்டுவருவதற்கு காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென்று குறைவதுதான். சமீபகாலங்களாக கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்துவருவதால், அரசின் அன்னிய செலாவணியும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008–ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலராக இருந்தது. இப்போது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 36.05 டாலராக குறைந்துள்ளது பெருமகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்ப, பெட்ரோல்–டீசல் விலை குறையாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில், பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரி மற்றும் இதர வரிகள் வருமானம் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, குறைந்துவிடுவதால் அந்த வருமானம் குறையாத அளவில் வரியையும் கூட்டிவிடுகிறார்கள். 1989–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.50 ஆகவும், மண்எண்ணெய் விலை 2.25 ஆகவும், டீசல் விலை 3.50 ஆகவும் இருந்தது. இப்போதும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதற்கேற்ப இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், அதற்கேற்ப ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை என்பது மக்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது.

2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 ரூபாய் என்றும், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.25 காசாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.60.80 காசாக குறைந்துள்ளது. இவ்வளவு குறைந்தபிறகும் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை. இதன்பின்பு, ஐகோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் 8 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில், முதல் அம்சமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்ப, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் அப்படி ஒருபோதும் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பொதுமக்களை பொருத்தமட்டில், கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டாலும் பரவாயில்லை, மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினாலே போதும் கட்டணத்தை கொடுக்கத்தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களிலும் ஜி.பி.எஸ். உடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்காக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக சென்னை பெருநகரில் இயங்கிவரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தை காட்டும் கருவியுடன், அதாவது ஜி.பி.எஸ். உடன் கூடிய, மின்னணு இலக்க அச்சடிக்கும் எந்திரத்துடன் (டிஜிட்டல் மீட்டர்) விலை ஏதும் இல்லாமல் அரசு சார்பில் பொருத்தப்படும் என்றும், இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆக, கோர்ட்டும் சொல்லிவிட்டது, அரசும் நிதி ஒதுக்கிவிட்டது. ஆனால், நிறைவேற்றவேண்டிய போக்குவரத்துத்துறை இதற்காக டெண்டர் விடுகிறோம் என்று அறிவித்து, அந்த டெண்டர் விடும் முறையே இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. இந்த குறையை போக்க உடனடியாக மீட்டர் போட்டு கட்டணம் வசூலிக்கும் கட்டாய நடவடிக்கைகளையும், தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையையும் போக்குவரத்துத்துறை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும்.

Thursday, December 24, 2015

இந்தியாவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்

logo

புதுடெல்லி,

இந்தியாவில் இணையதளங்களில் நடப்பு ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக டிரெண்டிங்கில் இருப்பதாக கருதப்படும் ஆப்பிளின் ஐபோன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெறவில்லை. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் நோட் 5 ஆகியவையும் டாப்-10 பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், முதல் 3 இடங்களுக்குள் மைக்ரோமேக்ஸ், லெனோவா ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன.

2015-ம் ஆண்டு கூகுளில் (இந்தியா) அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் டாப்-10 பட்டியல் பின்வருமாறு:-

1. யூ யுரேகா
2. ஆப்பிள் ஐபோன் 6 எஸ்
3. லெனோவா கே.3 நோட்
4. லெனோவா ஏ 7000
5. மோட்டோ ஜி
6. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர்
7. சாம்சங் கேலக்ஸி ஜே 7
8. மோட்டோ எக்ஸ் பிளே
9. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்
10. லெனோவா ஏ 6000

முதலிடத்தை பிடித்துள்ள யூ யுரேகா ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யு டெலிவென்சர்ஸின் தயாரிப்பு ஆகும். இந்த துணை நிறுவனம் ஆன்லைனில் மட்டுமே பிராண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு

logo


மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருந்த சிறார் நீதிசட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறிவிட்டது. ஏற்கனவே லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தது. இந்தியாவில் எல்லா குற்றங்களும், இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குற்றம்செய்திருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 வயதுக்கு குறைவானவர்கள் ஒரு குற்றத்தை செய்திருந்தால், அவர்களை மற்ற தண்டனை சட்டத்தின்கீழ் விசாரிக்காமல், இப்போதுள்ள சிறார் நீதி சட்டத்தின்கீழ் விசாரித்து, எந்த குற்றம் என்றாலும் அதிகபட்சம் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் படுகிறது. அந்த தண்டனை காலத்தையும் அவர்கள் சிறையில் கழிக்கவேண்டியது இல்லை. சிறார் சீர்திருத்த இல்லங்களில் வைத்து, திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இப்போது இந்த சட்டத்துக்கான திருத்தம் ராஜ்யசபையிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தவுடன் நிறைவேறிவிடும். இதன்படி, இனி 16 வயது ஆனவர்களும், கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களை செய்திருந்தால், அவர்கள் மற்றவர்களைப்போல தண்டனை பெறுவார்கள் என்பதுதான் இந்த புதிய சட்டத்தின் சாராம்சம். அதேநேரம், இவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்குத்தண்டனையோ விதிக்கப்படமாட்டாது. இந்த சட்டம் நிறைவேறிய பிறகு, இனி எதிர்த்து பயனில்லை என்றாலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்திலேயே மத்திய உள்துறை ராஜாங்கமந்திரி ஹரிபாய் பராதிபாய் சவுத்திரி பேசும்போது, ‘கடந்த ஆண்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறார்களின் கணக்கை பார்த்தால், 55.6 சதவீத சிறார்கள் ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு குறைவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அடுத்த 22.4 சதவீத சிறார்கள் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர்கள். அடுத்த 14.3 சதவீத சிறார்களை எடுத்தால், அவர்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு ஏன்? நிர்பயா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். குற்றம் நடந்த தினத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடியவன், பிளாட்பாரத்தில் பசியும், பட்டினியுமாக அலைந்து இருக்கிறான். அந்த ஒரு சம்பவத்துக்கு முன்பு எந்த குற்றமும் செய்யாதவன். நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாடு மேய்க்கச் சென்ற 21 வயது திருமணமான பெண்ணை கற்பழித்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும், 16 வயது ஏழை சிறுவன். ஆக, வறுமையால் வாடும் இளம் சிறார்களுக்கு இத்தகைய குற்றங்கள் பெரிதாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டிய அரசாங்கங்கள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும், படிப்பறிவு இல்லாத ஏழை சிறார்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு, உணவு வழங்குவதற்கு, கல்வி புகட்டுவதற்கு உண்டான வழிகளை காணவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசங்களையும், மானியங்களையும் வழங்கும் தீவிரத்தைவிட, இதுபோன்றவர்களின் வாழ்க்கை பாதுகாப்பில் காட்டினால்போதும், குற்றங்களை குறைத்துவிடலாம். வாழ்வின் கடைக்கோடியில் உள்ள இளஞ்சிறார்களுக்கு பசி அறியாத வகையில் உணவு வழங்கி, பள்ளிக்கூடங்களுக்கு கொண்டுசென்று கல்வி புகட்டி, அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை நிச்சயமாக மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

Wednesday, December 23, 2015

குற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்கப் போகிறானா அந்தச் சிறுவன்? ....மு.அமுதா

Return to frontpage



ஓவியம்: தீபக் ஹரிசந்தன்.


நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தீவிர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'பாப்புலர் சென்டிமென்ட்' என்ற கூறப்படும் மிகப் பிரபலமான ஓர் உணர்ச்சிமிகுதியின் வெளிப்பாடாகவே இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுவெளியில் கூறப்படுகிறது.

சிறுவன் விடுதலையும், அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

1. விடுதலையான இளம் குற்றவாளி உண்மையிலேயே இனி சுதந்திரமாக இருக்கப் போகிறாரா?

2. சிறுவன் மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது அவரது சீர்திருத்ததுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

3. சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்படும் சிறுவர்களை குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்தும் முழுப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது?

4. ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்?

5. இத்தனை விமர்சனங்கள், நெருக்குதல்களுக்குப் பின் விடுதலையாகியுள்ள சிறுவனை இந்தச் சமூகம் எப்படி அணுகும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.

நிர்பயாவின் கொடூரக் கொலை போல இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண் என்ற சக உயிரின் மீதே ஆண் என்ற பிம்பம் தாக்குதல் நிகழ்த்துகிறது, நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.

இளஞ்சிறார் சட்டப்படி, பத்து முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் குழந்தைகள், அவர்களுக்குத் தண்டனைக் காலம் குற்றங்களின் தன்மையை வைத்து மாறினாலும், பெரும்பாலும் எத்தனை ஆண்டுக் காலம் என்றாலும், அந்தத் தண்டனைக் காலம் என்பது அவர்களின் குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்துவது போன்றவையே சட்டத்தின் நோக்கம்.

இந்த எல்லாச் சட்ட நோக்கமும் அப்படியே நிறைவேறினால் இங்கே குற்றங்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து போகும்.

இந்தக் குழந்தைகள் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுப்படுத்தப்படுகிறார்கள்?

வீட்டில் நிலவும் சூழல், குழந்தைகளுக்கு ஒரு நீதியும் நமக்கொரு நியாயமும் என்று பெரியவர்கள் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் கண்முன்னே நிகழும் குடும்ப வன்முறைகள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம், அல்லது வீட்டில் உள்ள பெண்கள் நடந்து கொள்ளும் விதம், முறையான அடிப்படைக் கல்வி கிடைக்காத நிலை, வறுமை, இக்கட்டான சூழ்நிலை என்று வீட்டில் உள்ள ஏதோ ஒன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் குழந்தையை அரவணைக்கும் யாரோ ஒருவர் இருந்தால் கூட அந்தக் குழந்தைத் தவறு செய்வதில்லை.

வீட்டில் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் வெளியில் தேடும், தன் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் என்று அதன் வெளி வட்டம் பெரிதாகும்போது, அந்த வெளிவட்டத்தில் சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இருந்துவிட்டால், அல்லது ஒரு குழந்தையைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையும் துணை சேர்ந்தால், தவறுகள் இயல்பாகும்.

இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

முதல் சம்பவம்:

ஒன்று ஆதரவற்ற இல்லத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு பதினான்கு வயது மாணவனை, மாலை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஓர் இருபது இருபத்திரண்டு வயது பெண், கையில் ஒரு பிரம்பை வைத்து அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள், தடுத்துவிட்டு வந்தபோது, அந்த இல்லத்தின் பொறுப்பில் இருந்தால் மற்றுமொரு ஆசிரியை, அனாதைகளான இந்தச் சிறுவர்களை மிகுந்த கண்டிப்புடன் அடித்து உடைத்து வளர்த்தால்தான் ஒழுங்காய் வளர்வார்கள் என்று சொன்னதைக் கேட்டதும் வேதனைதான் மிஞ்சியது.

இரண்டாவது சம்பவம்:

இரண்டாவது நிகழ்வு நான் பள்ளியில் படிக்கும்போது என் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைப் பற்றியது, கணவன் மனைவி இருவரும் படிக்கவில்லை, அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், அவர்களின் மூத்த மகனுக்கு இரண்டாவது மகனுக்கும் இரண்டே வயது வித்தியாசம், ஏழு வயது மூத்த மகனை, எல்லாம் தெரிந்தவனாய் இருக்கவேண்டும், தம்பியும் தங்கையும் குறும்பு செய்யலாம், தவறு செய்யலாம், ஆனால் ஏழு வயது கழுதை அதைச் செய்யலாமா என்று பொழுது தவறாமல் ஒரு பிரம்பை வைத்து அவனை அடிப்பார்கள், யார் சொன்னாலும் அந்தப் பெண் கேட்டதேயில்லை, கூடவே அச்சிறுவனின் தகப்பனும், அடி உதை மட்டுமே வாங்கிய மூத்தமகன், யாருடைய அரவணைப்பும் இன்றி, மனநிலைப் பிறழ்ந்து, அவனுடைய இருபத்திரண்டு வயதில் தொலைந்துபோனான், மனநிலைப் பிறழ்ந்த மகனின் ஏக்கத்தில் இருந்த பெற்றோருக்கு, இளையவன் என்று தூக்கி கொண்டாடிய மகன், தகாத நட்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, ஒருநாள் மெரினாவின் கடலலையில் சிக்கி உயிரை விட்டுவிட்டான் என்ற செய்தி அடுத்த இடியாக இறங்கியது.

ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்ட பெற்றோர், ஒரே பெண்ணை வெளியில் எங்கும் அனுப்பாமல், எப்படியோ திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர்.

ஆதரவில்லை என்றாலும், பெற்றோர் இருந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அரவணைப்புக் கிடைத்துவிடுவதில்லை, ஒரே குழந்தை என்று மிதமிஞ்சிய அன்பும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் மிதமிஞ்சிய கண்டிப்பும் குழந்தைகளின் ஏதோ ஒரு தவறுக்கு அடித்தளம் அமைக்கிறது, கண்டுகொள்ளப்படாத சிறு தவறுகள் காலப்போக்கில் பெரும் குற்றங்களுக்கு ஏதுவாகிறது.

மாற்றம் என்பது தண்டனையில் வருமா?

குழந்தைகள் ஈடுபடும், அல்லது ஈடுபடுத்தப்படும் குற்றங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனநிலைப் பிறழ்வால், சூழ்நிலையால், போதிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவால், கூடா நட்பினால், சமூகத்தால், பெற்றோர்களின் அலட்சியத்தால் என்று ஏதோ ஒரு காரணத்தினால் நிகழ்ந்துவிடுகிறது.

குற்றவாளிகளை நாம்தான் உருவாக்குகிறோம், நம்முடைய தவறு, ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குகிறது, இன்னொரு குழந்தையை அந்தக் குற்றத்திற்கு இரையாக்குகிறது.

பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்!

வீட்டில் வெளியில் என்று எதிலும் நாம் மாற்றத்தைக் கொண்டு வராமல், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் சட்டங்களை மட்டுமே மாற்றி என்ன பயன்?

தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் காரணியாக இருக்கிறது. தண்டனையை அதிகப்படுத்துவது குற்றங்களைக் குறைக்க உதவுமா அல்லது குற்றத்தை மறைக்கத் தூண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும், தண்டனைக் கொடுத்துச் சிறையில் தள்ளி, வாழ்க்கையை முடித்துவிட்டால் அது பிறருக்கு பாடமாய் இருக்குமா? இருக்கும் தான், இல்லையென்று சொல்ல முடியாது, அது மட்டுமே போதுமா?

இளஞ்சிறார்களின் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வயதைக் குறைத்துக் கொண்டே போவது மட்டுமே தீர்வு ஆகாது. பதினெட்டில் இருந்து பதினாறாக ஆக்கி, பின்பு அதையும் குறைக்கும் காலம் வரலாம்!

தீர்மானம் தீர்வா?

ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது!

மாற்றங்களை நாம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும், எந்தக் குழந்தைக்கும் நல்ல கல்வியும், நல்ல உணவும், அன்பும் ஆதரவும் தேவை, குறைந்தபட்சத் தேவைகளைச் சமூகம் பூர்த்திச் செய்யாதபோது சட்டங்கள் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கக் கால சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் அல்லது நாம் மாற்றிக்கொண்டே இருப்போம், குற்றங்கள் மட்டும் குறையாது.

பல்லாயிரக்கான குழந்தைகளை இந்தச் சமூகத்தின் அலட்சியம் அரசியல்வாதிகளின் சுயநலம் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது, பதைக்க வைக்கும் என்சிஆர்பி புள்ளி விவரத்தின் படி 2014 ஆம் ஆண்டு 36,138 வழக்குகள் இளம் குற்றவாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் குற்றங்களைச் செய்தோர் பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் 28,51,563. இவற்றில், சிறார் குற்றங்களின் பங்கு வெறும் 1.27 சதவீதம் மட்டுமே. அதாவது, 2 சவீதத்துக்கும் குறைவு.

எண்ணிக்கை வழங்கும் உண்மை நிலவரம் இப்படி இருக்க, இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைக்க வகை செய்வது என்பது, எதிர்காலத்தில் வழிதவறும் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும்படி தண்டனைகள் வழிவகுத்திடுமோ அல்லது பல்வேறு சட்டப் பிரிவுகள் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிச் சிறார்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம்முடைய இயந்திர வாழ்க்கையின் சுயநல எந்திரங்கள் பழுதடையும்போது நம்முடைய இளைய தலைமுறை மொத்தமும் சிறையில் இருக்க நேரிடலாம்... மாற்றம் அவசியம் மனநிலையிலும் சமூகத்திலும்.

மு.அமுதா - தொடர்புக்கு amudhamanna@gmail.com

NEWS TODAY 28.01.2026