Sunday, February 14, 2016

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு


DINAMALAR

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன.
இன்ஜி., கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. ஜூலை, 30க்குள், அரசு ஒதுக்கீடுக்கான இடங்களும்; ஆக., 14க்குள், நிர்வாக ஒதுக்கீடுக்கான இடங்களும் நிரப்பப்படும்.
அதற்கு முன், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. வரும், 28ம் தேதிக்குள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., கெடு விதித்துள்ளது.
அதனால், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து வருகின்றன. சில கல்லுாரிகள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை படிப்புக்கான மையத்தை மூடவும், சில பாடப்பிரிவுகளை ரத்து செய்யவும் கோரியுள்ளன.
தற்போதைய நிலையில், 60 இன்ஜி., கல்லுாரிகள், பல்வேறு பாடப்பிரிவுகளை ரத்து செய்ய கோரிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., - எம்.பி.ஏ., பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் முன்வராததால், அப்படிப்புகளை தொடர்ந்து நடத்த முடியாது என கல்லுாரிகள் தெரிவித்துள்ளன.
அதேபோல், இன்ஜி., கல்லுாரி வளாகங்களில் தனியாக செயல்படும் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை கல்லுாரிகளை மூடவும், சில கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. அதற்கு, மாணவர் சேர்க்கை குறைவு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமை போன்ற காரணங்களை தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பி.இ., - பி.டெக்.,கில் புதிதாக தொழில் சார்ந்த பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கேட்டுள்ளன. தொழிற்சாலைகளுடன் இணைந்து நடத்தப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

பரிசோதனை ரகசியங்கள் - 18: ‘எண்டாஸ்கோப்பி’ என்றால் என்ன?

டாக்டர். கு. கணேசன்

அலோபதி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளில் ‘எண்டாஸ்கோப்பி'யின் (Endoscopy) வரவு மிக முக்கியமானது. அறுவை சிகிச்சை செய்யப்படாமல் உடலின் உள் நோய்களை மிக எளிதாகக் கண்டறிய உதவும் 'உள்நோக்கும் கருவி' இது. அதாவது, நம் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள துவாரங்கள் வழியாக (வாய், காது, மூக்கு, தொண்டை, ஆசனவாய், சிறுநீர்க்குழாய்) வயிறு மற்றும் உடலின் உள்உறுப்புகளைக் காண உதவும் கருவிக்குப் பொதுவான பெயர் எண்டாஸ்கோப்பி. 'எண்டோ' என்றால் ‘உள்ளே' என்று அர்த்தம். ‘ஸ்கோப்பி' என்றால் ‘நோக்குதல்' என்று அர்த்தம்.

இதில் பல வகை உண்டு:

# கேஸ்ட்ரோஸ்கோப்பி (Gastroscopy): தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# லெரிங்கோஸ்கோப்பி (Laryngoscopy): தொண்டை மற்றும் குரல்வளைப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# பிராங்கோஸ்கோப்பி (Bronchoscopy): சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# கொலனோஸ்கோப்பி (Colonoscopy): ஆசனவாய் மற்றும் பெருங்குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# சிஸ்டாஸ்கோப்பி (Cystoscopy) : சிறுநீர்த் துளை வழியாகச் சிறுநீர்ப்பை, சிறுநீர் இறக்குக்குழாய், புராஸ்டேட் போன்ற பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# பிராக்டோஸ்கோப்பி (Proctoscopy): மலக்குடலைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# தொரக்கோஸ்கோப்பி (Thoracoscopy) : புளூரா எனும் நுரையீரல் உரை, பெரிகார்டியம் எனும் இதய உரை மற்றும் நெஞ்சுப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# கால்போஸ்கோப்பி (Colposcopy): பெண் பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# லேப்ராஸ்கோப்பி (Laparoscopy): கல்லீரல், கணையம், பித்தப்பை, கரு வெளியேறும் குழாய், வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி .

# ஆர்த்தோஸ்கோப்பி (Arthoscopy) : எலும்பு மூட்டுகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

இரைப்பை எண்டாஸ்கோப்பி

‘இரைப்பை எண்டாஸ்கோப்பி’(Gastro endoscopy) என்பது தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றைப் பரிசோதிக்க உதவும் கருவி. இதில் ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு ஃபைபர் குழாய் உள்ளது. இது வளைந்து நெளிந்து குறுகிச் செல்லக்கூடியது. இதைப் பயனாளியின் வாய் வழியாக இரைப்பைக்குள் செலுத்துகிறார்கள். உள்ளே சென்ற குழாயின் முனையில் வெளிச்சம் தரக்கூடிய பல்ப் இருக்கும். இதை வெளியிலிருந்தே இயக்கலாம். இக்குழாயின் வெளிமுனையில் லென்ஸ் இருக்கும். பல்பை எரியவிட்டு, வெளிமுனையில் உள்ள லென்ஸ் வழியாக மருத்துவர் பார்ப்பார்.

லென்ஸ் இரைப்பையின் பாகங்களைப் பன்மடங்காகப் பெரிதாக்கிக் காண்பிக்கும். அத்துடன் சுருங்கி இருக்கும் இரைப்பையை விரிவடையச் செய்யக் காற்றைச் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. உணவுக்குழாய் வால்வுப் பிரச்சினை, இரைப்பைப் புண், கட்டி, ரத்தக்கசிவு, புற்றுநோய் போன்றவற்றை இதன் மூலம் நேரில் காணமுடியும். பரிசோதனைக்கு உள்ளாகும் பகுதியில் புற்றுநோய் உள்ளது எனச் சந்தேகம் வந்தால், அந்தத் திசுவை ‘பயாப்சி’பரிசோதனைக்கு அனுப்ப, சிறிதளவு திசுவைக் கிள்ளி எடுக்கவும் இதில் வசதி உள்ளது. இரைப்பைச் சுரப்புகளை உறிஞ்சி எடுத்துப் பரிசோதிக்கவும் இது உதவுகிறது.

இந்தப் பரிசோதனையைச் செய்ய மயக்க மருந்து தேவையில்லை. குழாயை உள்ளே செலுத்தும்போது ஏற்படுகிற சிரமத்தைக் குறைக்க மதமதப்பை உண்டாக்கக்கூடிய ஜெல்லி மருந்தை வாயில் தடவுவார்கள்.

சிகிச்சையும் தரலாம்

இது பரிசோதனை கருவி மட்டுமல்ல. இதைப் பயன்படுத்திச் சில நோய்களுக்குச் சிகிச்சையும் தர முடியும். முக்கியமாக, கல்லீரல் சுருக்கநோய் மற்றும் குடல்புண் வந்தவர்களுக்கு ரத்தவாந்தியும் ரத்தக்கசிவும் ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு எண்டாஸ்கோப்பி மூலம் பேண்டிங், ஸ்கிலிரோதெரபி போன்ற சிகிச்சைகளை அளித்துக் குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் புற்றுநோய் வந்தவர்களுக்கு ERCP எண்டாஸ்கோப்பி மூலம் செயற்கை உணவுக்குழாயைப் பொருத்த முடியும். குழந்தைகள் தவறுதலாக நாணயம், ஊக்கு, குண்டூசி, கோலிக்குண்டு, கம்மல், ஹேர்பின் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டாஸ்கோப்பி மூலம் எளிதாக எடுத்துவிட முடியும்.



(அடுத்த வாரம்: எலும்பு வலுவிழப்பு நோய்க்கு என்ன பரிசோதனை?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? 19: ஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம்

டாக்டர் ஆ. காட்சன்

ஹிஸ்டீரியாவில் பிரச்சினையே இந்த மனநோயானது, நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவதுதான். இதனால் பாதிக்கப்படும் வளர்இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், தேவையான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்கிற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம்.

இல்லையென்றால் ‘பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்’ என்பதுபோல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன், தேவையற்ற மாத்திரை மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறலாம்.

வலிப்பில்லாத வலிப்பு

சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவருடைய அம்மா திடீர் மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் உட்கொண்டபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றைக் கேட்டபோது, நான்கு வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பா இறந்த பிறகு அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதாகவும், அதற்குப் பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் வலிப்பு அறிகுறிகளின் தன்மை, நரம்பு பாதிப்பால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துப்போகவில்லை.

மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் கூறிச் சூடு போட்டுச் சிகிச்சை (?) கொடுத்திருக்கிறார்கள். இது ஒரேயொரு உதாரணம்தான்.

உண்மையில் இதுபோலப் பலர், தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தைக் கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 25 சதவீதத்துக்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால், பெற்றோர்களுக்கு இது மனநலப் பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாக வாய்ப்பில்லைதான். ஆனால், சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

#

இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகச் சில நாட்களுக்குள் மனதைக் காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் நடந்திருக்கும்.

#

உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லாப் பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது.

#

சில வேளைகளில் அதிகக் கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால், அதற்காக அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல.

#

இந்த நோய் அறிகுறிகள் மூலம், அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருந்திருக்கலாம். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்தத் தொந்தரவு திரும்ப ஏற்படலாம்.

# அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை, கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி வெட்டி இழுக்கும். ஆனால், இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவதுபோலக்கூட இருக்கலாம்.

# இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாததுபோலச் சாதாரணமாகவும் இருப்பார்கள்.

# முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு நோய் கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வரும்போதே, மீண்டும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படலாம்.

என்ன சிகிச்சை?

ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாகக் குணப்படுத்தக்கூடியவையே. மனதைப் பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னாசிஸ், நார்கோ பரிசோதனைகள் உட்படப் பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்த நோயின் அறிகுறியாக இருக்குமானால், மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களைத் திட்டுவதாலோ வேண்டு மென்றே செய்கிறார்கள் என்று குறை கூறுவதாலோ, பிரச்சினை கூடுமே தவிரக் குறையாது. அதேநேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாகப் பகிர்ந்தளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.

(அடுத்த முறை: தலைகீழாகும் வாழ்க்கை)கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ஏ.மருதகாசி 10


Return to frontpage


திரைப்பட பாடலாசிரியர்

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியரும், திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவருமான ஏ.மருதகாசி (A. Marudakasi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

l திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் (1920) பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றார். அருணாச்சல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.

l கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் தேவி நாடக சபா நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்தார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு இசையமைத்து வந்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்குப் பாட்டு எழுதி வந்தார். பாடலாசிரியர் ராஜகோபால ஐயரிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

l திருச்சி லோகநாதன் மூலமாக 1949-ல் இவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாயாவதி’ படத்துக்காக ‘பெண் எனும் மாயப் பேயாம்’ என்ற பாடலுடன் தன் திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.

l 1950-ல் வந்த ‘பொன்முடி’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார். அனைத்தும் சூப்பர் ஹிட். பிறகு ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

l ‘அமரகவி’, ‘தூக்குத் தூக்கி’ திரைப்படப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்புகள் குவிந்தன. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே அனைத்து இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

l ‘எந்நாளும் வானிலே’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சத்தியமே லட்சியமாய்’, ‘சமரசம் உலாவும்’, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே’, ‘கடவுள் எனும் முதலாளி’, ‘வருவேன் நான் உனது’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘இன்று போய் நாளை வாராய்’, ‘மனுஷனை மனுஷன்’ என்பது உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாகாவரம் பெற்ற திரைப்பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

l தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்கள் எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழ்பெற்றவர். 250 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

l சக கலைஞர்களை மதித்துப் போற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போல கருதி பாசம் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவியை தன் அண்ணன் போலவும், குருவுக்கு சமமாகவும் மதித்தவர். ‘என் 2 ஆயிரம் பாடல்கள் கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது’ என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

l எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் அவரவருக்குப் பொருத்தமாகப் பாடல்களை எழுதினார். டி.எம்.சவுந்தரராஜனை சினிமாவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னை தாய்போல ஆதரித்தவர் மருதகாசி என்று குறிப்பிட்டுள்ளார் வாலி.

l தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடலாசிரியராகத் திகழ்ந்த ‘திரைக்கவித் திலகம்’ மருதகாசி, 69-வது வயதில் (1989) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Thursday, February 11, 2016

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

vikatan.com
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மோனிஷா தந்தையின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்குப்பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதோடு பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவிகள் பிரியங்கா, சரண்யா ஆகியோரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோனிஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டார் அவரது தந்தை தமிழரசன்.

தொடர்ந்து மோனிஷாவின் உடலை மீண்டும் மறுபரிசோதனை சென்னையில் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தமிழரசன். இதற்கு நீதிமன்றமும் சம்மதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மோனிஷாவின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில், "மோனிஷாவின் உடல் பரிசோதனையில் விழுப்புரத்துக்கும், சென்னைக்கும் உள்ள முடிவில் வித்தியாசங்கள் உள்ளன. அவர், தண்ணீரில் மூழ்கி சாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது கொலை என்றே கருதுகிறோம். அடுத்து, விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை அவரது பெற்றோரிடம் பெறவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விழுப்புரம் பிரேத பரிசோதனையில் 4 இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 15 இடங்களில் ரத்தக்காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக நீரில் மூழ்கி இறப்பவர்களின் வாயில் நுரை தள்ளும். ஆனால் கிணற்றிலிருந்து மோனிஷாவின் உடல் வெளியே எடுத்தவுடன் எடுத்த புகைப்படத்தில் அவரது வாயில் நுரையில்லை. எனவே அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மரணத்துக்கு முன்பு மோனிஷா தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடி இருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயை பொத்தியதற்கான அறிகுறிகள் முகத்தில் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது எதற்காக போராடினார் என்பது தெரியவில்லை. இன்னும் வரவுள்ள முடிவில் அதற்கான விடை தெரிந்து விடும். மேலும் இரண்டு மாணவிகளின் செல்போன் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை" என்றார்.

மோனிஷாவின் தந்தை தமிழரசன், "போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காகவே என்னுடைய மகள் உள்பட மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பள்ளி தாளாளர் வாசுகி பேசிய உரையாடலில் மூன்று மாணவிகளையும் கடுமையாக மிரட்டுவது தெரிகிறது. என்னிடம் 5 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி மோனிஷாவின் தமிழ், ஆங்கில கையெழுத்து, கல்வி சான்றிதழ்கள், சிடி உரையாடல் உள்ளிட்ட 25 ஆவணங்களை பெற்று சென்று இருக்கின்றனர். அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை இந்த வழக்கு முடிந்து தீர்ப்புக்கு பிறகே வாங்குவேன். அதுவரை வாங்குவதில்லை" என்றார்.

சரண்யாவின் தந்தை ஏழுமலை, "என்னுடைய மகளின் உடலையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே தெரியவரும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மோனிஷாவின் உடலில் சில பாகங்கள் இல்லாததால் அவருடைய சாவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால் சரண்யாவின் உடலில் எந்த பாகத்தையும் எடுக்கவில்லை. அதன் மூலம் இந்த வழக்கில் மறைந்துள்ள மர்மமுடிச்சுக்கள் அவிழ வாய்ப்புள்ளது. இதற்காகவே அவரது உடலை செய்யாறில் புதைத்தோம். மூன்று மாணவிகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். அநியாயமாக என்னுடைய மகளை கொன்று விட்டார்களே" என்றார்.

-எஸ்.மகேஷ்

படங்கள்: 
சொ. பாலசுப்ரமணியன்

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!


vikatan.com
செல்போன் வெடித்ததால் படுகாயம், உயிர் பலி என்கிற கவலைக்குரிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. இரு வாரங் களுக்கு முன்பு, சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த ஒருவர் இரவு நேரத்தில் செ​ல்போனை சார்ஜ் போட்டு​விட்டுத் தூங்கிவிட்டார். அதிகாலையில் அந்த செல்போன் வெடித்ததில், வீடே தீப்பிடித்தது. அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து, மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் செல்போன் வெடித்ததால் பள்ளி மாணவன் ஒருவனின் கண் பாதிக்கப்பட்டது.

செய்யூரைச் சேர்ந்த கூலித்தொ ழிலாளி எட்டியப்பன் - மனைவி வெண்ணிலா. இவர்களின் மூன்றாவது மகன் தனுஷ். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை தனுஷ் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, போன் வெடித்துச் சிதறியது. கண் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான் தனுஷ். வெண்ணிலாவிடம் பேசினோம்.
“போன வாரம் என் பையன் ஸ்கூல் போய்ட்டு வந்தான். நான் சமையல் செஞ்சிட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள விளையாடிட்டு இருந்தான். அப்போ, டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா கண், முகம், கை எல்லாம் ரத்தம். உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது செல்போன் வெடிச்சதுல, கண் பார்வை பறிபோய் இருக்குனு. எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. இங்கே ஆபரேஷன் பண்ணினாங்க. இப்போ, கொஞ்சம் பார்வை கிடைச்சிருக்கு. பழைய மாதிரியே கண்பார்வை வருமான்னு தெரியல” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் வஹிதாவிடம் பேசினோம். “பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பையனை இங்க கொண்டு வந்தாங்க. செல்போனை முகத்துக்கு நேர வைத்துப் பார்த்துட்டு இருக்கறப்போ போன் வெடிச்சதுல, அதன் துகள்கள் கண்ணுக்குள்ளே போயுள்ளன. அதனால பார்வை பறிபோய் இருக்கிறது. வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்தும், இடது கண்ணில் விழித்திரையும் கிழிந்தும் உள்ளன. முதற்கட்ட சிகிச்சையில், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றுக் கருவிழி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் அதில் லென்ஸ் பொருத்த முடியும். இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. அந்த அறுவைச்​சிகிச்சைக்குப் பிறகு, தனுஷுக்கு 4 முதல் 5 மீட்டர் வரை பார்வை கிடைத்துள்ளது. சார்ஜ் போட்டிருக்கும் போனைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன், “செல்போன் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சந்தைகளில் தரமில்லாத எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு அதுதான் முக்கியக் காரணம். சார்ஜரில் வோல்டேஜ் அதிகமாகும்போது, அதை முறைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விலை குறைவான சார்ஜர்களிலும், செல்போன்களிலும் இருப்பதில்லை. எனவே, அவை வெடித்துச் சிதறுகின்றன. எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்கிற அளவீடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சர்வதேச வரையறை உள்ளது. அப்படி எந்த முறையும் இந்தியாவில் இல்லை. அரசும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற விஷயங்களில் இனிமேலாவது அரசு கவனம் செலுத்தவேண்டும். தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்பு உணர்வும் மக்களுக்கு வரவேண்டும்’’ என்றார்.
இன்றைக்கு, பெரும்பாலானோர் கடைகளுக்குச் சென்று தரத்தை ஆராய்ந்து பொருட்கள் வாங்குவதில்லை. பேனா, மொபைல் என என்ன வாங்குவதாக இருந்தாலும், ஆன்லைன் ஷாப்பிங்தான். ‘குறைந்த விலையில் பவர் பேங்க்’ என்று முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்த ஒருவர், அந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார். சிறப்பான பேக்கிங்கில் பவர் பேங்க் வந்து சேர்ந்தது. பல மணிநேரம் சார்ஜ் போட்டுள்ளார். ஆனால், சார்ஜ் ஏறவே இல்லை. சந்தேகப்பட்டு பவர் பேங்க்கை உடைத்துப் பார்த்தபோது, அதில் 7 பேட்டரிகள் இருந்தன. அதில் ஒன்று மட்டுமே நிஜமான பேட்டரி. மற்றதெல்லாம் மண் நிரப்பட்ட கூடு. இணையத்தில் பொருள் வாங்குவது தவறல்ல. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெருள்தானா என்பதை உறுதிசெய்து அதை வாங்க வேண்டும். 

மொத்தத்தில், செல்போனில் எச்சரிக்கையாக இருங்கள்.

- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: ப.சரவணகுமார்

பொருளாதாரம்: இது பட்ஜெட்களின் காலம்

Return to frontpage

அம்மாவோ அப்பாவோ ‘‘செலவுக்கு வைச்சுக்க’’ என்று தருகிற பாக்கெட் மணிக்கு நீங்கள் பட்ஜெட் போட மாட்டீர்களா? ‘‘முதல்ல இதை வாங்கிக்கலாம். இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும். அப்புறமா அதை வாங்கலாம்” னு மனசுக்குள்ளே பட்ஜெட்டுக்கான ஒரு திட்டம் போட மாட்டீங்களா? அப்படித்தான் பல அம்மா, அப்பாக்களும் பட்ஜெட் போட்டு வாழ்கிறார்கள்!

அவர்களின் பட்ஜெட்களில் உங்களின் படிப்புகளுக்கான செலவுகள் முதல் இடத்தில் இருப்பது நீங்கள் அறிந்ததுதானே?

அதுபோலத்தான் இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மாநகராட்சிகள் உள்ளிட்ட பஞ்சாயத்து அரசாங்கங்களும் தங்களுக்கான பட்ஜெட்களைப் போட்டுச் செயல்படுகின்றன.

ஆமாம் ஆனா இல்லை

ஒரு குடும்பம் தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு கம்பெனி தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு நாடு தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருக்கலாம். அதே நேரத்தில் பலவிதமான வேற்றுமை களும் இருக்கவே செய்கின்றன.

ஒரு நிறுவனம் தனது ஒரு ஆண்டின் வரவையும் செலவுகளையும் ஒப்பிட்டுச் சமன் செய்து கணக்கை முடிப்பதுபோல ஒரு நாட்டின் பட்ஜெட் இருக்காது.

மத்தியப் பட்ஜெட்

மத்திய அரசை எடுத்துக்கொள்வோம். அது நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுக்குள்ளே சட்டம் ஒழுங்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது என்னும் பல முனைகளில் செயல்படுகிறது. இவற்றை எல்லாம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வெளிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் உள்நாட்டு பணமான ரூபாய் நோட்டுகள் பயன்படாது. வெளிநாட்டுப் பணம் எனப்படுகிற அந்நியச் செலாவணியும் தேவையாக இருக்கிறது.

மத்திய அரசு தனக்குத் தேவையான பணத்தை மக்களின் மீது விதிக்கப்படும் பல விதமான வரிகள், கட்டணங்கள், அரசு நிறுவனங்களின் வருமானம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமும் கடன்கள் வாங்குதல் என்ற முறைகளில் சேகரிக்கிறது.

ஏன் பட்ஜெட்?

இதையெல்லாம் தன்னிடம் வாங்கிக்கொள்கிற மத்திய அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரிச் செலவழித்துக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் பட்ஜெட் என்று ஒவ்வொரு வருடமும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகச் சமர்ப்பிக்க வேண்டும்? நிறைய பணம் வருகிற சில பணக்கார வீடுகளில் வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் தனியாகப் பட்ஜெட் போட்டு நேரத்தை வீணாகச் செலவு செய்ய மாட்டார்கள். அது மாதிரி வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டும் நினைக்கிற செலவைச் செய்துகொண்டும் அரசாங்கம் பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

அப்படி எல்லாம் ஒரு நாட்டால் செய்ய முடியாது.

ஒரு நாட்டில் வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு வரம்புக்குட்பட்டவைதான் என்பது முதல் காரணம். நாட்டின் வளங்களைச் செலவழித்துக்கொண்டே இருந்தால் அவை என்றோ ஒருநாளில் தீர்ந்துபோக வேண்டியவைதான். அப்படி நடந்துகொள்கிற நாடுகள் பொறுப்பில்லாத அரசுகளாகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவதாக, ஒரு அரசாங்கம் எப்படித் தனக்கான நிதியாதாரங்களை பயன்படுத்துகிறது என்பதும் எப்படிச் செலவழிக்கிறது என்பதும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் இறுதியில் அந்த நாட்டையும் பாதிக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, ஒவ்வொரு வருடமும் மக்களிடம் வெளிப்படையாகத் தனது வரவு செலவுகளைக் காண்பிக்க வேண்டும்.

இந்த இரண்டும் தார்மிகரீதியான காரணங்கள். இந்தியாவுக்கு மூன்றாகவதாக ஒரு காரணமும் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் இப்படிப் பட்ஜெட் போடுவதை ஒரு கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ளது.

அரசியல் கடமை

இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நாடு. நமது நாடாளு மன்றத்தை ஒரு அரசியல் சாசனம் வழிநடத்துகிறது. அந்த அரசியல் சாசனம் மத்திய அரசாங்கத்துக்குப் பல கடமைகளை நிர்ணயித்துள்ளது.

மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது வரவு செலவுகளையும் நாட்டின் வளங்களை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதையும் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாக அது நிர்ணயித்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தனது பட்ஜெட்டை நாடாளுமன்றம் முன்பாகச் சமர்ப்பிக்கிறது.

அரசியல் சாசனத்தில் 112, 265, 266 எனும் எண்களைக்கொண்ட சட்டக்கூறுகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் அனுமதி பெறாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவுகள் நடக்கக்கூடாது என்பதற்கான கடமைகளை நிர்ணயித்துள்ளன.

பட்ஜெட்டின் பகுதிகள்

ஏப்ரல் 1 முதலாக மார்ச் 31 வரையான காலம் நிதியாண்டு எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் செய்யக்கூடிய வரவு செலவுக்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் வாங்குவதற்காகத்தான் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது.

பட்ஜெட்டில் பொதுவாக இரண்டு பகுதிகள் இருக்கின்றன: செலவுகளுக்கான பட்ஜெட், வருமானங்களுக்காகப் பட்ஜெட். செலவுகளுக்கான பட்ஜெட்டில் அந்தச் செலவுகளின் மூலமாக வரும் வருமானங்கள் விவாதிக்கப்படலாம். வருமானங்களுக்கான பட்ஜெட்டில் வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய செலவினங்கள் பற்றிய விவாதங்களும் விவரங்களும் இருக்கலாம்.

அடுத்த நிதியாண்டில் எவ்வளவு பணத்தை எந்த எந்த விஷயங்களில் என்ன என்ன வகைகளில் செலவு செய்ய அரசு நினைக்கிறது என்பது பொதுவாக, செலவுகளுக்கான பட்ஜெட்டில் விளக்கமாகத் தரப்படும்.

அரசு தான் செலவு செய்ய நினைத்துள்ள பணம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பதையும் அந்தப் பணம் வரக்கூடிய நிதி ஆதாரங்களையும் என்னென்ன முறைகளில் சேகரிக்கப்போகிறது என்பது வருமானங்களுக்கான பட்ஜெட்டில் விளக்கப்படும்.

மாப்பிள்ளைத் தோழன்

மத்திய அரசின் பட்ஜெட் கல்யாண மாப்பிள்ளை என்றால் அதன் பக்கத்திலேயே மாப்பிள்ளைத் தோழன் போல ரயில்வே பட்ஜெட் வெளியாகிறது. இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மரபு. சில நாட்கள் இடைவெளியில் இரண்டு பட்ஜெட்களும் வெளியாகின்றன.

இந்தியாவின் இருப்புப் பாதைகளைச் சீரமைப்பதற்காக வில்லியம் அக்வொர்த் என்பவர் தலைமையில் 1920-ல் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி 1924-ல் இந்தியாவின் இருப்புப் பாதை வரவு-செலவு அரசின் பொதுநிலையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.

இந்தப் பழக்கம் இன்றும் சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப் படுகிறது. இப்போதும் ரயில்வே பட்ஜெட் தனியாகச் சமர்ப்பிக்கப் பட்டாலும் பொதுப் பட்ஜெட்டின் விவரங்களுக்குள் ரயில்வே பட்ஜெட்டின் விவரங்களைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

ஒரு சம்பிரதாயமாகத்தான் ரயில்வே பட்ஜெட் தனியாக வெளியாகிறது.

பட்ஜெட் போடுவது என்ன பெரிய இமயமலை ஏறும் சாதனையா? அதையே செய்ய முடிகிறபோது, இதையும் செய்ய உங்களாலும் முடியும்.

NEWS TODAY 29.01.2026