Tuesday, May 31, 2016

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

vikatan.com

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.


என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

'சீப் லேபர்' என்றால் என்ன?

இதற்கு அர்த்தம் தெரிந்தால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும். இது இந்திய மதிப்பில் 10,000 ரூபாயில் இருந்து 16,800 ரூபாய் வரை (இது ஒரு மணி நேர வேலைக்கு). ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதே வேலையை செய்ய, கல்லூரியில் டாப் ரேங்க் பெற்ற திறமைசாலியான இந்திய என்ஜினியர்களுக்கு 30 டாலர்கள் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். அப்படியானால் 170 டாலரில் 30 டாலர்கள் போனால் முதலாளியின் பாக்கெட்டிற்கு போவது 150 டாலர் (ஒரு மணி நேரத்துக்கு). இதுவே சுமார் 10,000 தொழிலாளிகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் மாத வருமானம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் கணிதத் திறனிடமே விட்டுவிடுகிறோம்.

சரி பணம் குறைவாக இருந்தால் என்ன, என்ஜினியரிங்குக்கு வேலை இருக்கிறதே?

'வேலை இருக்கு...ஆனால் இல்லை' என்ற ‘தெளிவான பதில்’தான் இதற்கு விடை. இங்கு 2 விஷயங்களை உற்று நோக்க வேண்டி இருக்கிறது

1) என்ஜினியர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், அவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கண்ணை துடைத்து பார்க்க வேண்டும். ஐடி சம்பந்தமான வேலைகளை 'பிராஜக்ட் கான்ட்ராக்ட்' எடுக்கிறார்கள். Analysis, Design, Development, Implementation and Evaluation என்ற ஐடி படிநிலைகளில், உடலுக்கு அதிக வேலை இருப்பதும், அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதும் நான்காவதாக செய்யப்படும் implementation-க்குதான். இங்கே implementation என்பது கிட்டத்தட்ட கொத்தனார் வேலைக்கு சமம். செங்கல்லை எடுக்க வேண்டியது, அதை அடுக்க வேண்டியது, சிமெண்ட் பூசவேண்டியது, மறுபடியும் செங்கல், சிமெண்ட்... அதாவது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது (Repeatable jobs). ஐடி கம்பெனிகளில் coding, testing எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான். ஆனால் என்ஜினியரிங் அறிவு தேவைப்படுவதோ மற்ற 4 படி நிலைகளுக்குத்தான். பெரும்பாலும் யாரோ ஒருவர் உருவாக்கிய பிராஜெக்டில் மாற்றங்களை மட்டும் சேர்க்கின்றனர். என்ஜினியர்கள் என்ற பெயரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தரலாம். ஆனால் என்ஜினியர்களின் திறமையை இங்கு முழுமையாக பயன்படுத்துவது இல்லை.



2) இரண்டாவது சிக்கல் ஆட்டோமேஷன். பெரும்பாலான தொழிற்சாலைகளை இன்று ரோபோக்கள்தான் இயக்குகின்றன. என்ஜினியர்களின் இடத்தை இவை ஆக்கிரமித்து விட்டன. ஒரு கார் கம்பெனியில் 5000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், 4500 பேர் இந்த அசெம்ப்ளி வேலையைத்தான் செய்வார்கள். இந்த அசெம்ப்ளி வேலைக்கு குறைந்த சம்பளத்தில், டிப்ளமோ அல்லது சில இடங்களில் +2 மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இங்கு என்ஜினியர்களுக்கான தேவை மிகக் குறைவு. அதிலும் அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்குள்ள என்ஜினியர்கள்தான் இங்கு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனவே மிகத் திறன் வாய்ந்த, சில எண்ணிக்கையிலான என்ஜினியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். அரசு பெரும் முயற்சி செய்து, பல பன்னாட்டு தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கச் செய்தால் கூட, ஆண்டுக்கு 2 லட்சம் என்ஜினியர்களை இவற்றில் பணியமர்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்.



திறன் வாய்ந்த என்ஜினியர்களை கல்லூரிகள் உருவாகின்றனவா?

எப்படி முடியும்? டாப் கல்லூரிகளில் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காண முடிகிறது. மற்ற கல்லூரிகளில் பி.இ படித்துவிட்டு வேறெங்கும் வேலை கிடைக்காததால், ஆசிரியர்களாக அடைக்கலம் தேடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எத்தகைய திறனைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே.

'100% பி்ளேஸ்மென்ட்' என்ற வார்த்தையை பெரிதாக போட்டுவிட்டு, ‘நோக்கி’ என்ற வார்த்தையை கண்ணுக்கு தெரியாதபடி அச்சிட்டு பேனர்கள் வைத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்தும் 'சீட்' நிரப்புவதில் அக்கறை கட்டும் கல்லூரிகள், மாணவர் திறன் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

இந்த காரணங்களை எல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் பொறியியல் படிப்பை வெறுப்பது நியாயமானதுதான்.



அப்படியனால் என்ஜினியரிங்க் படிக்கக் கூடாதா...?

எந்த படிப்பும் மோசமானது அல்ல. இன்றைக்கும் பொறியாளர்கள் தேவைப்படும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாட்டை செதுக்குவது பொறியாளர்கள்தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என்று மட்டும் இல்லாமல் வங்கி, மருத்துவம், சமூக உள்கட்டமைப்பு போன்ற சேவை பிரிவுகளிலும் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது.

என்ஜினியர்களுக்கென்று சில தனித் திறன்கள் இருக்கும். அவர்களுடய பகுப்பாய்வு மற்றும் காரணி அறிவு ( Analysis and Reasoning) அணுகும் திறன் ( Approachability), எண்கணித திறமை ( Numerical Ability), தர்க்க திறமை ( Logical) போன்ற திறன்கள்தான் மற்ற துறை மாணவர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். இத்திறன் கொண்ட மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்ல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

அதையும்தாண்டி இந்தியாவின் தற்போதைய புதிய ட்ரெண்ட், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள். ஒரு சின்ன ரூமில் 4 லேப்டாப்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கும் மாடர்ன் இந்திய இளைஞர்களுக்கான களம் இது. திறமைசாலிகளை வேலைக்கு எடுக்கும் அளவுக்கான 'நிதி பலம்' ஸ்டார்ட் அப்களிடம் இருக்காது. இங்கு உங்கள் திறன்தான் முதலீடு. இங்கு ஊழியரும் நீங்களே... சி.இ.ஓவும் நீங்களே. இந்தியா முழுவதும் புதுமையான பிஸ்னஸ் ஐடியாக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள். பெரியப் பெரிய நிறுவனங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களை, இந்த என்ஜினியர்கள் அசால்ட்டாக செய்து காட்டுகின்றனர். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவர்கள் மீது முதலீட்டை கொட்டுகின்றனர்.



பல லட்சம் சம்பளத்துக்கு வேலை கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த போதும் அவற்றை உதறிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு 30% ஐ.ஐ.டி மாணவர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். காரணம், ஸ்டார்ட்அப்களில் நீங்கள்தான் படைப்பாளி. உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. சொந்த முயற்சியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உங்கள் உழைப்புக்கான முழு கிரெடிட்ஸ் உங்களுக்கே. இவ்வளவையும் மீறி, 'நான் ஒரு படைப்பாளி' என்ற கர்வம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கர்வம், உங்களை மேலே தள்ளிக் கொண்டே இருக்கும். ஏனெனில் என்ஜினியர்கள் நல்ல படைப்பாளிகள், அடுத்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்காதவர்கள். எனவே தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப்கள் கை கொடுக்கும்.

மேலே கூறியவற்றை புரிந்து கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிக்க முடிவெடுத்தீர்களானால் ஆல் தி பெஸ்ட்.

- ஆரா ( மனிதவள மேம்பாட்டு வல்லுநர்), ரெ.சு.வெங்கடேஷ்

கோப்புகளை வீட்டில் பார்க்க உயரதிகாரிகளுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு



மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் டெல் லியின் நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ளது. இங்கு நிலவும் கடுமை யான பணிச்சுமை காரணமாக முக்கியக் கோப்புகளை அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பார்வையிட அனுமதிக் கப்பட்டிருந்தனர். இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்து கொண்ட அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அனுமதி தரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பான கோப்புகள் காணாமல்போய் மீட்க முடியாமல் போனதே இதற்கு காரணமாகும் . இத்துடன் உள்துறை சார்புச் செயலாளர் ஆனந்த் ஜோஷியை சில வாரங்களுக்கு முன் கைது செய்யவேண்டிய சூழல் உருவா னது மற்றொரு காரணம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகளை ஆனந்த் ஜோஷி தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்தார். அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்று வந்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்ச கத்துக்கு மத்திய உளவுத் துறை (ஐ.பி) ஓர் அறிக்கை அனுப்பி யுள்ளது. அதில் அளிக்கப்பட்டப் பரிந்துரையின் பேரில் கோப்புகளை வீடுகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போ து, “நார்த் பிளாக்கில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் கோப்புகள் உடனடியாக நகல் அல்லது ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுக்கப்பட்டு விடு கின்றன. இதன்மூலம், சம்பந்தப் பட்டவர்களுடன் பேரம் பேசி சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. இதை தடுக்க ஒரே வழி கோப்புகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மத்திய அரசு பதவியேற்று 2 ஆண்டு கள் நிறைவு கொண்டாட்டத்தில் உள் துறை அமைச்சகத் தின் கோப்புகளும் வரிசைப்படுத் தப்பட்டு வருகின்றன. இவற் றில் வேண்டாத கோப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனுடன் உளவுத்துறையின் பரிந்துரையும் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமின்றி, சிபிஐ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் தங்கள் வீடுகளுக்கு கோப்புகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 75 - முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!

எம்.ஜி.ஆருடன் கைகுலுக்குகிறார் திலீப் குமார். | ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆரின் அட்டகாச போஸ்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களின் பாடல்களில் இருந்து பத்து பாடல்களை பட்டியலிடுமாறு அவரது ரசிகர்களிடம் கூறினால், பெரும்பாலோர் முதலாவதாக குறிப்பிடுவது ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்…’ பாடலாகத்தான் இருக்கும். அந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் திலீப் குமார் நடிக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.!

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். அற்புதமாக நடித்திருப்பார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்…’ பாடலில் எம்.ஜி.ஆரின் சுறு சுறுப்பு வியக்க வைக்கும். சாட்டையை சுழற்றியபடி ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.

அதிலும் ஒரு காட்சியில் கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும். தரையில் சுழலும் எம்.ஜி.ஆர்., ஒரு கையை ஊன்றி, மறு கையை உயர்த்தி மேலே பார்த்தபடி கொடுக்கும் அந்த போஸ் அவருக்குத்தான் வரும். தெலுங்கில் என்.டி.ராமராவும் இந்தியில் திலீப் குமாரும் நடித்துள்ள இந்தப் பாடல் காட்சிகளைப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் எனர்ஜி லெவலே தனி என்பது புரியும்.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்து திலீப் குமாரை நாகிரெட்டி சந்தித்து பேசினார். திலீப் குமாருக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆரைத் தெரியும். சென்னையில் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அவரது படங்களை பார்த்து ரசித்திருக்கிறார். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘இன்ஸானியத்’ என்ற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார். அதில் திலீப் குமார், நடிகை பீனா ராய், நடிகர் ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

எஸ்.எஸ்.வாசனை பார்க்க இவர்கள் மூவரும் ஒருமுறை சென்னை வந்தனர். எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பதை வாசனிடம் திலீப் குமார் தெரிவித்தார். அதற்கு வாசன் ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் திலீப் குமார், பீனாராய், ஜெயந்த் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்து கவுரவித்தார்.

தான் பார்த்த எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து, தான் ரசித்த பல காட்சிகளை திலீப் குமார் குறிப்பிட்டு பாராட்டினார். தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், மும்பை (அப்போது பம்பாய்) போன்று இந்தியாவின் பிற நகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைக் கண்டு ‘‘எம்.ஜி.ஆருக்கு இருப்பதைப் போன்று வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இல்லை’’ என்றும் பாராட்டினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் எடுப்பது தொடர்பாக திலீப் குமாரை நாகிரெட்டி மும்பையில் சந்தித் துப் பேசியபோது, படத்தைப் பார்க்க திலீப் குமார் விருப்பப்பட்டார். அதற்கா கவே சென்னை வந்தார். குறிப்பிட்ட நாளில் வாஹினி ஸ்டுடியோவில் உள்ள சிறிய தியேட்டரில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் திரையிடப்பட்டது. நாகிரெட்டியின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் சென் றார். திலீப் குமாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பின்னர், ‘‘படம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால், நான் நடிக்க விரும்ப வில்லை’’ என்று திலீப் குமார் கூறிவிட்டார். ‘‘ஏன்?’’ என்று வியப்புடன் கேட்டார் நாகிரெட்டி.

‘‘எம்.ஜி.ஆர். இரண்டு பாத்திரங்களை யும் சிறப்பாக செய்திருக்கிறார். அது போல என்னால் முடியாது’’ என்றார் திலீப் குமார்.

அவரை அப்படியே அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் பெரிய நடிகர். இந்தியில் எவ்வளவோ சாதனை கள், பிரமாதமான படங்கள் பண்ணியிருக் கிறீர்கள். நீங்கள் இந்தப் படத்தை இந்தி யில் செய்தால் படம் பெரிய ‘ஹிட்’ ஆகும். ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் உங்கள் பாணியில் பண்ணுங்கள்’’ என்று கூறி உற்சாகப்படுத்தினார். பின்னர், இந்தி யில் திலீப் குமார் நடிக்க ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற அந்தப் படமும் வெற்றிகர மாக ஓடியது. அந்தப் படத்தில் திலீப் குமார் நடித்ததற்கு எம்.ஜி.ஆர். அவருக்கு அளித்த உற்சாகம்தான் காரணம்.

பின்னர், 1969-ம் ஆண்டு பொங்கல் நாளில் சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று திலீப் குமார் கலந்து கொண்டார். அப்போது ஒரு சுவையான சம்பவம்.

சிலை திறப்பு விழாவில் எஸ்.எஸ்.வாச னும் கலந்து கொண்டார். அவர் தீவிர காங்கிரஸ் அபிமானி. அவர் பேசும்போது, ‘‘கலைவாணர் சிலையை திறக்க இப் போதுதான் வேளை வந்துள்ளது’’ என் றார். இறுதியில் பேசிய அண்ணா, ‘‘சிலையை திறக்க இப்போதுதான் வேளை வந்திருப்பதாக வாசன் கூறு கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ள இந்த வேளையைத்தான் அவர் குறிப்பிடு கிறார்’’ என்று கூறி, உடல் நலம் குன்றிய அந்த நிலையிலும் நகைச்சுவை குன்றா மல் பேசினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.


முந்தைய தொடர்களை வாசிக்க: எம்ஜிஆர் 100

Saturday, May 28, 2016

ராணி தேனீயைக் காப்பாற்ற' காரை 24 மணி நேரம் துரத்திய தேனீக் கூட்டம்

காரை துரத்திய தேனீக்கூட்டம்.| படம்: டாம் மோசஸ் என்பாரின் பேஸ்புக்.

பிரிட்டனில் இயற்கைப் பூங்காவிலிருந்து தன் வீடு நோக்கி 65 வயது பெண்மணி ஒருவர் காரை ஓட்டிச் சென்ற போது சுமார் 20,000 தேனீக்கள் கொண்ட கூட்டம் அவரது காரின் பின்பகுதி கண்ணாடியில் குழுமியிருந்தது கண்டு பீதியடைந்தார்.

கரோல் ஹவர்த் என்ற இந்தப் பெண்மணி வெஸ்ட் வேல்ஸில் உள்ள ஒரு ஹேவர்ஃபோர்டுவெஸ்ட் டவுன் செண்டரில் காரை நிறுத்திய சிறிது நேரத்திற்கெல்லாம் காரின் பின்பகுதியில் பிரம்மாண்ட தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு திகைத்தார். 

பெம்புரோக்‌ஷயர் கடற்கரை தேசிய பூங்காவைச் சேர்ந்த டாம் மோசஸ் என்பவர் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பகுதியில் தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு அனைவரையும் எச்சரித்தார், ஏனெனில் பலர் அதற்குள் அந்தக் காரை படம் பிடிக்கத் தொடங்கியிருந்தனர். 

தேனீக்கள் கொல்லப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் டாம் மோசஸ் பெம்புரோக்‌ஷயர் தேனீ வளர்ப்புக் கழகத்தை அணுகி தேனீக்களைப் பாதுகாப்பாக கார்டுபோர்டு பெட்டியில் பிடிக்க உதவினார். 

இவற்றிற்கெல்லாம் பிறகு தனது காரை கரோல் ஹவர்த் வீட்டுக்கு ஓட்டிச் சென்றார், அதாவது பிரச்சினை முடிந்து விட்டது என்றே அவர் நினைத்தார். ஆனால் திங்கள் காலை மீண்டும் காரைப் பார்த்த போது மீண்டும் தேனீக் கூட்டம் அவரது காரின் பின்பகுதியை மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். 

அதன் பிறகு மீண்டும் தேனீ வளர்ப்புக் கழகத்தினரைத் தொடர்புகொண்டு அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்துச் செல்ல உதவினார்.

பொதுவாக தேனீக்கள் தங்கள் தலைமை ராணித்தேனீயின் வழிகாட்டுதலுடன் கூட்டமாகச் செல்லும் எனவே இம்முறையும் ராணித் தேனீயைப் பின்பற்றியே தேனீக்கூட்டம் வந்திருக்கும் என்று பலரும் நினைத்தனர், ஆனால் அம்மாதிரியான ராணித்தேனீ அங்கு எதுவும் இல்லை. 

ஆனால் ராணித் தேனீயும் இல்லாத போது இந்தக் கூட்டம் எப்படி காரில் வந்து குழுமியது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

'சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?'- மறந்துபோன மனப்பாடக் கல்வி!

''சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?''
-இப்படி யாராவது  என்னிடம் கேட்டால், உடனே என்னோட செல் நம்பரை ஒப்பிக்க முடியாது. என்னோட செல் நம்பர் மட்டுமல்ல..அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள்னு நெருக்கமானவர்கள் நம்பர் கூட நினைவில் இருப்பதில்லை. ஆனால், டெலிபோன் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில், வீடு, உறவினர்கள், நண்பர்கள், அரசு அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட 200 போன் நம்பர்களை மனப்பாடம் செய்துவைத்திருந்தேன். அதில் எஸ்.டி.டி.கோடும் அத்துப்படி.

சரி! விஷயத்துக்கு வருவோம்...
இன்றைய செல்போன் எண்களை எத்தனை முறை மனப்பாடம் செய்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?
எல்லாமே டெக்னாலஜிதான், வளர்ந்துவரும் டெக்னாலஜி நமது நினைவாற்றலை படிப்படியாக குறைத்துவருகிறது. மூளை செய்யவேண்டிய இது போன்ற பணிகளை மெமரி கார்டு செய்துவிடுகிறது. நாம் போன்செய்ய வேண்டிய நபரின் பெயரை 'டச்' செய்தாலே போதும் அடுத்த நொடியில் அவருடன் பேசமுடியும்.

ஒரு வேளை போன் ரிப்பேர் ஆனாலோ, தொலைந்துபோனாலோ நமதுபாடு அம்போதான். இப்படித்தான் ஒரு முறை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளைஞர் வேலை சம்பந்தமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு சந்திக்க வேண்டிய நபர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனது போனில் மட்டுமே பதிவு செய்திருந்தார்.

டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், தான் வந்ததை நண்பருக்கு தெரிவிக்க செல்போனை எடுத்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது செல்போன் முற்றிலும் செயல் இழந்து இருந்தது. டெல்லி நண்பர்களின் தொடர்பு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் செல்போன் எண் கூட நினைவில் இல்லை. தேவைப்படும் எண்களை அவர் துண்டு சீட்டில் கூட குறித்து வைக்கவில்லை. எல்லாமே போனில் பதிவாயிருக்கிறது என்கிற நம்பிக்கைதான்.
 
அந்த நம்பிக்கை அவரை நடுரோட்டில் அலைய விட்டது. ஏறத்தாழ பல மணிநேரம் அலைந்து திரிந்து விசாரித்து, ஒருவழியாக நண்பரின் வீட்டுக்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கு இவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? நண்பரின் தொடர்பு எண்ணை துண்டுச்சீட்டில் குறித்து, பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.

இது இவருக்கான அனுபவம் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். என்னதான் டெக்கனாலஜி நமக்கு  துணைபுரிந்தாலும் அது யோசிக்க தெரியாத ஓர் இயந்திரம்தான் என்பதை நினைவில் வைத்து, இனிமேலாவது, முக்கிய விஷயங்களை தலைமை செயலகமான நம் மூளையிலும் பதிவு செய்வோம்.

வெளிநாட்டு எம்.பி.பி.எஸ். படிப்பை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?....VIKATAN

வெளிநாடு சென்று கல்வி பெற விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.

எந்த வயதில் வெளிநாட்டில் படிக்கச் செல்லலாம்?

17 முதல் 21 வயது வரை உள்ளவர்கள், படிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டாம். காரணம், இந்த வயதில் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய பக்குவம் இருக்காது. மாணவர்களை வழிநடத்தக்கூடிய சரியான ஆட்களும் அங்கு இல்லை. நாம் 'தவறு’ எனச் சொல்வதை வெளிநாட்டினர் 'சரி’ என்பர். இதனால், ஏதேனும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆகவே முதுநிலை அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளைப் படிப்பதற்கு ஏற்ற வயதில் வெளிநாடு செல்வதே நல்லது. 

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது நல்லதா?
வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படுவது இல்லை என்பதால், அங்கு சென்று படிப்பதில் பெரிய அளவில் பயன் இல்லை. அங்கு படித்துவிட்டு வரும் மாணவர்கள் பலர், இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical council of India) நடத்தும் தேர்வில், குறைந்த விகிதத்திலேயே தேர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் அத்தகைய மாணவர்களில் பலருக்கு, நோயாளிகளைக் கையாளத் தெரிவது இல்லை. அதனால், அவர்களை இங்கு குறைந்த சம்பளத்திலேயே பணியில் அமர்த்துகிறார்கள். மேலும், வெளிநாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் பல, அதற்கான தகுதிகளுடன் இருப்பதில்லை. ஆகவே, வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கும் மோகத்தைத் தவிர்த்து, நம் நாட்டிலேயே மருத்துவப் பயிற்சி பெறுவது சிறப்பு. (இது, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மட்டும் பொருந்தும்.)

வெளிநாட்டுக் கல்லூரிகளில் பணம் செலுத்திப் படிக்கலாமா?

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி,  அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்கின்றன. போதுமான மதிப்பெண்கள் இருந்தால் முன்னணி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிடும். அந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் உரிய சலுகையும் வழங்கப்படும். மாறாக, மதிப்பெண்கள் குறைவாக இருக்கும்போது, ஒரு மாணவருக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் எதுவும் கிடைக்காது. அடுத்தடுத்த தரத்தில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கலாம். ஆனால், கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள தரமான பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால், அங்கு சென்று கட்டணம் செலுத்திப் படிப்பது வீண்தான். 

 
SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கான தகுதிகள் என்ன?

மாணவர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்து (Scholastic Aptitude Test ) SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். இதில் SAT - 1 தேர்வை எழுத, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி போதும். கணிதம், கிரிட்டிக்கல் ரீடிங், ஆங்கிலக் கட்டுரை போன்றவையே இந்த நுழைவுத்தேர்வின் வினாக்களாக இருக்கும். இதில் தேர்வானவர்கள் SAT - 2 நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள், SAT - 2 நுழைவுத்தேர்வை எழுதலாம். தேர்வு செய்யும் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். அதாவது கணிதம், வேதியியல் என எந்தத் துறையில் சேர விருப்பமோ, அந்தத் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்வானவர்கள் வெளிநாட்டில் ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணிதம், இசை, சட்டம் போன்ற நாம் தேர்வுசெய்யும் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். இந்த இரண்டு தகுதித்தேர்வுகளிலும் தேர்வாகும் மாணவர்கள்தான், வெளிநாட்டுக்குச் சென்று படிக்க முடியும். 

SAT தேர்வு, அனைத்து மெட்ரோ நகரங்களிலும் நடைபெறும். இந்தத் தேர்வை, இ.டி.எஸ் (Educational Testing Service) என்ற அமைப்பினர் நடத்துகின்றனர். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள், இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் இலவசமாக எழுதலாம். அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான மேலதிக தகவல்களை, ets.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

-பாசுமணி, கே.அபிநயா

ஆண்களை விட ஊதியத்தில் பெண்கள் திருப்தியாக உள்ளனர்



ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் மிக திருப்திகரமாக இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் சமீபத்தில் `இ ஒய் ரிவார்ட்ஸ் 2016’ என்ற ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் அதிக நன்மைகளை அடைகிறார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் நான்கில் ஒரு ஊழியர் நிறுவனங் கள் வழங்கும் வெகுமதிகள் குறித்து அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில் தெரியவந்திருப்பது: ஊதியத்தை பொறுத்தவரை 66 சதவீத பெண்கள் திருப்திகரமாக உள்ளனர். தங்கள் ஊதியம் குறித்து 50 சதவீதம் ஆண்களே திருப்திகரமாக இருக்கின்றனர்.

ஆண்கள் தங்கள் ஊதியத் திலேயே கவனம் செலுத்துவ தாகவும் ஆனால் பெண்கள் ஊதியத்தோடு மற்ற சலுகை களிலும் கவனம் செலுத்து வதாகவும் தெரிவிக்கிறது.

24 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனங்கள் வழங்கும் வெகுமதி குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர். 20 சதவீத ஊழியர்கள் வெகுமதி குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளனர். 65 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனம் வழங்கும் வெகுமதி குறித்து திருப்திகரமாக இருக்கின் றனர். அதிலும் குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகான ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைவாக இருக்கிறது, 30-35 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு சிறிது அதிகரிக்கிறது.

35-45 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைகிறது மேலும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வருமானம், மேனேஜர்களின் தரம் மற்றும் தலைமை பண்பு, நிறுவனத்தின் மதிப்பு, எளிதான நடைமுறைகள் ஆகிய காரணிகள்தான் வேலை செய்வதற்குரிய சிறந்த சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது என்று ஊழியர்கள் அந்த ஆய்வில் கூறியிருக்கின்றனர். மேலும் ஊழியர்கள் வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் வேலையில் முன்னேற்றத்திற்கும் முக்கியத் துவம் கொடுப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் உள்ள 12 நிறுவனங்களில் உள்ள 452 ஊழியர்கள், 128 நிறுவனர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

NEWS TO DAY 29.04.2026