Wednesday, June 8, 2016

ரகளை அமைச்சர்... ராஜினாமா செய்த பெண் டிஎஸ்பி... கையைப் பிசையும் கர்நாடக அரசு!

vikatan news
ர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயின் ராஜினாமா விவகாரம். கூடவே இன்று அனுபமா ஷெனாய் தன் முகநூல் பக்கத்தில்,  " நான் ராஜினாமா செய்து விட்டேன். நீ எப்ப ராஜினாமா செய்ய போகிறாய்?"  என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கிற்கு பகிரங்க சவால் விட்டிருப்பதால்,  பரபரப்பு இன்னும் அதிகமாக பற்றிக்கொண்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பதவியேற்றார். இப்பகுதியில் போலி மதுபான  கடைகளும், அங்கீகாரம் இல்லாத பார்களும் ஏராளமாக இருந்தன. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்  கடைகளை அதிரடியாக இழுத்து மூடி பரபரப்பை உண்டாக்கினார்.

இதுவிர  பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நேர்மையாகவும், திறம்படவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சமூக விரோதக் கும்பல்களின் அடாவடிகளை ஒழித்துக் கட்டி, நிழல் உலகத்தினருக்கு கிலியை ஏற்படுத்தினார். 

அமைச்சர் தலையீடு
இந்நிலையில் கடந்த ஜனவரியில், பொதுமக்கள் திரண்டு வந்து டி.எஸ்.பி. அனுபமாவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவில் , ‘‘ஹடல்கி நகர் பகுதியில், பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகே லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்தரருக்கு சொந்தமான பார் இருக்கிறது. இந்த பாரில் தினந்தோறும் குடித்து விட்டு குடிமகன்கள் பெரும் சத்தம் போடுகிறார்கள். இதனால் குழந்தைகள் படிக்க முடியவில்லை. அத்தோடு திடீர் திடீரென,எங்களின் வீடுகள் மீது கற்களால் தாக்குகிறார்கள். அதனால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், எங்களின் வீட்டில் இருக்கும் பெண்களின் கையைப்  பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். இதனால் நாங்கள் அச்சத்தின் பிடியில் தத்தளிக்கிறோம். குடிமகன்களின்  தொடரும் இந்தத் தொல்லைகளால் சமூக அமைதி சீரழிந்துவிட்டது. எனவே மதுபான பார் கடையை  அகற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கண்ணீர் கோரிக்கையைடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கினார் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய். பிரச்னைக்குரிய பார் இயங்கும் ஹடல்கி நகர் சென்று, அதிரடியாக பாரை இழுத்து மூடினார். அதற்கு லோக்கல் காங்கிரஸ் பிரமுகரான ரவீந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கை சந்தித்து முறையிட்டார். விசயத்தை கேள்விப்பட்டு கொதித்த அமைச்சர்,  ரவீந்தர் முன்பே, டி.எஸ்.பி. அனுபமா ஷெனாய்க்கு  போன் செய்திருக்கிறார். 

அனுபமா போனில் அமைச்சரின் அழைப்பு ரிங் வந்து கொண்டிருக்கும் போதே, தன் துறையை சார்ந்த உயர் அதிகாரியின் போன் அழைப்பும் வர, 10 நிமிடங்களுக்கு அமைச்சரின் அழைப்பை  வெயிட்டிங்கில் போட்டு விட்டு தன் துறை அதிகாரியிடம் பேசி இருக்கிறார்.  துறை அதிகாரியிடம் பேசி முடித்த பிறகு அமைச்சரின் அழைப்பை 'அட்டன்' செய்திருக்கிறார். இதனால் வெய்ட்டிங்கில் இருந்த அமைச்சர் பரமேஷ்வர் நாயக், கோபத்தில் சினிமா வில்லன் பாணியில் கடுமையாக மிரட்டியிருக்கிறார். 

ஆனால், அதற்கு அனுபமா சற்றும் பணிந்து போகாமல், " நான் செய்தது சரிதான். மக்கள் பணி செய்வதற்காகத்தான் இந்த துறைக்கு வந்தேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பார்க்கலாம்" என்று  சொல்லி,போன் இணைப்பைத் துண்டித்து இருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் பரமேஷ்வர் நாயக், அனுபமாவை 'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவிட்டார். கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது இந்த விவகாரம்.

அமைச்சரின் அடாவடித் தனத்திற்கு பொதுமக்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. உடனே அதில் மாநில அரசு தலையிட்டு, அனுபமாவின் இடமாற்றத்தை ரத்து செய்தது.  அதையடுத்து தொடர்ந்து ஆளும் அரசியல் கட்சியினரால் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய்க்கு டார்ச்சர் வந்து கொண்டே இருந்தது. 

ராஜினாமா

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் பவன் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு, ரவீந்தர் தன் பாரை விரிவாக்கம் செய்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்கல் தலித் அமைப்புகள் அனுபமாவை சந்தித்து புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதையடுத்து பார் உரிமையார் ரவீந்தரை அழைத்து, பாரை விரிவாக்கம் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் அனுபமா. ஆனார் ரவீந்தர் அந்த உத்தரவு நகலை கிழித்துப் போட்டு விட்டு, "விரிவாக்கம் செய்வேன். நீ செய்வதை செய்" என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுபமா, கடந்த சனிக்கிழமை (4.6.2016) பாரின் உரிமையாளர் ரவீந்தர் மற்றும் இருவரை கைது செய்து பெல்லாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது அங்கு வந்த சிலர் அனுபமாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரை அசிங்கமாகவும் ஆபாசமாகவும்  பேசியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த நிலையில், அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

இதுப்பற்றி மாவட்ட எஸ்.பி., சேத்தன், ‘‘அனுபமா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். ஹடல்கியில் உள்ள அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை, உரிமையாளர் ரவி விரிவுப்படுத்தி இருக்கிறார். அந்த பணி நடந்தால் அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையின் அகலம் குறையும் என்று சில தலித் தலைவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாரின் உரிமையாளர் ரவியை அழைத்து, பாரின் விரிவாக்கத்தை நிறுத்துமாறு டி.எஸ்.பி., உத்தரவிட்டார். ஆனால் பார் உரிமையாளர் ரவி அதைக் கேட்கவில்லை. இதையடுத்து ரவி மற்றும் 2 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்’’ என்றார். 

காவல்துறை அதிகாரிகளை மாற்ற அமைச்சர்களுக்கு  அதிகாரம் இல்லை...

‘‘இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது பல புகார்கள் குவிந்து வருகின்றன. போலீஸார் இடமாற்றத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் 45 பரிந்துரைகளை காவல்துறைக்கு கொடுத்து கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளார். டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடமாற்ற உத்தரவுக்கும் இவர்தான் காரணம். பிறகு பல தரப்பினரும் எதிர்ப்பு  தெரிவித்ததால் ரத்து செய்யப்பட்டது. 2013 ஜூன் முதல் 2015 ஜனவரி வரை தனக்கு தேவைப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பெல்லாரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். 

உதாரணமாக பெல்லாரி சிட்டி டி.எஸ்.பி., முருகநன்னவார் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளை  அங்கேயே பதவியில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 2014 ஜூன், 10ம் தேதி  பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலக டி.ஜி.பி., ஐ.ஜி.,க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு சி.ஐ.டி., டி.எஸ்.பி.,ரவிசங்கர் நாயக்கை பெல்லாரி மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை செய்து, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை காவல்துறை நிர்வாக வாரியம்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட அதிகாரமில்லை.’’ என்கிறார் ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் வினோத்.  

முதல்வர் ரியாக்‌ஷன்


முதல்வர் சித்தராமையா, ‘‘அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று கூறி உள்ளார். 

'நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை'

இதுபற்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட பெண் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினால் மட்டுமே மாநிலத்தில் அனுபமா ஷெனாய் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்படும். 

ஆனால் முதல்வர் சித்தராமையா நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத்  தெரியவில்லை. அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 'சட்டம் தனது கடமையை செய்யும்' என முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருப்பது பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக உள்ளது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது’’ என்று காட்டமாக கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கில் சவால் விட்ட அனுபமா

இந்நிலையில் ராஜினாமா செய்த டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,' நான் ராஜினாமா செய்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் நீ எப்பொழுது ராஜினாமா செய்யப் போகிறாய்?' என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளது கர்நாடகம்  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்றும், " முதல்வர் சித்தராமையா 'ரம் ராஜ்ஜியம்' நடத்திக்கொண்டிருப்பதாக அனுபமா தனது ஃபேஸ்புக் பதவில் குற்றம் சாட்டி இருந்தார்.
 அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக தாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக தமக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனுபமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் அது இன்னும் கூடுதலான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என தயங்கிக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.  

என்று தீரும் காவல்துறையில் அரசியல் தலையீடு? 

-வீ.கே.ரமேஷ்

'டிஸ்லெக்‌ஸியா' மாணவர்கள்... ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

'உங்க பொண்ணு/ பையன் எழுதுறதல அவளோ மிஸ்டேக் வருது... இதுக்கு மேல இவனுக்கு எப்படி சொல்லி கொடுக்கிறதுன்னே புரியல...!" என்று குறைபட்டுக் கொள்ளும் ஆசிரியர்களால் நொறுங்கிப்போவது பெற்றோர்களும் மாணவர்களும்தான்.
இதில் ஆசிரியர்களுடைய எண்ணங்கள், அணுகுமுறைதான் மாற வேண்டும்" என்கிறார் சேலத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் அண்ட் லேர்னிங் சென்டர் (Helikx Open School and Learning Centre) என்னும் பள்ளியை நடத்திவரும் செந்தில்குமார்.

'' சிறு வயதில் மெதுவாகக் கற்கும் பிரச்னை எனக்கே இருந்தது. பள்ளிப் பாடங்களை எழுதும்போது எக்கச்சக்கமான எழுத்துப் பிழை வரும். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு உட்கார்ந்து படிக்க முடியாது. இந்த மாதிரி பல சிரமங்களுடன்தான் நான் வளர்ந்தேன். பத்தாம் வகுப்பில் எனக்கு 37 மார்க் போட்ட ஆசிரியரைத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அந்த மார்க் எனக்கு கிடைக்காமல் போயிருந்தால், நான் என்ன ஆயிருப்பேன் என்று எனக்கே தெரியாது.
பிறகு கோவை பி.எஸ்.ஜி.யில் சோஷியல் ஒர்க் படித்தபோது, பள்ளிகளில் திரும்பத் திரும்ப ஃபெயில் ஆக்கப்படும் மாணவர்கள் மீது என் கவனம் குவிந்தது. 'ஏன் சில மாணவர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன, என்ன செய்தால் அவர்களை இந்தச் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற முடியும்?' என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் இருந்தபோதும், இது தொடர்பான அரசுக் கொள்கைகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தேன்.
அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே சரியாகத்தான் இருந்தன. வழக்கம் போல அவற்றை செயல்படுத்துவத்தில்தான் பல விதமான பிரச்னைகள். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்கள் பற்றிய அறிவியல்பூர்வமான விஷயங்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும். அடுத்த முக்கிய மாற்றம், பெற்றோர்களிடம் ஏற்பட வேண்டும். இது மாதிரி பிரச்னை உள்ள குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் வெறுத்து ஒதுக்கக் கூடாது.
 

ஒரு மாணவன் பள்ளியில் மெதுவாக கற்கும் பிரச்னையினால் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது பரம்பரைப் பழக்கமாக வரலாம். சிலர் பிறந்தபின் காலதாமதமாக பேசத் தொடங்கி இருக்கலாம் அல்லது நடக்கத் தொடங்கி இருக்கலாம். வீட்டிலோ, பள்ளியிலோ, கற்பிக்கும் சூழலிலோ ஏதாவது குறை இருந்தாலும் இது மாதிரியான பிரச்னை வரலாம்.
நமது பள்ளிகளில் ஐ.க்யூ ( IQ)  அடிப்படையில் குழந்தைகளைப் பிரிக்கிறார்கள். பொதுவாக, 75 - 89 வரை ஐ.க்யூ இருப்பவர்கள் 'ஸ்லோ லேனர்' என்று சொல்லப்படுகிற மெதுவாக கற்கும் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், 90-க்கு மேலே, சராசரி கற்றல் திறன் கொண்டவர்கள் என்றாலும் இவர்களில் சிலருக்கு சரியாக படிக்க வராது. தப்பும் தவறுமாக எழுதுவார்கள். படித்ததை மறந்துவிடுவார்கள். இந்தக் குறைபாடு கொண்டவர்கள்தான்  'டிஸ்லெக்ஸியா' பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள்.  

இந்த வகை மாணவர்களை அடித்துப் படிக்க வைப்பதைவிட, இவர்களுக்கு எப்படி சொல்லித் தரவேண்டும் என்பதை புரிந்துகொண்டு கற்றுக் கொடுத்தால் தீர்ந்தது பிரச்னை. எனவே, இது மாதிரியான பிரச்னை கொண்ட மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, நாங்கள் மாற்று முறை பயிற்சித் திட்டத்தை (Remedial teaching) பின்பற்றி வருகிறோம். 

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'cat' என்றால் 'கேட்' என்று நம்மில் பலரும் படிப்போம். ஆனால், டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட மாணவர்கள் இதனை 'காட்' என்று படிப்பார்கள். இவர்களுக்கு ஒலி அடிப்படையில் இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.
தவிர, இது மாதிரி உள்ள குழந்தைகளை எப்போதும் படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாது. படிப்பு தவிர, உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி பல வேலைகளைக் கற்றுத் தரவேண்டும். நாங்கள் நடத்தும் பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் கற்றுத் தருகிறோம். வித்தியாசமாக படம் வரையக் கற்றுத் தருகிறோம். கம்ப்யூட்டரில் அனிமேஷன் படங்களை வரையவும் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 10-வது படித்தபின் அவர்கள் வெறும் படிப்பை மட்டுமே நம்பி காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்க மாட்டார்கள். 
 

மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை சேலத்தில் நாங்கள் நடத்துகிறோம். இது மாதிரியான மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள்,  இந்த வகை மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுத் தர ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய நகரங்களில் மையங்களை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் பல நகரங்களில் இது மாதிரியான பிரச்னை கொண்ட குழந்தைகள் நிறைய இருப்பதால், ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த பயிற்சி அவசியம்.
மெதுவாக கற்பது ஒரு பிரச்னையே அல்ல. நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற விதத்தில் அணுகினால், இதனை எளிதாகத் தீர்க்கலாம். இதனால் குழந்தைகளை தேவை இல்லாமல் வாட்டி வதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது'' என்றார் செந்தில்குமார்.
டிஸ்லெக்ஸியா பற்றிய போதுமான விழிப்பு உணர்வு நம் மக்களிடம் இல்லை . மூளை வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கும், நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்படவைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாடான டிஸ்லெக்ஸியாவுக்கும் உள்ள வேறுபாட்டை, முதலில் பெற்றோர்களும்  ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக குழந்தைகள் ஒதுக்கப்படும் நிலையை இனியாவது தவிர்ப்போம்!

பஸ் டிரைவர் ஓட்டம்: பயணிகள் தவிப்பு

DINAMALAR

திருமங்கலம்:திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. துாத்துக்குடி நடுவீர்பட்டி டிரைவர் கோமதிநாயகம், 42, பஸ்சை ஓட்டினார்.பஸ்சில், எட்டு பெண்கள், இரு குழந்தைகள், இன்ஜினியரிங் கவுன்சிலுக்கு செல்லும் மாணவர்கள் என, 32 பேர் இருந்தனர். கோவில்பட்டியில் ரோட்டோரம்,15 நிமிடங்கள் பஸ்சை நிறுத்திய டிரைவர், பஸ்சிலேயே மது அருந்தினார். அதிர்ச்சியுற்ற பயணிகள் டிரைவரிடம், 'பஸ்சை ஓட்டக் கூடாது' என்றனர்.

''பயப்படாதீங்க... சரக்கு அடிச்சா ஸ்டெடியா ஓட்டுவேன்,'' எனக் கூறி, டிரைவர் பஸ்சை ஓட்டியுள்ளார். தொடர்ந்து, பயணிகள் சத்தமிட, கிளீனரிடம் பஸ்சை ஓட்டும்படி டிரைவர் கூறியுள்ளார். பயந்த பயணிகள், தொடர்ந்து பஸ்சை நிறுத்த கோரி கூச்சல் போட்டுள்ளனர். பின், கோமதிநாயகம் ஓட்டியுள்ளார்.

இரவு, 11:00 மணிக்கு கப்பலுார் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது பஸ் உரசியதில், கண்ணாடி உடைந்தது. பயணிகள் கோமதி நாயகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

முழு போதையில் இருந்த அவர், எதிரே வந்த தங்கள் நிறுவன வேனை நிறுத்தி, அதில் ஏறி தப்பி விட்டார். கிளீனரும் தப்பிவிட, பயணிகள், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு

பயணிகள் சென்றனர்.

Tuesday, June 7, 2016

அமெரிக்க பல்கலை.யில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!


நியூயார்க்: அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் 25 இந்திய மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கென்டக்கி மாகாணம், பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில், இந்தியாவைச் சேர்ந்த 60 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் முதல் பருவ தேர்வுகள் நடைபெற்றது. இதில், இந்திய மாணவர்கள் 25 பேர் பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மாணவர்கள் 25 பேரையும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் திட்டத்தின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறுகையில், ''முதல் பருவ தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை. ஆனால், இந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் உதவி செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியவில்லை. இது அமெரிக்க இளநிலை பட்டதாரிகளுக்கான படிப்பில் சேர அடிப்படை விதியாகும்.

இந்த மாணவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியாமல் சென்றால் எனது துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்களை தொடர அனுமதி அளிக்க முடியாமல் இருக்கிறோம்'' என்றார்.

டாக்டரின் உயிரை பறித்த 'வழுக்கை'..! வினையாகிப் போன விளம்பரம்


மனிதனை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்களை குறி வைக்கும் சில அழகு நிலையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து வழுக்கை தலைக்கு சொந்தகாரர்களை கவருகின்றன. இதனால் ஏமாந்தவர்கள் பலர். அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்த வேலூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், முடி வளர ஆசைப்பட்டு உயிரையே விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த சந்தோஷ்குமார், பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தலையில் வழுக்கை விழ, எல்லோரைப் போல அவரும் மனம் வருந்தினார். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தின் விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று தன்னுடைய வருத்தத்தை சொல்ல.. 'இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தலையில் முடியை நட்டி பழைய சந்தோஷ்குமாராக மாற்றி விடுகிறோம்' என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த மே மாதம் சந்தோஷ்குமார் அங்கு சென்றார்.

முடி நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமாருக்கு தலைசுற்றல், மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகு நிலைமை மோசமானதும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சந்தோஷ்குமார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து சந்தோஷ்குமாரின் பெற்றோர், மகனுக்கு இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் குடும்பம் தரப்பில் யாரும் போலீசுக்கு புகார் கொடுக்கவில்லை. இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் செய்யப்பட்டது. உடனடியாக களமிறங்கியது மருத்துவ கவுன்சில். இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாக்டர் செந்திலிடம் கேட்ட போது, "மயக்க மருந்து கொடுத்து விட்டு கடைசி வரை நோயாளியின் அருகில் இருக்காமல் சென்ற மயக்கவியல் டாக்டருக்கும், அறுவை சிகிச்சை தகுதி பெறும் முன்பே சிகிச்சை அளித்தது எப்படி? என்பது பற்றி டாக்டர் வினித்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் மற்றும் சலூன், முடிவெட்டவும், அழகு கலைக்காகவும் அனுமதி பெற்றுள்ளது. முடி நடும் சிகிச்சைக்கு அனுமதி பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. முடி நடுவதற்காக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை நம்பி பலர் ஏமாந்து செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அழகு நிலையங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிடம் புகார் கொடுக்கலாம்" என்றனர்.

எஸ்.மகேஷ்

தன்னை உயர்த்த அடுத்தவரை தாழ்த்தலாமா?

DINAMANI

By இரா. சோமசுந்தரம்

பிகார் மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்ற முதல் 14 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, உண்மையாகவே அந்த கேள்விகளுக்கு அவர்கள்தான் விடையளித்தார்களா என்பதைக் கண்டறிந்துள்ளது அம்மாநில கல்வித் துறை.
 இதற்குக் காரணம், அந்த மாணவ, மாணவிகளிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி கண்ட போது, அடிப்படையான கேள்விகளுக்கும்கூட அவர்கள் தப்பான பதில்களை அளித்ததாக ஒளிபரப்பாகி, பிகார் மாநிலத்தின் கல்வித்துறையை கேலிக்கு இடமாக்கியுள்ளது என்பதுதான். இருப்பினும், பிகார் மாநில கல்வித் துறை இவ்வளவு அவசர அவசரமாக, அவர்களுக்குத் தேர்வு நடத்தும் முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களைக்கூட இவ்வாறு திடீரென கேமிரா முன்பாக நிறுத்திவைத்து, கேள்விகள் கேட்டால், அந்த மாணவ, மாணவியர் பதற்றமாகிவிடுவார்கள். அவர்களால் சரியாக பதில்சொல்ல முடியாது. 
 ஆங்கிலத்தில் 100 மதிப்பெண் வாங்கிய மாணவரிடம் ஒரு வடநாட்டு தொலைக்காட்சி நிறுவனம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அவரால் அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். 
 அந்தக் கேள்விக்கு ஆங்கிலத்திலேயே "பொளந்துகட்ட' வேண்டும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் எதிர்பார்த்தால், அவ்வாறு நடக்கவில்லை என்பதற்காக அந்த மாணவரைத் தரம் தாழ்த்தினால், அதை நாம் அனுமதிப்போமா?
 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் பலருக்கு விடையை மனப்பாடமாக எழுத மட்டுமே தெரியும். அவர்களிடம் பதிலைச் சொல்லும்படி சொன்னால் திணறிப் போவார்கள். கோர்வையாக எடுத்துவைக்கத் தெரியாது. 
 ஏனென்றால், அவர்களது பயிற்சி முழுதும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான கேள்விக்கு ஒரே மாதிரியான விடைகளை எழுதிக்கொண்டே இருப்பதுதான். கேள்வியை கண்கள் பார்க்கும், விடையை கைகள் எழுதும். மூளைக்கு அங்கே வேலையே இல்லை. மதிப்பெண் பெறுவதற்காக விடைகளை எழுத மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. 
 பெங்களூருவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி) ஒரு பள்ளியில் சிறுவர்களுக்காக தான் எழுதிய கதையை வாசித்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்து, உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்று கூறினான். ஆசிரியர்களின் மழுப்பல்களை மீறி, அந்தச் சிறுவனிடம் அவர், ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டார். 
 பேசியதில் அந்தச் சிறுவன் பள்ளி நாடகத்தில் ஏற்றஇறக்கத்துடன் பேசிப் பழகியிருந்ததை அறிந்துகொண்டு, "என் கதையைப் படிக்க முடியுமா?" என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் கதையை வாசித்தான்; சுதா மூர்த்தியைவிட மிக அழகாக! "அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எழுத மட்டுமே எனக்குத் தெரியும்!' என்று கட்டுரையை முடிக்கிறார் சுதா மூர்த்தி.
 இன்றைய கல்விச் சூழலில் பல மாணவ, மாணவியருக்கு எழுத மட்டுமே தெரியும். அவர்களை குறுக்குக்கேள்வி கேட்டு, மடக்குவது எளிது. அதை புத்திசாலித்தனமான அராஜகம் அல்லது அறிவீனம் என்று எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பிகாரில் குறை கூறப்பட்டுள்ள இந்த ஏழு மாணவ, மாணவியரும் ஒரே இடத்தில் தேர்வு எழுதியவர்கள் அல்லர். அவர்களும்கூட கேள்விக்கு, இயந்திரத்தனமாக, புரிதல் இல்லாமல் பதில் எழுதியவர்களாக இருக்கலாம்.
 ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ஒரு மாநிலத்தின் கல்வித் தரத்தை சோதிப்பதாக இருந்தால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் பட்டியலை எடுத்து, அந்த மாணவர்கள் இப்போது என்னவானார்கள்? அவர்கள் உயர் கல்வியில் தேர்ச்சி பெற முடிந்ததா? 
 அதே அறிவுத்திறத்துடன் கல்லூரிகளைவிட்டு வெளியேறி, பேரும் புகழும் மிக்கவர்களாக அறிவுலகில் இயங்குகிறார்களா என்பதை தேடிச் சென்று, மதிப்பீடு செய்வதுதான் சரியாக இருக்க முடியும். அதுதான் கல்வித் துறையின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதாக அமையும். அதைவிடுத்து, மாணவ - மாணவியரை கேள்வி கேட்டு, அவர்களை அறிவு இல்லாதவர்களாக சித்திரிப்பது முறையற்ற செயல்.
 காப்பியடித்தல், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல், வேறுநபர் தேர்வு எழுதுதல் எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது என்றாலும், இத்தகைய பேட்டி வெளியானவுடன், பிகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் அந்த மாணவ, மாணவியர் படித்த பள்ளியில் அவர்களது காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை எடுத்துப் பார்த்து ஒப்பீடு செய்திருக்கலாம். அப்பள்ளியின் மற்ற மாணவர்களிடம் அவர் உண்மையாகவே வகுப்பறையில் சிறந்து விளங்கினாரா என்று விசாரித்திருக்கலாம். அதைவிடுத்து, மறுதேர்வு நடத்தியது தவறான முன்னுதாரணம். 
 நாடு முழுவதும் கற்பித்தல் முறை, மதிப்பிடும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; ஒரு மாணவர் ஒரேயொரு தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே அவருடைய கல்வித்திறனாக மதிக்கப்படும் நிலை மாற வேண்டும் என்பது உண்மை. 
 மேலும், ஒரு கல்வியாண்டில் இரு பருவம் அல்லது மூன்று பருவத் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டு மதிப்பிடவாகிலும் செய்யலாம். தற்போதைய கல்வி நடைமுறைகள் சரியில்லை என்பதற்காக, தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதை இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டியதில்லை.
 கல்வித் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவது மட்டுமே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தால், பாராட்டலாம். டி.ஆர்.பி. ரேட்டிங்கை (தொலைக்காட்சி தரப் புள்ளியை) உயர்த்திக்கொள்வதற்காக இப்படியா?

எதிர்கால முதியவர்களுக்கு...


சுதந்திர இந்தியா சாதித்துள்ள எத்தனையோ விஷயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆயுள் நீட்டிப்பு ஆகும். 1960-களில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 42 ஆண்டுகளாக இருந்ததென்றும், அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது சுமார் 66 ஆண்டுகளைத் தொட்டிருப்பதாகவும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
மருத்துவ வசதிகளின் பெருக்கம், மருத்துவமனைகளின் பரவல், தீவிரத் தொற்று நோய் ஒழிப்பு இயக்கங்கள், ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகிய பல காரணிகளால் ஓர் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள் இந்த அளவுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி! நீட்டிக்கப்பட்டிருக்கும் அந்த ஆயுள் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகை செய்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே அதற்கான விடையாக இருக்கும்.
இரண்டில் ஒரு முதியவர் ஆதரவின்றி இருப்பதாகவும், மூன்றில் ஒரு முதியவர் வசைச் சொற்களுக்கு ஆளாவதாகவும், நான்கில் ஒரு முதியவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கள் மகன்-மருமகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் வசைச்சொல் கேட்பவர்களாகவும் இருப்பதாக இன்னோர் ஆய்வுத்தரவு எடுத்துக் கூறுகிறது.
கண்பார்வைக் கோளாறு, மூட்டுவலி இல்லாத முதியோரைப் பார்ப்பதே அரிது எனலாம். உழைக்கும் வலிமையின்றி, வருமானமும் வறண்டு போன நிலையில் இருக்கும் முதிய வயதினரை அவர்களது குடும்பத்தினர்களே சுமையாகக் கருதும் காலம் இது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருப்பது ஒன்றே இன்றைய இந்தியக் குடும்பங்களில் முதியோர் பெறும் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் 33 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன என்றால், நாடு முழுவதும் எத்தனை முதியோர் இல்லங்கள் இருக்கக் கூடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வருமானம் ஏதுமில்லாத முதியோர்கள் மட்டும்தான் புறக்கணிப்புக்கு ஆளாவதாகக் கூறிவிடவும் முடியாது. சொத்து சுகம், ஓய்வூதியம் போன்றவற்றைப் பெற்றிருக்கின்ற முதியோர்களும்கூட இத்தகைய புறக்கணிப்பிறகு ஆளாகின்றனர்.
ஓய்வூதியமும் சுமார் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, புதிய தலைமுறை மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகை நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பழைய ஓய்வூதியம் தொடர வேண்டுமென்ற கோரிக்கையே இப்போது அரசு ஊழியர்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கையாகிவிட்டது. நிதிச்சுமையைக் காரணம் காட்டி ஓய்வூதியக் குறைப்பு அல்லது தவிர்ப்பு என்ற நிலைமையை நோக்கியே மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகளும் பயணிக்கின்றன.
நான் நீண்ட காலமாக வழிபடச் செல்லும் ஒரு கோயிலின் வாசலில் சுமார் 70 வயதுள்ள, படிப்பு வாசனை உள்ளவர்போல் தோற்றமுள்ள ஒரு பெண்மணி பிச்சை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஓரிரண்டு நாள்கள் மட்டும் பிச்சை எடுக்க அந்தப் பெண்மணி வருவதில்லை. ஏன் என்று விசாரித்ததில், கிடைத்த தகவல் அதிர வைத்தது.
உண்மையில் அந்தப் பெண்மணி ஓர் ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவருடைய ஒரே அருமை மகன், மாதத்தின் முதலிரண்டு நாள்கள் மட்டும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாடு போட்டு, அவரது ஓய்வூதியப் பணத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு, பிறகு அந்தக் கோயிலின் வாசலில் மறுபடியும் பிச்சை எடுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விட்டுவிடுகிறானாம்.
இன்னொரு காட்சி, கோயமுத்தூரைச் சேர்ந்த 77 வயது முதியவர். இவர் ஓர் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அனைவரும் திருமணமானவர்கள். பெற்றெடுத்த செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன் தம்முடைய மனைவியுடன் தனியே வசித்து வந்தார் அந்த முதியவர்.
சில மாதங்களுக்கு முன்பு மனைவியும் காலமாகி விட்டார். முதுமையின் காரணமாகத் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில், தம்முடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளை அழைத்து, தன்னை அவர்களுடன் வைத்துக் கொள்ளும்படிக் கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரது பராமரிப்புக்கு வேண்டிய பணம் அவரது ஓய்வூதியம் மூலமாகவே கிடைத்துவிடும்.
ஆனாலும், அவரை ஏற்க மறுத்த அவருடைய வாரிசுகள், அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேரும்படிக் கூறிவிட்டு அவரவர் வீடு திரும்பியிருக்கிறார்கள். மன உளைச்சலில் இருந்த அந்த முதியவர் சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஓய்வூதியம் என்ற பாதுகாப்பு இருந்தும் மேற்படி பெண்மணிக்கும், முதியவருக்கும் உறவினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதே இங்கு அறிய வேண்டியது.
இவை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதுதான் என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் வயது முதிர்ந்தவர்களை வேண்டாத பாரமாகக் கருதும் போக்கு முன்னெப்போதையும்விட அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. இதைத்தவிர, இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைய இளம் பிராயத்தினர் அனைவரும் முதுமையை அடைந்தே தீர வேண்டும். இன்றைய முதியவர்களுக்கு நேர்வதைத்தான், இன்றைய இளைஞர்கள் தங்களது முதுமைப் பிராயத்தில் சந்திக்கவேண்டி இருக்கும்.
தங்களது எதிர்கால நலத்துக்காக அதாவது சுயநலத்துக்காகவேனும் தங்களைப் பெற்றவர்களைக் கைவிடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் வாரிசுகள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எஸ். ஸ்ரீதுரை

NEWS TODAY 31.01.2026