Monday, September 12, 2016

Posted Date : 22:29 (09/09/2016)


#iphone7

: ஆப்பிள் எடுத்த முடிவு சரிதானா?


ஆப்பிளின் புதிய ஐபோன்களோடு, சில சர்ச்சைகளும், சிக்கல்களும் சேர்ந்தே வெளியாகியிருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களில் “ஹெட்போன் ஜாக்” எனப்படும் பாடல் கேட்பதற்கான வொயரை சொருகும் 3.5 மிமீ போர்ட்டை நீக்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வயர்லெஸ் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் வகையில் “ஏர்பாட்ஸ்” என்னும் வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் இருக்கின்றன. ஆப்பிள் செய்தது சரிதானா?
இதற்கு ஆப்பிள் சொல்லும் காரணம் என்ன?

ஐபோன்களிலிருந்து ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் தகவலை அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லேர் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது “கடைசியாக இருப்பது ஒரே வார்த்தைதான்: நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலம் முன்னேறி, நம்மை முன்னேற்றிடும் புதிய விஷயங்களை செய்வதே அது” என்றார். நூறு வருடங்களுக்கும் மேலான, ஆடியோ ஜாக் எல்லாம் பழசு. இனி எல்லாம் வயர்லஸ்தான். அதற்கு இதுவே முதல்படி எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
1. "ஒவ்வொரு வருடமும் மக்கள் புதுப்புது சிறப்பம்சங்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் ஐபோன்களின் வடிவமைப்பு, வாட்டர் ப்ரூப், சிறந்த பேட்டரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக ஹெட்போன் ஜாக்கை நீக்கியுள்ளோம்"
2. மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது இதுபோன்ற கருத்துக்கள் சகஜம்தான் எனக்கூறும் ஆப்பிள், இன்னும் சில வருடங்களில் மக்களிடையே நாம் ஏன் இத்தனை வருடமாக வயர்லெஸ் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுமென்றும் சவால்விடுகிறது.



இனி பழைய “ஹெட் போன்களை” ஐபோனில் பயன்படுத்த வழியே இல்லையா?

உங்களின் பழைய ஹெட்போன்களையும் புதிய ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்சில் பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக இல்லாமல் அதற்குரிய “அடாப்டர்” மூலம் லைட்னிங் போர்ட் எனப்படும் நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் பகுதியில் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த அடாப்டர், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வாங்கும்போது இலவசமாக வழங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆடியோ ஜாக்கை நீக்கியதால் ஏற்படும் பிரச்சனைகள்:



நமது பழைய ஹெட் போன்களை பயன்படுத்தி பாடல் கேட்க வேண்டுமென்றால் நம்மிடம் எப்போதும் அந்த அடாப்டர் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் பலபேர் மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாடல் கேட்பது வழக்கம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அடாப்டர் இணைக்கப்பட்டிருப்பது நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் “லைட்னிங் போர்ட்” ஆகும். எனவே ஒரே சமயத்தில் பாடல் கேட்டுக்கொண்டே மொபைலை சார்ஜ் ஏற்றுவது சாத்தியமில்லை. ஆடியோ ஜாக்கை நீக்கியதற்காக ஆப்பிள் நிறுவனம் சொல்லும் காரணங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடியோ ஜாக்கோடும், ஐபோனை விட சிறந்த பேட்டரி திறனும், வாட்டர் ப்ரூப் உள்ள மொபைல்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை.


மேலும் நாம் பயன்படுத்தும் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களில் அத்தியாவசமான தேவை என்று நாம் நினைக்கும் வசதிகளை ஆப்பிள் நீக்குவது இது முதல் முறையல்ல. அவ்வாறு ஆப்பிள் நீக்கியவற்றில் முக்கியமான விஷயங்களை கீழே காணலாம்.



பிளாப்பி டிஸ்க்:

1976 முதல் 1998 வரை பிளாப்பி டிஸ்க் என்னும் கணினிகளுக்குக்கிடையே தகவல் பரிமாற உதவும் முக்கியமான வழி. அப்போது பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அதில் அதிகபட்சம் 1.4 எம்பி தகவல்களை மட்டுமே சேமிக்க முடியும் என்பது வேறு கதை. ஆனால் 1998-ம் ஆண்டு ஆப்பிளின் ஐமேக் ஜி-3 என்னும் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிளாப்பி டிஸ்க் நீக்கப்பட்டு நாம் தற்போது பயன்படுத்தும் யூஎஸ்பி சேர்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் யூஎஸ்பிக்கு அதுவே தொடக்கம்.

டிவிடி டிரைவ் :

இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் டிவிடிக்களை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்புக் லேப்டாப்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கிவிட்டனர். குறைந்து வரும் டிவிடி பயன்பாடு, அதிகரித்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு மற்றும் கணினியின் வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக டிவிடி டிரைவ் நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது.


இப்போதும் கூட, "ஆப்பிள் எடுக்கும் இதுபோன்ற அதிரடி முடிவுகளால்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறது. இதுதான் ஆப்பிளின் ஸ்டைலே!" என்கிறது ஒரு க்ரூப். "அப்படி இயர்போன் போர்ட்டை நீக்கும் அளவுக்கு, அப்படி என்ன அதில் குறை இருந்தது?" என்கிறது ஒரு க்ரூப். இது ஆப்பிளின் துணிச்சலா? சறுக்கலா? வழக்கம் போலவே, காலத்தின் கையில்தான் விடை இருக்கிறது!

- ஜெ.சாய்ராம்,
(மாணவப் பத்திரிகையாளர்)
நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

பாரதி’ என்ற பெயர் சொல்லும் போதே மீசை முளைக்கும் உணர்வு உண்டாகிறதல்லவா? மகாகவி பாரதியாரின் 95-வது நினைவுதினம் இன்று . 'பாரதி' என்று இயற்பெயர் வைக்கப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் தன் பெயரையே பாரதி என்று மாற்றி வைத்துக் கொண்டோ அல்லது பாரதி என்கிற பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்களையும் பார்க்க முடிகிறது. இந்த வீரக்கவிஞனின் பெயரை சேர்த்துக் கொண்ட பிரபலங்கள் தங்கள் பெயர்க்கதையை சொல்கிறார்கள் இங்கே!



இயக்குநர் பாரதிராஜா:
எனது சகோதரி பாரதியின் பெயரையும், சகோதரர் ஜெயராஜ் பெயரில் இருந்து ராஜாவையும் சேர்த்து 'பாரதிராஜா' என பெயரை வைத்துக்கொண்டேன். பாரதியாரின் கவிதைகளும் போராட்ட குணங்களும் எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.



கவிஞர் பழநிபாரதி:
என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.



பாரதி பாஸ்கர்:
மலைமகளைக் குறிக்கும் வகையில் 'ஹேமா' என பெரிய அக்காவிற்கும், அலைமகளைக் குறிக்கும் வகையில் 'மஹாலட்சுமி' என சின்ன அக்காவிற்கு, கலைமகளை குறிக்கும் வகையில் 'பாரதி' என எனக்கும் பெற்றோர் பெயர் வைத்தார்கள். பாரதியார் மீது அதிக பற்றுக்கொண்டிருந்தார், என் அம்மா. அதனாலேயோ அல்லது 'பாரதி' என பெயர் வைத்து மறைமுகமாக கல்வி, கலைகளில் நான் திறமைமிக்கவளாக வளர வேண்டும் என நினைத்தும், மறைமுக கட்டையாகவும் அன்போடும், நம்பிக்கையோடும் பெற்றோர் எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

வாழ்வின் மிக கொடிய துயரங்களையும், மிகத்தூய்மையான வறுமையையும், சந்தோஷங்களையும் சந்தித்துள்ளார், பாரதியார். ஆனால், எந்த சூழலிலும் அறமற்ற செயல்களுக்கு தன்னை சமரசம் செய்துகொள்ளாமல், அஞ்சாமல், நேர்மையான வழியில், போராளியாகவே வாழ்ந்துள்ளார். குறிப்பாக சகோதரி நிவேதிதாவை சந்தித்த தருணத்தில், 'உங்களில் பெரும்பாலானோர் மனைவிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு, நீங்கள் சுதந்திரத்திற்காக போராடினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது' என அவர் கூறிய வார்த்தைகள்தான் பாரதியின் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. அதன் பின்னர்தான் முழுமூச்சாக பெண்களுக்காக நேரடியாகவும், தன் படைப்புகளின் வாயிலாகவும் போராடியதுடன், தன் மனைவி செல்லம்மாவை தலை நிமிர்ந்து நடக்கவும், தைரியமாக வாழவும் ஊக்கம் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் எழுந்ததும் முதலில்,
'இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!' என்ற பாரதியின் பாடலை வாசித்துவிட்டுதான் அடுத்த செயல்பாட்டைத் தொடங்குவேன்.



பாரதி கிருஷ்ணகுமார்:
பாரதிதான் என் வாழ்வின் ஆதர்ஷம்; ஆசான். என்னுடைய இத்தனை வருட மேடைப் பேச்சுகளில் ஒன்றில்கூட பாரதியின் வரியை, பாரதியின் வாழ்வைக் குறிப்பிடாமல் அந்தப் பேச்சினை முடித்தது இல்லை. இந்த இயலாமையை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். 1989 அல்லது 90 என்று நினைக்கிறேன். பாரதி விழாவில் குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பாரதியைப் பற்றி பேசினேன். பாரதியின் கவிதை வரிகளுக்கு நான் கூறிய விளக்கங்களைக் கேட்ட அடிகளார், 'இனி பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைக்கலாமே' என்றார். என் பேச்சுக்கான அங்கீகாரமாக நான் உணர்ந்தாலும், மிகப் பெரிய ஆளுமையை என் பெயரோடு சேர்த்துக்கொள்வதற்கு தயங்கினேன். ஆனால் எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோவில் பட்டி, சாத்தூர் நண்பர்கள், கலை இரவுக்கு பேச அழைக்கும்போது பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைப்பிதழில் குறிப்பிட்டனர். அப்போதும் எனக்குள் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. பிறகு சினிமாவில் பணிபுரியும்போது, ஏற்கனவே கிருஷ்ணகுமார் எனும் பெயரில் இயக்குநர் இருந்ததால் டைட்டிலில், ஏதேனும் புனைப்பெயர் வைக்க, ஆலோசனை தந்தார்கள். ஆனால் பெற்றோர்கள் வைத்த என் பெயரை மாற்ற விருப்பம் இல்லாததால் பாரதி கிருஷ்ணகுமார் என்று வர சம்மதித்தேன். அப்போதும் தயக்கம் விடைபெறவில்லை. கிட்டத்தட்ட ஆறாண்டுக்கால உழைப்பில் பாரதியார் பற்றி 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி' என்ற நூலை எழுதிய பிறகே தயக்கம் நீங்கி பெருமிதம் கொண்டேன்.
இதிலுமா போலி?

போலி சான்று, போலி ஆசிரியர், போலி டாக்டர், போலி பல்கலைக்கழகம் வரிசையில் இப்போது போலி வங்கி நடத்தியதாக தர்மபுரியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கும்பல், நாமக்கல்லிலும் போலி வங்கி நடத்தி ரூ.50 லட்சத்துக்கு மேல் சுருட்டியுள்ளனர்.நல்லவேளை 6 மாதத்திற்குள் பிடிபட்டதால் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்னர் பல பெயர்களில் பன்னாட்டு வங்கிகள் வருகை அதிகரித்தது. தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் 50 ஆயிரத்துக்கு மேல் நாடு முழுவதும் செயல்படுகிறது. தடுக்கி விழுந்தால் ஒரு வங்கி என்ற நிலை உருவாகி விட்டது. போதாக்குறைக்கு கடன் கொடுப்பதாக கூறி, வீட்டு வாசலிலேயே வங்கி ஊழியர்கள் தவம் கிடக்கும் நிலையில் சாதாரண மக்களுக்கு போலி, நிஜத்தை கண்டறிவதில் குழப்பம் இருப்பது இயற்கை. ஆனால் போலி வங்கி நடத்திய விவகாரம் அரசு துறையின் அதிகாரிகளுக்கே தெரியாமல் போனது தான் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுவாக ஒரு முன்னணி வங்கி நிறுவனம் கூடுதலாக ஒரு கிளையை ஏதாவது ஒரு கிராமத்தில் தொடங்குவதாக இருந்தாலும் அதை முறைப்படி ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தி அனுமதி பெறவேண்டும். அதோடு உள்ளூரில் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து அனுமதி போன்றவையும் கட்டாயம். ஆனால் தர்மபுரியில் கலெக்டர் அலுவலகத்தின் அருகிலேயே 6 மாதங்களாக போலி வங்கி செயல்பட்டது. உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் முதல் அருகிலேயே செயல்பட்ட போட்டி வங்கி நிர்வாகத்தை கூட ஏறெடுத்து பார்க்காதது தான் விந்தையிலும் விந்தை. எல்லா சட்டமும் தெரிந்தவர்களுக்கே போலி வங்கி நடத்தப்பட்ட விவகாரம் தெரியாதபோது, அப்பாவி மக்களை நொந்து கொள்வதில் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.

போலிகள் விஷயத்தில் பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் எந்த ரூபத்திலும் வரக்கூடும். சமீபகாலங்களில் அடுத்தவர் வங்கி கணக்குகளில் இருந்து இணையங்களை பயன்படுத்தியும், போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் திருடும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அதன் மற்றொரு ரூபம் தான் போலி வங்கி கலாச்சாரம். புற்றீசல் போல் பெருகி வரும் தனியார் வங்கிகள் குறித்த விழிப்புணர்வு அப்பாவி மக்களுக்கு குறைவு என்பது தான் மோசடி கும்பலுக்கு சாதகமான அம்சம். மேலும் அதன் பின்னணி குறித்த விஷயங்களை அறிந்து கொண்டு பணத்தை முதலீடு செய்வது அவசியம். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கவே செய்வர். ஏமாறாமல் இருப்பது நமக்கு உத்தமம்.
விபரீத காதல்

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் இளம் பெண்கள் வெட்டிக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நுங்கம்பாக்கம் இன்ஜினியர் சுவாதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்திலே வெட்டிசாய்க்கப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் மக்கள் மனதைவிட்டு அகலாத நிலையில் ஒருதலைக் காதலுக்காக விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, தற்போது விருத்தாசலம் புஷ்பலதா என கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 பெண்கள் விலை மதிக்க முடியாத தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்காவிட்டால் ஆசிட் வீசி அவளது முக அழகை கெடுக்கும் கொடூர செயல்களில்தான் கடந்த காலங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒரு படி மேலே போய் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வெட்டி சாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்யும் கலாசாரம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

காதலுக்காக தாடி வைப்பதும் தற்கொலை செய்துகொண்டதும் பழங்கதையாகிவிட்டது. தற்போது பழி உணர்வுதான் மேலோங்கி வருகிறது. இளைஞர்களின் இந்த கொடூர போக்கிற்கு சினிமா மற்றும் சமூக ஊடகங்களும் ஒரு காரணமாகிவிட்டது. தங்களது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். பெண்களுடைய ஆசாபாசங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஒருதலைக் காதலில் ஈடுபடும் இளைஞர்கள் கண்டிப்பாக மாற வேண்டும். அதுதான் தமிழ் சமூகத்துக்கு பெருமையை தேடித்தரும். இதுவரை நடந்த நான்கு பலி சம்பவங்கள் மூலம் தாழ்ந்து போய்க்ெகாண்டிருக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தளம் புதிது: அல்ஜீப்ரா விதிகள்


கணித மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இணையதளங்கள் வரிசையில் வருகிறது ‘அல்ஜீப்ரா ரூல்ஸ்' இணையதளம். அல்ஜீப்ரா பாடத்தில் பயிற்சி பெறுவதற்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாகப் பல‌ தளங்களும் இருக்கின்றன என்றாலும், இந்தத் தளம் மிகவும் விஷேசமானது.

அல்ஜீப்ரா பாடத்துக்குத் தேவையான அடிப்படையான விதிகளை மட்டும் இந்தத் தளம் பட்டியலிடுகிறது. அடிப்படை விதிகள் அவற்றுக்கான உதாரணத்துடன் விளக்கப்பட்டிருப்பதுடன், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் தன்மைக்கேற்ப அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விதியாக சங்கிலித் தொடர் போல எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

அல்ஜீப்ராவில் படிப்ப‌வர்களுக்கு மட்டுமல்ல அல்ஜீப்ரா என்றால் எட்டிக்காயாக நினைப்பவர்களுக்கும்கூட இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி:http://algebrarules.com/index.php

சிங்குர் தரும் படிப்பினைகள்...


THE HINDU

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் (ரூ. 1 லட்சம் விலை) ஆலை அமைக்க மாநில அரசு காட்டிய 6 இடங்களில் டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்தது சிங்குரைத்தான். அப்போது மேற்கு வங்க முதல்வராயிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு டாடா மோட்டார்ஸுக்கு 997 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

விவசாய நிலமாக இருந்ததை தொழிற்சாலை கட்டுவதற்காக ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா பானர்ஜி.

2008-ம் ஆண்டு சிங்குர் ஆலையிலிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வரும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆலைப் பணிகள் ஏறக்குறைய 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவேயில்லை. இதையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிங்குர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் இந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்வதாக அக்டோபர் 7-ம் தேதி அறிவித்தார்.

சிங்குரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறியபோதிலும் நிலம் டாடா மோட்டார்ஸ் வசமே இருந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண் டும் என மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த நிலம் தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இழுபறியாக நீடித்து வந்த இந்த வழக்கு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அளவிடும் பணியை மாநில அரசு தொடங்கிவிட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும், மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஆலைக்கென டாடா நிறுவனம் ரூ. 1,400 கோடி வரை முதலீடு செய்துள்ளது. டாடா நானோ உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 13 நிறுவனங்கள் முழுமையாக தங்களது ஆலையை இங்கு அமைத்திருந்தன. 17 நிறுவனங்களின் ஆலைகள் பல்வேறு கட்ட நிலையில் இருந்தன. அவை அனைத்தும் குஜராத்துக்கு இடம்பெயர்ந்தன. உதிரிபாக தயாரிப்பாளர்கள் மட்டும் ரூ.338 கோடி முதலீடு செய்திருந்தனர். அவை அனைத்தும் அப்படியே பாதியில் முடங்கியது.

நிலத்தை திரும்ப ஒப்படைப்பதால் டாடா நிறுவனத்துக்கு நிலத்துக்கு அளித்த தொகை திரும்பக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அந்தத் தொகை நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டுக்கு நிவாரணமாக அமையாது.

இந்தியாவில் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில பல பகுதிகளில் ஆலைகள் அமைக்கவும் நிலங்கள் வாங்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு எங்குமே பிரச்சினை ஏற்பட்டது கிடையாது. இது போன்ற எதிர்ப்பும் உருவானது கிடையாது.

விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி வாங்கினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிங்குர் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அதே சமயத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு தவறான சமிக்ஞையை தோற்றுவிக்கவும் வாய்ப்புள்ளது.

சிங்குர் வழக்கு அரசியல்வாதி யான மம்தாவுக்கு பெரும் வெற்றியாக இருக்கலாம், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பின்னடைவாக இருக்க லாம். ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் அரசிடம் தெளி வில்லை என்பதையே இது காட்டு கிறது. அதே நேரத்தில் விவசாயத்தை அழித்து தொழிற்சாலை உருவாவதை ஏற்க முடியாது என்பதையும் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

Sunday, September 11, 2016


விமானத்தில் தனியே உலகம் சுற்றிய இளைஞர்

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த அந்த 18 வயது இளைஞரின் பெயர், லக்லான் ஸ்மார்ட். இவர், தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார்.

அதன்படி, ஆஸ்திரேலியாவின் மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை 24–ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார் ஸ்மார்ட்.

15 நாடுகளைச் சேர்ந்த 24 இடங்களுக்கு தனது சிறிய விமானத்தில் பறந்து சென்ற அவர், சமீபத்தில் தனது தாய்நாடு திரும்பினார். அப்போது ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்மார்ட், 18 வயது, 7 மாதம், 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக அதிக நாடுகளுக்கு விமானத்தில் பறந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரை ஸ்மார்ட் முந்திவிட்டார்.

இவர், 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 2 மாதங்களில் கடந்து இச்சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி லக்லான் ஸ்மார்ட், தான் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தத் தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாதது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பறந்தபோது தனது ‘திரில்லிங்’ அனுபவம் பற்றி ஸ்மார்ட் கூறும்போது, இந்தோனேசியா அருகே சென்று கொண்டிருந்தபோது தொலைத்தொடர்பு தகவல் சரியாகக் கிடைக்காததால் விமானம் மலை மீது மோதவிருந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்றார்.

சோதனைகளைக் கடந்துதானே சாதனை படைக்கணும்!

NEWS TODAY 23.12.2025