Monday, July 9, 2018

தலையங்கம்

'வாட்ஸ்-அப்'-க்கு கட்டுப்பாடு






தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போன் கண்டுபிடிப்பு ஒரு மறுமலர்ச்சியாகும்.

ஜூலை 09 2018, 03:00

செல்போன் பயன்பாட்டில் உலகமே உங்கள் கையில் என்ற வகையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பேசுவதற்கும், கேட்பதற்கும், குறுஞ்செய்தி அனுப்பவும் மட்டுமல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் செல்போன் இருந்தால்போதும். ரெயில்–விமான டிக்கெட்களையே செல்போனில் பதிவுசெய்து, அதையே பயணத்தின்போது காட்டிவிடலாம். இப்போது அடையாள அட்டையைக்கூட டிஜிட்டல் அடையாள அட்டையாக காட்டினால்போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாக செல்போன் மூலம்தான் இருக்கிறது. குறிப்பாக ‘வாட்ஸ்–அப்’ செய்தி மூலம் உலகம் முழுவதிலும் தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

‘வாட்ஸ்–அப்’ பயன்பாடு என்பது ஒரு கத்தி போன்றது. மருத்துவர் கையில் இருக்கும் கத்தி உயிரை காப்பாற்றவும், கொலைகாரன் கையில் இருக்கும் கத்தி உயிரை பறிப்பதுபோலவும் பயன்படுத்தப்படுவதுபோல, ‘வாட்ஸ்–அப்’பில் அறிவாற்றலைப் பெருக்க தகவல்கள் பரிமாறும் நல்ல பயன்பாடும் இருக்கிறது. அதே நேரத்தில் பொய்யும், புரட்டும் பரப்பவும், தவறான தகவல்களை பரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தவறாக அனுப்பப்படும் ‘வாட்ஸ்–அப்’ செய்திகளால் வன்முறையும் வெடிக்கிறது. ஒருவரை இழிவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே பழிசொற்களை அள்ளிவீசவும் ‘வாட்ஸ்–அப்’ பயன்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது கூட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் ‘வாட்ஸ்–அப்’பில் பரப்பப்பட்டன. இந்த நிலையில், இவ்வாறு பரப்பப்படும் பொய் செய்திகளை தடைசெய்ய ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் கடும் கண்டன குரலை தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், இப்போது சில நடவடிக்கைகளை ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் எடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த மாதிரி புகார்கள் வந்திருப்பதால் சில சோதனைகளை மேற்கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு குரூப்பில் உள்ளவர்களுக்கு ஏதாவது தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டால், அதில் உள்ளவர்களே அதை டைப் செய்து பதிவு செய்கிறார்களா? அல்லது இன்னொருவரிடம் இருந்து வரும் ‘பார்வர்டு’ செய்தியா? என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு ‘லேபிள்’ அதில் அடையாள குறியாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பலநேரங்களில் இது ‘பார்வர்டு’ செய்தி என்று தெரியாமல், அதை அனுப்பியவர்கள் செய்தி என்று அனுமானித்துக்கொண்டு நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ள சோதனை நடந்துவருகிறது.

அடுத்து ஏதாவது குரூப்பில் உள்ளவர்கள் வெளியே வந்தபிறகு, மீண்டும் அந்த குரூப்பில் சேரமுடியாத அளவு இப்போது சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எனக்கும், அந்த குரூப்புக்கும் சம்பந்தமே இல்லை என்றும் புகார் தெரிவிக்கலாம். தேவைப்படாத செய்திகள் பலநேரங்களில் வருகிறது. நாம் அதை விரும்புவதும் இல்லை. இதுபோன்ற செய்திகளை தடுக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக யார் அந்த செய்தியை அனுப்பினார்கள்? என்பதை கண்டுபிடிக்கவும் சில சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது எல்லாமே சோதனை அடிப்படையில்தான் இருக்கிறது. விரைவில் சோதனைகளை முடித்துக்கொண்டு ‘வாட்ஸ்–அப்’ செய்தி என்றால் உண்மையான செய்தியாகத்தான் இருக்கும். பொய் செய்திகளை பரப்பவே முடியாது என்ற நிலையை உருவாக்க, ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசாங்கமும் அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் மருத்துவர்கள் 3 ஆண்டுகள் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு



முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு மருத்துவர்கள், கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பதிவு: ஜூலை 09, 2018 05:00 AM

சென்னை,

முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு மருத்துவர்கள், கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 4 ஆயிரத்து 529 பேர் பட்டம் பெற்றனர்.

பட்டமேற்படிப்பு மாணவ, மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வழங்கி, துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பேசியதாவது:-

10 கோடி பேர்

மக்கள் நலனை பேணுவதில் தமிழகம் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மருத்துவக்கல்வியில் உயர்ந்த தரத்தை கடைபிடிப்பதிலும் அதைத்தொடர்ந்து மேற்கொள்வதிலும் பெரிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் விளங்குகிறது.

அண்மையில் கிடைத்த தகவலின்படி இந்தியாவில் 479 மருத்துவக்கல்லூரிகளில் 227 கல்லூரிகளை அரசும், 252 கல்லூரிகளை தனியாரும் நடத்துகின்றனர். அவற்றில் ஆண்டுதோறும் 67 ஆயிரத்து 532 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும் 31 ஆயிரத்து 415 பேர் முதுநிலை மருத்துவ படிப்புகளிலும் சேருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ’ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பயன் அடைவார்கள். ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் மதிப்பில் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.

கிராமங்களில் 3 ஆண்டுகள்

மருத்துவத்துறையில் இருப்போர் மற்ற சேவைத்தொழிலில் உள்ளவர்களை விட மாறுதலானவர்கள். நோயாளிகள் அவர்களை கடவுளாக பார்க்கிறார்கள். எனவே பொறுப்பை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும்.

பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 53 குழந்தைகள் 5 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. போதிய உயரமின்மை, சத்துக்குறைபாடு ஆகியவை இன்னும் நீடிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. ஒவ்வொரு மருத்துவரும் சிறந்த மருத்துவராக மாற வேண்டும். மருத்துவர்களுக்கு முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கப்பதக்கம்

மருத்துவ பட்ட மேற்படிப்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படித்த ஜி.சைலேந்திரி, தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர் சமீர் இருவரும் 3 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றனர். அதேபோன்று தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்ற எம்.உஷா நந்தினி 4 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும் பெற்றார். அதேபோல் பி.சர்மிளா 1 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றார். மொத்தம் 164 தங்கம், வெள்ளி பதக்கங்களை 127 பேர் பெற்றனர்.

விழாவில் அமைச்சர் டாக்டர். சரோஜா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி வரவேற்று பேசினார்.

Sunday, July 8, 2018


பொறியியல் கல்வி அவலத்தின் பேசப்படாத பக்கம்!: உதவிப் பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகியிருக்கிறது


Published : 06 Jul 2018 09:28 IST

முகம்மது ரியாஸ்

 


லட்சக்கணக்கில் செலவழித்துப் பொறியியல் படித்த இளைஞர்களில் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்துவரும் சூழலில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் யாராலும் கவனிக்கப்படுவதில்லை. தரமற்ற கல்வியும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம் ஏற்படுத்தியிருக்கும் இரண்டு முக்கிய விளைவுகள். இதில், உதவிப் பேராசிரியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மிகக் குறைந்த சம்பளம், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாய நிலை என்று பல்வேறு பிரச்சினைகளுடன் உழன்றுவருகிறார்கள் உதவிப் பேராசிரியர்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வரையறையின்படி, உதவிப் பேராசிரி யருக்கு அடிப்படை ஊதியம் (15,900 - 39,000), சராசரி தர ஊதியம் (6,000) மற்றும் கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.45,360 முதல் வழங்கப்படுகிறது. சில முன்னணி தனியார் பொறியல் கல்லூரிகளிலும் மட்டும்தான் இந்த அளவிலான ஊதியம் வழங்கப்படு கிறது. பல தனியார் கல்லூரிகள் இதைப் பின்பற்றுவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முறையான சம்பளம் இல்லை

கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி போன்றவை கல்லூரிகளுக்கேற்ப வேறுபடக்கூடும் என்றாலும், 80% தனியார் கல்லூரிகள் முறையான ஊதியம் வழங்கு வதில்லை. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக உதவிப் பேராசிரியராகச் சேருபவருக்கு ரூ.12,000 - ரூ.15,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்குக் கூடுதலாக ரூ.1,000 வழங்கப் படும். ஆண்டு ஊதிய உயர்வெல்லாம் கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கும் தனியார் கல்லூரிகள் அதிகம். உதவிப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சார்பாகத் தலா ஐந்து மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் மூன்று மாதங்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படுமென்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனால், ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில், பள்ளிகளின் வாயிலில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்கு உதவிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பல தனியார் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. சம்பளத் தொகையை மிச்சம்பிடிப்பதற்காக, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அக்கல்லூரிகள் குறைத்திருக்கின்றன. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்கு வரும் சமயங்களில் இதை மறைக்க ஒரு தந்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகலைப் பொறியியல் பட்டதாரிகளை அன்றைய ஒரு தினத்துக்கு மட்டும் கல்லூரிக்கு வரச்செய்து, அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கு பணிபுரிவதாகக் கணக்குக் காட்டும் தனியார் கல்லூரிகள் பல.

என்ன காரணம்?

10 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அதிகரித்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 247ஆக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 431 ஆக அதிகரித்தது. 2007-2008ம் கல்வியாண்டில் 1,08,844 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை 2010-2011ம் கல்வியாண்டில் 1,61,515 ஆக உயர்ந்தது. ஆனால், விரைவிலேயே பொறியியல் மோகம் எனும் நீர்க்குமிழி உடைந்தது. 2010-2011ம் ஆண்டுகளில் பெருந்திரளாகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 2014-2015 படிப்பு முடிந்து வெளிவந்த நிலையில், வேலைவாய்ப்பற்ற சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக, தொழில் நிறுவனங்கள் ஊதியத்தைக் கணிசமாகக் குறைத்தன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறையத்தொடங்கியது.

அதேசமயம், மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, 2010-ல் இருந்த நிலையையும், 2015-ல் இருந்த நிலையையும் பார்க்கும்போது ஒப்பீட்டளவில் பெரிய வீழ்ச்சி இல்லை என்றே சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கிறார்கள். எனினும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் கிட்டத்தட்ட 1.50 லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருப்பதற்குக் கூறப்படும் காரணம், தேவைக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதே!

இன்னொரு சிக்கல் உண்டு. சென்ற கல்வியாண்டு (2017-2018) வரை பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், விதிப்படி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. இதனால், பல கல்லூரி களில், பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அவர்கள் பணியில் தொடர வேண்டுமெனில் மாணவர்களை அழைத்துவர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

வேறு வழியில்லை

தற்போதைய சூழலில், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு பொறியியல் கல்லூரிகளிலும் எளிதில் வேலை பெற இயலாது. தவிர, தொழில் நிறுவனங் களிலும் வாய்ப்பு குறைவு. பொறியியல் துறையைப் பொறுத்தவரை, ஒருவர் உதவிப் பேராசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. புதிதாகப் பணியில் சேர்பவராகவே கருதப்பட்டு, புதியவர்களுக்கான ஊதியமே வழங்கப்படும். இதனால், இதுபோன்ற கடும் நெருக்கடிகளுக்கு இடையில், வேறு வழியின்றி அதே துறையில் நீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

பணிக்கேற்ற முறையான ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஒருவர் எந்தளவு ஈடுபாட்டுடன் பணிபுரிவார், அவர்கள் மூலம் எம்மாதிரியான சமூகம் உருவாக்கப்படும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது. முறையான ஊதியமின்மை, தரமற்ற கல்வி, வேலைவாய்ப்பற்ற சூழல் என்று மோசமான காரணிகளால் கட்டமைக்கப்படும் ஒரு சமூகச் சூழலின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற கேள்விக்குக் கல்விச் சமூகம் முகங்கொடுக்க வேண்டிய தருணம் இது!

- முகம்மது ரியாஸ், உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: hirifa@gmail.com
மஞ்சள் பை காலங்கள்

Published : 07 Jul 2018 22:38 IST


  எஸ்.ராஜகுமாரன்






‘கொக்கு பறந்த

வயல்களில் பறக்கின்றன

பாலிதீன் பைகள்.’

சாலை ஓரங்கள், குப்பைத் தொட்டிகள், நீரில்லா ஆறுகள், குளங்கள், விளைச்சல் மரத்துப்போன வயல்வெளிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன பாலிதீன் பைகள் என்னும் நெகிழிப் பைகள்.

விதவிதமான வடிவங்கள், அளவுகளில் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன இந்தப் பாலிதீன் பைகள். சில இடங்களில் ‘இங்கு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப் பட்டுள்ளன!' என்ற அறிவிப்பு வேறு. அது வெற்று அறிவிப்பு மட்டுமே. ‘கேரிபேக்' எனப்படும் பாலிதீன் பைகள் இல்லாமல் வாழவே முடியாது என்னும் அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன நெகிழிப் பைகள். மக்காத குப்பையாக மண்ணில் புரளும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளே பூமியின் மகா மாசாக விளங்குகின்றன என எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர் சூழலியலாளர்கள்!

இந்தப் பாலிதீன் பைகள் ஒரு காலத்தில் அபூர்வமான அதிசயப் பொருளாக இருந்தவை என்பது இன்றைய ஸ்மார்ட் போன் தலைமுறைக்கு வேடிக்கையான தகவலாக இருக்கும்.

எண்பதுகளின் தொடக்க காலம் வரை வீடுகளி லும் கடை களிலும் துணிப் பைகளே நிறைந்திருந்தன. ‘மஞ்சள் பை' என்னும் ஜவுளிக் கடைப் பைகள்தான் அப்போது பிரபலம். மளிகைப் பையும் அதுவே, பள்ளிக்கூடப் பையும் அதுவே. பயணப் பையும், பணப் பையும் துணிப் பைகளே.

கோயில் மணிபோல் பள்ளிக்கூட தண்டவாள மணி ஒலிக்கும் மாலை நேரங்களில், புறாக்கூட்டம் பறப்பது போல் பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் வேகமாக வெளியேறுவார்கள். பள்ளி வளாகம் விட்டு வெளியே ஓடும் அவர்களின் கைகளில் உள்ள மஞ்சள் பைகள் பறப்பது, புறாக்களின் றெக்கைகள் போலவே இருக்கும்.

‘மு.ரா.சன்ஸ்' ஜவுளிக் கடையின் மஞ்சள் பைகள் எங்கள் பகுதியில் ரொம்பப் பிர பலம். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுத் துணிகளைச் சுமந்து வீட்டுக்கு வரும் ஜவுளிக்கடை மஞ்சள் பைகள் சந்தோஷத்தின் குறியீடுகள்.

புதிய பைகளின் ஆழ்மஞ்சள் வண்ணமும் புதுத்துணி வாசனையும் இப்போதும் கூட என் கண்ணிலும் நாசியிலும் வண்ணத்தையும் வாசனையையும் தீட்டுகின்றன. பண்டிகை காலத்தில் வீட்டுக்கு வரும் ஜவுளிப் பைகள், அதன்பிறகு பள்ளிப் பைகளாகும். பழைய பைகள் மளிகைக் கடைப் பைகளாக மாறும்.

கண்ணாடி மாமாவின் பழைய சைக்கிளில் எப்போதும் பழுப்பேறிய இரு துணிப் பைகள் இருக்கும். ஜவுளிக் கடையில் வேலை பார்த்த அவர், பணி முடிந்து வீடு திரும்பும் இரவுகளில் ஒரு பையில் மளிகை சாமான்களும் மறு பையில் காய்கறிகளும் வாங்கி வருவார். சில நாட்களில் எங்களுக்கான பகோடா பொட்டலங்களையும் சுமந்துவரும் அந்தப் பைகள்.

ஜவுளிக் கடை மஞ்சள் பைகள் ஒற்றை நூலில் தைக்கப்பட்டிருக்கும். கனம் தாங்காது சில சமயம் காதுகள் அறுந்து விடும். கொஞ்சம் விவரமானவர்கள் பைகளை தையல் கடையில் கொடுத்து ஒற்றைத் தையலின் மேல் இன்னொரு ஓட்டு ஓட்டிக் கொள்வார்கள். சிறு நகரங்களின் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் என எல்லா கடை களிலும் ஒரு காலத்தில் மஞ்சள் பைகளே ஆக்கிரமித்திருந்தன. திருமண தாம்பூலப் பையாக மஞ்சள் பைகளிலேயே மணமக்கள் பெயர் அச்சிட்டு வழங்கிவந்தனர். இப்போது வகைவகையான வண்ணவண்ண பாலிதீன் பைகள் எங்கும் சர்வாதிகாரம் செய்கின்றன.

‘தொளதொளாப் பேண்டு சார்' என நாங்கள் ரகசியமாக அழைக்கும் ரொசாரியோ வாத்தியார் பழுப்புநிற காடாத் துணியில் கொண்டுவரும் பெரிய பைக்குள் பைபிளும், ‘கடவுள் நம்மோடு' புத்தகமும் எப்போதும் இருக்கும்.

ஊருக்குள் சிங்கப்பூர் சென்று வந்த ஒரு சிலர் கொண்டு வரும் பாலிதீன் பைகள் வழவழப்பாக மினுக்கும். அவற்றில் அடிக்கும் ஒருவித வாசனை கூடுதல் பிரமிப்பு.

துணிப் பையில் பல வகை உண்டு. அவற்றுள் பால்யத்தில் என்னை ஈர்த்தது சுருக்குப் பை. வரிச்சிக்குடியில் இருந்து கூடையில் கத்தரிக்காய் கொண்டுவரும் தங்கம்மா பாட்டி யின் சுருங்கிய இடுப்பில்தான் நான் முதன்முதலில் சுருக்குப் பையைப் பார்த்தேன். புடவைக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் பத்திரமாக செருகப்பட்டிருக்கும் சுருக்குப் பையை எடுத்து, அதில் இருக்கும் சுருக்குக் கயிற்றை இழுத்தால், வாய் பிளக்கும் சுருக்குப் பை. அதில் இருந்து தங்கம்மா பாட்டி கத்தரிக்காய் விற்பனையின் மிச்ச சில்லரையை லாவகமாக எடுத்துக் கொடுக்கும் அழகே அழகு. சுருக்குப் பைகளை இன்றைய பெண்களின் ஹேண்ட் பர்ஸ்களாக காலம் மாற்றிவிட்டது.

எண்பதுகளின் இறுதியில்தான் துணிப் பைகளுக்கு மாற்றாக மெல்ல பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. அப்போதுதான் பெண்கள் பணிக்குப் போகத் தொடங்கியிருந்தனர். ‘அவள் ஒரு தொடர்கதை' நாயகி சுஜாதாவைப் போல் பணிக்குப் போகும் பெண்களும் தோளில் தொங்கும் தோல் பைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது கலை, இலக்கியத் துறைகளில் அறிவுஜீவியாக அறியப்பட்டவர்கள் தோளில் தொங்கும் ஜோல்னாப் பைகளுடன் வலம் வந்தனர். அறிவுஜீவிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்களையும் பிடித்துத் தொங்கியது ஜோல்னாப் பை மோகம்.

என் நண்பன் ஒருவன் பைகளின் ரசிகன். அவனின் அலு வலகப் பைக்குள் பல பைகள் இருக்கும். ஏதேனும் ஒரு புதிய பாலிதீன் பையை யார் கொடுத்தாலும் முகமெல்லாம் சிரிப்பாக வாங்கித் தன் பைக்குள் வைத்துக் கொள்வான். பிடித்த பையைத் திருடவும் தயங்காத தீவிரப் ‘பை'யன் அவன். துணிப்பைகள் மட்டுமே இருந்த காலத்தில் வெளி இடங்களிலோ, குப்பைக் கழிவுகளிலோ துணிப் பைகளைப் பார்க்க முடியாது. பழைய துணிப் பைகள் அடுப்புக் கரித் துணியாக, சுத்தம் செய்யும் துணியாகப் பயன்பட்டு கடைசி யில் குப்பைக்குச் சென்று மண்ணோடு மண்ணாக மக்கிச் செரித்துவிடும். ஆனால், இன்றைய உலகம் ஒரு பெரிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.

செக்கு எண்ணெய், இயற்கைப் பொருட்கள் பயன்பாடு என மீண்டும் இயற்கைக்குத் திரும்பும் முயற்சிகள் இன்று உலகெங்கும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன் படுத்தும் முயற்சிகளை வரவேற்போம். மஞ்சள் பைகளோடு வாழ்ந்த காலங்கள் மீண்டும் வராதெனினும் மீண்டும் மஞ்சள் பைகளை நம் கைகள் சுமப்பது சுகமானதுதானே!
பிளாஸ்டிக் தடை சாபமல்ல.. வரம்..!: மாற்று நடைமுறைக்கு மாற வேண்டிய நேரம் இது

Published : 08 Jul 2018 00:02 IST
 
க.சக்திவேல்

 


துணிப்பையில் பொருள் வாங்கும் பெண்.

செ ன்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, நீர் நிலைகளையும் மண்ணையும் அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் முகத்துவாரங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளால் இறுகின. இப்போதும் கூவம், பக்கிக்ஹாம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடங்கி பல்வேறு நீர் நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகளே ஆக்கிரமித்துள்ளன.

மக்காத இந்த குப்பைகளால் பெருவெள்ளப் பாதிப்பு மட்டுமல்ல, நிலத்தடி நீரை சுருங்கச் செய்து, நிலத்தை மலடாக்கும் வேலையையும் இலவச இணைப்பாகச் செய்கிறது. உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. பிளாஸ்டிக்கை உலகின் பல நாடுகளும் தடை செய்வது மற் றும் அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சூழலில்தான் சமீபத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இதற்கு பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் தடை வரும் 2019 ஜனவரி 1 முதல் அமலாகிறது. அந்த தேதியை நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, பிளாஸ்டிக் இல்லாத அன்றாட வாழ்க்கை சாத்தியமா என கேள்வி எழுகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை முறையை நாம் மறுகட்டமைப்பு செய்ய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக சென்னையில் ஒரு அங்காடி ஒன்று, ‘அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், எண்ணெய் போன்றவற்றை பாத்திரங்கள் அல் லது துணிப்பையில்தான் பொருட்களை வழங்குவோம்’ என தங்களது வாடிக்கையாளர்களிடம் கறாரக சொல்லிவிட்டது. “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அங்காடியை நடத்தி வருகிறோம். பிளாஸ்டிக் கூடாது என்பதற்காக மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. துணிப் பைகள், பாத்திரங்களை எடுத்துவந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மாவு வகைகளை மட்டும் பிளாஸ்டிக் பைகளில் தருகிறோம். எங்களைப் போன்றே சென்னையில் 20 கடைகள் இருக்கின்றன. மளிகைப்பொருட்களில் 99 சதவீதம் பிளாஸ்டிக் கவர்களில்தான் விற்பனையாகிறது. முதல் கட்டமாக பிளாஸ்டிக் பை களை தவிர்க்க வேண்டும். இது ஒன்றும் கடினமான வேலை அல்ல” என்கிறார் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்திவரும் ராதிகா.

கண்ணுக்கு தெரியாத செலவு

பெரிய பல்பொருள் அங்காடிகள், பிளாஸ் டிக் கைப்பை ஒன்றை ரூ.6-க்கு விற்கின்றன. குறைந்தது இரண்டாவது வாங்கும் வாடிக்கையாளர்கள், தேவை முடிந்தபின் குப்பையில் வீசி விடுகின்றனர். அவைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய ஆகும் செலவு, மக்கிப் போகாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கெடுதல், நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்துவதற்கான செலவு, பிளாஸ்டிக் குப்பைகள் ஆக்கிரமிக்கும் இடங்களின் மதிப்பு ஆகியவற்றையும் சேர்த்து கணக்கிடும் முறையைத்தான் ‘பிளாஸ்டிக் மீதான சுற்றுச்சூழலுக்கான செலவு’ என்கிறார்கள். இவற்றையும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் விலையோடு சேர்த்துக்கொண்டால் துணிப்பைகளைவிட பிளாஸ்டிக் பைகளுக்கான விலை பல மடங்கு அதிகம். ஆனால், இந்தக் கணக்கு யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.


பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தேவையான அளவு துணிப்பைகளை தயாரிப்பது எளிதானதே என்கிறார் ‘தி யெல்லோ பேக்’ கிருஷ்ணன். கடந்த 4 ஆண்டுகளாக துணிப்பைகளை தயாரித்து விற்பனை செய்துவரும் அவர் நம்மிடம் கூறும்போது, “துணிப்பையை ஒரு ஆண்டு வரை பயன்படுத்த முடியும். ஒரு துணிப்பையை குறைந்தபட்சம் ரூ.12-க்கு உற்பத்தி செய்ய முடியும். அதே பெரிய துணிப்பையை ரூ.35-க்கு வாங்கினால் அதிக பொருட்களை வாங்க முடியும்.

துணிப்பைகளுக்கான தேவை எவ்வளவு ஏற்பட்டாலும் இந்தியா போன்ற விவசாய நாட்டில் அதன் உற்பத்தி சாத்தியமே. விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த அரசு, துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். சுற்றுச்சூழலும் மாசுபடாது. பருத்தி விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக துணிப்பைகளை எளிதில் உற்பத்தி செய்து விற்க முடியும்” என்கிறார்.

தொழிற்சாலைகள் கவனத்துக்கு..

“பிளாஸ்டிக் கைப்பைகள், பாட்டில்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் தொழிற்சாலைகள் பின்னர், அவை என்ன ஆனது என்பது குறித்து கவலைப்படுவதில்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்தே விற்பனைக்கு அனுப்புகின்றன. ஆனால், அதனை திரும்பப் பெற இதுவரை எந்த நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை” என்கிறார் பிளாஸ்டிக் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் வாசுதேவன்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கைப்பைகளை பயன்படுத்திய பிறகு, அதை எந்த கடையில் வேண்டுமானாலும் திருப்பி அளித்தால் கணிசமான தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால், பிளாஸ்டிக் பாட்டில்களை பெரும்பாலும் தூக்கி எறியமாட்டார்கள். இவற்றை முறையாக சேகரித்தால் சாலை போடவும் கழிப்பறைகள் கட்டவும் பயன்படுத்த முடியும்.

1 கிமீ சாலை அமைக்க மட்டும் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் தேவை. பிளாஸ்டிக் சாலையால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. பராமரிப்புச் செலவும் இல்லை. இதற்காக பகுதி வாரியாக பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க ஆட்களை அரசு நியமிக்கலாம். குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் ரயில்வேயும் தமிழக அரசும் முதலில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்கிறார்.


தொடரும் உற்பத்தி

தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 30 சதவீதம் பிளாஸ்டிக் மூலம்தான் கிடைக்கிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். ஜனவரி 1 முதல் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை இதுவரை நிறுத்தவில்லை. எனினும், தடை அறிவிப்புக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஆர்டர்களின் அளவு குறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் எஸ்.ராக்கப்பன் கூறும்போது, “தடையால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் உடனடியாக மாற்று வேலைக்குச் செல்வது கடினம். கடன் வாங்கி தொழில் நடத்தும் சிறு, குறு நிறுவனத்தினர் பெரும் நஷ்டத்துக்கு ஆளாவார்கள். தடைக்கு பதிலாக மக்கும், மக்காத பொருட்களை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மையை திறம்பட அரசு அமல்படுத்தலாம். திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்த தேவையான உதவிகளை செய்ய எங்கள் சங்கம் தயாராக உள்ளது. மேலும், நாங்கள் விற்கும் பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பெற்றுக்கொண்டு, அவற்றை மறுசுழற்சி செய்து குப்பை அள்ளும் பைகளாக மாற்றித்தரவும் தயாராக உள்ளோம்” என்றார்.

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்த குழுவினர் “சிறு, குறு தொழில் நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடக் கூடாது. படிப்படியாக நாங்களே இந்த தொழிலில் இருந்து வெளியேற தயாராக உள்ளோம். இதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்கின்றனர்.

தடையை அரசு மட்டுமே நடைமுறைப்படுத்திவிட முடியாது. வியாபாரிகள், நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து மாவட்டம்தோறும் கூட்டங்கள் நடத்தி தடையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் தடைக்கு ஓரளவேனும் வெற்றி கிடைக்கும் என்கிறனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

பிளாஸ்டிக் புழக்கம் இல்லாத 1990-க்கு முந்தைய காலத்தை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த பிளாஸ்டிக் தடை இருக்குமா என்பது காலத்தின் முன் நிற்கும் கேள்வி. வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வது என்பது நமக்கானது மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் கூட.

பாத்திரத்துக்கு மாறுமா பார்சல்?

ஹோட்டல்களில் முழுமையாக காகிதப் பைகளை பயன்படுத்துவது இயலாத காரியம் என்கிறார் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன். தொடர்ந்து அவர் கூறும்போது, “தடை அமலாகும்போது பிளாஸ்டிக் பைகளில் உணவை அளிக்க முடியாது. பார்சல் வாங்க வருபவர்கள் பழையபடி பாத்திரங்களை கொண்டு வர வேண்டும். இதற்கான அறிவிப்புப் பலகை வைக்க உள்ளோம். சில ஊர்களில் இப்போதும் அந்த நடைமுறை உள்ளது. வெளியூர் பயணங்களின்போது இதில் சிலசிரமங்கள் இருக்கும். சில்லறை விற்பனை, பார்சல் வியாபாரம் பாதிக்கப்படும்” என்றார்

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

பிளாஸ்டிக் தடையை ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்துவதற்காக 32 மாவட்டங்களை ஆறு மண்டலங்களாக பிரித்துள்ளனர். இதில், இரு மண்டலங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், நுகர்வோர் அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆகியோருடன் இணைந்து தடையை அமல்படுத்துவார்கள் என தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் கடந்த ஜூன் 15-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்படும் பொருட்கள்

விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பில், ‘பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மளிகை பொருட்கள், குப்பை அள்ளும் பைகள், மக்கி உரமாகும் தன்மையுள்ள கைப்பைகள், மின் வயர்களில் சுற்ற பயன்படும் டேப்புகள், Woven சாக்குகள், டெட்ராபேக், பிளாஸ்டிக் டப்பாக்கள், சாஷேக்கள், எழுதுபொருட்கள் ஆகிய 12 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிணற்றில் குதித்து தற்கொலை: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

 
தமிழ் முரசு  08.07.2018




கூடுவாஞ்சேரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் மேற்கு கோதண்டராமர்நகர் ஜெயலட்சுமி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62).

இவர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி கடந்த 2013ம் ஆண்டு ஓய்வுப்பெற்றார். இவரது மனைவி கலைவாணி (50). இவர்களுக்கு ராஜேஸ்வரி (33) என்ற மகளும் அரி (27) என்ற மகனும் உள்ளனர்.

இதில் அரி, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நாகராஜன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக சரிவர சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த நாகராஜன், இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவரை குடும்பத்தினர் தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே வீட்டில் நாகராஜன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், ‘ என் சாவுக்கு யாரும் காரணமில்லை.

தீராத வயிற்றுவலி காரணமாக விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் திடுக்கிட்ட குடும்பத்தினர், உடனடியாக அப்பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் சென்று தேடினர். அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நாகராஜனின் சடலம் மிதந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் சென்றனர். மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

அவர்கள் நாகராஜனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

SELECTION COMMITTEE DME CHENNAI NOTIFICATION


NEWS TODAY 26.01.2026