Tuesday, February 11, 2020


திரையும் இசையும்: காட்சியில் நடித்த கருவியிசை

நினைத்தாலே இனிக்கும்

டெஸ்லா கணேஷ்

பியானோ அல்லது கிட்டார் வாத்தியக் கருவியின் துணையோடு புதிதாக ஒரு பாடலை இயற்ற முயல்வதைவிட எனக்கு மிகப் பெரிய சிலிர்ப்பைத் தரக்கூடிய விஷயம் உலகில் வேறு எதுவும் இல்லை என்று உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவின் உறுப்பினரான சர் பால் மெக்கார்ட்னி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். ஒரே ஒரு முறை ஏதாவது ஒரு வாத்தியத்தைத் தொட்டுப்பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் பல மனிதர்கள் எல்லாத் தலைமுறைகளிலும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இசைக்கருவிக் கடைகள் மிகவும் அரிதான காலங்களில் மேடைக் கச்சேரிகள், புத்தகங்கள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பட்ட இசைக் கருவிகளை, தமிழ்த் திரைப்படங்கள் அதன் அந்தந்தக் காலகட்டத்தின் பிரபல நடிகர்கள், நடிகைகள் ஆகியோரது அடையாளங்களின் துணையோடு காட்சிப்படுத்தி மக்களை மகிழ்வித்ததுடன் ஆவணப்படுத்தவும் செய்திருக்கின்றன.

‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடித்த டி.கே. பகவதியின் கைகளில் தவழ்ந்து கயிலை நாதனையே கவர்ந்த வீணை இசைக்கருவி ‘அகத்திய’ரில் அதே ராவணனுக்கும் அகத்தியருக்கும் போட்டிப் பாடலில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. ‘மீண்டும் கோகிலா’வில் ஸ்ரீதேவியின் கைகளில் நளினமாகக் கொஞ்சிய வீணை ‘திருவிளையாடல்’ படத்தில் ‘பாட்டும் நானே...’ பாடலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கைகளில் கம்பீரமாக அதிர்ந்தது.

கே.ஆர்.விஜயாவின் கரங்களில் சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொன்ன வீணை, சரோஜாதேவியின் கைகளிலோ துன்பத்தால் நாதம் இல்லாமல் தூங்கிப்போன இதயவீணை ஆனது. பாக்யலட்சுமியின் மாலைப் பொழுது மயக்கத்தைச் சூசகமாகச் சொன்ன சுகமான வீணையை எப்படி மறப்பது?

‘நாடோடி’ எம்.ஜி.ஆர், ‘வெள்ளை ரோஜா’ சிவாஜி, ‘காசி’ விக்ரம், ‘அலைகள் ஓய்வதில்லை’யில் காதலின் ஆதாரம், ‘நிழல்க’ளில் விரக்தியின் வெளிப்பாடு, ‘புது வசந்த’த்தில் நம்பிக்கையின் அடையாளம் 'அம்மன் கோவில் கிழக்காலே சின்னமணிக் குயிலின் கூவல்' என அஷ்டாவதானம் செய்தது ஆர்மோனியம்.

‘மிஸ்ஸியம்மா’வில் ஜெமினி கணேசன், ‘புதிய பறவை’, ‘எங்க மாமா’ திரைப்படங்களில் சிவாஜி கணேசன், ‘பணம் படைத்தவன்’, ‘கண்ணன் என் காதலன்’ படங்களில் எம்.ஜி.ஆர்,‘ஜானி’ திரைப்படத்தில் தேவி, ‘தர்மத்தின் தலைவன்’ ரஜினிகாந்த், என நட்சத்திரங்களின் பெருமைமிகு வாத்தியமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது பியானோ.

‘ராஜபார்வை’ படத்தில் பார்வையற்ற கமலின் விழியாகப் பேசிய வயலின் இசைக்கருவி, ‘பட்டினப் பிரவேச’த்தில் வான் நிலாவாக, ‘முத்தான முத்தல்லவோ’ படத்தில் மெல்லிசை மன்னரின் காதலியாக, ‘புன்னகை மன்ன’னில் இளையராஜாவின் வில் வீச்சாக, ‘கோபுரவாசலிலே’ படத்தில் கார்த்திக்கின் இசைப் பாடமாக ‘மனைவி ரெடி’யில் பாண்டியராஜனின் காமெடியாக இதயங்களை மீட்டியது.

இளைய நிலாவுக்கும் இனிய பொன் நிலாவுக்கும் துணையாக இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்த கிட்டார் வாத்தியம் ‘நினைத்தாலே இனிக்கும்’ பட சுவரொட்டியில் அடையாளமாகவும், ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வேட்டைக்காரன்’, ‘நாளை நமதே’, ‘டிஸ்கோ டான்ஸர்’ எனப் படங்களிலும், ‘விஜயபுரி வீரன்’ ஆனந்தனின் கைகளிலும் பாடாத பாட்டெல்லாம் பாடியது. நிஜத்திலும் கிட்டார் இசைக் கலைஞரான ஜே.பி.சந்திரபாபு ஆடல் பாடலோடு கிட்டார் இசைக்கும் காட்சிகள் அசத்தலாக இருக்கும்.

ட்ரம்பெட், சாக்ஸபோன், புல்லாங்குழல், கிளாரினெட், டிராம்போன் எனக் காற்று இசைக்கருவிகள் எல்லா நட்சத்திரங்களின் பாடல் காட்சிகளையும் கலக்கி எடுத்தாலும் கர்நாடக இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் புண்ணியத்தில் ‘டூயட்’ படத்தில் சாக்ஸபோன் மகுடம் சூட்டிக்கொண்டது. மிருதங்கம், தபேலா, டோலக், டிரம்ஸ், ட்ரிப்பிள் பாங்கோ, தும்பா, ரோட்டோ ட்ரம், கடம், கஞ்சிரா எனத் தாள வாத்தியக் கருவிகள் அநேகத் திரைப்படங்களில் அசத்தினாலும், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ...

’ என்ற ஒரே பாடலில் டபுள் பாங்கோஸ் என்ற சின்னஞ்சிறிய தாள வாத்தியம் தமிழகத்தையே கலக்கியது. ‘பணம் படைத்தவ’னின் சுவரொட்டியிலேயே அக்கார்டியன் வாத்தியம் எம்.ஜி.ஆரின் ஸ்டைலானது. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘வானம்பாடி’ என தேவிகாவின் கைகளில் கண்ணீர் சிந்திய சித்தார் வாத்தியம் ‘தெய்வமகன்’, ‘தவப்புதல்வன்’ என சிவாஜியின் கைகளில் சித்து விளையாடியது.

‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘கோயில் புறா’ என அன்று தொடங்கி ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’, ‘தாரை தப்பட்டை’ என இன்று வரை நாகஸ்வரமும் தவிலும் பண்பாட்டின் பெருமை கூறிக்கொண்டே இருக்கின்றன. நாட்டுப்புற இசைக்கருவியான டேப் என்னும் பறை வாத்தியம் ‘படகோட்டி’யில் மீனவர்களின் கண்ணீராகவும் ‘பாவ மன்னிப்’பில் சம தர்மத்தின் அடையாளமாகவும் முழங்கியது.

பம்பை, உறுமி, உடுக்கு எனக் காட்சிகள் சிறக்க பல படங்களில் களிநடம் புரிந்திருக்கின்றன. உடலில் பல வாத்தியங்களைக் கட்டிக்கொண்டு மாயாஜாலம் புரிந்த ‘சிங்காரவேல’னையும் ‘கவிக்குயி’லில் சின்னக்கண்ணனைச் சிங்காரமாய் அழைத்த புல்லாங்குழலையும், நடிப்பு சக்கரவர்த்தியை ஒரு தாள வாத்தியம் ‘மிருதங்க சக்கரவர்த்தி’ ஆக்கியதையும், பேண்ட் இசைக்குழுவின் அத்தனை இசைக்கருவிகளையும் பயன்படுத்தி மக்கள் திலகம் பூ மழை தூவியதையும், பல புராணப்படங்களில் சங்ககால இசைக்கருவிகளை மீள் வடிவமைத்துக் காட்டியிருந்த ஏ.பி.நாகராஜனையும் மறக்க முடியுமா?

‘காவியத் தலைவி’ படத்தில் சாரங்கியை அழ வைத்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ‘மூன்று முடிச்சி’ல் மௌத் ஆர்கன், ‘அபூர்வ ராகங்க’ளில் மிருதங்கம், ‘பட்டினப் பிரவேச’த்தில் வயலின், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கிட்டார், ‘உன்னால் முடியும் தம்பி’யில் எஃபெக்ட் வாத்தியங்கள், ‘டூயட்’டில் சாக்ஸபோன் என இசைக்கருவிகளையே தன் திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

கட்டுரையாளர் இசை ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: teslaganesh@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன?

By உமா பார்வதி | Published on : 09th April 2018 05:27 PM

தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய் எது சாதாரண நாய் எதுவென்று கணிக்க முடியாதபடியும் இருக்கும். நாம் அதை சீண்டாதவரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். ஆனால் நாய்க்கடி செய்திகளைப் படிக்கும் போதோ, கேள்விப்படும் போது பீதியடைவதை தவிர்க்க முடியாது. நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான்.

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றார் டாக்டர் ம.ராஜா. நாய்க்கடிக்கு என்ன சிகிச்சை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கூறினார்.

கடுமையான விஷம்

நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக, தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம். நாய்க்கடி கடுமையான விஷமாகும்.

நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கம், அதற்கான சிகிச்சை குறித்து விரிவாகப் பார்க்கலாம் :-

மூளையை நோக்கி நகரும் வைரஸ்

ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கி பயணம் செய்யும். அதனால் முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்.

தசை செல்களில் தொடங்கி

முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம்.

காயத்தின் தன்மையை பொருத்து

காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 ஆண்டுகள் தாமதமாக கூட நோய் வரலாம். நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாள்களுக்குள் மரணம் நிச்சயம்.

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது

வெறி நாயோ தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ, கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளைத் தாக்கும் ரேபீஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்தக் காயத்திலும் நோய்க் கிருமி பரவாது. பயப்படத் தேவையில்லை.

கட்டு போடலாமா?

ஆனால் இந்த விலங்குகள் காலை நக்கிக் கொண்டே இருக்கும். அதனால் நகக்கீறலோ, பல் கடியோ, தோல் கிழிந்து ரத்தத்தில் எச்சில் பட்டாலே அதன் மூலம் கிருமி பரவ வாய்ப்பு உள்ளது. காயத்தை நன்றாக கழுவிய பிறகு ரத்தம் அதிகமாக வந்து காயம் ஆழமாக இருந்தால் மருத்துவரை அணுகும் வை கட்டுப் போடலாம். இல்லையெனில் திறந்த புண்ணே மேலானது. நாய் நக்குவதால், தோல் கிழிந்து இருக்காவிட்டால் நாய்க்கு உணவு அளிப்பதால், தொடுவதால் பிரச்னை கிடையாது. தடுப்பூசி தேவையில்லை. தோல் முழுமையாக இருந்தால் பிரச்னை இல்லை. தோல் கிழிந்து இருந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தோல் கிழிந்து முகத்துக்கு அருகில் ஆழமான காயம் என்றால் உடனே தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசிகள் (ARV Anti Rabies Vaccine)

நாய் கடித்து காயம் படுவதற்கு முன்பாக, நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள், கால்நடை மருத்துவர்கள், உடஹ்வியாளர்கள், தற்காப்பாகப் போட்டுக் கொள்ளும் ஊசிகள். இது 3 மட்டும் போதுமானது. விலங்குகள் கடித்தபின் 5 ஊசிகள் கண்டிப்பாக போட வேண்டும் (1,3,7,14,28 நாள்கள்). வெறும் தோல் மட்டும் கிழிந்திருந்தால் தடுப்பூசி மட்டும் போதுமானது. இந்தத் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் கிருமிகளை அழித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஆழமாக, முகத்துக்கு அருகில் என்றால் Rabbies Immune Globulin என்ற தடுப்பூசியை காயத்தை சுற்றிலும் போடுவது அவசியம். இதன் மூலம் காயத்தைச் சுற்றி தசைகளில் உடனடியாக கிருமிகள் பெருகுவதை முழுமையாக தடுக்க முடியும்.
பட்டா மாறுதலுக்கு வந்தாச்சு புதிய நடைமுறை: இனி அலைச்சல் மிச்சம்!

By DIN | Published on : 10th February 2020 07:22 PM

சென்னை: தமிழகம் முழுவதும் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ள காரணத்தால் இனி பொதுமக்களின் நேரம் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம்தான் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்களின் பத்திரப்பதிவு நடைபெறுகிறது. பொதுவாக இந்தப் பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கான தனியான ஒரு படிவத்தை வருவாய்த் துறைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் தரும் ஒப்புகைச் சீட்டை வைத்துக் கொண்டு தாலுகா அலுவலகத்தை அணுகி அதன் பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படும். ஆனால் நடைமுறையில் அது விரைவாக நடைபெறுவது இல்லை.

பெயர் மாற்றம் உடனடியாக நடைபெறாமல் சர்வே எண் சரி பார்க்க வேண்டும், மூல ஆவணத்தை பார்க்க வேண்டும் எனக்கூறி பல்வேறு விதமான அலைக்கழிப்புகளுக்கு பின்னரே கிடைப்பதாக பொதுமக்களிடையே புகார் உள்ளது. பல்வேறு காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்திலும் இழுத்தடிப்பு நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ள காரணத்தால் இனி பொதுமக்களின் நேரம் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துகள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும் எனவும் பொறுப்பில் உள்ள சார்பதிவாளர்கள் குறிப்பிட்ட சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வேறு ஏதும் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு பின் கிடைத்த விடைத்தாள் கட்டு ; பல்கலையில் நடந்த 'வினோதம்'

Added : பிப் 11, 2020 00:53

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பீடு செய்ய பஸ்சில் கொண்டு வரப்பட்ட விடைத்தாள் கட்டு மாயமாகி மூன்று மாதங்களுக்கு பின் அதே பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதம் நடந்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகரில் இப்பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட 90 கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் செமஸ்டர் தேர்வுகள் நவம்பரில் நடந்தன. விடைத்தாள்கள் பல்கலைக்கு சொந்தமான பஸ் மூலம் மதிப்பீடு செய்ய பல்கலைக்கு கொண்டு வரப்பட்டன. பிப்ரவரி முதல் வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து தேர்வு முடிவுகள் அறிவிக்க இருந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லுாரி ஒன்றின் விடைத்தாள் கட்டு ஒன்று மாயமானது தெரிந்தது.

அதில் 360 விடைத்தாள் இருந்தன.மாயமான கட்டை தேடும் பணியை பல்கலை தீவிரப்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட பஸ்ஸில் அந்த கட்டு இருந்ததாக சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வாணையர் அலுவலகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பேராசிரியர்கள் கூறியதாவது: அந்த பஸ்சில் தினம் 40 பேர் பல்கலை வந்து செல்கின்றனர். மூன்று மாதங்களாக யார் கண்ணிலும் தென்படாத அந்த கட்டு, பல்கலையால் தீவிரமாக தேடப்படுகிறது என்றதும் அதே பஸ்சில் கிடைத்துள்ளது வினோதமாக உள்ளது.

சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. துணைவேந்தர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிடைத்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்து நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவை ஒரு வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின் கட்டு மாயமான சர்ச்சை குறித்து விசாரிக்கப்படும்," என்றார்.
கணவரின் சிகிச்சைக்கு மன்றாடும் மனைவி

Added : பிப் 10, 2020 23:28




ஈரோடு : கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும்படி, ஈரோடு கலெக்டரிடம், மகனுடன் வந்து, பெண் மனு கொடுத்தார்.

ஈரோடு, ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர், சத்யா, 35; ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், நேற்று வழங்கிய மனு:என் கணவர் பாபு, 38; தனியார் கடை ஊழியர். ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. இதனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில், ஈரோடு, கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம், சில லட்சம் ரூபாய், சிகிச்சைக்கு செலவிடப்பட்டது. தற்போது, குழாய் மூலம் சுவாசித்தலும், உணவு வழங்குவதும் நடக்கிறது.

இன்னும் சில நாளில், அவற்றை அகற்றி, சிகிச்சையை தொடர வேண்டி உள்ளது. பணம் இல்லாததால், தொடர் சிகிச்சை வழங்க முடியவில்லை. இரண்டு குழந்தைகள் உள்ளதால், வேலைக்கும் செல்ல முடியாமல், கணவரை பார்க்க முடியாமல் சிரமமாக உள்ளது. மருத்துவ செலவுக்கு உதவி செய்து, கணவரை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

தேவையான உதவி செய்வதாக, கலெக்டர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். உதவ விரும்புவோர், 83444 40100 என்ற மொபைல் எண்ணில், சத்யாவை தொடர்பு கொள்ளலாம்.
கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்?

Added : பிப் 10, 2020 21:43

சென்னை ; வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர்களை கெடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை தவிர, மற்ற சர்ச்சைக்குரிய வேலைகளில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. குற்றச்சாட்டுசில முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களிடம், அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு, தங்கள் வீடுகளிலும், தனியார் மையங்களிலும் டியூஷன் எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால், தாங்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பாட திட்டத்தின்படி முழு பாடங்களையும் நடத்தாமல், அரைகுறையாக விட்டு விடுகின்றனர். அதேபோல, சில ஆசிரியர்கள் ஏதாவது ஒரு சங்கம் துவக்கி அல்லது சங்க நிர்வாகிகளாக பதவி வகித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வதையே முழு நேர பணியாக மேற்கொள்வதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர்கள் பணியிட மாாறுதல், தங்கள் குடும்ப மற்றும் உறவினர்களாக உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற்று தருவது, தரநிலை ஊதியம் வாங்கி கொடுப்பது போன்ற பணிகளுக்கு, இடைத்தரகராக செயல்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பள்ளி வேலையை விட்டு விட்டு, அந்த நேரத்தில், கல்வி அலுவலகங்களுக்கு சென்று, இடைத்தரகர் பணிகளை மேற்கொள்வதும், தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்வதும், அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுபோன்ற ஆசிரியர்கள், தங்களது காரியங்களுக்காக, அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்தும், பிற ஆசிரியர்கள் குறித்தும், புகார் கடிதம் எழுதுவது, வேறு நபர்கள் துணையுடன் வழக்கு போடுவது, 'வாட்ஸ் ஆப்' மற்றும் தனிப்பட்ட வலைதள பக்கங்களில் வதந்திகளை பரப்பி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற, தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் சில மாவட்ட அதிகாரிகள், பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி துறையும், உளவு துறையும் திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒழுங்கு நடவடிக்கைஇதில், மதுரை, விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில், பல கட்டப்பஞ்சாயத்து ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

அவர்கள் மீது, விரைவில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜராத் ஆயுர்வேத பல்கலை.,க்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து

Added : பிப் 11, 2020 00:59

புதுடில்லி : லோக்சபாவில் நேற்று, குஜராத் ஆயுர்வேத பல்கலை.,க்கு, தேசிய முக்கியத்துவ அந்தஸ்து அளிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜாம் நகரில், குஜராத் ஆயுர்வேத பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலை., வளாகத்தில் ஆயுர்வேதம் தொடர்பான ஆய்வு, மருந்து, மருத்துவம், முதுகலை கல்வி உள்ளிட்டவற்றுக்கான மூன்று கல்வி மையங்கள் இடம்பெற உள்ளன.இதையடுத்து, ஆயுர்வேதப் பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய, கல்வி மற்றும் ஆய்வு மையமாக, குஜராத் ஆயுர்வேத பல்கலை., செயல்பட உள்ளது. இதற்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி மையம் என்ற சிறப்பை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, ஆயுர்வேத கல்வி மற்றும் ஆய்வு மைய மசோதா, நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தாக்கல் செய்த இந்த மசோதாவுக்கு, காங்., எம்.பி., சசி தரூர், திரிணமுல் காங்., எம்.பி., சவுகதா ராய் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் மாநிலங்களில், ஆயுர்வேத மையம் அமைக்காதது ஏன் என, அவர்கள் கேள்வி எழுப்பினர்.

NEWS TODAY 13.04.2026