Tuesday, April 12, 2016

வாய்ப்பு ! மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ... 2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்

வாய்ப்பு ! மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ... 2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்

DINAMALAR 12.4.2016

புதுடில்லி,:நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த, 2013 ஜூலையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில், அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர், இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை ரத்து செய்தனர். அதே நேரத்தில், நீதிபதி தவே, நுழைவுத்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:நுழைவுத்தேர்வு குறித்த வழக்கில், மூன்று நீதிபதிகள்

அடங்கிய அமர்வு, தங்களுக்குள் விவாதிக்காமல்,தீர்ப்பு அளித்துள்ளது. அதனால்,இந்த தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு குறித்தும், தீர்ப்பு குறித்தும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது வழக்கின் விசாரணையை பாதிக்கலாம். அதனால், இந்த மறுஆய்வு மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.கவுன்சில் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படும். நுழைவுத்தேர்வை ரத்து செய்து பிறப்பித்த தீர்ப்பு, திரும்பப் பெறப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்திற்கு பொருந்துமா?

மறுஆய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளதால், மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அதனால், தமிழகத்திற்கு இது பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.'தமிழகத்தில் நுழைவுத்தேர்வுக்கு தடை உள்ள போதும், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, தமிழகத்திற்கும் பொருந்தும்' என, மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.மத்திய அரசின் மறுஆய்வு மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:'மக்களுக்கு தரம்வாய்ந்த மருத்துவ சேவை கிடைப்பதற்கு ஏதுவாக, மருத்துவக் கல்லுாரிகளில், தகுதி உள்ளவர்கள் மட்டுமே சேர வேண்டும். அதன்படி, இந்திய மருத்துவக் கவுன்சில் நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும்' என, ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அதன்படியே, நுழைவுத்தேர்வுநடத்தும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த தீர்ப்புக்கு எதிராக, மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு அமைந்துவிட்டது. அதை, மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுவரை நடந்தது...
● நாடு முழுவதும் உள்ள, 600க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில், இளங்கலை பட்டப் படிப்பில் சேருவதற்கு, பொது நுழைவுத்தேர்வு

நடத்துவதற்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது
● 'இது, சிறுபான்மையினருக்கு எதிரானது' என, கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரி உள்ளிட்டவை வழக்கு தொடர்ந்தன
● இதை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, 2013, ஜூலை 18ம் தேதி, கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்தது
● இதை எதிர்த்து, இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

'மாநில அரசின் உரிமைக்கு எதிரானது'

சமூக சமத்துவத்திற்கான, டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கி உள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும், நுழைவுத்தேர்வை புகுத்துவது, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.கூட்டாட்சி கோட்பாடுகள், இடஒதுக்கீடு உரிமைகளுக்கு எதிரானது. மாநில ஒதுக்கீடு இடங்களில், மத்திய அரசு தலையிடக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தமிழக மாணவர்கள், பெற்றோர் கவலையடைந்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...