Friday, May 24, 2019

சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!

By DIN | Published on : 24th May 2019 02:45 AM |




உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதிக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த தொகுதி உருவாக்கப்பட்டது முதல் பெரும்பாலான தேர்தல்களில் நட்சத்திர வேட்பாளர்களே போட்டியிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிட்டு வந்தனர்.
தற்போது தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியைக் கைப்பற்றி விட்டார் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி.

கடந்த 1967-இல், அமேதி தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் வேட்பாளர் வித்யாதர் பாஜ்பாய். அதன் பிறகு, சஞ்சய் காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 1999-இல் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2004, 2009, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அதே சமயம், 2014-இல் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. அப்போது, இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்தான் ஸ்மிருதி இரானி.

தொலைக்காட்சி நடிகையான இவர், பாஜகவில் இணைந்த பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனார். செய்தியாளர் சந்திப்புகளிலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கட்சியின் நிலைப்பாட்டையும், கொள்கையும் தெளிவாக எடுத்துக் கூறி கட்சி மேலிடத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

இதனால், கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், மாநிலங்களவை உறுப்பினராகி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பின்னர், தகவல் ஒளிபரப்புத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், ஜவுளித் துறை அமைச்சரானார். மற்றொரு புறம், அவரது கல்வித் தகுதி குறித்து சர்ச்சைகள் எழுந்து அடங்கின.

சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், அவரது கவனம் முழுவதும் அமேதி தொகுதியில்தான் இருந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில், அதே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மீண்டும் களமிறக்கப்பட்டார் ஸ்மிருதி இரானி, இந்தத் தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக, அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால், அந்தத் தொகுதியில் மக்களைச் சந்தித்து, மோடி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவதிலேயே குறியாக இருந்தார் ஸ்மிருதி இரானி. இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை ராகுல் காந்தி முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்டதாலோ என்னவோ, ""பாதுகாப்பு'' கருதி, கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை காலை வெளியானதில் இருந்து அனைவரின் பார்வையும் அமேதி தொகுதியில் இருந்தது. அதில், 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியைத் தோற்கடித்து சாதனை படைத்துள்ளார் ஸ்மிருதி இரானி.

இந்த வெற்றியின் மூலம், அமேதியின் தேர்தல் வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்திருக்கிறார் ஸ்மிருதி இரானி. இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்தது மட்டுமன்றி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தற்போது பாஜக வசம் வந்து
விட்டது.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...