Tuesday, May 28, 2019

தனியார் பல்கலைக்கழகப் பணியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
By DIN | Published on : 28th May 2019 02:40 AM |

தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் கல்வி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் வித்தியாசம் உள்ளதாகக் கூறி, தனியார் பல்கலைக்கழகப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமானது, அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளை இயக்குகிறது. இந்த சேவைக்காக மாணவர்களிடமிருந்து அவர்களின் கல்விக் கட்டணத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இலவசமாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

மேலும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையின் ஒரு பகுதியை பேருந்துகளின் பராமரிப்புக்காகச் செலவிட்டாலும், மீதமுள்ள தொகை பல்கலைக்கழகத்துக்கு லாபமாகக் கிடைக்கிறது. எனவே போனஸ் சட்டத்தின்படி இந்த லாபத் தொகையின் ஒரு பகுதியை பேருந்துகளை இயக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களான எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி அனிதாசுமந்த் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போனஸ் சட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும், கல்வி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அரசு விதித்துள்ள சட்டங்களைப் பின்பற்றியே கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. எனவே கல்வி நிறுவனங்களுக்கு இந்த போனஸ் சட்டம் பொருந்தாது என பல்கலைக்கழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் கல்வி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் வித்தியாசம் உள்ளது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...