Friday, December 20, 2019


சிறுவன் என கூறிய குற்றவாளியின் மனு நிராகரிப்பு : வக்கீலுக்கு அபராதம்


Added : டிச 19, 2019 23:15

புதுடில்லி : 'நிர்பயா' வழக்கில், சம்பவம் நடந்த போது, தனக்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை எனக்கூறி, குற்றவாளி பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக, அவரது வழக்கறிஞருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சீராய்வு மனுடில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு, ஓடும் பஸ்சில், 23 வயதான மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.அவருடைய பெயர் வெளியிடப்படாததால், ஊடகங்கள் அவருக்கு, 'நிர்பயா' என, பெயரிட்டு அழைத்து வருகின்றன

.இச்சம்பவம் தொடர்பாக, ஒரு சிறுவன் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ராம் சிங் என்பவர், திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறுவனுக்கு, சிறார் நீதி சட்டப்படி, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நான்கு பேருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன. தீர்ப்பை எதிர்த்து, நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. நான்கு பேரின் கருணை மனுக்களையும், டில்லி கவர்னரும், மத்திய உள்துறை அமைச்சகமும் நிராகரித்து விட்டனர். 

இந்நிலையில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில், அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், 'சம்பவம் நடந்த போது, எனக்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை. அதனால், என் மீது, சிறுவர் நீதி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பவன் குமார் குப்தா கூறியிருந்தார். நடவடிக்கைஇந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், விசாரணையை அடுத்த மாதம், 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.அப்போது, நீதிமன்றத்தில் இருந்த நிர்பயாவின் பெற்றோர், 'மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்' எனக்கூறி மனு தாக்கல் செய்தனர்.

இதை ஏற்று, மனு மீது தினமும் விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, பவன் குமார் குப்தாவின் மனு, நீதிபதி சுரேஷ் குமார் கைட் முன், விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி கூறியதாவது:சீராய்வு மனு, கருணை மனு ஆகியவை நிராகரிக்கப்பட்ட பிறகும், குற்றவாளிகள் புதிது புதிதாக மனு தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றப்படுவதை காலம் தாழ்த்த முயற்சித்து வருகின்றனர்.

சம்பவம் நடத்த போது, பவன் குமாருக்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை எனக்கூறி, போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகக் கோரி, ஏ.பி.சிங்கை பல முறை கேட்டுக் கொண்டும் அவர் ஆஜராகவில்லை. அவர், 'கண்ணாமூச்சி' விளையாடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க, டில்லி வழக்கறிஞர்கள் சங்கத்தை, உயர் நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு, நீதிபதி கூறினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...