Saturday, June 10, 2017

பிளாஸ்டிக் அரிசியா... எப்படி கண்டுபிடிப்பது? - கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

COMMENT (3) · PRINT · T+



கடலூரில் அரிசிக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பிளாஸ்டிக் அரிசி குறித்த தயாரிப்புக் காட்சிகள் பரவி வருகின்றன. இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத உணவுப்பொருளான அரிசியில் கலப்படம் என்பதால், கடைகளில் அரிசி வாங்குவதற்கே மக்கள் தயங்குகின்றனர். மேலும் அதே சமூக வலைதளங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இந்தச் சூழலில் கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லத்தம்பி, நந்தகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கடலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகள், அரிசி மொத்தம், சில்லரை விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ''கடலூர் மவாட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் சிக்கவில்லை. நாம் பயன்படுத்தும் அரிசி நல்ல அரிசிதானா என்பதை 3 எளிய வழிமுறைகள் மூலம் கண்டறியலாம். தண்ணீர் நிரப்பிய கண்ணாடி டம்ளரில் அரிசியை போட்டால், நல்ல தரமான அரிசி என்றால், அரிசி மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் தங்கும். அதுவே பிளாஸ்டிக் என்றால் மிதக்கும்

அடுத்து சூடான எண்ணையில் நல்ல அரிசியைப் போட்டால், அது போட்டவுடன் பாத்திரத்தின் அடியில் தங்கும். பிளாஸ்டிக் என்றால் அது பிஸின் போன்று உருகவோ அல்லது கூழ் போலவோ மாறும்.

அடுத்து நல்ல அரிசியை எரித்தால் அது பொரிந்து கருகும் தன்மையாக இருக்கும். பிளாஸ்டிக் என்றால் அது எரிவதோடு, அதிலிருந்து ஒருவித நாற்றமும் வீசும். இந்த எளிய வழிகளைக் கையாண்டு போலியானவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.

மேலும் பொதுமக்கள் உணவுப்பொருட்கள் தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக புகார் அளிக்கும்பட்சத்தில், அந்தப் புகார் சென்னையில் பெறப்பட்டு உரிய அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கிள் ஃபேஸ், த்ரீ ஃபேஸ் எதைப் பொருத்தலாம்?

ஜி. எஸ். எஸ்.






மின்சாரம் பயன்படுத்துபவர்கள் பலரும் இந்த ‘சிங்கிள் ஃபேஸ்’ (Single Phase), ‘த்ரீ ஃபேஸ் ’ (Three Phase) போன்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் வீட்டுக்கு ஏற்றது எது? சிங்கிள் ஃபேஸா, திரீ ஃபேஸா? இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இவற்றைப் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிங்கிள் ஃபேஸ் என்பதை ‘ஒரு முனை மின்சாரம்’ எனத் தமிழில் சொல்லலாம். பெரும்பாலான வீடுகளில் இத்தகைய ஒருமுனை மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முனை மின்சாரம் என்கிறோம் ஆனால், இரு வயர் வருகிறதே எனச் சந்தேகம் வரலாம். இரு வயர் இருந்தாலும் ஒன்றில்தான் ஃபேஸ் எனப்படும் பாஸிடிவ் மின்சாரம் வரும். மற்றொன்று நியூட்ரல் எனப்படும் நெகடிவ்தான். வீட்டிலுள்ள பல்புகள் மற்றும் மின்விசிறிகள் போன்றவற்றுக்கு ஒருமுனை மின்சக்தி இணைப்பே போதுமானது. தண்ணீர் இணைப்புகளுக்கு மோட்டார் பயன்படுத்தினால்கூட ஒருமுனை மின்சக்தியே போதுமானதுதான்.

த்ரீ ஃபேஸ் என்பதை மூன்று முனை மின்சாரம் எனலாம். மிக அதிக மின்சாரம் ஒரே சமயத்தில் தேவைப்படும்போது மூன்று முனை மின்சக்தி (த்ரீ ஃபேஸ் ) தேவைப்படும். தொழிற்சாலைக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கும் நிச்சயம் இந்த மின்சக்திதான் கொடுக்கப்படும். வீட்டில் குளிர்சாதனப் பெட்டி (Airconditioner) பொருத்தும்போதும் மூன்றுமுனை மின்சக்தி இணைப்புகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒருமுனை மின் சக்தி என்றால் நொடிக்கு 60 முறை என்று இதில் மின்சாரமும், வோல்டேஜுவும் மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருமுனை மின்சாரம் 230 வோல்ட் என்கிற அளவில் உள்ளது (அமெரிக்கா என்றால் 120 வோல்ட்தான்). இந்தியாவில் மூன்று முனை மின்சார இணைப்பில் 440 வோல்ட்வரை மின்சாரம் பாயும்.

மூன்று முனை மின் இணைப்பில் மின்சுற்று என்பது மூன்று மாற்று மின் இணைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம் இதில் ஒருபோதும் ஜீரோவைத் தொடாது. எனவே, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்பட வாய்ப்பு மிக அதிகம். தவிர மூன்று முனை மின் இணைப்பு மூன்று மடங்கு மின்சார லோடை இதனால் தாங்க முடியும்.

வீடுகளில் மூன்று முனை மின் இணைப்பு கொண்டவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். மின்சார வாரியம் சாலைகளில் நிலத்தடியில் நிறுவும் மூன்று மின் இணைப்புகள்தான் நம் வீட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றால்கூட, மற்ற இரண்டின் மூலம் நமக்குத் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். அதனால்தான் ஒருமுனை மின் இணைப்பு கொண்டவர்கள் வீட்டில் மின்சாரம் இல்லாதபோதுகூட மூன்று முனை மின் இணைப்பு கொண்டவர்களின் வீடுகளில் மின்சாரம் இருப்பதைக் காண முடிகிறது.

மூன்று முனை மின் இணைப்பு நிறுவப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் அவற்றில் ஒன்றில் மின்சாரம் வரவில்லை என்றால்கூட, வீட்டுக்குச் செல்லும் அந்த மின் இணைப்புகளையும் மின்சாரம் வந்துகொண்டிருக்கும் முனைகளுக்கு (அதற்கான சுவிட்சுகளை இயக்குவதன் மூலம்) மாற்றிக்கொள்ள முடியும்.

மூன்று முனை மின் இணைப்பு கொண்டிருந்தால் மாதாமாதம் மின்சாரக் கட்டணம் அதிகரித்துவிடுமோ என்ற கவலை வேண்டாம். இதற்கும் செலுத்த வேண்டிய கட்டணத்துக்கும் தொடர்பு கிடையாது (ஆனால், மூன்று முனை மின் இணைப்பை நிறுவுவதற்குத் தொடக்கத்தில் கொஞ்சம் அதிகம் செலவாகும்).
மிதித்தால் மின்சாரம்- சீரடி கோயிலில் புதிய திட்டம்!
இரா.தமிழ்க்கனல்



இந்தியா என்ன, உலகம் முழுவதுமே எந்தக் கோயிலில்தான் பக்தர்கள் கூட்டம் இல்லை? நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் போகிறதே குறைந்தபாடில்லை. காரணங்கள் பலமாக இருந்தாலும் ஒரே இடத்தில் பெருகும் கூட்டத்தால் உண்டாகும் விளைவுகள் என்ன எனக் கேட்டால், பலரும் நம்மை வினோதமாகப் பார்க்கக்கூடும். ஆனால் சீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களால் என்ன பயன் என சிந்தித்தவர்களுக்கு அருமையான பலன் கிடைத்திருக்கிறது. அல்ல அல்ல அவர்களால் பக்தர் சமூகத்துக்கு அதிர்ச்சிதரும் மின்சாரப்பலன்- மின்சாரம் கிடைத்திருக்கிறது. ஆம், மின்சாரமேதான்!

சீரடி சாய்பாபா கோயிலின் நூற்றாண்டு வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, பல நலத் திட்டங்களைச் செய்யவுள்ளதாக சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அறிவித்துள்ளது. சீரடி மற்றும் நாசிக்கிலும் அந்த இரு நகரங்களைச் சுற்றிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது, மலர்க்கழிவிலிருந்து ஊதுபத்திகள் செய்வது ஆகியவற்றுடன் காலடிவிசையிலிருந்து மின்சாரம் தயாரிப்பையும் தொடங்கவும் சாய்பாபா டிரஸ்ட் தீர்மானித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரஸ்ட்டின் தலைவர் டாக்டர் சுரேஷ் ஹவார், “ சீரடி கோயிலுக்கு தினமும் சராசரியாக 50 ஆயிரம் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அவர்களின் நடைமிதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றினால் பக்தர்கள் வரிசைக்கு அருகில் உள்ள விளக்குகள், மின்விசிறிகளை இயக்கமுடியும். இது வெற்றிபெறுமானால் இந்தியாவிலேயே முதல் வகைமாதிரியாக இருக்கும். அனைத்து பொது இடங்களிலும் இதுபோன்ற வசதியைச் செய்யமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.

சீரடி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சராசரியாக 50 ஆயிரமாக உள்ளது எனக் கணக்கிடப்பட்டு, அதன்படி மிதிமின்சார உற்பத்தியும் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நடை வழியில் பதிக்கப்படும் கற்களே, அவர்கள் மிதிக்கும்விசையை மின்னாற்றலாக மாற்றும். பக்தர்களின் மொத்த மிதிவிசையைப் பொறுத்தே மின்னுற்பத்தியின் அளவும் இருக்கும். இரண்டுக்கு இரண்டு அடி சதுரத்தில் 200 தரைக்கற்கள் பதிக்கப்படுகின்றன. ஒருவரின் மூலம் சராசரியாக 20 வாட் வினாடி மின்னாற்றல் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

'இரண்டு மாதங்களில் இத்திட்டத்தின் முதல் கட்டப் பணி முடிக்கப்படும்' என்று இத்திட்டத்துக்காக தரைக்கற்கள் பதிக்கும் தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் குருனால்நாயக் தெரிவித்தார்.
"சினிமா பார்த்ததில்லை... ஆனா, 17 வருஷமா திரை விமர்சகி!’’ - நியூஸ் ரீடர் ரத்னா

ANANDARAJ K



''நியூஸ் ரீடரா என்னோட பணியைத் தொடங்கி 28 வருஷம் ஆகுது. சிறப்பான அடையாளத்தைக் கொடுத்தாலும் இந்தப் பணியை இதுவரைக்கும் பார்ட் டைமாதான் பண்ணிட்டு இருக்கேன். அதே சமயம் என்னுடைய முழுநேர வேலை கார்மென்ட் பிஸினஸ்'' என உற்சாகமாகப் பேசும் சன் டிவி செய்தி வாசிப்பாளர் ரத்னா அனைவருக்கும் பரிட்சயமானவர்.

“எங்க குடும்பத்துல எனக்கு மட்டும்தான் தமிழில் ஆர்வம் அதிகம். கூடவே உலக நடப்புகளை தவறாம தெரிந்துகொண்டு நண்பர்களோடு விவாதிக்கவும் செய்வேன். அதனாலேயே நியூஸ் ரீடர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். தனியார் சேனல்களோட வருகை இல்லாத அந்த காலகட்டத்துல பொதிகையில செய்தி வாசிப்பாளர் வேலைக்கு தேர்வாகிறது குதிரைக் கொம்பான விஷயம். எம்.காம்., காஸ்ட் அக்கவுன்டிங் கோர்ஸ் முடிச்சுட்டு, 1989-ம் வருஷம் பொதிகை சேனல்ல இன்டர்வியூக்குப் போனேன். 250 பேர் கலந்துகிட்ட செய்தி வாசிப்பாளர் வேலைக்கு, இறுதியா நான் உள்ளிட்ட ரெண்டு பேர்தான் தேர்வானோம். அங்க சில மாசம் வேலை பார்த்துட்டு சின்ன பிரேக் எடுத்துகிட்டேன். அப்ப ஆரம்பமானது சன்.டிவி. உடனே அங்க நியூஸ் ரீடரா என்னோட மீடியா மறுபிரவேசத்தை ஆரம்பித்தேன். இத்தனை வருஷ காலமா எல்லாருக்கும் பரிட்சயமான பெண்ணா வலம் வர்றேன். சன் டிவியில சேர்ந்த பிறகுதான் என்னோட கிராஃப் உயர்ந்தது" என்பவர் தன் பணி அனுபவத்தில் மறக்க முடியாத நிகழ்வுகளைக் கூறுகிறார்.



"ஒண்ணா இரண்டா... ஊடக பயணத்துல ஏராளமான சுவாரஸ்யமான, மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களை சந்திச்சிருக்கேன். சுனாமியும், கும்பகோணம் தீ விபத்தும் என் வாழ்நாள்ல மறக்க முடியாத துயர சம்பவங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘திடீர்னு கடல் சீற்றத்தால மிகப்பெரிய அளவுல சேதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே ஆஃபிஸ்க்கு கிளம்பி வாங்க’னு போன் வந்துச்சு. அப்போ என்னோட பையனும், பொண்ணும் மூணு மாச கைக்குழந்தைகளா இருந்தாங்க. இந்தச் சமயத்துல 'துக்கமான செய்தியை படிக்க போய்தான் ஆகணுமா? முடியாதுனு சொல்லேன்னு வீட்டுல சொன்னாங்க. ஆனா 'தொழிலுக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்தாகணும்'னு சொல்லிட்டு, நானும் பதறியடிச்சு ஆஃபிஸ்க்குப் போனேன். சுனாமி வீடியோ க்ளிப்பிங் எல்லாம் பார்த்ததும் இது என்ன ஹாலிவுட் படத்துல பார்க்கிற மாதிரி இருக்குது. செய்திகள் எல்லாம் நிஜமா கனவானு என் மனசுல உறுதிபடுத்திக்கவே நேரமாச்சு. அடுத்து தொடர்ச்சியா ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை சிறப்பு செய்திகளைச் சொல்ல, அதை எதிர்நோக்கி தமிழகமே காத்துகிட்டு இருந்துச்சு. அச்செய்திகளில் நூற்றுக்கணக்குல உயிரிழப்புன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறதையும், அந்தக் காட்சிகளை பார்க்கும்போது மனசுக்குள்ள பயங்கரமான பதற்றமும், ஆதங்கமும் இருந்துகொண்டே இருந்துச்சு.

அதே போல கும்பகோணம் பள்ளி தீ விபத்துல குழந்தைகள் உயிரிழந்து அவங்களோட உடல்களை ஸ்டெச்சர்லேயும், வாழை இலையிலயும் எடுத்துக்கிட்டு போறதை பார்த்து செய்தி வாசிச்சப்போ உள்ளுக்குள்ளே சொல்ல முடியாத துக்கம். இப்படியான செய்திகளை எல்லாம் படிக்கிறப்போ தனிப்பட்ட உணர்வுகளை முகத்துல காட்டிக்காம செய்தி படிச்சுட்டு, வீட்டுல வந்து அழுத தருணங்கள் ஏராளம்'' என்பவர் தனக்கு இன்னும் ஓர் அடையாளம் கொடுத்த திரைவிமர்சனம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.



“ஆரம்பத்துல திரைவிமர்சனம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்த உமா பத்மநாபன் மேடம், புதிசா தொடங்கிய ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி தொகுப்பாளரானாங்க. அதனால நேரப் பிரச்னை ஏற்பட்டு திரைவிமர்சனத்தை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. 17 வருடங்களா 850 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி உலகம் முழுக்க எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்துச்சு. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை தெரிஞ்சுகிட்டுதான் அடுத்து அப்படத்தைப் பார்க்கவே போவாங்க. ஆனா பெரும்பாலும் அப்படங்களை நான் பார்க்காமலேயே எங்கள் குழு தயாரித்துக் கொடுக்கிற தகவல்களை மட்டும் படிப்பேன். ‘அந்தப் படத்தைப் பார்க்கலாமா? நல்லாயிருக்குமா’னு என்னை சந்திச்சும், போன் வாயிலாவும் கேட்பாங்க" என்பவருக்குப் புடவைகள் என்றால் அலாதியான பிரியம். அதனால் நவீன உடைகள் அணியாமல் தனக்குப் பிடித்த வெரைட்டியான புடவைகளை அணிந்துதான், ஆரம்பம் முதல் இப்போ வரையிலும் ஊடகத்தின் முன்பாகத் தோன்றுகிறார்.

"சினிமாவுல நடிக்கிற வாய்ப்பும் பல முறை வந்தும் அதை மறுத்துட்டேன். ஆனா சினிமாவுல செய்தி வாசிக்கிற மாதிரியான காட்சிகள்ல நான்தான் நிறையவே தோன்றியிருக்கிறேன். இப்படி 28 வருஷமா மீடியா தொடர்புல இருந்தாலும், இது பார்ட் டைம் வொர்க்தான். ஊடக பயணம் தொடங்கிய சமயத்தில் தனியார் நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் வேலையும், அடுத்து அரசு நிறுவனத்தில் பல வருஷம் மார்க்கெட்டிங் வேலையும் செய்தேன். இப்போது கடந்த 12 வருஷமா கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் வேலையைப் பெரிய அளவுல செய்துகிட்டு இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் ஆடை வகைகளை, மற்ற இடங்களில் இருந்து வாங்கி சேல்ஸ் பண்ணிகிட்டு இருக்கேன். நேரத்தைச் சரியா பயன்படுத்தி மீடியா, பிசினஸ், இசை, தியானம், யோகான்னு எப்போதும் மகிழ்ச்சியோடு இயங்கிட்டு இருக்கிறேன்" எனப் புன்னகைக்கிறார் ரத்னா.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!

எம்.மரிய பெல்சின்


நாவல்... ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில் தானாக வளரும் ஒரு மரம். இதற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் ஜம்பலம், பிளாக்பிளம் என்பார்கள். இதன் முழுத்தாவரமும் துவர்ப்புச்சுவை, குளிர்ச்சித்தன்மை கொண்டது.



நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும். இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

நாவல் மரத்தில் அதன் பழம் நிறைந்த சக்தி கொண்டது. இதில் வெள்ளை நாவல் என்ற ஒருவகை மரம் சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது. மேலும் ரத்த சிவப்பு அணுக்களை பெருகச்செய்வதுடன் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இன்னொரு வகையான ஜம்பு நாவல் வாத நோய் மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது.



பழங்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கக் கூடியது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இதில் உள்ள குயுமின் என்ற ஆல்கலாய்டு தோலில் சுருக்கம் விழுவதைத் தடுக்கும். இதன்மூலம் வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும்.

நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன் சேர்த்து இரண்டு நாள்கள் காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு போன்றவை சரியாகும்.

நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.

பழம் மட்டுமல்லாமல் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை - மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும். வேப்பம்பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல்கொட்டை பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் பொடியுடன் நாவல் விதை சம அளவு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் குறையும். விதைச்சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.

இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டு வந்தால் பேதி கட்டுக்குள் வரும். இதன் பட்டையை அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கால் லிட்டராக ஆனதும் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்புளித்து வந்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு தொண்டை அழற்சி சரியாகும்.




நாவல் மர வேர் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும். இதன் வேரை டம்ளராக வடிவமைத்திருக்கிறார்கள். அதில் இரவில் நீர் ஊற்றி காலையில் அந்த நீரை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
'ஏமாற்றியவன் மீது நடவடிக்கை எடுங்கள்'... நீதி கேட்டு சிலம்புடன் நிற்கும் மதுரையின் நவீன கண்ணகி!

ஈ.ஜெ.நந்தகுமார் செ.சல்மான்

காதலித்து, சேர்ந்து வாழ்ந்து, திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கோமதி என்ற இளம்பெண் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணகியைப் போல, கையில் சிலம்போடு நீதி கேட்டு வந்தது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



"திருமண ஆசைகாட்டி காதலித்த காதலன், மூன்று வருடம் தன்னிடம் தொடர்பில் இருந்துவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். இவரால் கரு உண்டாகி, இரண்டுமுறை கலைத்துள்ளேன். காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீங்கள்தான் நியாயம் வழங்க வேண்டும்" என்று கையில் சிலம்புடன் கண்ணகியைப் போல நீதி கேட்டு இன்று காலை இளம்பெண் ஒருவர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவரிடம் பேசினோம், " என் பெயர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி. செல்லூரில் இருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு கீழவாசல் சர்ச்சுக்கு சென்றபோது, டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரைப் பார்த்தேன். அடிக்கடி அங்கு அவரைப் பார்த்த நான், அவரை காதலிக்கத் தொடங்கினேன்.

எப்போது திருமணம் செய்யலாம் என்று கேட்டால், தன் அக்காவுக்கு திருமணம் முடிந்ததும் செய்யலாம் என்று சொல்லி என்னிடம் நெருங்கிப் பழகியதால், என் வயிற்றில் இரண்டுமுறை குழந்தை உண்டானது. அவரின் கட்டாயத்தால் அதைக் கலைத்தேன். ஆனால், கடைசியில் என்னை முழுவதுமாக கைகழுவி, பார்க்கிறதை பார்த்துக்கோன்னு சொல்லிட்டுப்போயிட்டார். என் தாய் இறந்துவிட்டார். என் தந்தை படுத்தபடுக்கையாக உள்ளார். எந்த ஆதரவுமில்லாமல் அநாதையாக நிற்கிறேன். எனக்கு உதவ யாருமில்லை. சில மாதங்களுக்கு முன்பு, செல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்; நடவடிக்கை இல்லை. சமீபத்தில் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் கண்ணகி நீதி கேட்டதுபோல கலெக்டரிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன்" என்றார். இவரின் புகாரை விசாரிப்பதாகச் சொல்லி, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மனுவை வாங்கிக்கொண்டு அனுப்பினார்கள்.
vikatan.com

''ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டதில்ல. ஆனா, அ.தி.மு.க-வ நினைச்சா கவலையா இருக்கு!" ஜெ. சமாதியில் பெண்கள் குரல் #SpotVisit

குமரகுருபரன்

மு.பார்த்தசாரதி



“தமிழ்நாட்டுல என்னவெல்லாமோ நடந்துகிட்டு இருக்கு. ஆளுங்கட்சியான அதிமுக உடைஞ்சு மூணு கட்சியா கிடக்குது. இப்போத்தானே தெரியுது. அந்த மனுஷியோட அருமை பெருமையெல்லாம். ஒண்ணே ஒண்ணு, ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாவே சொல்லுறேன்யா. நான் ஓட்டுப்போட்டது என்னவோ வேற ஒரு கட்சிக்குத்தான். ஆனா, ஜெயலலிதாம்மா இறந்ததுக்கு அப்பறமா, இத்தனை வருசத்துல ஒருமுறை கூட அவங்களுக்கு ஓட்டுபோடாம விட்டுட்டோமேன்னு நெனச்சு தவியா தவிக்குறேன்” மெரினாவிலுள்ள அம்மா சமாதியை சுற்றிப்பார்க்க வந்திருக்கும் சேலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் கண்கள் கசிய வந்துவிழும் வார்த்தைகள் இது.





அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் சூழலில் நேற்று முன்தினம் டெல்லி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி.தினகரனின் பின்னால் மூன்றாவதாக ஓர் அணி திரண்டு நிற்கிறது. என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை. அதிமுகவுக்கு எப்போ முடிவு கிடைக்கும். தமிழ்நாட்டுக்கு எப்போ விடிவு பொறக்கும்னு ஏங்க ஆரம்பித்துவிட்டார்கள் நம் மக்கள். ஒருபக்கம் தினகரனின் வருகையை ஆதரிப்பதாக பல எம்.எல்.ஏக்கள் சொன்னாலும் மறுபக்கம் அதையெல்லாம் நம் நெட்டிசன்கள் ஒரே ஸ்டேட்டஸில் காலி பண்ணிவிடுகிறார்கள்.



எம் மக்காள்...

தூதுவன் ஒருவன் வருவான்...

அந்தச் சமயத்தில் மாரி பொழியும்...

அவர்தான் டி.டி.வி. தினகரன்

இது தினகரனின் வருகையையும் அன்று லேசாக மழை பெய்ததையும் வைத்து நெட்டிசன் ஒருவர் கலாய்த்து போட்டிருந்த ஸ்டேட்டஸ். இது சாம்பிள்தான். இதேபோல பல ஸ்டேட்டஸ்கள் உலவிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளம் தொடங்கி டீக்கடை பெஞ்ச் வரையிலும் முக்கியமான டாப்பிக்காக பேசப்படும் தினகரனின் மூன்றாவது அணி பற்றி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வரும் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற ஆர்வத்தோடு மெரினா கிளம்பினோம்.



“நான் ஆத்தூர்ல இருந்து வர்றேன். அம்மா இடத்துக்கு இதுவரையிலும் நாலு முறை வந்திருக்கேன். அந்த அம்மா புண்ணியவதியா வாழ்ந்தவங்க. மக்களுக்கு தாராளமா நல்லது செஞ்சாங்க. அவங்க கண் அசைவுக்கே கட்டுப்பட்டு நின்னவங்க எல்லாரும் இப்போ நாம வச்சதுதான் சட்டம், அதிகாரம்னு தலையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இவங்க இப்புடிலாம் அடிச்சிக்கும்போதுதான் தெரியுது இத்தனை வருசமா அந்த அம்மா இவங்களை கண்ட்ரோல்ல வெச்சிக்க எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பாங்கன்னு. அவங்க கஷ்டத்துக்கெல்லாம் ஒரு நல்ல முடிவு கிடைச்சா சரிதான்” என்கிறார் சிவகாமி.



“என்பேரு மகாலெட்சுமி. நான் காலேஜ் ஸ்டூடண்ட். அம்மா சமாதிக்கு இப்போதான் முதல்முறையா வர்றேன். இந்த இடத்தை ரொம்பவே நல்லா மெயிண்டெய்ன் பண்ணி வெச்சிருக்காங்க. ஆனா, அம்மாவோட கட்சிய மட்டும் நட்டாத்துல விட்டுட்டாங்க. யாரு எப்ப வருவாங்கன்னே தெரியல. வடிவேலு சொல்லுற மாதிரி திடீர் திடீர்னு ஒடையுதாம் சாயுதாம் மொமன்ட் தான் நியாபகத்துக்கு வருது” கூலாக சொல்கிறார் மகா.



“ஒரு குடும்பத்துக்குள்ள நாலு பேரை வச்சு சமாளிக்கவே முடியாது. ஆனா, அந்த அம்மா தமிழ்நாட்டையே கைக்குள்ள வெச்சிருந்தாங்க. அவங்க எனக்கு அடுத்து இவர்தான் முதல்வர்னு மறைமுகமா ஒருத்தர கைகாட்டிட்டு போனாங்க. அவர் கொஞ்ச நாள் இருந்தாரு. இப்போ வேற யாரோ ஒருத்தர் இருக்காராம். அவரு பேருகூட வாயில வரமாட்டேங்குது. இன்னைக்கு என்னடான்னா இன்னொருத்தரு வந்துடுவாருபோலன்னு பேசிக்கிட்டு இருக்காங்க. என்ன நடக்குதுண்ணே புரிய மாட்டிங்குது. அந்த அம்மா அரும்பாடுபட்டு வளத்த கட்சிய காப்பாத்த ஒருத்தரால கூடவா முடியாம போயிடுச்சு” வேதனையை வெளிப்படுத்துகிறார் துப்புரவுத் தொழிலாளியான செல்வி.

“இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சிகள்ல ஒன்னா இருந்த அதிமுக இப்போ அச்சாணி இல்லாத வண்டியோட நிலைமை எப்படியோ அப்படித்தான் கெடக்குது. நீ முதல்வரா நான் முதல்வராங்குற இவங்க போட்டியில அம்மாவோட கொள்கைய மதிக்காம போய்ட்டாங்க. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் இவங்கள்ல யாரு வேணா முதல்வரா வரட்டும். ஆனா, எங்களுக்கு அம்மாவோட ஆசை நிறைவேறணும் அவ்ளோதான்” என்கிறார் ஜெஸி.



மழையில் முளைத்த காளான்களாய் யார் வேண்டுமானாலும் திடீர் திடீரென முளைக்கலாம். ஆனால், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர்கள் வெகு சிலரே. சிந்திப்பார்களா தற்போதைய தலைவர்கள்.
100 நாள்கள்.. 100 நாடகங்கள்.... அசத்தும் மதுரை கிராமம்!

நமது நிருபர்

கிராமத்துக் கோயில் திருவிழா என்றால், ஒரு கரகாட்டம், ஒரு ஆடல் பாடல், ஒரு பாட்டுக்கச்சேரி என விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல், நாடகத்தை மட்டும் திருவிழாவாக நடத்தும் கிராமம் ஒன்று மதுரை அருகே உள்ளது. அதுவும் ஒன்றிரண்டு நாள்கள் அல்ல; சுமார் 100 நாள்கள் இந்த நாடகத் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் என்றவாறு 100 நாடகங்கள் இங்கு நடைபெறுகின்றன. மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் நான்குவழிச் சாலையில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வலையங்குளம் கிராமம்.



`கிராமங்களின் அழகே திருவிழாக்கள்தான்' என்று கூறுவார்கள். இந்தக் கிராமமும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நூறு நாள்கள் களைகட்டும் திருவிழா, இங்கு தானாகத் தோன்றி குடிகொண்டிருக்கும் தனலிங்கப் பெருமாளுக்காகத்தான் நடைபெறுகிறது. நவீன உலகத்தில்கூட பெண்களை இந்தக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. அவர்கள் வெளியே இருந்தபடி கடவுளை வணங்குவதுதான் இந்தக் கோயிலுக்கான மரியாதையாக நினைக்கிறார்கள் இந்தக் கிராம மக்கள். கோயிலுக்கு முன்பாக நாடக மேடை அமைந்திருக்கிறது. இதை அவர்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். காலில் செருப்பை அணிந்து யாரும் இந்த மேடைக்கு அருகேகூடச் செல்லக் கூடாது. அதேபோல் நாடகத்தைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் இந்த மேடையில் அரங்கேற்றக் கூடாது.

இப்படி நாடகத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்குறித்து டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில், 'நாடகத்தின் முக்கியத்துவம் மற்றும் மேடை நடிப்புப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பாக்யஸ்ரீ தாக்ரே அவர்களிடம் பேசியபோது...

``நாடகம்தான் மனித உணர்வை சமூக அமைப்பிடம் கொண்டுசேர்க்கிறது. ஆன்மிகரீதியில் சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும், சமூக விழிப்புஉணர்வையும் கட்டமைப்பையும் நிர்ணயிக்க, நாடகங்களே அவசியமாகின்றன. இது வளரும் தலைமுறையினரிடம் அழிந்துவிடுமா என்ற பயம் இருந்தாலும்கூட, நம்பிக்கையுடன் நாடகக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி மகிழ்விப்போம்" என்றார்.



``இந்தக் கிராமத்தில் நாடகத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?'' என்ற கேள்வியை, கிராம முன்னாள் தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ``இந்தக் கோயிலில் இருக்கும் தனலிங்கப் பெருமாள் ஒரு நாடகப் ப்ரியர். அதனால் இங்கு இருக்கும் மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவைத்தால் ஒரு நாடகம் நடத்திக்கொடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். பிறகு, காணிக்கையாக நாடகத்தை நடத்துகிறார்கள். இப்படி நாடகங்களை நடத்துவது இறைவனின் விருப்பமும்கூட.

இப்படி நாடகம் நேர்த்திக்கடனாக மாறியதற்கு ஒரு காரணமும் உண்டு. ஒருமுறை, இந்தக் கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மழைவேண்டி மக்கள் நாடகம் நடத்துவதாக வேண்டிக்கொண்டார்கள். அந்த ஆண்டு மழை வந்து, ஊர் செழித்தது. அடுத்த வருடமும் இந்த நாடக விழாவை நடத்தினர். அன்றிலிருந்து இன்று வரை இந்தப் பழக்கம் நடந்துவருகிறது.



நாடகத்தை நேர்த்திக்கடனாக நடத்த நினைப்பவர்கள், நினைத்தவுடன் நடத்திவிட முடியாது. அதற்கு ஒரு வருடம் முன்பே முன்பணம் கொடுத்து, கோயிலில் பதிவுசெய்ய வேண்டும். அதன் பிறகு இவர்களுக்கு நாடகத்தை நடத்த உரிய தேதி வழங்கப்படும். அந்தத் தேதியில்தான் இவர்கள் நாடகத்தை நடத்த முடியும்.

ஒரு நாடகத்தை நடத்த குறைந்தபட்சம் 25,000 ரூபாய் செலவாகிறது. இதுவே சினிமா கலைஞர்கள் அல்லது மிகப்பெரிய நாடகக் கலைஞர்களை வைத்து நாடகம் நடத்தினால், ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். தமிழகத்தில் இருக்கும் அனைத்து நாடகக் கலைஞர்களும் இந்த நாடக மேடையில் நடித்திருக்கிறார்கள் என்பது இந்தத் திருவிழாவின் தனிச்சிறப்பு.

இந்தப் பாரம்பர்யம், மன்னர் திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அன்று நாடகம் ஆரம்பமாகும். அன்றிலிருந்து 100 நாள்கள் தொடர்ந்து நாடகம் நடக்கும்.

முதல் நாடகம் எப்போதும் `அபிமன்யு சுந்தரி'தான். 425 வருடங்களுக்கு முன்பு, இந்த நாடகம் நடந்துகொண்டிருக்கும்போது மன்னர் திருமலை நாயக்கர் வந்து பார்வையிட்டு உள்ளம் குளிர்ந்து பாராட்டினார். அதனால் அந்த நாடகத்தில் நடித்தவர்களுக்கு `திருமலை மெச்சினார்' என்ற பெயரும் வந்தது.

ஒவ்வொரு வருடமும் இந்த நாடகத்தைத் தொடங்கிவைப்பது இந்தத் திருமலை மெச்சினார் பரம்பரைதான்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நாளன்று நாடகத் திருவிழாவை முடிப்பார்கள். இந்தக் கடைசி நாளன்று பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா முடியும்" என்றார்.



நாடகம் தொடங்குவதற்கு முன் மேளதாளத்துடன் மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கோயிலுக்கு வருவார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில், வெளிச்சத்துக்காகத் தீப்பந்தங்களை ஏந்தி வருவது வழக்கம். இன்றுகூட அந்தச் சம்பிரதாயங்களைக் செய்துவருகின்றனர் அந்தக் கிராம மக்கள்.

தீப்பந்தம் நாடக மேடைக்கு வந்ததும், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஊரிலுள்ள அனைவரும் கடவுளுக்கு மரியாதை செலுத்திய பிறகு நாடகம் தொடங்குகிறது. இப்படி இரவு 10 மணிக்குத் தொடங்கும் நாடகம், மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடக்கும். அதுவரை கோயில் நடை திறந்தே இருக்கும். கோயிலிலுள்ள இறைவன் நடக்கும் நாடகங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். நாடகத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களையும் இந்த ஊர் மக்கள் கடவுளுக்கு இணையாக மதிக்கின்றனர்.

"இங்கு வந்து நாடகம் போடுவதாக வேண்டிக்கொண்டால், எப்படிப்பட்ட மனக்குறையும் உடனே நிவர்த்தியாகிவிடும் என்பது இந்த ஊர் மக்களின் தீராத நம்பிக்கை. குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதியர் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அடுத்த வருடமே குழந்தையோடு வந்து தங்களது நாடக நேர்த்திக்கடனை நிவர்த்திசெய்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் துடிப்பான தெய்வம்" என்று பெருமையோடு கூறுகிறார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.
வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நடப்பட்ட 50 வயது அரச மரம்..!

ஆர்.குமரேசன்





ஒரு மரம் என்பது மரம் மட்டுமல்ல...மனிதன் சுவாசிப்பதற்கான பிராணவாயு பெட்டகம். பறவைகள் முதல் எறும்பு வரை, புழு,பூச்சி முதல், கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் வரை வசிக்கும் அபார்ட்மென்ட். எத்தனையோ உயிர்களுக்கு உணவாக, உறைவிடமாக இருக்கும் மரங்களை, நாம் என்றுமே மகத்தானதாக பார்ப்பதில்லை. அவற்றை வெறும் மரமாகவே பார்க்கிறோம். அந்த பார்வை குறைபாடுதான் இத்தனை சூழலியல் சிக்கல்களுக்கும் காரணமாகியிருக்கிறது. சின்னஞ்சிறிய விதை மண்ணில் விழுந்து, தன்னெழுச்சியாய் முளைத்து, தன் மென்மையான துளிர்கள் மூலமாக பூமியை துளைத்து வெளியே வருவது முதல், செடியாகி, கிளைந்து, மரமாகி, காய், கனிகள் கொடுப்பது வரை எத்தனை இடர்களை சந்தித்து வளர்கிறது ஒருமரம். அத்தனையும் தாங்கி ஆண்டுக்கணக்கில் நிற்கும் ஒரு மரத்தில் இருந்து மனிதன் கற்றுகொள்ள பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. வெயில், மழை, பனி என எத்தனையோ போராட்டங்களைத் தாங்கி, வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களை தங்கள் தேவைக்காக சிலமணி நேரங்களில் வெட்டி எறிந்துவிடுகிறோம். தான் வாழ்ந்த காலமெல்லாம் நமக்கு உயிர்காற்றை ஊட்டிய மரங்களுக்கு நாம் செய்யும் நன்றி இதுதானா?

இந்தக் கேள்வி, 50 ஆண்டுகள் பழமையான ஓர் அரசமரத்திற்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே உள்ள ஏ.எம்.சி சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் கட்டடம் கட்ட நினைத்த தனியார் நிறுவனம், அந்த மரத்தை அப்புறப்படுத்த நினைத்தது. இந்தத் தகவல் ஏற்கெனவே திண்டுக்கல்லில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமை உண்டாக்கி வரும் திண்டி மா வனம் அமைப்பினருக்கு தெரிந்ததும் அரசமரத்தை காக்க களமிறங்கினர். தனியார் நிறுவனத்தினரிடம் பேசி, அவர்களின் அனுமதியோடு மரத்தை, வேரோடு பெயர்த்து நடும் பணியை தொடங்கினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி மரத்தை வேரோடு பெயர்த்து, புதிதாக நடுவது இதுவே முதல்முறை என்பதால் பொதுமக்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.





மரம் வேரோடு பறிக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரம் நடுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், 12 அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுக்கப்பட்டது. அந்த குழியில், அரசமரம் இருந்த இடத்தின் மேல்மண்னை மூன்றடிக்கும், வேர்மண்ணை இரண்டடிக்கும் கொட்டி, தண்ணீர் ஊற்றி குழி தயார் செய்யப்பட்டது. அதற்கு மேல், மரம் வேர்விடும் வகையில் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய மண்கொட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, மரத்தை வேரோடு அகற்றும் பணி தொடங்கியது. 70 அடி உயரம் இருந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டப்பட்டு அதன் உயரம் பாதியாக குறைக்கப்பட்டது. அடிப்பகுதியில் 10 அடிக்கும் மேல் ஆழமாகத் தோண்டி வேர்களுக்கு சேதாரமில்லாமல் மரம் சாய்க்கப்பட்டது. தாய்மண்ணோடு சாய்க்கப்பட்ட மரம், ராட்சத கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு, ரவுண்ரோடு, திருச்சி - திண்டுக்கல் புறவழிச்சாலை வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டுவரப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் மரம் கொண்டுவரப்பட்டது.



அங்கு ஏற்கெனவே தயாராக இருந்த குழியில் மரம், தாய்மண்ணோடு நடப்பட்டது. இந்த முயற்சிக்கு தனியார் நிறுவனத்தினர், வேளாண்மைதுறையினர், காவல்துறையினர் மற்றும் திண்டி மா வன உறுப்பினர்கள் அனைவருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.விஜய் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய திண்டி மா வனம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ராஜாராம், ‘‘ மரங்களின் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காகவும், திண்டுக்கல் மாவட்டத்தை பசுமைபோர்த்திய மாவட்டமாக மாற்றவேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டதுதான் திண்டி மா வனம் அமைப்பு. அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து இதை ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம். இந்த நிலையில்தான், 50 ஆண்டு வயதுடைய அரசமரத்தை காக்க வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பினர் இந்த பணியை செய்திருக்கிறோம். இந்த பணி எங்களுக்கு மனநிறைவை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் எங்கள் மூதாதையர்களைக் காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டிருக்கிறது. இந்த மரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்க காரணம், இந்த இடத்தில்தான் பல்வேறு கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள் கூடுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல நிழல் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் இதுப்போன்று தேவையில்லை என நினைக்கும் பாரம்பரியமான மரஙக்ளை வேறொரிடத்தில் நடமுடியும் என்ற செய்தியையும் அவர்கள் உணரவேண்டும் என்பதற்காக இதை செய்திருக்கிறோம். தொடர்ந்து மரத்திற்கு நீரூற்றி பரமாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பிரதிபலனும் பாராது, சமூகநலனுக்கான இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் திண்டி மா வனம் சார்பாக நன்றி’’ என்றார்.

அது பிளாஸ்டிக் முட்டை பப்ஸே இல்லையே..!’ - காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறையின் சால்ஜாப்பு

நமது நிருபர்




திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள தியேட்டர் சிற்றுண்டியில் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்ட மூன்று இளைஞர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது, பேக்கரி உரிமையாளர், முட்டை வியாபாரிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா. அதே பகுதியைச் சேர்ந்த தயாளனின் மகன் அஜீத், பாஸ்கரின் மகன் சிரஞ்சீவி. சூர்யா, அஜீத், சிரஞ்சீவி ஆகிய மூன்றுபேரும் நண்பர்கள். இவர்கள், திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள தியேட்டரில் தி மம்மி என்ற ஆங்கிலப்படத்துக்கு நேற்று மாலை சென்றனர். படத்தின் இடைவேளையில் மூன்றுபேரும், தியேட்டரில் உள்ள சிற்றுண்டியில் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அந்த, முட்டை பப்ஸ் கடினமாக இருந்துள்ளது.



இதுகுறித்து சிற்றுண்டி ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரிவர பதில்சொல்லவில்லை. சிரஞ்சீவி முட்டை பப்ஸை சாப்பிட முடியாமல் அதை நிறுத்திவிட்டார். சூர்யாவும் அஜீத்தும் பப்ஸை சாப்பிட்டு முடித்துள்ளனர். இதன்பிறகு தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்துள்ளனர். அப்போது, சூர்யாவுக்கும் அஜீத்துக்கும் திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சோர்ந்துபோனதால், பயந்துப்போன சிரஞசீவி, போன் மூலம் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக ஏரிக்கரைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தியேட்டருக்கு வந்தனர். அவர்கள், சூர்யா, அஜீத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் ஆத்திரமடைந்த மக்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மணவாளநகர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் அங்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் அங்குகிருந்து கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் தியேட்டரில் அடுத்த படக்காட்சி ரத்து செய்யப்பட்டது.




இந்த சம்பவம் தொடர்பாக சிரஞ்சீவி கூறுகையில், "நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் சூர்யா, அஜீத் ஆகிய மூன்று பேரும் தியேட்டரில் உள்ள கேன்டியனில் முட்டை பப்ஸ் சாப்பிட்டோம். பப்ஸில் உள்ள முட்டை, பிளாஸ்டிக் போல இருந்தது. இதுகுறித்து கேட்டபோது ஒன்றுமில்லை என்று கேன்டியன் ஊழியர்கள் பதிலளித்தனர். என்னால் பப்ஸை சாப்பிட முடியவில்லை. ஆனால், சூர்யா, அஜீத் ஆகிய இரண்டு பேரும் பப்ஸை முழுவதுமாக சாப்பிட்டனர். பின்னர், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, இரண்டு பேரும் தலைசுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். ஆனால், நாங்கள் கொடுத்த புகாருக்கு இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தியேட்டரில் உள்ள கேன்டியனுக்கு அந்தப்பகுதியில் உள்ள பேக்கரியிலிருந்து முட்டை பப்ஸ் சப்ளை செய்யப்ட்டுள்ளது. இதனால் பேக்கரி உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருகிறது. மேலும், பப்ஸிக்குப் பயன்படுத்திய முட்டையை வாங்கிய வியாபாரியிடமும் விசாரித்து வருகிறோம். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரை வாங்கிவிட்டோம். விசாரணை நடந்துவருவதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றனர்.



திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் இந்த சம்பவத்தில் பெரியளவில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல காவல்துறையினரும், பெரிய இடத்து விவகாரம் என்பதால் வழக்கில் அக்கறை செலுத்தாமல் சாப்பிட்டது பிளாஸ்டிக் முட்டை பப்ஸே இல்லை என்று வழக்கை முடிக்க முயற்சிப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தியேட்டரில் சாப்பிட்ட முட்டை பப்ஸை முறையாக ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் ஏரிக்கரைப் பகுதி மக்கள்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலரை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை
Last updated : 12:46 (10/06/2017)

“யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை!” கலங்கும் அற்புதம்மாள்
மு.நியாஸ் அகமது





“அவன் மட்டும் வெளியே இருந்திருந்தா, இந்நேரம் எங்களுக்கு 20 வயசுல ஒரு பேரனோ... பேத்தியோ இருந்து இருந்திருப்பாங்க.. ஜோலார்பேட்டையில மக்களோட மக்களா அமைதியான, அழகான குடும்பமா நாங்க வாழ்ந்திட்டு இருந்திருப்போம். எங்களை அவன் கையில வெச்சு தாங்கி இருப்பான்” என்று தன் நினைவில் மட்டும் கட்டமைத்துள்ள ஒரு வாழ்க்கையை நம்மிடம் பகிர்கிறார் அற்புதம்மாள்.

பேரறிவாளன் சிறைக்குச் சென்று 26 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலில், அவருக்கு பின்னால், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பரோலிலும், விடுதலையாகியும் வெளிவந்துவிட்ட சூழ்நிலையில் பேரறிவாளனுக்கு மருத்துவச் சிகிச்சைக் கூட மறுக்கப்படுகிறது.

இப்படியான சூழலில் பேரறிவாளனின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மக்களும் பேரறிவாளனுக்காக குரல் கொடுக்க களத்தில் இறங்கவிருக்கிறார்கள். நாளை (ஜூன் 11, 2017) பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை ஒருங்கிணைத்திருக்கும் நிலையில் அற்புதம்மாளுடன் பேசினோம். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் ஜெயலலிதா மீது வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது. அந்த நம்பிக்கையை அவரது பெயரைச் சொல்லி அரசாங்கம் நடத்துபவர்கள் பொய்யாக்கிக்கொண்டிருப்பதும் வெளிப்பட்டது.

“அம்மா உயிருடன் இருந்திருந்தாங்கன்னா...”



“ஜெயலலிதாம்மா மட்டும் உயிருடன் இருந்திருந்தாங்கனா நிச்சயம் என் மகன் பரோலிலாவது வெளியே வந்துருப்பான்” என்று சொல்லி முடிக்கும் முன்பே குரல் உடைகிறது அற்புதம்மாளுக்கு. வார்த்தைகளுக்கு வழிவிட, வெளியெங்கும் சில நிமிடத்துக்கு மெளனம் படர்கிறது. தன்னைதானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்குகிறார்" தமிழகத்தின் இரும்பு மனுஷி.

“ராஜீவ் கொலைக்கு பின்னாடி பல அரசியல் காரணங்கள் இருக்கு. அறிவு சிக்க வைக்கப்பட்டுருக்கானு ஜெயலலிதாம்மா புரிஞ்சுக்கிட்டாங்கப்பா... கடைசியா அவங்களைப் பார்த்தப்ப... பேரறிவாளன் ஃபைலைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல கையெழுத்து போட்டுறேனு சொன்னாங்க... ஆனா, அதுக்குள்ள என்னென்னவோ நடந்திருச்சு. அவன் பரோல்ல வந்திருந்தா கூட கொஞ்சம் எங்க வலி ஆறி இருக்கும் ”என்று கண்களைத் துடைத்துக்கொள்கிறார்.

“புல்லர் விடுதலையும்... மாநில உரிமையும்”

“1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்குல கைது செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தேவிந்திரபால் சிங் புல்லருக்கு கடந்த வருஷம் மட்டும் இரண்டு முறை பரோல் வழங்கி இருக்காங்க... ஆனால், பல முறை விண்ணப்பித்தும், அறிவுக்குத் தொடர்ந்து பரோல் கொடுக்க மறுக்குறாங்க? எனக்கு 70 வயசு ஆகுதுப்பா... அறிவு அப்பாவுக்கு 76 வயசு ஆகுது... இந்த வயசுலக்கூட நாங்க எங்க பிள்ளையோட இருக்கக் கூடாதா...? விண்ணப்பதுல எங்க உடல்நிலையைக் காரணமா சொல்லிதான் பரோல் கேட்டோம். அப்பவும் மறுத்துட்டாங்க... குறைந்த பட்சம் அறிவு உடல்நிலையையாவது அவங்க கணக்குல எடுத்திருக்கலாம்லப்பா...” என்றவர் சிறிது நேரம் மெளனமாகிறார்.

சொற்களை எடுதாளத் தடுமாறியப்படியே பேசுகிறார், “அவனுக்கு வேலூர்ல சிகிச்சை அளிக்க வசதி இல்லைனு சொல்லிட்டாங்கப்பா... அதனாலதான், ஜெயலலிதாம்மா உயிருடன் இருந்தப்ப, அறிவை சென்னைக்கு மருத்து சிகிச்சைக்காக வர அனுமதி கொடுத்தாங்க... ஆனா, இப்ப அதுக்கும் அனுமதி கொடுக்க மறுக்குறாங்கப்பா... இவங்க எல்லாம் அறிவு ஜெயிலேயே சாகணும்னு நினைக்கிறாங்களா...? யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை” என்று சொல்லும்போது வெடித்து அழுதுவிட்டார்.

இது, பேரறிவாளன் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்ல. மாநில உரிமை சம்பந்தமானதும்தான். பரோல் வழங்க மாநில அரசுக்கே உரிமை இருக்குங்கிற விஷயத்துல ஜெயலலிதாம்மா தெளிவா இருந்தாங்க... ஆனா, இன்னைக்கு அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடந்துபவர்களுக்கு அந்தத் தெளிவு இருக்கானு தெரியலை. அம்மா வழியிலதான் இந்த ஆட்சி நடக்குதுனு அவங்க சொல்றது நிஜம்னா... பேரறிவாளனுக்கு பரோல் வழங்கணும்” என்றார்.

அமைச்சர்கள் தங்கள் அறை சுவர்களிலிருந்து மட்டும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டார்களா... இல்லை தங்கள் நினைவுகளிலிருந்தும் அகற்றிவிட்டார்களா...? இரண்டு அணிகளும் அம்மா வழியில் நடப்பது உண்மையெனில், அவர்கள் இந்த 70 வயது தாயின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். வெற்று தியானங்கள்... பேரறிவாளன் விஷயத்தில் தீர்க்கமான முடிவுதான்... ஜெயாவின் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்யும்!
முடியும் தருவாயில் சாலை... இன்று பூமி பூஜை போட்ட அமைச்சர் உதயகுமார்

சே.சின்னதுரை



மதுரை டி.கல்லுப்பட்டி பகுதியில் அக்ரகாரம் சாலையில் 7 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார்சாலை சுமார் 2 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை முடியும் தருவாயில் இருக்கும்போது தற்போது அதற்கு பூமி பூஜையை போட்டுள்ளனர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், திருப்பரம்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே போஸூம்.

பூமி பூஜை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசிக்கொண்டிருக்கும்போது, எய்ம்ஸ் மருத்துவமனை வராவிட்டால் பதவி விலகுவதாக சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் மதுரையில் எய்ம்ஸ் வந்துவிடுமா என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய எம்.எல்.ஏ போஸ், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையென்றால் மதுரையிலுள்ள 10 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவோம். 10 எம்.எல்.ஏக்களில் சில எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சியிலும் வேறு அணியில் இருந்தாலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்பதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மதுரையில் எல்லா எம்.எல்.ஏக்களும் பதவி விலக வலியுறுத்துவோம்" என்றார்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால்தான் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். பலதரப்பட்ட மக்கள் இங்குவர வசதியாக இருக்கும். மதுரையில்தான் விமானநிலையம், ரயில்நிலையம், பேருந்துகள் என சகல வசதிகள் என்று சிறப்பாக உள்ளது. எனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று நினைக்கிறோம். முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம். அவர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளார் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று நம்புகிறோம்" என்றார்.

மீன் மருந்தை பெறுவதற்கு ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த ஆஸ்துமா நோயாளிகள்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத் நகரில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து விநியோகம் நேற்று தொடங்கியது. இதைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள் ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் விநியோகம் செய்யப்படும் மீன் மருந்து மிகவும் பிரபலமானது. இதைச் சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா முற்றிலும் கட்டுப்படுவ தாக கூறப்படுகிறது. இதை பெற்றுக் கொள்ள தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம்.
புகழ்பெற்ற பத்தனி சகோதரர் கள் இதைப் பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகின் றனர். உயிருடன் இருக்கும் அசரை மீனின் வாயில் தாங்கள் தயாரித்த ஆஸ்துமா மருந்தைத் திணித்து, அதனை நோயாளிகள் விழுங்கச் செய்கின்றனர். இதனால் ஆஸ்துமா முற்றிலும் கட்டுப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். சைவ நோயாளிகளுக்கும் மாற்று மருந்து வழங்கப்படுகிறது. மேலும் வீடுகளுக்கும் மருந்து கொடுத்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத், நாம்பல்லி பொருட்காட்சி மைதானத் தில் மீன் மருந்து விநியோகம் நேற்று காலை தொடங்கியது. தெலங்கானா மாநில மீன் வளம் மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் இதை தொடங்கி வைத்தார்.

மீன் மருந்து பெறுவதற்காக இந்த மைதானத்தில் 2 நாட்களுக்கு முன்பிருந்தே மக்கள் குவியத் தொடங்கினர். இவர்களுக்குத் தேவையான இருப்பிடம், உணவு, கழிப்பிட வசதிகளை தெலங்கானா அரசு ஏற்பாடு செய்திருந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தைச் சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மீன் மருந்து விநியோகம் நாளை வரை நடைபெற உள்ளது.
"டபுள் தமாக்கா" மொத்தமாக கொட்டப்போகிறது... 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!!!




7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், மாற்றிஅமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தநிலையில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்தவாரம் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில் 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது 25 சதவீதம் முதல் 27 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள், அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என இருக்க வேண்டும், இதை அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வே உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.

அதில் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அகவிலைப்படி உயர்வு, சலுகைகள் அதிகரிப்பு ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது, 27 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது, இதர நகரங்களுக்கு 24 சதவீதம் வரை இருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றி அமைக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளுக்கான தொகை ஜூலை மாதம் 18 தேதிக்கு பின் மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு முன்தேதியிட்டு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
Dailyhunt
தீண்டிவிட்டு போன தீயே...மீண்டும் அழைப்போம் கணபதி ஹோமத்திற்கு...சென்னை சில்க்ஸ்-ன் உத்வேக விளம்பரம்!

சென்னை : தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டட மீண்டும் அதே இடத்தில் கட்டப்படும் என்று அந்த நிறுவனத்தினர் நம்பிக்கையூட்டும் விளம்பரத்தை செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள 'தி சென்னை சில்க்ஸ்' துணிக் கடையில் கடந்த மே 31ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது உள்ளே சென்று தீயை அணைப்பதற்கான கட்டுமான வசதிகள் இல்லாததால் 3 நாட்களாக விட்டு விட்டு தீ எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் செல்லவே கடந்த ஒரு வாரமாக மக்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஜூன் 4ம் தேதி முதல் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்களில் கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கட்டட இடிபாட்டுப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஜா கட்டர் என்னும் ராட்சத கருவியைக் கொண்டு கட்டடம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விட்டு விட்டு எரிந்த தீ விபத்து மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியது. ஆனால் கட்டடம் எரியும் காட்சிகளை பார்த்து அதில் பணியாற்றியவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். தங்களின் பணி என்னவாகும், சம்பளம் என்னவாகும் என்று அனைவரும் கலக்கத்தில் இருந்தனர்.

ஆனால் பல கோடி இழப்புகளை சந்தித்த போதும் ஊழியர்களை கைவிடாத தி சென்னை சில்க்ஸ் நிர்வாகம், தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதியே சம்பளம் வழங்கியது. இதோடு பணியாளர்கள் சென்னை சில்க்ஸ்ன் வேறு கிளையில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் இன்று உத்வேக விளம்பரம் ஒன்றை வெளியிட்டள்ளது. அதில்...

எனது உருவம்...என்னை உருவாக்கியவரின் வியர்வைத் துளிகள்!

எனது புகழ்...மக்கள் கொடுத்த நற்பரிசு!

எனது கடமை...என்னுள் உழைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள்!

குடும்பங்களின் குதூகலத்துடன், சிறார்களின் சிறு கனவுகள்...

ஆடவரின் ஆர்ப்பரிப்புகள்..

மங்கை, மடந்தையகளின் கொண்டாட்டங்கள்...

மணமக்களின் மகிழ்ச்சிகள்...

என எல்லாம் அரங்கேறும்

அரண்மனை நான்....

அனைத்தும் அறிந்த தீயே...

மறந்தும் என்னை தழுவலாமா?

நொறுங்கியது நான் மட்டுமல்ல...கணக்கில்லா இதயங்களும் தான்....

விரைவில் உன்னையும் அழைப்போம் இந்த இடத்திற்கு...

கணபதி ஹோமமாய்....

என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வில் தோல்வி என்பது சகஜம் அதை வென்று மீண்டும் வாழ்வை தொடங்க வேண்டும் என்று பரைசாற்றும் இவர்களின் விளம்பரம், எதற்கெடுத்தாலும் சோர்ந்து போகும் இன்றைய தலைமுறைக்கு உற்சாக டானிக் என்பது மறுப்பதற்கில்லை.

source: oneindia.com

Dailyhunt
சாம்பார், ரசம் மறந்த வீடுகள்! கொத்தமல்லி கட்டு 50 ரூபாய்!


மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்துக்காக ஏப்ரல் - மே மாதங்களில் 45 நாள்கள் கடலில் மீன் பிடிக்க அரசின் தடை உத்தரவு உள்ளது. இந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலம் 45 நாள்களிலிருந்து 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மீன் சந்தையில் கடல் மீன்கள் விற்க வாய்ப்பு இல்லாததால், தூண்டில் மீன், ஆற்றுமீன், நண்டு மற்றும் வெளிமாநில மீன்களே விற்கப்படுகிறது. மீன் விற்பனை இப்படியிருக்க, காய்கறி சந்தையிலும், வரத்து குறைந்துள்ளது. எவ்வளவு வரத்து குறைந்திருந்தாலும், தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், கேரட், உருளைக்கிழங்கு, பல்லாரி, நூக்கல், சவ்சவ், பீட்ரூட் , முட்டைக்கோஸ் போன்றவை சந்தையில் போதுமான அளவு கிடைக்கத்தான் செய்கிறது.

சந்தையில் கிடைக்காத பொருளாக இருப்பது, புதினாவும், கொத்துமல்லியும்தான்! இரண்டு முதல் மூன்று கட்டுகள் வரையில் ஐந்து ரூபாய்க்கு விற்றுவந்த புதினாக்கீரை, இன்று கட்டு ஒன்று 15 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. ஐந்து ரூபாய்க்கு ஒரு கட்டு விற்ற கொத்தமல்லியோ 'சின்னகட்டு' 35 ரூபாய், பெரிய கட்டு 50 ரூபாய் என்றளவில் விற்கப்படுகிறது. விலையில்லா விலையில் புதினாவும், கொத்தமல்லியும் விற்றுக் கொண்டிருப்பதால், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சந்தைகளிலும், 'கொத்தமல்லி இன்றைய விலை' என்ற பட்டியல் எங்கும் இல்லை. இந்த விலைக்கு கொத்தமல்லியை வாங்கி விற்க முடியாது என்று வியாபாரிகள் கருதியிருக்கலாம்.




"வீட்டில் சாம்பாரும், ரசமும் வைத்து எத்தனை நாள்களாகிறது" என்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது, கேட்டுப் பாருங்கள். அப்படியே நம்ம வீட்டிலும், 'ரசம்-சாம்பார்' மிஸானது எப்படி என்று வீட்டிலும் கேட்டுப் பாருங்கள். வாசலில் சின்னதாய் மண் தொட்டியில் 'தனியா' விதைகளைத் தூவிவிட்டு பத்து நாள்கள் விட்டு வைத்தால் வாசமான கொத்தமல்லியை வீட்டிலேயே விளைவிக்கலாம். கொஞ்சம் யோசிப்பவர்கள், சுவையான ரசமும், சாம்பாரும் சாப்பிட வழியில்லாமல் இருக்க வேண்டியதுதான்.

Dailyhunt

நோய்க்கு மருந்தாவார், பாவத்திலிருந்து காப்பார்... திருவான்மியூர் 
மருந்தீஸ்வரர்!

நதிகளை அழித்துவிட்டு, நாவறட்சியால் தவிக்கிறோம். மரங்களை அழித்துவிட்டு மழைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறோம். கடவுள் அளித்த கொடைகளை எல்லாம் தொலைத்துவிட்டு, கடவுளிடம் இன்னமும் வேண்டிக்கொண்டிருக்கிறோம். ஆண்டவன் குடிகொண்ட ஆலயமான இந்த உடம்பை வீணே கெடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தை நாடி அலைந்துகொண்டிருக்கிறோம். கண்ணுக்கு ஒரு மருத்துவர், காதுக்கு இன்னொரு மருத்துவர்... எனத் தேடித் தேடி அலைகிறோம். கண்ணுக்கு எதிரே, ஒரு வைத்தியரை மருந்தீஸ்வரனாக, தொண்டை மண்டலத்து வைத்தீஸ்வரனாக இருப்பதை அறிந்துகொள்வதே இல்லை. காலம் அறிய முடியாத காலத்திலேயே, அகத்தியருக்கு வந்த வயிற்றுவலியை நீக்க சித்த மருத்துவ முறைகளை, சித்துக்களின் நாயகராம் சிவனாரே வந்து போதித்த இடம்தான் திருவான்மியூர். அங்கு இருப்பவரே மருந்தீஸ்வரர்.


அகிலத்தின் நாயகன், ஓர் ஆவின் பாலை உண்டு செழித்து நின்ற இடம்தான் திருவான்மியூர். ஆம், வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காமதேனு, சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் செல்ல சபிக்கப்பட்டது. சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு. ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டுகொண்டது. பாவம் நீங்க, பாலைச் சொரிந்து வழிபட்டது. ஈசனின் மீது கொண்ட பக்தியின் அவசர மேலீட்டால், லிங்கத் திருமேனி மீது தவறி கால்பட, அதை இன்றும் திருத்தழும்பாக ஏற்றுக்கொண்டு பால்வண்ண நாதராக, அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலமே திருவான்மியூர்.

`வான்மீகம்' என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்' என்றானது என வரலாறு கூறுகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.




தொண்டை மண்டலத்தின் வெகு சிறப்பான பதினெட்டு கிராமங்களில் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது. இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... என பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருந்து வருகிறது. சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு `சொக்கநாயகி' எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோரிடம் பேசும் சக்திகொண்டவள் இந்த அன்னை. பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.

அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியதும், சித்த வைத்திய முறைகளைக் கேட்டு அறிந்ததும் இந்த ஆலயத்தின் வன்னி மரத்தின் அடியில்தான். இதனால், இந்த வன்னி மரத்தடியில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்ஸவத்தில் ஒன்பதாம் நாள் ஈசன் அகத்தியருக்குக் காட்சிதருகிறார். அதுமட்டுமா? முக்கியத் திருவிழாவான நடனக்காட்சியையும் ஆண்டுதோறும் வால்மீகி முனிவருக்கு அளித்து வருகிறார். குற்றாலத்துக்குப் பிறகு திருவான்மியூரில் நடக்கும் இந்த நடனத் திருவிழாவே இங்கு சிறப்பானது. சோழர்கால கல்வெட்டுகள் பதினாறைக் கொண்டுள்ள இந்தப் பழைமையான திருத்தலம் திருநாவுக்கரசர் பெருமான், திருஞானசம்பந்த பெருமான் என இருவராலும் பாடப்பெற்றது. இங்கிருக்கும் மருந்தீஸ்வர பெருமான் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கியே இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தரிசிக்க வந்த அப்பையதீக்ஷிதர் என்னும் பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கியே மேற்குப்புறமாகத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. இன்று திருவான்மியூர் மார்க்கெட்டாக இருக்கும் பகுதி, அப்போது மங்கள ஏரியாக பெரும் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பையதீக்ஷிதர் தரிசிக்க இயலாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.




வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ பெருமான்' என்ற பெயரில் உற்ஸவராகவும் கொண்டாடப்படுகிறார். நக்கீரர் உள்ளிட்ட பல புலவர்களாலும் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெருமான். அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள். இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும் இந்த திருத்தலத்து ஈசனும் இறைவியும், காணும்போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். இதை எழுத்தால் மட்டும் உணர முடியாது. ஒருமுறை வந்து தரிசித்துப் பாருங்கள், அதன் பிறகு மருந்தீஸ்வரரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறிவிடும் அதிசயத்தை உணர்வீர்கள். வந்த நோய்க்கு மட்டுமல்ல, நோயே வராமல் காப்பதிலும் இவரே அதிசய வைத்தியர். நம்மிடமிருந்தே பிறக்கும் எல்லா தீமையும், பாவங்களும் நீங்கவும் நீங்கள் இங்குதான் வரவேண்டும் என்கிறது தலபுராணம். சரி... வாருங்கள்... ஒருமுறை வைத்தியரைக் கண்டுவருவோம்!

Dailyhunt





குழப்பும் வலைதளங்கள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 10th June 2017 02:16 AM  |   
இப்போது அனைவரின் கைகளிலும் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) உள்ளது. அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இணையதளத்தை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுவிடுகின்றனர்.
முன்பெல்லாம் நமக்கு மின்னஞ்சலில் வந்த செய்திகளை தெரிந்துகொள்ள இணையதள வசதியுடன் கூடிய கணினி தேவைப்பட்டது. அந்த வசதி இல்லாதவர்கள் இணைய மையங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
அம்மையங்கள் மணிக்கு 60 ரூபாய் என்ற அளவில் கட்டணங்களை வசூலித்தன. இந்த கட்டணம் நாளடைவில் படிப்படியாக குறைந்து மணிக்கு ரூ.20 என்ற அளவில் தற்போது வசூலித்து வரு
கின்றனர்.
கட்டணத்தை குறைத்தாலும் அந்த மையங்களில் முன்பு இருந்தது போல் தனி அறை, ஏசி போன்ற வசதிகள் இல்லை. இதுபோன்ற வசதிகள் செய்யப்படாததற்கு அம்மையங்கள் லாபகரமாக இயங்காததே காரணம்.
இணையதள மையங்கள் லாபகரமாக இயங்காததற்கு காரணம், செல்லிடப்பேசி வழியே ஒவ்வொருவரின் கையிலும் இணையதள வசதியை அலைபேசி நிறுவனங்கள் வழங்கியதுதான். இணையதள வசதிகளை அலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும்போது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
அறிமுக சலுகைகளால் கவரப்படும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையோ இல்லையோ இலவசமாக கிடைக்கிறது என நான்கைந்து சிம் கார்டுகளை வாங்கி பர்சில் வைத்துக் கொள்கின்றனர்.
அவ்வாறு வாங்கி வைத்திருக்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி முகநூல், கட்செவி அஞ்சல் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கு செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
அவ்வாறு அனுப்பப்படும் செய்தி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் இருந்தால் பரவாயில்லை. அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
உதாரணமாக நாம் உணவில் சேர்க்கும் அயோடின் உப்பால் சிறுநீரகம் கெட்டுவிடும். எனவே அதனை பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக இந்துப்பு என்ற ஒன்று உள்ளதும் அதனை பயன்படுத்துங்கள் என்று செய்திகள் வருகின்றன.
அப்படி என்றால் இத்தனை நாள்களாக அயோடின் கலந்த உப்பை சாப்பிட்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா? இதேபோல் தனியார் நிறுவன பற்பசை ஒன்றில் நிகோடிக் அமிலம் உள்ளதால் அந்த பற்பசையை பயன்படுத்த வேண்டாம் எனவும், கோதுமை உணவை சாப்பிட்டால் தைராய்டு குறைபாடு ஏற்பட்டு மலட்டுத் தன்மை உருவாகும் எனவும் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இதுபோன்ற செய்திகளை உருவாக்குபவர்கள் யார், அதில் எந்த அளவு உண்மை தன்மை உள்ளது என்று தெரியவில்லை. அந்த செய்தி உண்மையானதானா அல்லது தவறானதா எனக்கூடத் தெரியாமல் நிறைய பேர் அதனை தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் யார் வேண்டுமானலும் எந்தக் கருத்தையும் கூறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அந்தக் கருத்து பிறருக்கு நன்மை பயக்கும் வகையிலும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். யாரையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.
கருத்து கூற விரும்புபவர்கள் உண்மையான செய்திகளை மட்டும் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இதுபோன்று சமூக வலைதளம் மூலம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பும் நபர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஏனென்றால் இதே நீலை நீடித்தால் தவறான தகவல்களை தரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிடும்.
ஏற்கெனவே அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு அனைவரிடத்திலும் பிரபலம் அடைந்த தனியார் நிறுவன நூடுல்ஸ் உணவுப்பொருளில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பான மோனோசோடியம் க்ளூட்டோமேட் உள்ளது எனக் கண்டறியப்பட்டு, அது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனியார் நிறுவனப் பாலிலும் உடலுக்கு தீங்கு தரக்கூடிய ரசாயனங்கள் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே எந்த உணவுப் பொருள் உடலுக்கு நல்லது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் சமூக ஊடகங்களான முகநூல், கட்செவி அஞ்சலில் குறிப்பிட்ட நிறுவன எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்ட நிறுவன பற்பசையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செய்திகளால் மக்களுக்கு ஏற்படும் குழப்பத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
வெளியூர்களிலிருந்து வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு நம்முடைய வீட்டு விலாசத்தைக் கூறி வரச் சொன்னால், அவர்கள் ஏற்கெனவே நம் வீட்டுக்கு
வந்தவர் என்றால் எந்தவித அலைச்சலும் இன்றி சரியாக நமது வீட்டை வந்தடைவர்.
புதிதாக நம் வீட்டிற்கு வருபவர் என்றால் கையில் விலாசம் இருந்தாலும் சிலரிடமாவது விசாரிக்க வேண்டியிருக்கும். ஆனால் செல்லிடப்பேசி வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற அலைச்சல்கள், நேர விரயம் ஆகாது.
ஏனென்றால் செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் இருந்தால் அதில் சென்று லோகேஷன் என்ற ஆப்சனை கிளிக் செய்து தேடி வரும் நபரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பிவிட்டால் போதுமானது. அவர் யாரிடமும் விசாரிக்க வேண்டியதில்லை.
செல்லிடப்பேசி தரும் தகவல்கள் மூலமே குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும். இதுபோன்று நல்ல தகவல்களை தரும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்பி வருவது மிகவும் வகுத்தமளிக்கிறது.

    Friday, 9 June 2017


    50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!!!

    7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்,மாற்றிஅமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தநிலையில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்தவாரம் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில்24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம்என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது25 சதவீதம் முதல் 27சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.

    இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள், அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம்,10 சதவீதம் என இருக்க வேண்டும், இதை அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வே உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுஇருந்தனர்.

    இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.அதில் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அகவிலைப்படி உயர்வு, சலுகைகள் அதிகரிப்பு ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது, 27 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது, இதர நகரங்களுக்கு24 சதவீதம்வரை இருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த மாற்றி அமைக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளுக்கான தொகை ஜூலை மாதம் 18 தேதிக்குபின் மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு முன்தேதியிட்டு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாகரூ.29 ஆயிரத்து 300 கோடிசெலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

    Dozen posers over NEET; Madras HC bench refers case to Chief Justice


    By Siva Sekaran  |  Express News Service  |   Published: 10th June 2017 05:07 AM  |  

    CHENNAI: A Division Bench of the Madras High Court has raised a dozen queries over the conduct of National Eligibility-cum-Entrance Test (NEET) for admission to undergraduate medical courses for 2017-18 and its applicability to the students of all types boards.
    “The above queries have to be answered by the respondents by June  27. Since all-India ramification regarding medical admissions would be caused, this court feels it appropriate to refer the matter to the Chief Justice for necessary orders,” the Bench of Justices N Kirubakaran and V Parthiban said on Friday.
    The bench was passing further interim orders on a PIL from Dr P Ramachandran of Kattumannarkoil praying for a direction to the MCI to give weightage to the marks obtained in the Plus-Two public exams too. When the matter came up before the vacation bench on May 5, the judges had directed the MCI to consider the petitioner’s a plea.
    When the matter came up again on Friday, the judges raised as many as 12 questions. They were: Is it possible to determine the calibre or intellect or merit of the students by a single NEET conducted by CBSE, when the students are studying in various systems? When the questions are set by CBSE, will it not be easy for the students who study under the CBSE stream and difficult for the non-CBSE students? Would it not enable the CBSE students who constitute only about 5-10 per cent of the total candidates to grab the maximum number of seats in the medical admission, as the question papers are based on the CBSE syllabus?
    Is it not necessary to provide a level-laying field to all the students while conducting NEET by the CBSE, especially when different systems of education are in existence in various States?
    Will the exclusion of academic performance in Plus-1 and Plus-2 examination not make the students non-serious about their school studies and concentrate only on preparation for the NEET, if the single NEET without any practical examination is used to determine the merit of the students? Will it not be appropriate to combine the +2 marks and  NEET marks in equal percentile to determine the calibre or merit of the students more accurately than to determine the same based on the single examination alone?
    Will it be possible for the respondents to conduct the NEET continuously along with Plus-Two examination so that the unnecessary extra time available for the preparation for NEET putting mental pressure on the students could be avoided? Will the consideration of NEET marks alone for medical admission not make room for mushrooming of coaching centres throughout the nation and push the academic studies to back seat? Why not the respondents prescribe uniform syllabus for Physics, Chemistry,Biology and Maths throughout India to remove the disparity among various systems?
    Is it not essential to train the teachers in the new syllabus for Physics, Chemistry, Biology and Maths and teach the students as per the said syllabus? Is the State government not responsible for dilution of standards in the education as it has not taken any steps to revise the syllabus in tune with the times and not making the students ready for the NEET? And why does the State government not appoint well trained teachers in all schools to make ready the students for facing the NEET?

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...