Wednesday, November 4, 2015

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை

logo


கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், ஒரு முக்கிய முடிவாக ரூ.4 ஆயிரத்து 949 கோடி செலவில், மராட்டிய மாநிலம் நாக்பூரிலும், ஆந்திராவில் உள்ள மங்களகிரியிலும் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணியிலும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவக்கழகம் என்ற சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மிகவும், உயர்தரமான சிகிச்சைகளை அளிக்கும் வகையிலான வசதிகளை கொண்டதாக இருக்கும். இப்போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும், 960 படுக்கைகள் வசதி நோயாளிகளுக்காக இருக்கும். மருத்துவமனையோடு, மருத்துவ கல்வி பிளாக், ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் தனித்தனி பிளாக்குகள் இருக்கும். இது மட்டுமல்லாமல், பொதுவாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர்தர மருத்துவக்கல்வி வசதியும் இருக்கும்.

இந்த மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்து இருக்கிறதே!, தமிழ்நாட்டில் எப்போது தொடங்கப்படும்? என்ற பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இந்த 3 மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கும் முடிவு இப்போது அறிவிக்கப்பட்டது என்றாலும், இதற்கான அறிவிப்பு, 2014–ம் ஆண்டே வெளியிடப்பட்டது. நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம், அனைத்து மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த உடனேயே, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு உடனடியாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குங்கள், அரசின் சார்பில் இடவசதி மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் வழங்குகிறோம் என்று கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்பு முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, பிரதமரும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வாய்ப்புள்ள 5 இடங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்ப முதல்–அமைச்சர் பிறப்பித்த உத்தரவுக்கேற்ப, தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒவ்வொரு இடத்திலும், அரசுக்கு சொந்தமான அனைத்து வசதிகளையும் கொண்ட 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அனுப்பியது.

தமிழக அரசின் கருத்துருவை பெற்றுக்கொண்ட மத்திய அரசாங்க உயர்மட்டக்குழு, கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி தமிழ்நாட்டிற்கு வந்து 5 இடங்களையும் பார்வையிட்டு, தனது விரிவான அறிக்கையை மத்திய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்தது. ஆனால், மத்திய அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழக அரசும் தொடங்கப்போகும் குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்களும், உடனடியாக இந்த 5 இடங்களில் ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசாங்கம் இந்த ஆண்டே வெளியிட்டு, சிறப்பு நிதி ஒதுக்கி உடனடியாக தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிட்டால், இதுபோன்ற எந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே, உடனடியாக இந்த பணிகளை அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்நாட்டு நலனுக்காக மேற்கொள்ளவேண்டும்.

Monday, November 2, 2015

இன்னும் ஓர் மைல் கல்!


Dinamani

By ஆசிரியர்

First Published : 01 November 2015 01:43 AM IST


நமது "தினமணி' நாளிதழின் பத்தாவது பதிப்பாக, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களுக்கான நாகப்பட்டினம் பதிப்பு இன்று முதல் வெளிவருகிறது. "தினமணி' நாளிதழின் நீண்ட நெடும் பயணத்தில் இது மற்றுமோர் மைல் கல்.

நமது 10-ஆவது பதிப்பு தொடங்கப்படும்போது, 82 ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதியாரின் 13-வது நினைவு நாளில் "தினமணி' தொடங்கப்பட்டது பற்றி நினைக்கத் தோன்றுகிறது. சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க பத்து ரூபாய் பரிசு என்று 1934-இல் அறிவிக்கப்பட்டது. "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. "தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருந்தது.

செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.

"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர்' என்று பெருமையுடன் கூறிக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது, தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.

சுதந்திரப் போராட்டக் காலத்தின் உச்ச கட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் திரட்டும் ஆயுதமாக "தினமணி' விளங்கியது.

"தினமணி'யின் முதல் பதிப்பு சென்னையில் 1934-ம் ஆண்டு உதயமானது. அதன்பிறகு 1951-ல் மதுரை பதிப்பும், 1990-ல் கோவை பதிப்பும் உருவானது. அதன்பின்னர், 2003-ல் திருச்சியிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களிலும் பதிப்புகளைத் தொடங்கிய தினமணி தனது ஏழாவது பதிப்பை அதியமான் பூமியான தருமபுரியில் 2010-ஆம் ஆண்டிலும், தலைநகர் தில்லியில் 2011-ஆம் ஆண்டிலும், விழுப்புரத்தில் 2013-ஆம் ஆண்டிலும் பதிப்புகளைத் தொடங்கி இப்போது உங்கள் "தினமணி' நாளிதழின் நாகைப் பதிப்பு இன்று மலர்ந்திருக்கிறது.

நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளுக்கென்று ஒரு தனிப் பதிப்பு தேவைதானா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஏனைய நாளிதழ்கள் எதுவுமே நாகை, திருவாரூர் பகுதிகளிலிருந்து வெளிவராத நிலையில், "தினமணி' நாளிதழ் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியது ஏன் என்று சிலர் கேட்கக் கூடும். அதற்குக் காரணம் இருக்கிறது.

தமிழகத்திலுள்ள எந்த அச்சு, ஒளி ஊடகங்களை எடுத்துக் கொண்டாலும், ஓர் ஆண்டின் 365 நாள்களில் குறைந்தது 300 நாள்களாவது நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகள் தொடர்பான ஏதாவது ஒரு செய்தி இல்லாமல் வெளி வருவதே இல்லை. அது காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்னையாக இருக்கலாம் அல்லது நாகை மீனவர்கள் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் நாகை, திருவாரூர் மாவட்டம் செய்தியில் அடிபடாமல் இருப்பதே இல்லை.

இப்படிப் பிரச்னைகள் தொடர்ந்து இருக்கும் பகுதியிலிருந்து ஒரு நாளிதழ் வெளிவரும்போது, அந்தப் பிரச்னைகளை மாநில, தேசிய அளவில் உரக்க ஒலிக்கச் செய்ய முடியும் என்பதும், அதன்மூலம் தீர்வுக்கு வழிகோல முடியும் என்பதும் எங்கள் நம்பிக்கை. குறிப்பாக, தலைநகர் தில்லியிலிருந்து வெளிவரும் ஒரே நாளிதழ் என்கிற பெருமைக்குரிய தினமணியால் மட்டுமே அது சாத்தியம் என்பதை உலகறியும்.

நாகையில் பதிப்புத் தொடங்கும்போது "தினமணி' முன்வைக்க விரும்பும் இன்னொரு கோரிக்கை, நாகை மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்பது. மயிலாடுதுறையைச் சேர்ந்த மக்கள் மாவட்டத்தின் தலைநகரான நாகைக்கு வருவதற்கு யூனியன் பிரதேசமான காரைக்கால் வழியாகவோ, திருவாரூர் மாவட்டம் வழியாகவோதான் வந்தாக வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, காரைக்கால் வழியாக வாகனங்களில் வரும் பயணிகள் புதுச்சேரி அரசுக்கு நுழைவு வரி செலுத்தும் கட்டாயமும் உண்டு.

2004-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில், சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகியவை மாவட்டங்களாகச் செயல்பட முடியுமானால், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி வட்டங்களையும், 286 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ள மயிலாடுதுறை வருவாய்க் கோட்டம் ஏன் தனி மாவட்டமாகச் செயல்படக் கூடாது என்கிற கேள்வியை "தினமணி' உரக்க எழுப்பி, அந்தப் பகுதி மக்களின் உணர்வைப் பிரதிபலிக்க விரும்புகிறது.

"தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கமும், நீண்ட நாள் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என். சிவராமனும் இட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் தொடர்ந்து நடைபோடும் உங்கள் "தினமணி' தனது பத்தாவது பதிப்புடன் வீறு நடை போடத் தயாராகிறது.

இப்போதும், ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற எண்ணத்துடனும், ஓர் ஆவணப் பதிவைத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற உணர்வுடனும்தான், "தினமணி' நாளிதழ் தினந்தோறும் உருவாக்கப்படுகிறது.

இதில் வியப்படைய ஒன்றுமில்லை. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் எங்களது நிறுவன ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் குறிக்கோளாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் இன்று வரை தொடர்கிறது, அவ்வளவே!

"எல்லா வியாதிகளிலும் மனோ வியாதியே மிகக் கொடியது. நமது மக்கள் மனதில் அடிமைத்தனம் குடி கொண்டிருக்கிறது. நமது பெரியாரிடத்தும், சிறியாரிடத்தும் அடிமைப்புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு ஒழித்து, தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்கு "தினமணி' ஓயாது பாடுபடும் என்றும், "சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திரத் தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் "தினமணி'யைத் தமிழ் மக்கள் முன்வந்து வரவேற்பார்கள் என்பது நமது பரிபூரண நம்பிக்கை என்றும் எங்களது நிறுவன ஆசிரியர் தனது முதல் நாள் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அதே காரணங்களை முன்னிறுத்தி, இப்போதும் "தினமணி'யின் பயணம் தொடர்கிறது. அந்தப் பயணத்தில் "தினமணி'யின் நாகைப் பதிப்பு மற்றுமொரு மைல் கல்.

தமிழுணர்வு, தேசியக் கண்ணோட்டம், சமத்துவச் சிந்தனை, ஆன்மிக எழுச்சி என்று தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் "தினமணி', நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் வாழ் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் பிரதிபலிக்கவும், அவர்களது நல்வாழ்வுக்கு உறுதுணையாக நிற்கவும் இன்று முதல் இந்தப் பதிப்பை வெளிக்கொணர்கிறது.

பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், இந்தியாவில் மக்களாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் எங்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கும், முகவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றி.

தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!

குடிகளும் கோடிகளும்

Dinamani



By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 02 November 2015 01:39 AM IST


"பாரத சமுதாயம் வாழ்கவே
வாழ்க வாழ்க பாரத சமுதாயம்
வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொதுஉடமை
ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கு
ஒரு புதுமை...'
- சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவில் நிகழ்ந்த போல்ஷ்விக் புரட்சியின் பின்னணியை நினைவில் நிறுத்தி பாரதியார் பேசிய பொதுஉடமை இன்று நகைப்பிற்குரியதாகிவிட்டது. ரஷியாவும் சீனாவும் இன்று தனிஉடமை ராஜ்ஜியங்களாகிவிட்ட போது பாரத சமுதாயம் எம்மாத்திரம்? முப்பது கோடி ஜனங்கள் இன்று 126 கோடியாகிவிட்டனர்.
"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டோ?' உண்டு. உண்டு. உண்டு.
சென்ற வாரம் எனக்குப் பழக்கமான ஒரு விவசாயி என்னிடம் வந்தார். "மழையை நம்பி தக்காளி பயிரிட்டேன். கருகிவிட்டது. வறட்சி தாங்கி வளர்ந்த வாடாமல்லி விலையில்லாமல் வாடிவிட்டது. வாங்கிய கடனை அடைக்க மாட்டை விற்றேன். பாலுக்கும் விலை இல்லை. மாட்டுக்கும் விலை இல்லை... மாடு விற்ற காசில் மக்காச் சோளம் போட்டுள்ளேன்... அரிசி வாங்கப் பணம் இல்லை. இட்லிக் கடையிலும் கடன்... ஐயா பெரிய மனது பண்ணி அவசரத்திற்கு ஆயிரம் ரூபாய் தாருங்கள். மக்காச்சோளம் அறுத்ததும் தருகிறேன்...' என்று கடன் கேட்டார். எனக்கு வள்ளுவர் கவனத்திற்கு வந்தார்.
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்!'
126 கோடி இந்திய மக்களில் சுமார் 3 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வேலை உள்ளது. சுமார் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தாலும், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து விவசாயம் செய்கிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வழியில்லாமல் தூக்கில் தொங்கத் தயங்குவதில்லை.
இனி பணம் இல்லாதவரைப் பற்றிப் பேசாமல் செல்வந்தர்களைப் பற்றிப் பேசலாமே! சுமார் 60 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டில் வாழ்ந்தாலும், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்வதாக கிரெடிட் சூசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு, மேலும் 24,000 கோடீஸ்வரர்களை இந்தியா உருவாக்கிவிட்டது. இரண்டு லட்சம் கோடீஸ்வரர் இலக்கை இந்தியா எட்டிவிட்ட நிலையில் இந்த உயர்வு சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
126 கோடி இந்தியர்களில் 0.4 சதவீதம் மக்களின் வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலருக்கு மேல். ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் மட்டுமே இந் நாட்டு மன்னர்கள். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்று பாடிய பாரதியின் வாக்கு பொய்த்துப் போனது. ஓட்டுரிமையுள்ள குடிமக்கள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை பெற்றுக் கொண்டு பிரஜா உரிமையை மறந்து ஊழலுக்கு விலை போனதால் ஜனநாயகம் பணநாயகமானது.
அடுத்த கேள்வி, இந்தியாவில் யார் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள்? அவர்களின் தொழில்கள் எவை என்று கவனித்தால் அரசியல், பங்குச்சந்தை, ஹவாலா, கள்ளக்கடத்தல், கனரகத் தொழில், மென்தகடு, செல்லிடப்பேசி, உலாபேசி 2ஜி, 3ஜி, 4ஜி என்று பல இருப்பினும், பல்லடுக்கு மாளிகை - ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், பங்குரிமை / பங்குத் தரகர்கள் முக்கியமானவர்கள். தேர்தல் ஆணையம் தரும் தகவல்களின்படி எம்.எல்.ஏ., எம்.பி. வேட்பாளர்களில் 90 சதவீதம் ரியல் எஸ்டேட், பங்குத்தரகு / பங்குதாரர்களாக உள்ளனர்.
இன்று எம்.எல்.ஏ. / எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அந்த வேட்பாளர் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். கோடியே முதல் முக்கியத் தகுதியாக இருக்கிறது. இது அனைத்துக் கட்சிகளுமே பொதுவாக மேற்கொண்டிருக்கும் நடைமுறை.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் "இந் நாட்டு மன்னர்கள்' தொடர்பாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 50 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்கிறது.
தில்லியில் மக்களுக்காகவே நாங்கள் என்று மார்தட்டிப் பேசி போட்டியிட்டு வென்ற அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வேட்பாளர்களில் 33 பேர் கோடீஸ்வரர்கள். அவ்வாறே பா.ஜ.க., காங்கிரஸிலும் கோடீஸ்வரர்களே பெரும்பான்மையாகப் போட்டியிட்டனர்.
இந்திய அரசியலில் எல்லாக் கட்சியினரும் கோடீஸ்வரர்களையே களத்தில் இறக்கும் காரணம், கோடீஸ்வரர்களின் வெற்றியை 26 சதவீதம் உறுதி செய்யலாம். லட்சாதிபதிகளின் வெற்றிக்கு உறுதி ஏழு சதவீதமே.
இதைவிடத் திடுக்கிட வைக்கும் ஒரு புள்ளிவிவரம், ஒரு எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அவர் போட்டியிட விரும்பினால் ஐந்தாண்டு இடைவெளியில் அவர் சொத்தைப் பன்மடங்கு பெருக்கியிருந்தால் மறுபடியும் சீட் கிடைக்க வழி உண்டு.
உதாரணமாக, தில்லி பிஜ்வாசன் தொகுதியில் 2008-இல் சத்பிரகாஷ் ராணா போட்டியிட்டபோது அவரிடம் ரூ.6.38 கோடி சொத்து இருந்தது. 2013-இல் நின்றபோது அவர் சொத்து ரூ.105.51 கோடி. ஐந்தாண்டு இடைவெளியில் தன் சொத்தை 16 மடங்கு உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.
கோடிகளைப் பற்றி பேசும்போது மற்றொரு வகையான புள்ளிவிவரத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் தரும் தகவல் அடிப்படையில் - 543 மக்களவைத் தொகுதிகள், 2,700 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள், 40 பெரிய அரசியல் கட்சிகள், 22 தேசிய மொழிக் கூட்டம் - செய்யும் செலவுகள் அடிப்படையில் இந்திய ஜனநாயகத்தின் அடக்கவிலை சுமார் ரூ.2,50,000 கோடி.
ஆகவே, அரசியல் என்பதும் ஒரு வகையான பங்குச் சந்தை சூதாட்டமே. ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பதவிக்கு இரண்டு கோடி செலவழிப்பதில் என்ன தவறு? வாக்குச்சீட்டின் விலை ரூ.500 அல்லது ரூ.1,000 என்று கொண்டாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வறுமைக்கோட்டில் வாழும் 60 சதவீத இந்தியர்களுக்கு இரண்டு நாள் கூலி, பிரியாணி, முட்டை, சாப்பாடு கிடைக்கிறதே. படித்த நகரவாசிகளுக்கும், கிராமத்து மேல்தட்டு மக்களுக்கும் பணம் பட்டுவாடா இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை பட்ஜெட் என்பது நாட்டின் நியதி ஆகிவிட்டது. இந்தியா விடுதலையான பிறகு புகழ்பெற்ற பொருளியல் மேதைகளான சிந்தாமணி தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நேருவுக்குப் பின் சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றோர் பதவி வகித்த காலகட்டத்தில் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருந்தது.
ஒரு காலகட்டத்தில் ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, ராஜாஜி, கே.எம். முன்ஷி, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அப்பழுக்கற்றத் தலைவர்கள் இந்தியாவை ஆண்டபோது சிறு சிறு ஊழல் புகார்கள் எழுந்ததுண்டு.
அரசு அதிகாரிகள் ஊழல் செய்தனர். நேரு காலத்து அமைச்சர்கள் ஊழல் என்றால் ஓட்டம் பிடிப்பார்கள். அன்று அரசியல் வியாபாரமில்லை. கக்கனைப் போல் ஒருவர் அமைச்சராக முடிந்தது. இன்று அப்படி இல்லை. ரியல் எஸ்டேட், பங்குகள், தனியார் பொறியியல் கல்லூரி என்று கோடியை அடையாளப்படுத்தும் தொழில் வேண்டும். சரி, பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு வருவோம்.
பற்றாக்குறை பட்ஜெட்டின் பன்முக வளர்ச்சிக்கு மன்மோகன் சிங் நிதியமைச்சராயிருந்தபோது வித்திட்டார். பின்னர், ப.சிதம்பரம் விருட்சமாக அதை வளர்த்தார். சிதம்பரம் சென்றார். அருண் ஜேட்லி வந்தார். எத்தனை ஜேட்லி வந்தாலும் இந்த நிலையைக் குறைப்பதோ, மாற்றுவதோ எளிதல்ல.
ஒரு சாதாரண மனிதனுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் என்ற தத்துவம் புரியாது. பற்றாக்குறை என்றால் அப்படியே விட்டுவிடுவதல்ல. பற்றாக்குறையை ஈடுசெய்ய வரம்பு மீறும் வழியில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும்.
அரசு கஜானாக்களுக்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வந்துவிடும். இப்படி நோட்டுகள் அச்சடித்து வழங்கினால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயரும். விலைவாசி உயரும்போது வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுவர். சரி சரி.
இப்படி அச்சடித்த நோட்டுகள் எங்கே போயிற்று? பல கோடி ரூபாய் செலவு செய்து எம்.பி., எம்.எல்.ஏ. ஆனவர்கள் எவ்வளவு கோடி சம்பாதித்தார்கள்? இதற்கெல்லாம் விடை வேண்டினால் ஆடிட்டர் ஜெனரல் விடை தருவார்.
2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ச ஊழல், ஆகாச ஊழல் என்று அவருக்குத் தெரிந்தவற்றைக் கூறலாம். தெரியாத கணக்குகள் எவ்வளவோ?
இந்தியாவில் மாபெரும் பதவிகளை வகித்த மாண்புமிகு அமைச்சர்களும், மாபெரும் அரசு செயலாளர்களும், தத்தம் கோடீஸ்வரர் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள லட்சம் லட்சமாகக் கையூட்டுகளைப் பெற்று வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களுக்குக் கையொப்பம் இட்டு, ஒப்பந்தப் போர்வையில் வளர்ந்த தொழில் மன்னர்கள், ரியல் எஸ்டேட் மன்னர்கள், பங்குத்தரகு மன்னர்கள் ஆகியோரையும் அரவணைத்து இரண்டு லட்சம் கோடீஸ்வரர்களை உருவாக்கினார்கள்.
இரண்டு லட்சம் கோடீஸ்வரர்களால் இது கோடி நாடு. ஆனால், இந்தியா என்று குடிமக்கள் நாடாக மாறும்?

126 கோடி இந்திய மக்களில் சுமார் 3 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வேலை உள்ளது. சுமார் 60% மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தாலும், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து விவசாயம் செய்கிறார்கள்.

சோதனை அல்ல வாய்ப்பு!


Dinamani

By ஆசிரியர்

First Published : 02 November 2015 01:37 AM IST


மக்களின் மருத்துவ நலன் கருதி சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டாம் என்றும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கும் கருத்து புதியதல்ல. இதே கருத்தை 1988-ஆம் ஆண்டும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. தற்போதைய வழக்கில், ஆந்திரம், தெலங்கானா ஆகியன குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுள்ளதால், அந்த மாநிலங்களின் நடைமுறையில் தலையிட இயலாது என்று கூறியுள்ள நீதிமன்றம், தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு இடஒதுக்கீடு அமலில் உள்ளதால் அதுகுறித்த விசாரணையை வரும் நவம்பர் 4-ஆம் தேதி எடுத்துக் கொள்ளவிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வெளியான நாள் முதல், தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் "சிறப்பு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும்' என்று தமிழக அரசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதேபோன்றதொரு வழக்கில் முன்பு தீர்ப்பு வழங்கியபோது, மருத்துவம் போன்ற உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டிய உயர் கல்வியில் திறமைதான் மதிக்கப்பட வேண்டும், இடஒதுக்கீடு போன்ற சலுகைகளில் அடிப்படையில் உயர் மருத்துவக் கல்வியில் மருத்துவர்கள் சேர்க்கப்படுவது நன்மை அளிக்காது என்று தெரிவித்திருந்தனர்.
உச்சநீதிமன்றம் ஏன் சிறப்பு மருத்துவத்தில் திறமை மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதை எந்தப் பாமரனும் புரிந்துகொள்ள முடியும். மிகவும் சிறப்பு மருத்துவர்களாக இருப்பவர்கள் தனித்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சைகளையும், நுட்பமான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க வேண்டியவர்கள். இருதயம், நரம்பியல், சிறுநீரகம், இரைப்பை, வயிறு, புற்றுநோய் என துறை சார்ந்த நிபுணத்துவம் பெறுவதற்காகவே சிறப்பு மருத்துவப் படிப்பு தேவையாக இருக்கிறது. இந்நிலையில், இத்தகைய உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் படிப்பில் இடஒதுக்கீடு தேவையில்லை என்பதையும், வெறும் வாக்கு வங்கி, ஜாதி அரசியலுக்காக இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் அனைவருமே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்போது, எவர் திறமையானவரோ, யார் சிறந்த மருத்துவர் என்று மற்றவர்கள் பரிந்துரைக்கிறார்களோ அவர்களையே சாதி வேறுபாடு பார்க்காமல் தேர்வு செய்கின்றனர். அல்லது வெளிநாடு சென்று, பெருஞ்செலவு செய்து, அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அவரவர் உயிர் என்றால் மட்டும் திறமை அவசியமாகிறது. பொதுமக்களின் தேவை என்று வரும்போது வாக்கு வங்கி, ஜாதி அரசியல்தான் முன்னுரிமை பெறுகிறது.
இன்றைய மருத்துவ உலகின் மிகப்பெரும் அவலம், திறமையுள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்றுவிடுகின்றனர். தங்களது குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ தேசப்பற்று காரணமாகவோ இந்தியாவில் பணியாற்றும் சிலரை தனியார் மருத்துவமனைகள்தான் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களை அரசு மருத்துவமனைகள் போதிய ஊதியம் அளித்து பயன்படுத்திக் கொள்வது இல்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளும், அவற்றுக்கு அரசு ஒதுக்கும் பணமும் வீணாகிப் போவதுடன், சிறந்த மருத்துவர்கள், சாதனை மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நடுத்தர மக்களின் நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் இழக்க நேரிடுகிறது. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு மட்டுமே என்பதாகவும், அதனால் ஏனோ, தானோ என்று சிகிச்சை அளிக்கலாம் என்பதாகவும் நிலைமை மாறிவிடுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் இடஒதுக்கீட்டு முறையில் சேரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களில் 99% பேர் அதிக வருவாய் பெறும் அரசு ஊழியர் குடும்பப் பின்னணி கொண்டவர்களே. கிரீமி லேயர் முறை அமலில் இல்லாததால் முன்னேறியவர்களே இந்த இடஒதுக்கீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, மற்ற தாழ்த்தப்பட்ட பின்தங்கிய மாணவர்களுக்குத் தடைக்கல்லாக இருக்கிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவத்திலும் (எம்.டி.) இடஒதுக்கீடு, சிறப்பு மருத்துவத்திலும் இடஒதுக்கீடு வழங்காவிடில், சமூகநீதி பாதிக்கப்படும் என்ற வாதம் பொருந்தாது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% எம்.பி.பி.எஸ். இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவப் படிப்புக்கு தமிழ்நாட்டில் 189 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கிறது.
தமிழக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்குவதாக இருந்தால் இந்த 189 இடங்களுக்கு மட்டும் முழுக்க முழுக்கத் திறமை அடிப்படையில் மருத்துவர்களைச் சேர்ப்பதுடன், இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும், மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாற்றவும் வேண்டும் என்பதை உறுதிமொழியாகப் பெற வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் தொடர்வதில் உள்ள சிக்கல்களுக்கு இது ஒரு தீர்வாக அமையும். மேலும், அரசு மருத்துவமனை திறமை அடிப்படையில் வந்த மருத்துவர்களால் நிரம்பும். உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு சாதகமாக மாற்றிக் கொள்ள நல்லதொரு வாய்ப்பு காத்திருக்கிறது.

போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13 ஓட்டுநர்கள் உயர் அதிகாரிகளின் உறவினர்கள்: விசாரணையில் தகவல் ....சுப.ஜனநாயகச்செல்வம்

Return to frontpage

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 1991 முதல் 2002-ம் ஆண்டு வரை, எட்டாம் வகுப்பு போலி கல்விச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஓட்டுநர்கள் 13 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்போது பணிபுரிந்த உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகத்தின் காரைக்குடி மண் டலத்தில் சிவகங்கை, ராமநாத புரம் ஆகிய இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவ கங்கை, தேவகோட்டை, திருப்பத் தூர், தேவகோட்டை பழுது பார்க் கும் மையம் ஆகிய 5 கிளைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம், மதுரை உத்தங்குடி என மொத்தம் 12 கிளைகள் உள்ளன.

இங்கு, 1991, 1992, 1994-ம் ஆண்டில் தலா ஒருவர், 1993-ல் 5 பேர், 1997-ல் 2 பேர், 1998-ல் 3 பேர், 2001, 2002-ல் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் ஓட்டுநர் பணிக்கு நியமிக்கப்பட்டனர். உண்மைத் தன்மை அறியும் சோத னையில் இவர்களது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்விச் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது.

இவர்களில் பலர் அப்போது பணியாற்றிய உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்பதால், போலிச் சான்றிதழ் எனத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, 15 பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். இவர்கள் மீது கடந்த 2005-ம் ஆண்டு குற்றச்சாட்டு குறிப்பாணை உறுதியானதால் மீதம் உள்ள 13 பேரை அதிகாரிகள் கடந்த வாரம் டிஸ்மிஸ் செய்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் `தி இந்து’விடம் கூறியதாவது:

தொழிலாளரின் பயிற்சிக் காலமான 240 நாட்களுக்குள் ளாகவே சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து நீக்கியிருக்க வேண்டும். அப்போது நியமனம் பெற்றவர்களில் பலர் காரைக்குடி மண்டல உயர் அதிகாரிகளின் உறவினர்கள்.

எனவே, போலி கல்விச் சான்றிதழ் எனத் தெரிந்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

சில நேர்மையான அதிகாரி கள் தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசின் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த உயர் அதிகாரிகள் தற்போது சென்னை போன்ற இடங்களில் உயர் பதவியில் உள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என்றனர்.

போலிக் கல்விச் சான்றிதழ் வழங்கிய 13 ஓட்டுநர்கள் டிஸ் மிஸ் ஆன விவகாரத்தில் தொடர் புடைய அதிகாரிகள் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர்.

பெண் எனும் பகடைக்காய்: ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு விசிட் செய்தபோது, அங்கிருந்த வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அணிந்திருந்த உடை நைட்டிதான். இப்போது நைட்டி இல்லாத வீடுகளே கிடையாது இல்லையா! சின்னக் குழந்தைகளில் ஆரம்பித்து வயது முதிர்ந்தவர்கள்வரை அணிந்து கொள்ளும் ‘தேசிய உடை’ என்ற பெருமையை நைட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

பால் பாக்கெட்டோ, பச்சை மிளகாயோ ஏதோ ஒன்றை அவசரத் தேவைக்கு வாங்க சங்கோஜமில்லாமல் நைட்டி அணிந்தே கடைக்குப் போகும் பெண்கள் இன்று சர்வ சாதாரணம். சங்கோஜிகளாக இருக்கும் சிலர் ஒரு டவலை நைட்டியின் மீது குறுக்காக அணிந்துகொள்கிறார்கள். அதற்கு மேல் சங்கோஜம் கிடையாது.

இந்த நைட்டி உடை குறித்து அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னது: “இரவில் மட்டுமல்ல, பகலிலும் வீட்டில் இருக்கும்போது நைட்டிதான் அணிகிறோம். உடலை இறுக்கிப் பிடிக்காமல் தளர்வாக இருக்கும் அந்த உடை எங்களுக்கு வசதியாக இருக்கிறது. வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறது”.

இது அவர்களே, அவர்கள் அணிந்துகொள்ளும் உடை பற்றி, அனுபவபூர்வமாக வெளிப்படுத்திய பொதுக் கருத்து.

அடுத்து, லெகிங்ஸ் பற்றிய பேச்சு எழுந்தது. இது இளம் பெண்களை வெகுவாகக் கவர்ந்த உடை. இன்று இளம் பெண்கள் விரும்பி அணியும் உடை. புதிய விஷயங்களை சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பது இளைய தலைமுறைதானே. இந்த நைட்டியையும் மூத்த தலைமுறை மற்றும் அன்றைய கலாச்சாரக் காவலர்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்து இன்று உலகமே அணியும் ஆடையாக மாற்றியவர்களும் அன்றைய இளம் தலைமுறையினர்தானே. இன்று லெகிங்ஸை நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். ஏனாம்? இதோ அவர்கள் சொல்கிறார்கள்:

“லெகிங்ஸ், நைட்டி மாதிரி தளர்வான உடை அல்ல. உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைதான். ஆனால், வசதியாக இருக்கிறது. பேருந்து, ரயில் பயணங்களின்போது ஓடிப்போய் வண்டியைப் பிடிப்பது எளிது. நிறைய கலர்களில் கிடைக்கிறது. எல்லா கலர்களிலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகக் குறைவு. டாப்ஸ் மட்டும் தனியாக வாங்கினால் போதும். வித விதமான மேட்சிங்கில் அணியலாம். முக்கியமாக, மாதவிடாய்க் காலங்களில் மிக மிகப் பாதுகாப்பாக உணர வைக்கும்”

இப்போது பேன்ட் ஆண்களின் உடை மட்டுமல்ல; பெண்களும் பேன்ட், ஜீன்ஸ், முக்கால் பேன்ட், அரைக்கால் பேன்ட் எல்லாவற்றையும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். முக்கால் பேன்ட் டீன் ஏஜ் பெண்களின் பெரு விருப்பம். காஷுவலாக வீட்டிலும் அவுட்டிங்கிலும் அணிந்துகொண்டு சுதந்திரமாகப் போய் வருகிறார்கள்.

புடவை- எவர்கிரீன் உடை. ஆயிரம் வசதிக் குறைவுகள் இருந்தாலும் அனைவரும் ஆராதிக்கும் உடை. நகரம், கிராமம், பட்டி தொட்டி, இளசு, கிழடு எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் போய் ஒட்டிக்கொள்ளும் பாரம்பரியம் மிக்கது. காட்டன், பட்டு எதுவானாலும் பரவாயில்லை. பெண்களைவிட, ஆண்களுக்கு மிகவும் பிடித்த, அவர்களை மிகவும் கவர்ந்த உடை என்பது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோமா?

ஒரு கவிஞர், அதிலும் ‘ஆண் கவிஞர்’ நைட்டியைப் பற்றித் தன் கவிதை ஒன்றில் இப்படி வர்ணிக்கிறார்:

‘சிலிண்டருக்கு மாட்டிய உறை போன்றது’.

அது அவர் பார்வை. அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், ‘இங்கு பெண்கள் எல்லோரும் சிலிண்டர்களா?’ என்பதை மட்டும் சிறு கேள்வியாகக் கேட்டு வைப்போம். அத்துடன் அழுத்தம் மிகுந்தால் சிலிண்டர் வெடித்துச் சிதறும் என்பதையும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.

மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய உடை என்றால், அது இந்தப் பாழாய்ப் போன லெகிங்ஸ்தான். நான் சின்ன வயதில் பார்த்த ராஜா ராணி கதையுள்ள சினிமாக்களில் எல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., காந்தாராவ் போன்ற பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து, மேலே கவுன் போட்டுக்கொண்டு பாய்ந்து பாய்ந்து கத்திச்சண்டை போடுவார்கள். ராஜ, விஜயலலிதா, ஜெயலலிதா போன்ற ஹீரோயின்களும் ஸ்கின் கலரில் இதைப் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த உடை என்பது ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவான உடை என்று அப்போது நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதன் பெயர் லெகிங்ஸ் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. வளர்ந்து பெரிய பெண்ணானதும் நானும் இப்படி உடை உடுத்தி அழகு பார்ப்பேன் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். என்ன செய்வது? கெரகம், நம் ஆசையெல்லாம் நிறைவேறுமா? லெகிங்ஸ் சந்தைக்கு வர இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. சின்ன வயது ஆசையை திருப்தியாக இப்போதுதான் நிறைவேற்றிக் கொண்டேன்.

ஆனால், பாருங்கள்... அநியாயத்துக்கு ஓரவஞ்சனையாகப் பெண்களுக்கு மட்டுமேயான உடையாக அதை இந்த நாகரிகக் கோமாளிகள் மாற்றிவிட்டார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆண்களும் இதை அணிந்துகொள்ளச் சட்டம் இயற்ற வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்கள் இந்த உடை தங்களுக்கு வசதியானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததைப் போல ஆண்களும் அணிந்து பார்த்தால்தான் அதன் அருமை அவர்களுக்குத் தெரியும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன். அடுத்த வாரம் வரவிருக்கும் தீபாவளிக்கு லெகிங்ஸ் வாங்குவீர்; அணிந்து மகிழ்வீர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கு பாரதியையும் கொஞ்சம் துணைக்கு அழைக்கிறேன்.

ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் ஆடவரே.

கொசுறு

‘பிரதி தின் டைம்’ என்ற அஸ்ஸாமிய செய்தி சானல், சில மாதங்களுக்கு முன், குரங்கு ஒன்று பேன்ட் அணிந்திருந்த படத்தைக் காண்பித்து, ‘இப்போதெல்லாம் குரங்குகள் பேன்ட் அணிகின்றன. குவாஹாட்டியில் உள்ள இளம் பெண்கள் ‘ஷார்ட்ஸ்’ அணிகிறார்கள் என்ற செய்தியை ஒளிபரப்பியது. இது குறித்து பாலின உரிமை ஆய்வாளர் மீனாட்சி பரூவா, ‘தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, போலீஸைவிட மீடியாக்களுக்குப் பெண்கள் அதிகம் பயப்பட வேண்டியுள்ளது’ என கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்காக சானலின் செய்தி ஆசிரியரும் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் நவீன வடிவில் புதுப்பொலிவு பெறுகிறது: பார்வையற்றோரும் ஒலி வடிவில் தகவல்களை அறியலாம் ....... டி.செல்வகுமார்



சென்னை உயர் நீதிமன்ற இணைய தளம் பல்வேறு புதிய தகவல்களுடன் புதுப்பொலிவு பெறுகிறது. பார்வையற்றோரும் ஒலி வடிவில் தகவல்களை பெறும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்வதில் இருந்து தீர்ப்பு பெறும் வரை ஒவ்வொரு நடைமுறைக்கும் விதி முறைகள் உள்ளன. இதுகுறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய இணையதளத்தை புதிதாக வடிவமைக்கும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.

அதன்படி, உயர் நீதிமன்ற இணையதளத்தை பல்வேறு அம்சங்களுடன் புத்தக வடிவில் மறுவடிவமைப்பு செய்ய 6 மாதங் களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இதையடுத்து தேசிய தகவல் மையத்திடம் விவாதிக்கப்பட்டது. அந்த மையம், இணைய தளத்தின் சில மாதிரிகளை அளித்தது. அவற்றை நீதிபதி ராம சுப்பிரமணியன் தலைமையிலான கம்ப்யூட்டர் குழு பார்வையிட்டது. இணையதளத்தின் மாதிரிகளில் இருந்து ஒன்றை கம்ப்யூட்டர் குழு தேர்வு செய்தது. அதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தை புதுப்பிப்பதற்கான மென் பொருள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கு வதற்கு ஆரம்பகட்ட தொகையை தேசிய தகவல் மையத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற இணையதளம் புதிய தொழில்நுட்பத்தில் வடி வமைக்கப்படுகிறது. இதில், நீதித்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பார்வையற் றோரும் ஒலி வடிவில் தகவல் களை தெரிந்துகொள்ள முடியும்.

மக்களுக்கு பொதுவாக எழும் சந்தேகங்கள் (எப்.ஏ.க்யூ), வழக்கு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள் ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க் கப்படுகின்றன. இதன்மூலம், மனு தாக்கல் செய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதுகுறித்து உயர் நீதிமன்ற உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்படுகிறது. இதில், உயர் நீதிமன்ற வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான, பராம்பரியமிக்க கட்டிடங்கள் பிரமாண்டமாக இடம்பெறுகின்றன.

பொதுவான சந்தேகங்கள் (எப்.ஏ.க்யூ.) உள்ளிட்ட புதிய விஷயங்கள் இணையதளத்தில் சேர்க்கப்படுவதால், அதுதொடர் பான தகவல்கள் திரட்டப் படுகின்றன. ஊழியர்கள் பற் றாக்குறையால் இப்பணி தாமதமாகிறது. புதிய நீதிபதி களின் சொத்து விவரம், சட்டக் கமிஷனின் சுற்றறிக்கை, பொது மக்களுக்கு பயனுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள் ளிட்டவற்றை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்ற பிறகுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணம். இன்னும் 3 மாதங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தை 100 சதவீத தகவல்களுடன் புதிய வடிவமைப்பில் பார்க்கலாம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

NEWS TODAY 31.01.2026