Sunday, November 15, 2015

சேது சமுத்திர திட்டம் எப்போது?...daily thanthi

மிகவும் ரப்பராக இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு திட்டம் என்றால், அது சேது சமுத்திர திட்டம்தான். இந்துமகா சமுத்திரத்தில் பாக் ஜலசந்தியில் ஆழம் இல்லாமல் இருப்பதால், அரபிக்கடல் பகுதியில் இருந்து வரும் கப்பல்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கு செல்ல இலங்கையைச் சுற்றித்தான் வரவேண்டும். இடையில் மணல் திட்டுகளும் இருக்கிறது. இந்த பகுதியில் கடலை ஆழப்படுத்தும் திட்டம்தான் ‘சேதுசமுத்திர திட்டம்’. தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் இந்த திட்டத்தில் மிகத்தீவிர ஆர்வம் காட்டிவந்தார். சேது சமுத்திர திட்டத்தை அவர் ‘தமிழன் கால்வாய்’ என்றே அழைத்தார். ‘தினத்தந்தி’யை அவர் தொடங்கிய அதே 1942–ம் ஆண்டில் ‘தமிழ்பேரரசு’ என்று ஒரு நூலை வெளியிட்டார். அதில் அவர், ‘சேது சமுத்திரத்தை ஆழப்படுத்தி, அதிலே கப்பல் போகிறபடி கால்வாயைத் தோண்ட வேண்டும் என்கிற ‘தமிழன் கால்வாய்த்திட்டம்’ தமிழ்நாட்டுக்கு முக்கியமானது. சேது சமுத்திரம் என்கிற கடல், தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே இருக்கிறது. இந்த கடலுக்கு மேற்கே ராமநாதபுரம் மாவட்டமும், கிழக்கே யாழ்ப்பாணமும் இருக்கின்றன. இந்த கடலில் ஆழம் மிகவும் குறைவு. ஆகையால் தற்போது அதன் வழியாக கப்பல் போகமுடியாத நிலையில் இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழப்படுத்தி கடலுக்கு உள்ளேயே சிறு கால்வாய்கள் வெட்டினால் கப்பல் போவதற்கு வசதி ஏற்படும். அவ்வாறு வசதிகள் ஏற்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிழக் கிந்திய நாடுகளுக்கு போகிற கப்பல்கள் எல்லாம் இதன் வழியாகத்தான் போய் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படும்’ என்று எழுதியிருக்கிறார்.

சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி அவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார். இந்த திட்டத்தை உருவாக்க முதல் முயற்சி எடுத்தவர் ஆங்கிலேய இந்திய கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் டெய்லர் என்பவர்தான். 1860–ல் அவர் தான் முதலில் இதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதிலிருந்து பல திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், 2005–ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அனைத்து கட்சித்தலைவர்களும் பங்கேற்க, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ரூ.2,400 கோடி செலவிலான மன்னார் வளைகுடாவையும், வங்காள விரிகுடாவையும் இணைத்து, ஆதம் பாலம் வழியாக 167 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்வழி திட்டம் உருவாக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தபோதுதான் சேது சமுத்திர திட்டம் தொடக்கத்தைக்கண்டது. ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடலுக்குள் ராமர் கட்டிய பாலம் தகர்க்கப்படும், இதனால் இந்துமத மக்கள் மனம் புண்படும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு இந்த திட்டம் கேள்விக்குரியது, பொருளாதார ரீதியாக சாத்தியம் இல்லாதது, பொதுமக்களின் நலனுக்கு ஏற்றதில்லை என்று தெரிவித்தது. இந்த வழக்கு முழுவதுமே ராமர் பாலத்தை சுற்றியே இருந்தது.

இந்த நிலையில், தற்போது பா.ஜ.க. அரசு ராமர் பாலம் அதாவது, ஆதம் பாலத்தை பாதிக்காமல் 5 மாற்று வழிகளைத் தயாரித்துள்ளது. இந்த வழிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஒப்புதல் கொடுத்தவுடன், மத்திய அரசாங்கம் அதை உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்துவிடும். எனவே, நிச்சயமாக சேது சமுத்திர திட்டத்துக்கு விரைவில் ஒரு விடிவுகாலம் வந்துவிடும் என தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

Saturday, November 14, 2015

Last-minute reservation receive thumbs up from rail users in Trichy TNN | Nov 14, 2015, 05.34 AM IST

TRICHY: The passengers and rail users' association members of the Trichy railway division have given a thumbs up to the new system of booking tickets 30 minutes prior to the departure of trains.

The system that came into effect from Thursday has received good response from among travelers. Rail users commented that the system will put an end to illegal ticketing activities.

Several passengers have begun checking at the counters for last-minute booking. Paradamanan N, a passenger booking the Uzhavan Express running from Thanjavur to Chennai Egmore, booked tickets after he found that seats were vacant. "The move by the Railways is welcome as all this time, the reservation charts were being released three hours before the journey, which was final and the passenger had to go to the ticket examiner to check for vacancies," he said.

According to A Giri, vice president of Thanjavur District Rail Users Association, "The change in the reservation system will cut the touts and the illegal ticketing activities that are currently prevailing in the railways."

Earlier, whenever a passenger boarded the train on a Waiting List or Reservation Against Cancellation ticket, the train ticket examiner (TTE) checked for the tickets and told the passenger if a vacancy was available. The TTE's word was final in allotting space to the passengers, with some of the passengers even bribing the TTE for seats.

Giri added that the technology has to be brought in for filling up vacancies by giving TTEs hand-held devices that can show the availability of seats in real time.

All the day trains that go from the city during weekdays usually run with high vacancy and the passengers can now opt for seats even at the last moment rather than take the chance of unreserved seats, said Jaganath P, secretary of Trichy Rail Air Passengers Association.

He also said that the recent move of the Railways to bring in more revenue by using the available resources should be welcomed.

வகுப்பறை வன்முறைகள்


Dinamani

By அ. கோவிந்தராஜூ

First Published : 10 November 2015 01:20 AM IST


நம் நாட்டில் இப்போது தவறு செய்யும் மாணவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ முடியாத நிலை உள்ளது. வெளி நாடுகளில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாக வருகிறார்கள். அது அவர்கள் வளர்ந்த சூழல், கலாசாரம் அப்படிப்பட்டதாக அமைந்திருக்கலாம். ஆனால், நம் நாட்டில் ஏனிப்படி? இந்தச் சூழலில் எந்த ஆசிரியருக்குத்தான் தப்பு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவு வரும்?
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் அருமையாகச் சொல்வார்.
இருப்பவர் முன் பணிவாக நின்று, இல்லாதவர் எப்படி யாசிப்பார்களோ அப்படிப் பணிவுடன் வகுப்பறையில் இருந்து ஆசிரியரிடம் மாணவர்கள் கற்க வேண்டும் என்பது குறள் கருத்தாகும். அப்படிக் கற்றாரே கற்றவர், மற்றவரெல்லாம் கடையர் என்று கூறுகிறார் வள்ளுவர்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
என்பது குறள்பா. பாடப் பொருளை உணரும் ஆர்வத்தோடு கேட்க விரும்பும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது என்பது வளரும் நிலையில் உள்ள செடிகள் நிரம்பிய பாத்தியில் நீர் பாய்ச்சுவதற்குச் சமம் என்று மேலும் கூறுவார்.
இன்றைக்கு மேடைகளில் பேசவும் சில நூல்களை எழுதவும் என்னால் முடிந்தது என்றால் அதற்குக் காரணம் பேராசிரியர் தமிழண்ணல் போன்றோரின் வகுப்பறைகளில் அடங்கி ஒடுங்கிப் பாடம் கேட்டதே ஆகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பவணந்தி முனிவர் தான் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலில் ஒரு மாணவன் வகுப்பில் எப்படி பாடம் கேட்க வேண்டும் என்பதை ஒரு நூற்பாவில் விளக்கியுள்ளார்.
உரிய நேரத்தில் வகுப்பறையில் இருத்தல் வேண்டும். ஆசிரியர் வரும்போது எழுந்து பணிந்து நின்று வழிபட வேண்டும். அவர் அமரச் சொன்னதும் ஓவியர் வரைந்த பாவையைப் போல வகுப்பில் அமர வேண்டும்.
செவி இரண்டும் வாய்களாக மாறி ஆசிரியர் கூறுவதைத் தாகம் ஏற்படும்போது பருகும் ஆர்வத்தினர் ஆகிப் பருக வேண்டும். அவற்றைத் தவறாமல் தம் உள்ளத்தில் பதிய வேண்டும்.
இப்படிப் பாடம் கேட்பவனுக்கு இலக்கணம் வகுத்த நாடு நம் நாடு.
"ஆச்சார்ய தேவோ பவ!' -அதாவது ஆசிரியர் தெய்வமாக வணங்கத் தக்கவர் என்று சொன்ன நாடு நம் நாடு. திருவருளை விட குருவருள் சிறந்தது என உரைத்தது நம் நாடு.
குருவின் பெயரைச் சொல்லி, குருவைக் கண்டு, குருவின் சொல் கேட்டலே பாடப் பொருளில் தெளிவு பெறுவதற்குரிய வழியாகும் என்று உரைத்த திருமூலர் வாழ்ந்த நாடு நம் நாடு.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
என்பது திருமூலரின் திருமந்திரம் ஆகும்.
ஆனால், நமது நாட்டில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களால் அரங்கேற்றப்படும் வகுப்பறை வன்முறைகளுக்கு அளவே இல்லை. 2012-ஆம் ஆண்டு சென்னை செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை, வகுப்பறையில் ஓர் ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட நிகழ்வு நம் மனத்தில் நீங்காத வடுவாக உள்ளது.
அதற்கு அடுத்த ஆண்டில், ஒரு கல்லூரிப் பேராசிரியர் வகுப்பறையில் மாணவனின் அமில வீச்சுக்கு ஆளானார். அண்மையில் ஓர் அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மது அருந்தி வகுப்பறைக்கு வந்து வம்பு வளர்த்த செய்தி நாளேட்டில் வந்ததும் நாம் அறிந்ததே.
வகுப்பறை வன்முறை என்பது அம்பு விடுவதில் தொடங்கி ஆளைக் கொல்வதில் முடிகிறது. ஆசிரியர்களுக்குச் சகிப்புத் தன்மை வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரக்கப் பேசுகிறார்கள். சகிப்புத் தன்மைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?
கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாத சிலரால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பணக்கார மாணவர்கள் என்பதால், கல்லூரி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை போலும். இந்த நிலை நீடித்தால் அறிவாற்றல் மிகுந்த எவரும் ஆசிரியப் பணிக்கு வரமாட்டார்கள். பிற பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.
ஓர் ஆசிரியருக்கு தான் பெறும் ஊதியத்தைவிட தன்மானம் மிக முக்கியமானதாகும். மாணவர்களிடமிருந்து ஆசிரியப் பெருமக்கள் மரியாதையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
மாணவர்கள் இதை உணர வேண்டும் உணர்த்த வேண்டிய பொறுப்பில் இருப்போர் உணர்த்த வேண்டும்.

இது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல!


Dinamani

By வ.மு. முரளி

First Published : 12 November 2015 01:51 AM IST


வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை' என்ற பழமொழி உண்டு. பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களைக் கேட்கும்போது இந்தப் பழமொழிதான் நினைவில் வருகிறது.

இந்தத் தோல்விக்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் கூற முடியாது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா ஆகியோரைக் காக்கவே இவ்வாறு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பா.ஜ.க. வெற்றி பெற்ற போதெல்லாம் அதற்கு மோடி- ஷா இணையே காரணம் என்று புகழ்ந்தவர்கள்தான் இவர்கள். தோல்வி ஓர் அநாதைதான்.

ஆனால், பா.ஜ.க. தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ள பிகார் தேர்தல் முடிவுகள் உதவ வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் விரும்புகின்றனர். அதற்கு, தோல்வியின் பின்புலத்தை பா.ஜ.க. தீர ஆலோசிக்க வேண்டும். அதற்கு மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களைக் காப்பதற்காக பூசி மெழுகுவது அந்தக் கட்சிக்கு கண்டிப்பாக நன்மை விளைவிக்காது.

கடந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றபோது, அதற்கு முழுமையான காரணமாக இருந்தார் மோடி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா மாநிலத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. அந்த விஜயபவனிக்கு தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பிறகு, தற்போது நடந்து முடிந்த பிகார் தேர்தல், நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க.வின் வெற்றியைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்திலும், அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மகா கூட்டணி என்ற பெயரில் கைகோத்தன.

தவிர, பிகாரில் கடந்த பத்தாண்டுகளாக நடத்திய ஆட்சியால் நற்பெயர் பெற்றிருந்த நிதீஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராகவும் அந்தக் கூட்டணி அறிவித்தது. அப்போதே அந்தக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துவிட்டது.

எதிரணியில் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் திரண்ட நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ, பிரதமர் மோடி என்ற தனிநபரை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. மோடி மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் எனில் மிகையில்லை. இதற்கு பிற தலைவர்களை அனுசரிக்காத அமித் ஷாவின் போக்கும் முக்கியக் காரணம்.

ஏற்கெனவே, தில்லி பேரவைத் தேர்தலில் மோடியை மட்டுமே நம்பி, பிற தலைவர்களைப் புறக்கணித்ததன் பலனையே அங்கு பா.ஜ.க. அறுவடை செய்தது. தில்லியில் ஹர்ஷ வர்த்தனை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. மறுத்ததே அங்கு பா.ஜ.க.வின் படுதோல்விக்குக் காரணமானது.

அதுபோலவே, பிகாரிலும் சுஷில்குமார் மோடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் பா.ஜ.க. தவறு செய்தது.

ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஒன்பது ஆண்டுகள் மாநிலத்தைச் சிறப்பாக ஆண்டதில் சுஷில்குமார் மோடிக்குப் பெரும் பங்குண்டு. அந்த மாநிலத்தில் நிதீஷ் குமாருக்கு இணையான நற்பெயர் பெற்றவர் சுஷில்குமார் மோடி. ஆனால், கட்சிக்குள் ஒத்த கருத்து உருவாகவில்லை என்று கூறி அவரைப் பின்னுக்குத் தள்ளியது பா.ஜ.க. தலைமை.

அவர் பிகார் பா.ஜ.க.வுக்கு தலைமை ஏற்றிருந்தால்கூட தோல்வியைத் தவிர்க்க முடியாது போயிருக்கலாம். ஆனால், பிரசாரத்தின் சுமையும் தோல்வியின் வலியும் பிரதமர் மோடியை இந்த அளவு பாதித்திருக்காது.

காங்கிரஸ் கோலோச்சிய காலத்திலேயே பா.ஜ.க.வின் நட்சத்திரப் பிரசாரகராக விளங்கியவர் பிகார் மண்ணின் மைந்தர் நடிகர் சத்ருகன் சின்ஹா. அவரை கடந்த இரண்டாண்டுகளாகவே பா.ஜ.க. புறக்கணித்து வந்திருக்கிறது. அவரது அதிகப் பிரசங்கித்தனமான சில கருத்துகள் கட்சிக்கு சங்கடம் ஏற்படுத்தியிருக்கலாம். அவ்வாறு அவரை வெளியில் புலம்புமாறு விட்டது கட்சியின் தவறல்லவா?

இதேபோலத்தான் பிகார் மக்களுக்கு நன்கு அறிமுகமான பா.ஜ.க. தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, ராஜீவ் பிரதாப் ரூடி, ஷாநவாஸ் உசேன் ஆகியோரும் கண்டு கொள்ளப்படவில்லை.

பா.ஜ.க.வின் பிரசாரம் முழுவதுமே அமித் ஷா ஏற்பாட்டில், மோடியை மையம் கொண்டதாகவே அமைந்தது. அதனால் பிரசார வியூகமே தவறாகியது.

இதன்விளைவே, எதிர்க்கட்சியினரின் சாதாரணக் குற்றச்சாட்டுகளுக்கும்கூட பிரதமரே பதில் சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, மூன்றாம்தர மேடைப் பேச்சாளர் போல சில சமயங்களில் பேச வழிவகுத்தது இந்த இக்கட்டான நிலைமைதான்.

இப்போது தேர்தலில் பா.ஜ.க. தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு எதிர்க்கட்சியினரின் கூட்டணி வலிமையே முதன்மைக் காரணம். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது என்பதும் உண்மையே.

வாஜ்பாய், அத்வானி காலத்தில் பா.ஜ.க.வில் பல இளம் தலைவர்கள் உருவாக அக்கட்சி கடைப்பிடித்த கூட்டுப்பொறுப்பு என்ற தன்மையே காரணம். அதிலிருந்துதான் நரேந்திர மோடி உருவானார் என்பதை மறந்துவிடக் கூடாது. இன்று அந்தப் பண்பிலிருந்து பா.ஜ.க. வெகுவாக விலகிச் சென்றுவிட்டது. தனிமனித வழிபாடும், அதிகார மயக்கமும் கட்சியின் வீழ்ச்சிக்கே வழிகோலும்.

பிகார் தேர்தல் தோல்விக்கு மோடியையும், ஷாவையும் குற்றம் சாட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கூறியிருப்பதைக் காணும்போது, அந்தக் கட்சி சுயபரிசோதனை செய்யத் தயாரில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. இது மோடிக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கும் நல்லதல்ல.

பண்டித நேரு - நிறையும் குறையும்!

Dinamani
பண்டித நேரு - நிறையும் குறையும்!

By கே.எஸ். ராதாகிருஷ்ணன்

First Published : 14 November 2015 01:57 AM IST


ஆசியாவின் ஜோதி, மனிதர்களின் மாணிக்கம் என்று அழைக்கப்பட்ட பண்டிதர் நேரு பிறந்து 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர் மறைந்து 50 ஆண்டுகளும் கடந்துவிட்டன.
இதையொட்டி, அவரைப் பற்றிய பல நூல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நவீன இந்தியாவைப் படைக்க நேருவுடைய முயற்சிகள் ஏராளம். அவை பட்டியலில் அடங்காது. சோஷலிசம், மத நல்லிணக்கம், ஜாதிய மடமைகளுக்கு அப்பால் புதியதோர் சமுதாயம் படைக்க அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தான் இன்றைக்கு இந்தியாவின் அடித்தளமாக இருக்கின்றன.
1946-இல் மகாத்மா காந்தி, நேரு ஒரு தவிர்க்க முடியாத நபர் என்று குறிப்பிடுகின்றார். இந்தியா விடுதலை பெற்றவுடன் பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராவதைத்தான் விரும்பினார்கள். ஆனால், காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் நேருவுக்கு ஆதரவாக இருந்தார். பிரிட்டிஷாருடன் இணக்கமான நட்புறவைத் தொடரும் இளைஞர் ஒருவர் பிரதமராக இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என்று மகாத்மா காந்தி கருதியதுதான் அதற்குக் காரணம். பிரதமராக பொறுப்பேற்ற நேரு உள்துறை அமைச்சராக இருந்த படேலோடு பல பிரச்னைகளில் மாறுபட்டு இருவருக்கும் மத்தியில் தேவையற்ற கசப்புணர்வுகள் ஏற்பட்டதெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.
நேரு இந்திய-மேற்கத்திய கலாசாரங்களின் கலவையாக இருந்தார். ஆனால், சர்தார் படேலோ ஓர் இந்திய விவசாயியைப் போன்ற அணுகுமுறை கொண்டவர். காங்கிரஸுக்குள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும், நேருவுக்கும்கூட சரியான உறவு இருக்கவில்லை. நேதாஜி போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட அந்தப் பொறுப்பில் தொடர முடியவில்லை. காந்தியடிகளுக்கும் நேதாஜி போஸுக்கும் இடையேயான மனக் கசப்புக்கு நேரு ஒரு முக்கியக் காரணம் என்று கூறுபவர்களும் உண்டு.
ஆனால், நேதாஜி தன்னுடைய உறவினருக்கு ஒரு தேவையின்போது நேருவிடம் கேளுங்கள் என்று வழிகாட்டியபோது, நேரு அதற்கு அக்கறை காட்டினார் என்று ஒரு செவிவழிச் செய்தி உண்டு. நேருவுக்கும், போஸுக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்தாலும், இருவரும் தங்களுக்குள் நட்பு கொண்டிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் அமைச்சரவை அமைக்கும்போது, ஜெயப் பிரகாஷ் நாராயணனையும், அச்சுதபட்வர்த்தனையும் அமைச்சரவையில் சேரச் சொல்லி நேரு அழைத்தபோது, அவர்கள் மறுத்து மக்கள் பணி ஆற்றப்போகிறோம் என்று சர்வோதயம், பூமிதான இயக்கம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்கள்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் கூட தங்களில் அதிகாரம் படைத்தவர் யார் என்ற பனிப்போர் உருவானது. உச்சநீதிமன்றம் வரை இதற்காக கருத்தும் கேட்கப்பட்டது. இவர்கள் இருவருடைய உறவுகள் சீராக இல்லை என்றாலும், இருவரும் அடக்க ஒடுக்கமாகவே தங்கள் பனிப்போரை நடத்தினார்கள்.
அன்றைக்கு மாநில ரீதியாக காங்கிரஸ் கமிட்டி பிரதேச காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டு, அதன் தலைமைக்கு உரிய கெüரவமும் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. நேரு காலத்தில் மாகாண காங்கிரஸ் தலைவர்களான, தமிழகத்தில் காமராஜர், கேரளத்தில் சங்கர், ஆந்திரத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, மராட்டியத்தில் எஸ்.கே.பாட்டில், பிற மாகாணத் தலைவர்களான மொரார்ஜி தேசாய், அதுல்யா கோஸ், டாக்டர் பி.சி. ராய் எனப் பல தலைவர்கள் அந்தந்த மாகாணங்களில் காங்கிரûஸ வளர்த்தார்கள். நேரு, அவர்களுக்கு உரிய அதிகாரங்களை அளித்து, அவர்களும் சுயமாகத் தங்கள் முடிவுகளை எடுத்தனர்.
தட்சண பிரதேசம் என்று தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து தென் மாநிலங்களை ஒரு மாநிலத் தொகுப்பாக நேரு அமைக்கத் திட்டமிட்டபோது, பெருந்தலைவர் காமராஜர் அதைக் கடுமையாக எதிர்த்தார். ஆகவே, அத்திட்டத்தை நேருவும் கைவிட்டார். அவ்வளவு அதிகாரங்கள் மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கு அன்றைக்கு இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் இந்த மாகாணத் தலைவர்கள் தஞ்சாவூர் பொம்மை போல மாற்றப்பட்டதால்தான் காங்கிரஸ் பல இடங்களில் படிப்படியாகத் தன் செல்வாக்கை இழந்தது.
நேரு, நாடாளுமன்ற ஜனநாயகம், மக்களின் அடிப்படைத் தேவைகள், கனரகத் தொழிற்சாலைகள், அணைகள், கட்டமைப்புப் பணிகள், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி, அணுசக்தி போன்ற முக்கிய விஷயங்களில் ஆர்வம் செலுத்தி, அதற்கான வளர்ச்சிக்கு வித்திட்டார்.÷இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளித்த நேருவின் மென்மையான போக்கை இன்றைக்கும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக நாடுகள் இரண்டு பக்கமாக பகைமை கொண்ட அணிகளாகப் பிரிந்தன. அமெரிக்கா தலைமையில் ஓர் அணியும், ரஷியா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகின. இதனால் உலகில் பதற்றமான நிலை மற்றும் அமைதியின்மை ஏற்பட்டது. இந்தியா இவ்விரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை நாடாக இருந்தது. இதன் விளைவாக உருவான நேருவின் அணிசாராக் கொள்கையின் மூலம் இந்தியா உலக அமைதியை நிலைநாட்டியது.
அமெரிக்கா, ரஷியா என்று உலகின் இரண்டு வல்லரசுகள் கோலோச்சிய காலத்தில் அணிசாரா நாடுகளை ஒன்றிணைத்து அணிசாரா இயக்கம் பெல்கிரேடில் உருவானது. ஜவாஹர்லால் நேருவோடு, யுகோசுலோவாக்கியாவின் அதிபர் யோசிப் பிரோசு டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், கானாவின் தலைவர் குவாமே நிக்ரூமா, இந்தோனேசியாவின் தலைவர் சுகர்ணோ ஆகியோரின் முயற்சியில் இந்த இயக்கம் துவங்கியது.
இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே, நடுநிலையில் வளரும் நாடுகள் உலக அமைதியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்தச் சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953-ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் வலியுறுத்தினார்.
எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ, எதிராகவோ அணிசாரா நாடுகளின் குழுமமான இந்த இயக்கத்தில் தற்போது 120 நாடுகள் உறுப்பினர்களாகவும், 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன. நேருவின் முன்முயற்சியில் உருவான பஞ்சசீலக் கொள்கை உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் வடித்த அந்த ஐந்து கொள்கைகள், "எந்த நாடும் பிற நாட்டை தாக்கக்கூடாது; ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது; அனைத்து நாடுகளும் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கியிருத்தல் வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்' என்பவை. இவையே உலக ஒற்றுமைக்கும், உறவுக்கும் பாலபாடமாகும்.
இவ்வாறான உலக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் குரல் கொடுத்த பண்டித நேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மேலை நாடுகள் அவரை ஏனோ புறக்கணித்தன.
இந்தியா விடுதலை பெற்றவுடன் நாட்டின் தேவைகளையும், வளர்ச்சிகளையும் கவனத்தில்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை ஒருபுறமும், பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது அங்கிருந்து வந்த அகதிகளைப் பாதுகாக்கவும், ஏனைய பிரச்னைகளைக் கவனிக்கவும், அரசியலமைப்பு ரீதியாக நாட்டைத் திடப்படுத்தவும் எனப் பல பணிகளில் நேரு ஈடுபட்டதோடு, உலக அரங்கிலும் இந்தியாவின் கீர்த்தியை தன்னுடைய அணுகுமுறையினால் நிலைநிறுத்தினார். ஆனாலும், அவர் மீது இன்றைக்குவரை வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் பல உள்ளன.
காஷ்மீர் பிரச்னையை அவர் கையாண்ட விதமும், ஐ.நா. மத்தியஸ்தத்துக்கு ஒத்துக்கொண்டதும் தவறானது என்று இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. பாகிஸ்தானுக்கு அதிகமான சலுகைகளும், இடமும் நேரு அளித்துவிட்டார் என்றும், சீனாவுடைய எல்லை தாவாக்களில் இந்திய-சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு பிரச்னையும், மணிப்பூரில் சில இடங்கள் அப்போது பர்மாவுக்கு விட்டுக்கொடுத்ததும், நாகாலாந்து பிரச்னையை சரியாகக் கையாளவில்லை போன்ற விவாதங்கள் தற்போதும் உள்ளன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும்போது, மாநில எல்லைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு தமிழகத்தின் நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம் பீர்மேடு, பாலக்காடு அருகே சில கிராமங்கள் கேரளத்துக்கும், கொள்ளேகால் மற்றும் மாண்டியாவின் சில கிராமங்கள் கர்நாடகத்திற்கும், திருப்பதி, சித்தூர், நெல்லூர் பகுதிகள் ஆந்திரத்துக்கும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி பிரித்துக் கொடுக்கப்பட்டதை நேரு கண்டுகொள்ளவில்லை என்ற குறைபாடுகள் இன்றைக்கும் உண்டு.
நாட்டில் சமஸ்டி அமைப்பு முறையினுடைய வீரியத்தைக் குறைத்து வலுவான மத்திய அரசு, நேரு என்ற ஆளுமை மாயையால் உருவாக்கப்பட்டது. அவரிடம் நிறைவும் உண்டு. அவருடைய பணிகள் மீதான விமர்சனங்களும் உண்டு.
தங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், காந்தியை தன்னுடைய வழிகாட்டியாகக் கருதினார். கிராமியப் பொருளாதாரம் என்ற அடிப்படையில் ராம ராஜ்ஜியம் காணவும், கிராமங்களிலே உண்மையான இந்தியா வாழ்கிறது என்றும் காந்தி நினைத்தார். ஆனால் நேருவோ, மேலைநாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் ஆளுமையை உலகளவில் நிலைநிறுத்த வேண்டுமென்ற கொள்கையில் முனைப்பாக இருந்தார்.
உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் சுருக்கமாக அறிந்துகொள்ள, The Discovery of India, Glimpses of World History மற்றும் தன்னுடைய சுயசரிதையை நூல்களாக்கி நமக்குச் சீதனமாக விட்டுச் சென்றுள்ளார்.
இலக்கியத்திலும், ஆங்கிலப் புலமையிலும், நாட்டு நிர்வாகத்திலும், உலக அமைதிக்கு குரல் கொடுத்த உலகத் தலைவர் நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறைகள் அறிந்து கொள்வதோடு ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ஜவாஹர்லால் நேரு
125}ஆவது பிறந்தநாள்.

வரவேற்புக்குரிய அணுகுமுறை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 13 November 2015 01:20 AM IST


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டிருப்பது உண்மை. குறிப்பாக, இணையதளம் மூலம் ஏலம் முறை அறிவிக்கப்பட்டது, இடைத்தரகர்களை அகற்றி நிறுத்தி இருக்கிறது. நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரயில்வே துறை சீர்திருத்தம் குறித்த அதன் அணுகுமுறை.

ரயில்வே நிர்வாகம் எடுத்திருக்கும் சமீபத்திய முடிவு ஒன்று, பயணிகளால் பலத்த கரகோஷத்துடன் வரவேற்கப்படுவது உறுதி. ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பாக பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகும், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு வரையிலும்கூடப் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும் என்பதுதான் பாராட்டுக்குரிய அந்த அறிவிப்பு.

இந்தப் புதிய நடைமுறையால், பயண முகவர்கள் மற்றும் ரயில்வே முன்பதிவு அலுவலர்கள் இடையிலான மிகப்பெரிய, பல கோடி ரூபாய்க்கான ஊழலுக்கு வேகத்தடை போட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். நவம்பர் 12-ஆம் தேதிக்கு முன்பு வரையிலும், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரம் வரை, பயணத்தை ரத்து செய்தால் பயணத்தொகையில் 25% பிடித்தம் செய்யப்படும். இது பயண முகவர்கள் - ரயில் முன்பதிவு ஊழியர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்த வசதியாக அமைந்தது. இப்போது ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்துக்குள் பயணத்தை ரத்து செய்தால் மட்டுமே 25% தொகை பிடித்தம் செய்யப்படும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்துக்குள் அல்லது ரயில் புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரம் வரை பயணத்தை ரத்து செய்தால் 50% தொகை திருப்பி வழங்கப்படும் என்ற விதிமுறையும் தற்போது மாற்றப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்குள் இருந்து 4 மணி நேரத்துக்குள்ளாக (முதல் பயணிகள் பட்டியல் முதல் அட்டவணை தயாரிக்கப்படும் வரை) இனிமேல் 50% தொகையைத் திரும்பப் பெற முடியும்.

இந்த முன்பதிவு ரத்துக்கான நேரம் மாற்றமும், பயண ரத்துக்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதும் நிச்சயமாக பயண முகவர்கள், ரயில்வே முன்பதிவில் உள்ள கருப்பாடுகளை மனதில் கொண்டு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக, பயண முகவர்கள், அந்தந்த நாள்களின் தன்மைக்கு ஏற்ப, அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்துவிடுவார்கள். 6 மணி நேரத்துக்கு முன்புவரை தங்கள் பயணம் உறுதியாகவில்லை என்பதை அறிந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் பலர் ரத்து செய்துவிடுவார்கள். பயண முகவர்களோ, 25% இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் காத்திருப்பார்கள். அவர்களுக்குப் பயணிகள் கிடைக்கவே செய்வார்கள். இரட்டிப்புக் கட்டணம். இதில் ரயில் முன்பதிவு ஊழியர்களுக்கும் கணிசமான தொகை அவர்களது ஒத்துழைப்புக்குக் கையூட்டாகத் தரப்படுகிறது.

ஒவ்வொரு ரயில் சந்திப்பு நிலையத்திலும், பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்ட பிறகு மீதமுள்ள இருக்கைகள், அதன்பிறகு கடைசி நேரத்தில் ரத்தாகும் பயணச்சீட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யத் தனி இடம் உள்ளது. இது பயணிகள் பலருக்கும் தெரியாது. அப்படியே விவரம் தெரிந்தவர்கள் அங்கேபோய் முன்பதிவு செய்ய முற்பட்டாலும் அதனால் அதிகம் பயனில்லை. மக்கள் வரிசையில் நின்று கேட்கும்போது இடமில்லை என்று சொல்லும் அதே ரயில்வே ஊழியர், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே கணினியில் பயணச்சீட்டை விற்றுக்கொண்டிருப்பார் - பயண முகவருக்கு!

இந்தப் புதிய நடைமுறையால் பயண முகவர் - ரயில் முன்பதிவு ஊழியர்கள் கூட்டணி முற்றிலுமாக உடைந்துவிடும் என்று கூறிவிட முடியாதுதான். அவர்கள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக் கையாளக்கூடும். ஆனால், இந்த நேர மாற்றம் அவர்களுக்கு அதிக நட்டத்தைக் கொடுக்கும். ஆகவே, அவர்கள் கொஞ்சம் தயங்குவார்கள்.

இதேபோன்று, தட்கல் விவகாரத்திலும் ரயில்வே கடும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். தட்கல் பயண முன்பதிவை கணினியில் செய்யும்போது பயண முகவர்களே அனைத்தையும் அள்ளிச் சென்றுவிடும் அவலம் ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு, முதல் ஒரு மணி நேரத்துக்கு முகவர்கள் கணினி முன்பதிவைச் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டது. ஆனால், பயண முகவர்கள் போலியாக தனிநபர் இணைய முகவரியை உருவாக்கிக்கொண்டு தட்கல் பயண முன்பதிவைச் செய்தனர். அதைத் தடுப்பதற்கு ஒரு மாதத்தில் 10 முறைக்கு மேலாக முன்பதிவு செய்த இணைய முகவரிகளை தனித்துப் பிரித்து, அவற்றைச் செயல்படாமல் செய்தது ரயில்வே நிர்வாகம்.

இப்போது, அவர்கள் ரயில் நிலைய முன்பதிவு மையத்தில், பெயர்களைக் குறிப்பிடாமலேயே முன்பதிவு செய்கிறார்கள் என்றும், தங்களுக்கான பயணி வந்த பிறகு அந்தப் பெயரை, ரயில் முன்பதிவு ஊழியர் உதவியுடன் பூர்த்தி செய்கிறார்கள் என்றும், சில பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

முன்பதிவு ரத்து அல்லது உறுதியான பயணச்சீட்டு ரத்து அனைத்துமே இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு பெறுவோருக்கே சாதகமாக இருக்கிறது. 30 நிமிடத்துக்கு முன்பாக, பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும். நினைத்தால் உடனே ரத்து செய்யவும் முடியும். ஆனால், ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையத்துக்குப் போய்த்தான் ரத்து செய்தாக வேண்டும். ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளையும் தொலைபேசி வாயிலாக ரத்து செய்யும் நடைமுறை குறித்தும் ரயில்வே நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

மழை, மழை, அடைமழை!


Dinamani


By ஆசிரியர்

First Published : 12 November 2015 01:46 AM IST


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் மழையினால் 42 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களைவிட, மழை ஓதம் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களே அதிகம். ஓரிருவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில் இறந்துள்ளனர்.

வானிலை மையத்தின் மழை அறிவிப்பு வெளியானவுடன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் மீட்புப் பணி மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மழைச் சேதங்களுக்கான இழப்பீடுகளை உயர்த்தி அறிவித்திருந்தார். இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை அளவை இரட்டிப்பாக்கி ரூபாய் நான்கு லட்சமாக அறிவித்திருந்தார்.

இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்துக்கும் அரசு அறிவித்த ரூபாய் நான்கு லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மழை வெள்ளத்தால், சுவர் இடிந்ததால், மின் கம்பியால் இறந்தவர்கள் நீங்கலாக, மழைக்கால காய்ச்சலால் இறந்தவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்து ரூபாய் நான்கு லட்சம் பணம் பார்த்துவிடத் துடிக்கும் சில சுயநலக் கூட்டம் கிளம்பியிருக்கிறது. மழை விபத்தினால் இறக்காத போதும், இறந்தவர்களை வைத்துப் பணம் பார்க்க இக்கூட்டம் துடிக்கிறது. இது குறித்து அரசு நிர்வாகம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

வழக்கமாக தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்போருக்கு சலிப்பு தரும் விதமாக லேசான மழை பல இடங்களில் காணப்படும். ஆனால், நிகழாண்டைப் போல இந்த அளவுக்கு கொட்டித் தீர்த்ததில்லை. தமிழகம் முழுவதிலும் மழை நீடிக்கும் என்றும், குறிப்பாக புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடலூரில் அதிகக் கவனம் தரப்பட்டிருந்தால் இந்த மரணங்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்திருக்க முடியும்.

இந்த மழையினால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால், சாலைகள் அனைத்தும் பொத்தலாகிப் போயின என்பது நகர மக்களின் வேதனை. சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதுதான் தார்ச் சாலைகள் பெயர்ந்து போகக் காரணம். மழை நீர் ஒரு மணி நேரத்தில் வடிகின்ற சாலைகளை அமைக்க இன்னமும் நம்மால் முடியவில்லை.

பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் சாலைகளை மட்டுமல்ல, சாலையோரச் சாக்கடைகளையும்கூட ஆக்கிரமிப்பு செய்து குறுக்கியாகிவிட்டது. அதனால், மழையின் அளவு அதிகரிக்கும்போது, இந்தக் குறுகிய சாக்கடைகளால் மழை நீரை வெளியேற்ற முடிவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லை. சில அதிகாரிகள் தைரியமாக நடவடிக்கை எடுத்தாலும், நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை பெற்று, நிரந்தரமாக வழக்கை நீட்டிக்கிறார்கள்.

பெரும்பாலான புதிய பேருந்து நிலையங்கள் ஏரிகளின் மீது உருவாக்கப்பட்டவைதான். ஏரிகள் இயல்பாகவே தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டவை. அங்கே பேருந்து நிலையங்கள் அமைத்துத் தண்ணீர் உள்ளே புகாதபடி அடைத்து, வேறு இடங்களுக்கு மழை வெள்ளத்தைத் திருப்பிவிடுவதால், புறம்போக்கு நிலங்களில் குடிசை கட்டியிருக்கும் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களை அமைக்கும்போது இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

தாழ்வான பகுதிகளிலும், புறம்போக்கு இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போடுவோருக்கு அரசு வேறு இடம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கே குடி போவதில்லை. தொழில் செய்ய வசதியாக இருக்கிறது என்று பழைய இடத்திலேயே தொடர்ந்து வசிக்கிறார்கள். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவும் காரணம்.

தமிழகத்தின் எந்த நகரிலும், எந்தச் சாலையிலும் மழை நின்ற சில நிமிடங்களில் சாலையில் தண்ணீர் இல்லாத நிலைமையை உருவாக்கிட, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இன்றியமையாதது. இதற்கு எந்த ஆளும் கட்சியும் தயாராகாது என்பதுதான் யதார்த்த உண்மை.

நகர்ப்புறங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நடமாடும் தள்ளுவண்டி உணவங்கள். இதுபோன்ற "கையேந்தி பவன்கள்' ஆங்காங்கே கொட்டுகின்ற மாமிசக் கழிவுகளும், எலும்புத் துண்டுகளும், தட்டின் மீது வைத்துக் கொடுக்கும் பிளாஸ்டிக் காகிதங்களும் ஓடைகளை அடைத்துக் கொள்கின்றன.

கூவத்தின் இருமருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் அகற்றினாலே போதும், சென்னையின் கழிவுநீர் பிரச்னை பாதி குறைந்துவிடும். மதுரையின் கிருதுமால் நதி இப்போது ஆறடி ஓடையாக மாறியிருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. இதுதான் அனைத்து நகரங்களின் அவலமும். இதற்கு விடை காணாமல் மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்குவதையும், அதன் தொடர்விளைவாக சாலைகள் பழுதடைந்து மக்கள் வரிப்பணம் வீணாவதையும் தடுக்கவே முடியாது.

மழை ஓதம் காரணமாக மண் சுவர் இடிந்து விபத்து நடப்பது இயல்புதான். ஆனால், பள்ளிக்கூடங்களில் தரமற்ற ஒப்பந்தக்காரர்களால் தரமற்று கட்டப்பட்டுள்ள பள்ளிக் கூரைகள் பெயர்ந்து விழுந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கும்முன்பாக, ஒவ்வோர் அரசுப் பள்ளியையும் பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தரவும், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதும் அவசியம். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் இதைச் செய்தாக வேண்டும்.

NEWS TODAY 26.01.2026