Sunday, August 30, 2015

நுழைவுத்தேர்வு வேண்டவே வேண்டாம்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. தொழில் கல்லூரிகளில் அதாவது மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் மாணவர்கள் பிளஸ்–2 முடித்தவுடன் சேர நுழைவுத்தேர்வு நடத்தும் முறை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1984–ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசு தொழில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதைத் தடுக்கும் வகையிலும், அறிவாற்றல்மிக்க மாணவர்களுக்கு தானாக இடம்பெறுவதற்குமான வாசலை இந்த நுழைவுத்தேர்வு திறந்துவிட்டது என்று அப்போது பாராட்டப்பட்டது. ஆனால், நாளடைவில் நகர்ப்புறத்தில் படித்த மாணவர்களால்தான் தொழிற்கல்லூரிகளில் சேரமுடியும், ஏழை கிராமப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வு முறையால் சேரமுடியவில்லை என்ற மனக்குறை பெரிய அளவில் கிளம்பியதால், 2007–ல் இந்த நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடக்கமுடியாதபடி பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கு ‘கட் ஆப்’ முறை வந்தது. இப்போது தமிழ்நாட்டிலும், அரியானாவிலும் நுழைவுத்தேர்வு இல்லை. பிளஸ்–2 தேர்வில் பெற்ற ‘கட் ஆப்’ மார்க்குகளின் அடிப்படையில்தான் தொழில் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஆனால், மற்ற மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் ஒவ்வொரு வகையான என்ஜினீயரிங் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத்தேர்வு எழுதும் நிலை இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஒவ்வொருவரும் பல நுழைவுத்தேர்வுகள் எழுத விண்ணப்பங்கள் வாங்கவேண்டியது இருக்கிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை சராசரியாக 500 ரூபாய் இருக்கும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு நிச்சயமாக இது பெரும் பொருட்செலவுதான். நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களுக்காக மட்டும் மாணவர்கள் ஆண்டுதோறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதை மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு இது பொருந்தினாலும், தமிழ்நாட்டுக்கு சரிவராது. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி நிலையங்கள் புற்றீசல்போல தொடங்கப்பட்டுவிடும். நகர்ப்புற மாணவர்களும், வசதி படைத்தவர்களும் மட்டுமே அதில் சேர்ந்து படித்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பை பெறுவார்களே தவிர, கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை–எளிய மாணவர்களுக்கும் இப்போதைய சமூகநீதி நிச்சயமாக மறுக்கப்பட்டுவிடும். மேலும், பிளஸ்–2 தேர்வுக்கே இரவு–பகலாக கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள், உடனடியாக இந்த நுழைவுத்தேர்வுக்கும் படிக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கும் ஒரு சலிப்பு, வீணான சிரமம்தான் ஏற்படும். இப்போதே கிராமப்புறங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் ‘கட் ஆப்’ மார்க்குகள் குறைவாக இருப்பதால் அதை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவரும் சூழ்நிலையில், திடீரென நுழைவுத்தேர்வு வந்தால் இவ்வளவு நாளும் மேற்கொண்ட முயற்சிகள் மணல் கோட்டைபோல சரிந்துவிடும். மேலும், கல்வி பொது பட்டியலில் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்தால் அது மாநில உரிமைகளை பறிப்பது போலாகிவிடும். எனவே, தமிழக அரசின் கல்வித்துறையும், கல்வியாளர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, நுழைவுத்தேர்வு மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...