Monday, August 31, 2015

கைவிட்ட பிள்ளைகள்... வற்றாத காதல்... கணவரை இடுப்பில் சுமந்து வாழ்க்கை நடத்தும் மனைவி!..vikatan

ராமேஸ்வரம்: தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது விஹாராபாத். இந்த ஊரை சேர்ந்த ஜெகன்நாத் (56) பிறவியிலேயே ஊனமாக பிறந்தவர். இரண்டு கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சி பெறாத நிலையில் உடல் பகுதி மட்டும் வயதுக்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைந்தது. முழுமையான ஊனத்துடன் வளர்ந்த ஜெகன்நாத் வாழ்க்கை நடத்த எந்த வழியும் இல்லாத நிலையில் பிறரின் உதவியை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவர் மீது இரக்கம் கொண்ட சங்கரம்மா என்பவர் ஜெகன்நாத்தை மணம் முடித்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் பிறந்தது. ஜெகன்நாத்தும், சங்கரம்மாவும் ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பதுடன், ஊனமுற்ற காலின் விரலை கொண்டு கீ போர்டு எனும் இசை கருவியையும் வாசிக்கிறார். இதன் மூலம் தங்கள் குழந்தைகளை இந்த தம்பதியினர் வளர்த்தனர்.

அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மூவரும் பருவ வயதை அடைந்ததும் தங்கள் தாய்- தந்தையை கவனிக்க தவறினர். இதனால் ஊனமுற்ற கணவருடன் திருப்பதி, காளஹஸ்தி, சென்னை, மதுரை, ராமேஸ்வரம் என ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் சங்கரம்மா. தான் செல்லும் ஊருக்கு எல்லாம் தனது ஊனமுற்ற கணவனை ஒரு குழந்தையை போல் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டே செல்லும் சங்கரம்மாவின் நிலையை எண்ணி வருந்தும் பொதுமக்கள் அவருக்கு தங்களால் இயன்ற உதவியை கொடுத்து வருகிறார்கள். பிறரிடம் பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையுடன் இரவு நேரங்களில் இவர்கள் பொது வெளிகளில் தங்கியிருக்கும் போது அந்த காசையும் கயவர்கள் களவாடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் கோயில் தலங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் இவர்களை அனுமதிக்க மறுப்பதுடன் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவதாகவும் இவர்கள் வருந்துகின்றனர்.
கை, கால் நல்ல நிலையில் இருப்பவர்களே அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் இந்த உலகில் கை, கால் முற்றிலும் வளர்ச்சியற்ற நிலையில் ஜெகநாத் போன்றவர்களும் நேர்மையுடன் வாழத்தான் செய்கிறார்கள். அதைவிட பெருமை ஊனத்தை ஒரு பொருட்டாக கருதாமல் ஜெகநாத்தை வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டதுடன் அவரை தான் செல்லும் ஊருக்கு எல்லாம் இடுப்பில் தூக்கி செல்லும் சங்கரம்மாவின் அன்பிற்கு இல்லை அளவு கோல்.

ஊனத்தை ஊனமாக கருதாமல் தனக்கு தெரிந்த கலையை பிறருக்கு வாசித்து காண்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கஷ்ட ஜீவணம் நடத்தி வரும் ஜெகநாத்தை ஊர் ஊராக அழைத்து செல்ல தள்ளுவண்டி ஒன்று கொடுத்து உதவினால் நன்றியோடு இருப்போம் என்கிறார் சங்கரம்மா. உதவும் நினைக்கும் நல்ல உள்ளங்கள் 9989871585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

-இரா.மோகன்

படங்கள்: 
உ.பாண்டி
 

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...