Sunday, October 18, 2015

பம்பையில் ஆடைகளை வீசினால் ஆறு ஆண்டு சிறை: கேரள ஐகோர்ட் உத்தரவு..dinamalar

சபரிமலை: பம்பையில் பக்தர்கள் ஆடைகளை வீசி எறிந்தால் அவர்களுக்கு ஆறு ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், இல்லாத ஆச்சாரங்களை உருவாக்கும் குருசாமிக்கும் தண்டனை உண்டு என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை பயணத்தில் பக்தர்கள் பம்பையில் குளிக்க வேண்டும். பம்பையில் குளிப்பதன் மூலம் பாவங்கள் களையப்படுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் பக்தர்கள் இந்த நதியையும் அசுத்தப்படுத்துவதுதான் வேதனை. தரிசனம் முடிந்து வரும் போது தங்கள் உள்ளாடைகள் உள்ளிட்ட அனைத்து ஆடைகளையும் வீசி எறிவது, பம்பையில் உணவு சாப்பிட்டு விட்டு அதன் எச்சில் இலைகளை பம்பையில் கொண்டு போடுவது என இல்லாத ஆச்சாரங்கள் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரிகள், தேவசம்போர்டு என அனைத்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மகரவிளக்கு காலத்தில் பம்பை நதி மிக மோசமாக அசுத்தமாகிறது.
இது தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் பேரில் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
பம்பை நதி அசுத்தம் அடையாமல் இருக்க மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அணிந்த ஆடைகளை பம்பையில் போட வேண்டும் என்ற ஆச்சாரம் சபரிமலையில் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு ஆடைகளை வீசுவது தடை செய்யப்படுகிறது. மீறி வீசுபவர்களுக்கு ஒன்றரை முதல் ஆறு ஆண்டு வரை சிறைத்தடைனையும், அபராதமும் விதிக்கலாம்.
பக்தர்களை அழைத்து வரும் குருசாமிகளின் உத்தரவு படிதான் பக்தர்கள் பம்பையில் ஆடைகளை வீசுகிறார்கள். இனி குருசாமிகள் அப்படி செய்தால், குற்றம் செய்ய துண்டியதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆடைகளை போடுவதற்கு இணையான தண்டனை வழங்கலாம். இந்த விஷயத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தேவசம்போர்டும், போலீசும் உறுதுணையாக இருக்க வேண்டும். பம்பை நதிக்கரையில் அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளும், பம்பையில் ஸ்பெஷல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பையில் ஆடைகளை வீசினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற விபரத்தை பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்த தேவசம்போர்டும், மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...