Tuesday, February 27, 2018

85 வயதிலும் சுறுசுறுப்பு: 640 படிகளை 50 நிமிடங்களில் ஏறிய முன்னாள் பிரதமர்

Published : 26 Feb 2018 13:24 IST

சிறப்பு நிருபர் சரவணபெலகோலா



மலைப்பகுதியில் ஏறிய முன்னாள் பிரதமர் தேவே கவுடா - சிறப்பு ஏற்பாடு

கர்நாடகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி தேவே கவுடா, தனது 85 வயதிலும், மலையில் 640 படிகளை 50 நிமிடங்களில் ஏறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விந்தியகிரி மலையில் புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள பிரம்மாண்ட கோமதீஸ்வரர் சிலைக்கு கடந்தவாரம், மஹாமஸ்டாபிஷேகம் நடந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விழாவுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி.தேவே கவுடாவும் இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய கடந்த 24-ம் தேதி வந்திருந்தார். ஆனால், கடந்த 2006ம் ஆண்டைப் போல் அல்ல சற்று வித்தியாசமாகவே அவர் வந்திருந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த விழாவுக்கு வந்திருந்த தேவேகவுடா 640 படிகள் கொண்ட மலைப்பகுதியில் உள்ள கோயிலுக்கு நடந்து செல்லவில்லை. அவரை பல்லக்கில் அமரவைத்து 4 பேர் தூக்கிச் சென்றனர். அதுபோல் இந்த முறையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், தனது 85 வயதிலும், 640 படிகளை ஏறப்போவதாக தேவே கவுடா கூறினார். ஆனால், அவரை நடந்து செல்ல வேண்டாம் என அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், தேவேகவுடா மலைப்பகுதி படிகளை ஏறத் தொடங்கினார்.

தேவ கவுடாவுடன் அவரின் மனைவி, சரவணபெலகோலா எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணாவும் சென்றார். 640 படிகளை ஏறுவதற்குள் 3 முறை சில நிமிடங்கள் இளைப்பாறினார்கள். ஆனால், வியக்கும் வகையில், 50 நிமிடங்களில் தேவேகவுடா, மலைப்பகுதியில் உள்ள கோயிலை வந்தடைந்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய எம்எல்ஏ, பால கிருஷ்ணா, “வர்தமான சாஹர் மகாராஜா உள்ளிட்ட ஏராளமான துறவிகள் ஆயிரக்கணக்காண கிலோமீட்டர் தொலைவு நடந்து இந்த மலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த மண்ணில் பிறந்த நாங்கள் இருவரும் இந்த மலையில் ஏறமாட்டோமா?” என சிரித்துக்கொண்டார்.

மலையில் ஏறும்போது, தேவே கவுடாவுக்கும், பால கிருஷ்ணாவுக்கும் சத்து நீர் பாக்கெட்டுகளை மாவட்ட சுகாதார அதிகாரி வெங்கடேஷ் அளித்தார். ஆனால், அதை குடிக்க இருவரும் மறுத்துவிட்டனர்.

கோயிலை அடைந்தவுடன், தேவே கவுடா, அவரின் மனைவி, பாலகிருஷ்ணா ஆகியோரை ஜெயின் மடத்தின் குரு சக்ருகீர்த்தி பக்தரீகா சுவாமி வரவேற்றார். அதன்பின் சிலைக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, மலைப்பகுதியில் இருந்து 30 நிமிடங்களில் தேவேகவுடாவும், அவரின் மனைவியும் கீழே இறங்கி, தரைப்பகுதிக்கு வந்துவிட்டனர். அதன்பின், அவர்கள் இருவரும் இளநீர் பருகினர்.

தனது பயணம் குறித்து 85வயதான தேவேகவுடா நிருபர்களிடம் கூறுகையில் “ மிகவும் தளர்ந்த உடலைக் கொண்ட என்னை மலையை ஏறக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், எனது சுயவிருப்பத்தின் பெயரில் மலை ஏற முடிவு செய்தேன். அந்த பாகுபலி ஆண்டவர் எனக்கு துணிச்சலையும், உடல் பலத்தையும் கொடுத்துவிட்டார். எனக்கு களைப்பாக இல்லை.

இந்த மடத்தின் மூலம் ஆளும் கட்சி பல பாடங்களை கற்க வேண்டும். இந்த கோயிலில் வழிபடும் பக்தர் ஒருவர் ரூ.15 கோடி செலவில் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக உணவு அளித்துள்ளார், மற்றொரு பக்தர் ரூ.11 கோடி செலவில் முதல் கலசத்தை கொடுத்துள்ளார். இங்குள்ள மருத்துவமனையை இந்த மடம் நடத்தி வருகிறது.மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த ஜெயின் மடம் திகழ்கிறது” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...