Saturday, May 12, 2018

லாலுவுக்கு 6 வாரம் ஜாமின் : ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவு

Added : மே 12, 2018 00:52

ராஞ்சி: ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக, ஆறு வாரத்துக்கு மட்டும், தற்காலிக ஜாமின் வழங்கி, ஐார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் : ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கு, பீஹார் தலைநகர் பாட்னாவில், இன்று திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.இந்நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி, பிரபாத் குமார் ஆகியோர், நேற்று காலை தாக்கல் செய்த மனுவில், 'லாலு பிரசாத், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். 'அவர் மருத்துவ சிகிச்சை பெற, 12 வாரம் ஜாமின் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆறு வாரம் : இதை விசாரித்த உயர் நீதிமன்றம், லாலுவுக்கு ஆறு வாரம், தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 'மூன்று நாள் பரோல் முடிந்த பின், சிறைக்கு லாலு திரும்ப வேண்டும். அதன்பின், இந்த ஆறு வார ஜாமின் உத்தரவை காட்டி, சிறையிலிருந்து வெளியே வர வேண்டும். 'ஜாமின் காலத்தில், எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும், லாலு பங்கேற்க கூடாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.4 2026