Monday, May 21, 2018

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை!


பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகத்தில் ஒரு குழந்தையை அதைப் பெற்ற தாயின் மூலம் அடையாளம் காண்பதில்லை. தந்தையின் பெயரில்தான் எந்தக் குழந்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. தாயின் மகத்தான பங்களிப்புக்கு எந்த அங்கீகாரமோ அல்லது மரியாதையோ அளிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தந்தையின் பெயரில் ஒரு நபரை அல்லது குடிமகனை அடையாளம் காணும் ஆணாதிக்க முறைக்குப் பலத்த அடியை அளித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த மதுமிதா ரமேஷ் என்பவருக்கும் சரண் ராஜ் என்பவருக்கும் திருமணமானது. அவர்கள் சில காலம் கழித்து கருத்து வேறுபாடுகளின் காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவகாரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து மதுமிதா ‘இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி’ என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடையின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.

2017 ஏப்ரலில் பிறந்த குழந்தைக்கு தவிசி பெராரா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் குழந்தைக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் அளித்த பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயராக மனிஷ் மதன்பால் என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மதன்பால் என்பவர் மதுமிதாவின் சிகிச்சைக்கு உதவினார் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சியி்ல் மதுமிதா மனு அளித்திருந்தார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்தையின் பெயரில் திருத்தம்தான் செய்யலாம். ஆனால், நீக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து மதுமிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முதல் வழக்கில் தோல்வியடைந்தார். பின்னர் இரண்டாவது வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கில் வருவாய்த் துறை அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழில் உள்ள தவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், வருவாய்த் துறை பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்யும் பதிவாளர்தான் இது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளவர் என்று நீதிமன்றத்துக்குப் பதில் கூறி விட்டது. பின்னர் மனம் தளராமல் இரண்டாம் முறையாக வழக்கு தொடர்ந்தார் மதுமிதா.

இதற்கிடையில் மதுமிதாவின் முன்னாள் கணவர் சரண் ராஜும் மதன்பாலும் தாங்கள் குழந்தைக்கு எந்தவிதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல என்று கூறி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மதுமிதா இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடை மூலம் குழந்தை பெற்றுள்ளார். எனவே, இந்தக் குழந்தைக்கும் சரண் ராஜுக்கும் மதன்பாலுக்கும் சம்பந்தமில்லை. எனவே, மதுமிதாவே இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகராட்சி பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற பெயரில் உள்ள மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் உள்ள இடமானது வெற்றிடமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளி்த்துள்ளார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...