Saturday, May 26, 2018

பழைய புண்களைக் கீறிப் பார்க்க இது நேரமில்லை!: தேவ கவுடா பேட்டி

Published : 25 May 2018 08:51 IST

முரளிதர கஜானே



மதவாத பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று விரும்புகிறார் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல் தலைவருமான எச்.டி.தேவகவுடா. அவருடைய பேட்டி:

பாஜகவை எதிர்க்கும் எல்லா கட்சிகளையும் எதற்காக கர்நாடக அரசு பதவியேற்பு விழாவுக்கு அழைத்தீர்கள்?

என்னுடைய அழைப்புக்கு வெவ்வேறுவித மான விளக்கங்களைப் பலரும் அளிக்கின்றனர். பாஜகவை எதிர்க்கும் எல்லா கட்சிகளை யும் அழைப்பதுதான் நோக்கம். அதில் சிலர் காங்கிரஸையும் எதிர்ப்பவர்களாக இருக்கக்கூடும். அனைவருடைய அரசியல் பொது திட்டமும் 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவை அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும் என்பது. இவ்விரு தரப்பினரையும் ஒரே மேடையில் இணைப்பதுதான் நோக்கம். பாஜகவுக்கு எதிரான அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். பாஜகவுக்கு எதிரானவர்கள் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்ற தகவல் மக்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது என்று நம்புகிறேன்.

காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்குவது சாத்தியமா, அதனால் பலன் இருக்குமா?

கர்நாடகத்தில் இப்போது காங்கிரஸின் தோழமைக் கட்சியாகிவிட்டோம். நேர்மையாகச் சொல்வதென்றால், காங்கிரஸ் இல்லாமல் பாஜக எதிர்ப்புக் கூட்டணி அமைப்பது சாத்தியமே இல்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்பு, தொண்டர்கள், ஆதரவாளர்கள் இருப்பதால் இப்போது இல்லாவிட்டாலும் கூட்டணி பற்றிப் பேசும்போது காங்கிரஸை அழைத்தே தீர வேண்டும். காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைத்தால் அது இயல்பாகவே அணியின் முக்கிய கட்சியாகிவிடும். ஆனால், இந்த நடவடிக்கைகளில் நான் தலையிட மாட்டேன்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தந்தது பலருக்கும் வியப்பாக இருந்தது; இது எப்படி நடந்தது?

கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் என்னைத் தாக்கிப் பேசியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. எதிர்க்கட்சி வரி சையில் உட்கார எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம். கடந்த ஓராண்டில் நாட்டின் நலன் கருதித்தான், என்னையும் என் கட்சியையும் சிறுமைப்படுத்திப் பலரும் பேசியதையெல்லாம் சகித்துக்கொண்டோம்.

கர்நாடக சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலே எடியூரப்பா வெளியேறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அது நீதித் துறைக்குக் கிடைத்த வெற்றி. எதிர்க்கட்சிக்காரர்களை பாஜக விலை கொடுத்து வாங்க முடியாமல், குறுகிய கால அவகாசம் அளித்து ஜனநாயகத்தை மீட்டது உச்ச நீதிமன்றம்தான். இதற்கும் முன்னதாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு உத்தரவிட்டதன் மூலம் மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கேற்ப நடந்துகொண்டது உச்ச நீதிமன்றம்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு நீண்ட நாள் பதவியில் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

பழைய புண்களைக் கீறிப்பார்க்க இது நேரமில்லை. கடந்த காலங்களில் எங்களாலும் காங்கிரஸாலும் செய்யப்பட்ட தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் நானும் என்னுடைய மகன் முதலமைச்சர் குமாரசாமியும் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பின்மை என்ற கொள்கைக்காக வாழ்ந்தவர் என்ற வகையிலும் நான் வகித்த பிரதமர் பதவிக்குரிய அந்தஸ்தைக் காக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட வேண்டியது என்னுடைய கடமை. நாட்டு மக்களின் எண்ணங்களைக் கேட்டுச் செயல்பட்டாக வேண்டும்.

‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: சாரி

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...