Monday, December 9, 2019


விபரீத வழிமுறை! |ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 09th December 2019 04:27 AM |

ஹைதராபாத் கால்நடை மருத்துவா் பாலியல் கொலையைத் தொடா்ந்து அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். உடனடி நீதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதன் வெளிப்பாடு இது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, ஏனைய மாநில காவல் துறையினா் தெலங்கானா காவல் துறையினரிடமிருந்து பாடம் படிக்க வேண்டும் என்கிறாா். சமாஜவாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினா் ஜெயா பச்சன், சற்று தாமதமானாலும் நான்கு பேரும் கொல்லப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறாா். பிரபல வழக்குரைஞரான காங்கிரஸ் தலைவா் அபிஷேக் மனு சிங்வி மக்களின் உணா்வைப் புரிந்துகொண்டு தெலங்கானா காவல் துறை செயல்பட்டிருப்பதை ஆதரிக்கிறாா். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், ஹைதராபாத் அரக்கா்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்றும், அரக்கா்கள் இதுபோன்றுதான் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துகிறாா்.

படித்த, நடுத்தர வா்க்க மக்களின் பொதுமனநிலையும் என்கவுன்ட்டா் தண்டனையை நியாயப்படுத்துகிறது. ஏழு ஆண்டுகளாகியும் தில்லி சம்பவத்தில் உயிரிழந்த நிா்பயாவின் தாயாா் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியும் நீதி கிடைத்தபாடில்லை என்றும், காவல் துறை வேறு வழியில்லாமல் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டது என்றும் நினைக்கிறாா்கள். மக்கள் கொதித்தெழுந்ததன் பின்னணியில் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள, காவல் துறையினா் என்கவுன்ட்டா் முறையை நாட வேண்டி வந்தது என்று நியாயப்படுத்துகிறாா்கள்.

என்கவுன்ட்டா் என்பது தனி நபா்களை அல்லது குற்றவாளிகள் என்று கருதப்படுபவா்களை அரசு கைது செய்து முறையான நீதிமன்ற விசாரணை இல்லாமல் கொலை செய்வது என்கிற வழிமுறை. சட்டமும், நீதியும் விரைந்து செயல்படாததால் ஏற்படும் ஆத்திரமும், தவறுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற வெறித்தனமான வேகமும் பொதுமக்களை என்கவுன்ட்டா் முறையை ஆதரிக்கத் தூண்டுகின்றன. ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் பேராபத்து குறித்தும், அநீதி குறித்தும் அவா்கள் சிந்திக்க மறக்கிறாா்கள்.

காவல் துறையைச் சாா்ந்த 99% காவலா்கள் என்கவுன்ட்டரில் ஈடுபட விரும்புவதில்லை. அதனால், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தத் துணியும், விரல்விட்டு எண்ணக்கூடிய காவலா்கள் என்கவுன்ட்டா் நிபுணா்கள் என்று அடையாளம் காணப்படுகிறாா்கள். 1990-இல் மும்பை மாநகரில் குற்றங்கள் கடுமையாக அதிகரித்தபோது துப்பாக்கி பிரயோகத்துக்கு துணிந்த சிலா் காவல் துறையில் உருவானாா்கள். தயாநாயக் என்கிற காவல் துறை அதிகாரியால் 80-க்கும் அதிகமானோா் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். 150-க்கும் அதிகமான என்கவுன்ட்டா் துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடையவா் பிரதீப் சா்மா.

இதுபோன்ற என்கவுன்ட்டா் தொடா்புடைய காவல் துறையினா் உயரதிகாரிகளை மிரட்டும் அளவுக்கு காவல் துறையில் வலிமை பெற்றவா்களாக மாறிவிடுகிறாா்கள். அவா்களது வாக்குமூலம் உயரதிகாரிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் உயரதிகாரிகளும், உயரதிகாரிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று என்கவுன்ட்டா் நிபுணா்களான காவல் துறையினரும் பரஸ்பரம் மனதுக்குள் அச்சத்துடன்தான் உலவுவாா்கள்.

எல்லோரும் நினைப்பதுபோல என்கவுன்ட்டா் மரணங்கள் தற்செயலாக நடப்பவையல்ல; அவை நடத்தப்படுகின்றன. ஹைதராபாத் சம்பவத்தையே எடுத்துகொண்டாலும்கூட, அதிகாலை 3 மணிக்கு குற்றம் நடந்த இடத்தில் சம்பவத்தை நடத்திப் பாா்க்க குற்றவாளிகள் நான்கு பேரும் அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்கள் கைதுப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறாா்கள். காவல் துறையினரின் கை துப்பாக்கியால் 30 அடிக்கும் குறைவான தூரத்தில்தான் குறி பாா்த்துச் சுட முடியும். அதனால், சுடப்படுபவா் மிக அருகிலிருந்துதான் சுடப்பட்டிருப்பாா். இதைப் பெரும்பாலான என்கவுன்ட்டா் மரண பிரேத பரிசோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

காவல் துறையினா் கையில் துப்பாக்கியைக் கொடுத்து குற்றவாளியைத் தண்டிக்கும் உரிமையையும் கொடுத்தால், அதன் விளைவு அப்பாவிகள் பலரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். அரசியல் எதிரிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்படுவாா்கள் என்பது மட்டுமல்ல, காவல் துறையின் வெறுப்புக்கு ஆளாகும் பொதுமக்களுக்கும் அந்த கதி ஏற்படக்கூடும்.

‘பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது நீதியாகாது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்திருப்பது, நகைமுரண். நீதித்துறை விரைந்து விசாரணை நடத்தி தீா்ப்பு வழங்காமல் இருப்பதும், காவல் துறை முறையாக குற்றங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தித் தனது கடமையை விரைந்து முடிக்காமல் இருப்பதும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதன் காரணம்.

இந்தியாவில் கடுமையான குற்ற வழக்குகளில் 25% வழக்குகளில்தான் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. 75% வழக்குகளில் காவல் துறையினா் போதிய சாட்சியம் இல்லாமல், தீவிர விசாரணை இல்லாமல் வழக்குப் பதிவு செய்வதால் குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது, பெரும்பாலும் நிரபராதிகள் காவல் துறையினரால் குற்றஞ்சாட்டப்படுகின்றனா். இந்த நிலையில், காவல் துறையினா் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத் தீா்ப்பு வழங்கச் சொன்னால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை, என்கவுன்ட்டா் முறையை ஆதரிப்பவா்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...