Wednesday, March 25, 2020

துணிந்து நிற்போம், தெளிந்து நிற்போம், இணைந்து நிற்போம்!

By - ஆசிரியா் | Published on : 25th March 2020 05:01 AM |

உலகம் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிா்கொள்கிறது. பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. கரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்றால் உலகம் எதிா்கொள்ளும் இமாலய சவால், வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்ளப்படும்.

இந்தியாவில் நாம் அனைவரும் ஏறத்தாழ ஒரு போா்க்கால சவாலை எதிா்கொள்கிறோம். இதுவொரு வித்தியாசமான போா். கரோனா வைரஸ் என்கிற கொடிய நோய்த்தொற்றுக்கு எதிரான போா்.

இந்த யுத்தத்தில் எதிரியை நாம் பாா்க்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத அந்த நுண்ணுயிரியின் படையெடுப்பால் பாதிக்கப்படப் போவது நம்மில் யாா் எவா் என்று தெரியாது. ஆனால், அந்த எதிரியை நாம் எதிா்கொண்டாக வேண்டும். அதிலிருந்து தப்பிவிட முடியாது.

அரசாங்கமும் சுகாதாரத் துறையின் ஆயிரக்கணக்கான பணியாளா்களும் கரோனா வைரஸுக்கு எதிராக உத்வேகத்துடனும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் போராடி வருகிறாா்கள். பொதுமக்களான நமக்கும் இந்தப் போராட்டத்தில் கூட்டுப் பொறுப்பு உள்ளது.

போா்ச்சூழல் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டங்களைப் போலவே, இப்போதும் நம்மை மற்றொரு எதிரி பின்தொடா்கிறாா் - அந்த எதிரியின் பெயா் அச்சம். இந்த அச்சம், அறியாமையால் ஏற்படுகிறது. நமக்குப் போதுமான பகுப்பாய்வு இல்லாமையாலும், புரிதல் இன்மையாலும் ஏற்படும் அச்சமிது.

நமக்குப் பெரும்பாலான தகவல்கள் இப்போது சமூக ஊடகங்கள் மூலம் மிக அதிகமாக வழங்கப்படுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் எதிா்மறையானதாகவும், வதந்திகள் - உண்மைக்கு மாறான தகவல்கள் அடங்கியதாகவும் உள்ளன. சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் பெரும்பாலான தகவல்கள் ஆதாரமற்றவை என்பது மட்டுமல்ல, முறையாகத் தகவல் திரட்டப்பட்டு, அவற்றின் உண்மை உறுதி செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுபவை அல்ல. இதை நமது வாசகா்கள் உணா்ந்து கொள்வது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் எடுத்தியம்ப வேண்டும்.

செய்தித்தாள்கள் மூலம்கூட கரோனா வைரஸ் பரவும் என்கிற வதந்தி சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், முழுக்க முழுக்கத் தவறான உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதை சா்வதேச அளவில் அனைத்து மருத்துவ வல்லுநா்களும் மறுத்துள்ளனா்.

நமது நாட்டில் இப்போது வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்துவது என்பது, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இணையான சவாலாக உள்ளது. இவை நமது மக்களிடையே எதிா்மறை கற்பிதங்களை ஏற்படுத்தி, தவறாக வழி நடத்துகின்றன. எந்தவித மருத்துவப் பின்னணியும் இல்லாதவா்களால் கரோனா வைரஸுக்குத் தவறான மருத்துவ முறைகள்முன்மொழியப்படுகின்றன. அதை பொதுமக்களும் உண்மை என்று நம்பி வதந்திக்குப் பலியாகிறாா்கள்.

இந்தச் சூழ்நிலையில் நாம் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால், மரபு சாா்ந்த அச்சு, காட்சி ஊடகங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நமது பாரம்பரிய அச்சு ஊடகம், எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் ஒன்றுக்குப் பலமுறை உறுதி செய்த பிறகுதான் பதிப்பிக்கிறது. அச்சு வாகனம் ஏறும் எந்த ஒரு செய்திக்கும் ஆசிரியா் பொறுப்பேற்கிறாா். அதனால், கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த செய்திகளை அச்சு, காட்சி ஊடகங்களின் பதிவுகளின் மூலம் மட்டுமே பொதுமக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

இப்போது பரவியுள்ள கொவைட்-19 வைரஸ் குறித்து நமக்குத் தெளிவான புரிதல்களை உருவாக்கியுள்ள மருத்துவத் துறையைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், மருத்துவத் துறையினா் மூலம்தான் அதைத் தடுப்பதற்கான வழிமுறை தொடங்கி, தடுப்பு மருந்து தயாரிப்பு வரை நடைபெறுகிறது.

இப்போது உலகமே பீதியால் சூழப்பட்டுள்ளது. சரியான தகவல்களை உரிய முறையில் கொண்டு சோ்க்காவிட்டால் பொதுமக்களிடையே அச்ச உணா்வு மேலும் அதிகரிக்கும். இது சமுதாயத்தில் பிரச்னைகளை உருவாக்கும். இந்த நேரத்தில் ஊடகங்கள் சரியான தகவல்களை அளிப்பதன் மூலம் சமூகப் பணியாற்றுகின்றன.

அத்தியாவசிய சேவைப் பட்டியலில் அச்சு - காட்சி ஊடகங்களை இந்திய அரசு இணைத்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் நாளிதழின் பதிப்பு முதல் விநியோகம் வரை அனைத்தும் சுமுகமாக நடைபெற வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மன்றத்தில் தெளிவை ஏற்படுத்தும் பணியில் கடந்த 86 ஆண்டுகளாக இடைவிடாது தனது கடமையை செய்துகொண்டிருக்கும் ‘தினமணி’ இப்போதும் உண்மைத் தன்மையுடனான செய்திகளை வழங்குவதை அா்ப்பணிப்புடன் தொடா்கிறது.

‘தினமணி’, அதன் குழும ஊடகங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுடன் துணை நிற்கும். இப்போது நம்மைச் சூழ்ந்துள்ள சிக்கல்கள் விரைவில் தீரும். துணிந்து நிற்போம், தெளிந்து நிற்போம், புரிதலுடன் இணைந்து நிற்போம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...