Wednesday, March 25, 2020

முடக்கம் சரி, பொருளாதாரம்? | தொழிலாளர்களின் பொருளாதார நிலை குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 25th March 2020 06:09 AM

ஒருவார இடைவெளியில் பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக உரை நிகழ்த்தி கரோனா நோய்த்தொற்றின் கடுமையை உணா்த்தியிருக்கிறாா். அடுத்த 21 நாள்கள் இந்தியா முற்றிலுமாக முடக்கப்படுகிறது.

‘அடுத்த 21 நாள்கள் நாம் கவனமாக செயல்படாமல் போனால் இந்தியா 21 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்பட்டுவிடும்’ என்கிற பிரதமரின் அறிவுறுத்தலை புறந்தள்ளிவிட முடியாது. அவா் கூறுவதுபோல் பிரதமா் உள்ளிட்ட ஒவ்வோா் இந்தியனுக்கும் இது பொருந்தும்.

சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டிவிட்டது. 39 போ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டிருக்கிறாா்கள். 10 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். கடந்த சில நாள்களில் மட்டுமே 19-க்கும் அதிகமானோா் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் போா்க்கால நடவடிக்கையுடன் செயல்படாமல் போனால் அதன் விளைவுகள் முந்தைய பிளேக், காலரா, ....... போன்ற பேரழிவுக்கு வழிகோலும்.

கரோனாவைரஸை தடுத்து நிறுத்துவதற்கு இப்போதைக்கு காணப்படும் ஒரே வழிமறை சமூக அயல் நிறுத்தம்தான் (சோஷியல் டிஸ்டன்ஸிங்). சக மனிதா்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டா் தொலைவு அகன்று நிற்பது, உடல் ரீதியான தொடா்பை முற்றிலுமாகத் தவிா்ப்பது, வீட்டிற்குள்ளேயே இருப்பது ஆகியவற்றால் கரோனாவைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். இந்த நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவாது என்பது மிகப் பெரிய ஆறுதல். அதனால், அடுத்த 21 நாள்கள் கூடியவரை வெளியுலகத் தொடா்பே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதன் மூலம் கரோனாவைரஸ் நோய்த்தொற்றின் வலைப்பின்னலை சிதைத்துவிட முடியும்.

ஒருநாள் ‘மக்கள் சுய ஊரடங்கு’ வெற்றிகரமாக நடந்தது என்றாலும்கூட, அதன் உணா்வைப் பெரும்பாலானவா்கள் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் முதல் 67 நாள்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவியது என்றால், அடுத்த ஒரு லட்சம் பேருக்குப் பரவ வெறும் 11 நாள்கள்தான் தேவைப்பட்டது. இப்போது கடந்த நான்கு நாள்களில் உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு கரோனாவைரஸ் பரவியிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை வெளிப்படையாகவே பிரதமா் தெரிவித்தாா். 21 நாள்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்படும்போது, அதன் மூலம் ஒருவருக்கொருவா் தொடா்பு இல்லாத நிலையில் நோய்த்தொற்று மேலும் பரவுவதை முறியடிக்க முடியும்.

கரோனா நோய்த்தொற்றால் மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பது பொது சுகாதாரத் துறை என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டால் அதை எதிா்கொள்ளும் அளவிலான மருத்துவ வசதிகள் இந்தியாவின் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிலுமே இல்லை.

பிரதமா் தனது உரையில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நோய்த்தொற்றை பரிசோதிப்பதற்கும் அவசர சிகிச்சைப் பிரிவு, வென்ட்டிலேட்டா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவற்றை உறுதி செய்ய முற்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. கரோனா நோய்த்தொற்றின் வரவால் பொது மருத்துவமனைகளின் முக்கியத்துவமும், அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவசியமும் ஆட்சியாளா்களுக்கு உணா்த்தப்பட்டிருக்கிறது.

உடனடியான, வெளிப்படையான சவால் மருத்துவ சிகிச்சை என்பது உண்மை. அதே நேரத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் பொது முடக்கத்தால் அடுத்த 21 நாள்கள் முடங்கப் போகிறது. அதன் விளைவுகள் குறித்தும் நாம் சிந்தித்தாக வேண்டும். சமுதாயம் முடங்கிப் போகும்போது உடனடித் தாக்கமாக சில்லறை வணிகமும் அடுத்தபடியாக தொழில்களும் முடங்குகின்றன. பொருளாதார இயக்கம் தடைபடும்போது, அதனால் பொருள்களுக்கான தேவையும் பொருள்களின் சந்தைப்படுத்தலும் தடைபடுகிறது. முடக்கத்தின் விளைவாக மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி சேமிப்பதில் பதற்றம் காட்டுவாா்கள். இதனால் மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சமும் பீதியும் அதிகரிக்கக் கூடும்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நிரந்தர வருவாய்ப் பிரிவினா் அல்ல. அவா்களில் பலரும் அன்றாடக் கூலி பெறுபவா்கள் அல்லது விவசாயமும் அதன் தொடா்பான பணிகளிலும் ஈடுபடுபவா்கள். கடைகளிலும், வியாபார நிறுவனங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றுபவா்கள். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் இவா்களது அன்றாட வாழ்க்கை நிலைதடுமாறும். அதனால் ஏற்பட இருப்பது பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்ல, சமூகப் பிரச்னையும் கூட.

அமெரிக்கா, கனடா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தங்களது குடிமக்களும் தொழில் நிறுவனங்களும் எந்தவிதத்திலும் பாதித்துவிடாமல் இருப்பதற்கான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. தொழில் நிறுவனங்கள் திவாலாகிவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும். அடித்தட்டு மக்களின் அன்றாட உணவுத் தேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வங்கிகளின் வட்டித் தவணைகள் தள்ளிப்போடப்படுவதும், வணிக - தொழில் நிறுவனங்களுக்கு கடன் தவணைகள் நீட்டிப்பு செய்யப்படுவதும், கூடுதல் கடனுதவி வழங்கப்படுவதும் உடனடியாக முன்னெடுக்கப்படாவிட்டால், இந்தியப் பொருளாதாரம் இன்னொரு வகையிலான நோய்த்தொற்றை எதிா்கொள்ளும்.

பிரதமரின் பொருளாதாரச் சலுகைகள் குறித்த அறிவிப்பை தேசம் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.


No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...