Wednesday, March 18, 2015

7 நாட்கள் தொடர் விடுமுறையா?- வங்கி அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை வருவதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என ஒரு தகவல் பரவி வருகிறது.

அதாவது வரும் மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை ராமநவமி என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம். 30-ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும். 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிதியாண்டுக்கான இறுதி நாள் என்பதாலும், ஏப்ரல் 1-ம் தேதி புதன்கிழமை அடுத்த நிதியாண்டுக்கான முதல் நாள் என்பதாலும் கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக இரு தினங்களும் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதாலும் அவ்விரு தினங்களுக்கும் விடுமுறை. அடுத்த நாள் ஏப்ரல் 4-ம் சனிக்கிழமை வங்கி அரைநாள் மட்டுமே செயல்படும். அதற்கு அடுத்த நாள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள் ளது.

இந்த தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்டால் தங்களால் பணப் பரிவர்த்தனை உள்பட எவ்வித வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவித்தனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மார்ச் 28-ம் தேதி ராமநவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

மார்ச் 30-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். அடுத்த நாள் மார்ச் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்றாலும்கூட அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறை ஆகும். எனினும் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருப்பில் இருக்கும் என்பதால் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தெரிவித்த னர்.

மாணவர்கள், இளைஞர்களை அடிமைகளாக்கும் 'வாட்ஸ்அப்': மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் எச்சரிக்கை



சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது. தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர்.

வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு ஆகியவற்றால் இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

குடும்ப உறவுகளில் பாதிப்பு

இதுகுறித்து மனநல மருத்துவர் ஆ.காட்சன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு அதிகரிப்பால் இன்று படிப்பு, வேலை அல்லது உறவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உபயோகிக்கும் உந்துதல் ஏற்படும் நிலை, காலையில் விழித்த உடன் அதை உபயோகித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவாவது அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், அந்த நபர் சமூக வலைதள உபயோகத்துக்கு அடிமை யாகி விட்டார் என்றே அர்த்தம்.

மாணவர்கள், இளைஞர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய குறுஞ்செய்திகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் நாட்டம் குறைவது, வேலையில் கவனமின்மையால் உயர் அதிகாரி கள் கண்டிப்புக்கு ஆளாவது, பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல், ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும்.

தீர்வுதான் என்ன?

ஆரம்ப நிலையிலேயே தடுத்தல் அல்லது வரைமுறைப் படுத்துதல்தான் இதற்கு சிறந்த வழி. இதில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். முடிந்தவரை சமூக வலைதளங்களை உபயோகிக்கும் வயதை காலம் தாழ்த்துதல் நல்லது. பிள்ளைகளின் வலைதள மற்றும் குறுஞ்செய்திகளைக் கண்காணிக்க சிறந்த வழி பெற்றோர்களும் அவர்களின் நண்பர்களின் பட்டியலில் இருப்பதுதான். ஆரம்பத்திலேயே உபயோகம் குறித்த கட்டுப்பாடுகளை விதிப்பது, எல்லை மீறும்போது முழுவதுமாக தடை செய்வது போன்றவை அடிமைத்தனத்தை தவிர்க்கும். பிள்ளைகளுக்கு தேவையில்லை என்ற விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுப்பது நல்லது. பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, பெற்றோர் பிள்ளைகளின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது. வீட்டில் உள்ளவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகரித்தல், குடும்ப நபர்களிடம் நேரம் செலவிடும்போது மொபைல் போன் உபயோகத்தை தடை செய்வது பலன் தரும்.

தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இது பலருக்கு மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதால், பெற்றோர்கள் பிள்ளைகளைக் கவனமாக கையாளுவதுடன் தங்களையும் பாதுகாத்துக் கொள்வது நல்லது என்று அவர் தெரிவித்தார்.

வெற்றியிலும் சில பாடங்கள்

வெற்றியைவிடவும் தோல்வியைச் சிறந்த ஆசான் என்பார்கள். காரணம், வெற்றி தரும் பரவசம் குறைகள் தெரியாத அளவுக்குக் கண்ணை மறைத்துவிடும். தோல்வி நமது குறைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் காட்டிவிடும்.

வெற்றி மீது வெற்றி பெறும் நேரத்திலும் கவனமாகச் சுயபரிசோதனை செய்துகொண்டு குறைகளைக் கண்டறிவது மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவும். தவிர, வெற்றி என்பது மட்டும் சிறப்புக்கான சான்றிதழாகிவிடாது என்பதால் இந்த வெற்றியை விமர்சனபூர்வமாக அணுக வேண்டியுள்ளது.

பெரும் பதற்றத்துடன் தொடங்கிய இந்தியாவின் உலகக் கோப்பைப் பயணம் தொடர் வெற்றிகளால் இன்று தெம்புடன் இருக்கிறது. இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் முதல் சுற்றில் இந்தியா இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் மூவர்ணக் கொடிகள் உற்சாகமாகப் பறக்கின்றன.

இந்திய ரசிகர்களின் முகங்களில் உற்சாகம் தாண்டவ மாடுகிறது. கோப்பை கைக்கு வந்துவிடும் என்னும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. கால் இறுதியில் ஆடவிருப்பது வங்கதேசம் என்பதால் அரை இறுதியில் யாருடன் மோதல் என்பது பற்றிய யூகங்கள் வலம் வருகின்றன.

வங்கதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 2007-ல் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறக் காரணமான அணி அது. என்றாலும் கடந்த 6 போட்டிகளில் இந்தியா ஆடிய விதத்தைப் பார்க்கும்போது அது அரை இறுதிக்குச் செல்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது.

தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியை இந்தியா பெற்றுவிடும் என நம்பலாம் என்றாலும் அடுத்த போட்டியில் வெல்வதும் அதில் வென்றால் அதற்கடுத்த போட்டியில் வெல்வதும் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. தொடர் வெற்றிகளில் தெரிந்த சில பலவீனங்களைப் பார்க்கையில் இதிலுள்ள சவால் புரிந்துவிடும்.

வலுவான பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டிகளில் இந்தியா கவனமாகவும் தீவிரமாகவும் போராடி வென்றது. வலுக் குறைந்த ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியை எளிதாக வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 183 ரன்னுக்குள் சுருட்டியபோதும் அந்தப் போட்டியில் வெற்றி எளிதாக வந்துவிடவில்லை. அதே போலத்தான் ஜிம்பாப்வே அணியுட னான போட்டியும். அயர்லாந்து அணி நன்கு போராடினாலும் பெரிய சவாலாக விளங்கவில்லை.

தொடக்க ஜோடி

கண்ணைக் கூசவைக்கும் வெற்றியின் வெளிச்சத்தை ஊடுருவிப் பார்த்தால் இந்தியாவின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. குறிப்பாகத் தொடக்க ஜோடியின் ஆட்டம். ஷிகர் தவனும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து ஒரே ஒரு முறைதான் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி 174 ரன்களை எடுத்தது. அதை விட்டுவிட்டால் ஐந்து ஆட்டங்களில் இவர்கள் இணைந்து எடுத்த மொத்த ரன்கள் 104.

தவன் இரண்டு சதங்களை அடித்துவிட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக ஆடினார். இவர் ஆட்டத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் தவறவிடப்பட்ட கேட்சுகளின் வடிவில் அதிருஷ்டமும் இவருக்குக் கைகொடுத்தது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ரோஹித் ஷர்மாவைப் பொறுத்தவரை அதிருஷ்டமும் கைகொடுக்கவில்லை. ஆறு போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் 15, 0, 57*, 7, 64, 16. வலுவான மூன்று அணிகளுக்கு எதிராக இவர் அடித்த ரன்கள் 15, 0, 7. இரண்டு அரை சதங்களும் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து அணிகளுக்கு எதிரானவை. அசாத்தியமான திறமை உள்ளவர் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஷர்மா அதை நிரூபிக்க அதிக வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த அளவுக்கு இன்னொருவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கால் இறுதியில் சற்றே வலுக் குறைந்த அணிக்கு எதிராக இவர் நன்கு ஆடிச் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு கால், அரை இறுதி ஆட்டங்களில் வலுவான பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அதுதான் அவரது திறமைக்கும் அவருக்கு அளிக்கப்படும் வாய்ப்புக்கும் நியாயம் செய்வதாக அமையும்.

விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஒவ்வொரு சமயத்தில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்குப் பங்களித்து வருகிறார்கள். வலுவான தொடக்கம் அமையும்போது இவர் களுடைய பங்களிப்பு இன்னமும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

ஜடேஜாவின் ஆட்டம்

கவலைக்குரிய ஆட்டம் என்றால் அது ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம்தான். திறமையுள்ள மூத்த ஆட்டக்கரர்களையும் இளம் ஆட்டக்காரர்களையும் தவிர்த்து விட்டு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சில் ஓரளவு நன்றாகவே செயல் பட்டுவருகிறார். களத்தடுப்பிலும் செயல்படுகிறார். ஆனால் மட்டை வீச்சு படு மோசமாக உள்ளது. மூன்று போட்டிகளில் இவருக்கு ஆட வாய்ப்புக் கிடைத்தது.

அதில் இவர் எடுத்த ரன்கள்: 7, 2, 13. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா தடுமாறிக்கொண்டிருந்தபோது இவர் களமிறங்கினார். 183 என்னும் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா, 107-க்கு 5 விக்கெட்கள் என்று சிக்கலில் இருந்தது. தோனியுடன் சேர்ந்து நிதானமாக இவர் ஆடியிருந்தால் அணி எளிதாக வெற்றிபெற்றிருக்கும். ஆனால் மிகவும் பொறுப்பற்ற ஒரு ஷாட்டால் இவர் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராகவும் இந்தியாவின் முன்வரிசை மட்டையாளர்கள் தடுமாறினார்கள். ரெய்னா, தோனியின் ஆட்டமும் விடப்பட்ட கேட்சுகளும் சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்றின. இரண்டு கேட்சுகள் கொடுத்தாலும் அற்புதமான ஷாட்களை அடித்த ரெய்னாவிடம் தோனி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

அது என்ன என்று ஆட்டம் முடிந்த பிரகு அவரிடம் கேட்கப்பட்டது. “நமக்குப் பிறகு மட்டையாளர் யாருமில்லை என்று ரெய்னாவுக்கு நினைவுபடுத்தி, அவரது வேகத்தைக் குறைத்துக்கொள்ளச் சொன்னேன்” என்றார் தோனி. ஜடேஜாவைப் பற்றிய கூற்றாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் என்பது அணிக்கும் ஜடேஜாவுக்கும் நல்ல அறிகுறி அல்ல.

செய்யப்படாத பரிசோதனைகள்

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதம், களத் தடுப்பு வியூகம் என தோனியின் தலைமை சிறப்பாகவே உள்ளது. நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் ஆபத்பாந்தவன் வேலையை அவர் மட்டை சரியாகவே செய்கிறது. ஆனால் புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்க அவர் தயங்குகிறார். அமீரகம், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சில பரிசோதனைகளைச் செய்திருக்கலாம்.

வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜடேஜாவைச் சற்று முன்னதாக இறக்கிவிட்டிருக்கலாம். குறிப்பாக அமீரக அணிக்கெதிரான போட்டியில் இப்படிச் செய்திருக்கலாம். அதுபோலவே அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற போட்டிகளில் அக்‌ஷர் படேலைக் களமிறக்கியிருக்கலாம். இதுபோன்ற பரிசோதனைகள் பின்னாளில் கடுமையான போட்டிகளின்போது பயன்படும்.

தொடக்க ஜோடியின் ஆட்டம், கேட்சுகள் விடப்படும் அவலம், ஜடேஜாவின் ஆட்டத் திறன், புதிய திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் வாய்ப்பைத் தவற விட்டது என இந்தியாவின் குறை களைப் பட்டியலிடலாம்.

சிறப்பான பந்து வீச்சு, பந்து வீச்சாளர்கள் எகிறு பந்துகளைப் பயன்படுத்தும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம், ஒருவர் சறுக்கினாலும் இன்னொருவர் தவறாமல் கைகொடுக்கும் மட்டை வலு, மட்டையாளர்கள் எகிறு பந்துகளை ஆடும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (பெர்த் நீங்கலாக), ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல், தோனியின் அலட்டிக்கொள்ளாத அணுகுமுறை ஆகியவை இதுவரை இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்து பல்வேறு சாதனைகளும் புரியவைத்திருக்கின்றன. இன்னும் மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து வெல்ல இந்தத் திறமைகள் கை கொடுக்குமா? புதிய வல்லமைகள் கூடுமா?

கோப்பையை வெல்லக்கூடிய அணி என்னும் நம்பிக்கையை இந்த அணி ஏற்படுத்தியுள்ளது. குறைகள் திருத்திக்கொள்ளப்பட்டு, மேலும் சுதாரிப்புடன் ஆடினால் உலகை வெல்லலாம். நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பலாம்.

கைக்குச் சிக்காத பந்து

இந்திய அணியின் முக்கியமான பிரச்சினை களத்தடுப்பு. குறிப்பாக, கேட்ச் பிடிக்கும் திறமை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கேட்சுகள் விடப்பட்டிருக்காவிட்டால் அந்த அணியால் 183 ரன்களை தொட்டிருக்கவே முடியாது.

பெர்த் ஆடுகளத்தை அழகாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் களத் தடுப்பாளர்கள் கைவிட்ட சோகம் அது. முன்னணி மட்டையாளர்களை அதற்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை. முன்னணி மட்டையாளர் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால்கூட இந்தியாவின் நிலை சிக்கலாகியிருந்திருக்கும்.

இன்றைய அணியில் அனைவருமே நன்றாகக் களத் தடுப்பு செய்வதால் யாரை எங்கே நிறுத்துவது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தோனி இந்தத் தொடரின்போது ஒரு முறை கூறினார். கேட்சுகளைக் கோட்டைவிட்ட ஆட்டக்காரர்கள் இந்தக் கூற்றைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

வழுக்கை விழுவது ஏன்?

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

முடியின் வளர்ச்சி

முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.

முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.

ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.

இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

என்ன காரணம்?

வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்,,,, இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.

வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.

கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.

சரி, ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்தச் சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது; அதீதமாகச் சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.

வழுக்கையைத் தடுக்க முடியுமா?

நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.

தலைமுடிகளின் வேர்க் கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.

வழுக்கை விழத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவினால், ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.

ஊட்டச்சத்து முக்கியம்!

சிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும். ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.

என்ன சிகிச்சை?

பெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) என்று பெயர்.

இதெல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ‘விக்’!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

Tuesday, March 17, 2015

சிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ., பட்டதாரி!

ன்ஜினீயரிங்கில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, ஐ.டி.நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குடும்ப எதிர் ப்பை மீறி, பிடிவாதமாக ‘சமையல்காரனாக’ மாறியிருப்பது... ஆச்சர்ய செய்தி!

நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால், படித்த இளைஞர்கள் பலர் இயற் கை வேளாண்மையை நோக்கி பயணப்பட்டது நல்விதை. அந்தப் பாதை யில்தான், எம்.இ., இன்ட்ரஸ்ட்ரியல் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு, இயற் கை வேளாண்மைக்கு ஆதரவாக சிறுதானிய சாப்பாடுகள், பலகாரங்களை விற்பனை செய்யும் ‘திருவள்ளுவர் உணவகத்’தை, சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார், சுரேஷ்.

“நல்ல உணவுக்கான வெற்றிடம் நம் சமூகத்தில் அதிகம். எவ்வளவு பணம் தந்தாலும் ஆரோக்கியமான உணவு என்பது குதிரைக் கொம்பாக இருக்கி றது. இந்த ஆதங்கமும் ஏக்கமும்தான் என்னை இந்தத் தொழிலுக்கு கொண்டுவந்தது. ‘அடுப்பங்கரையில நின்னு கரண்டி பிடிக்கவா இன்ஜினீயரிங் படிச்ச?’ என்ற கேள்விகளைக் கடந்து, முதலில் விருகம்பாக்கத்தில் மிகச்சிறிய இடத்தில் ‘திருவள்ளுவர் உணவகம்’ தொடங்கினேன். 

வரவேற்பு பெரிதாக இல்லை. மூன்று மாதத்தில் கடையை மூட வேண்டிய நிலை. ‘இப்பவாவது புத்தி வந்துச்சா?’ என்று மீண்டும் கோபக் கேள்விகள் துரத்தின. தோல்வி, என் வைராக்கியத்தைக் கூட்டியது. என்னைப் போலவே, எம்.இ., படித்த என் நண்பன் தினேஷும் என்னுடன் இந்த முயற்சியில் இணைந்தான். 

பல தரப்பிலும் இரண்டு லட்சம் கடன் பெற்று, கரையான்சாவடியில் சற்று பெரிய அளவில் மீண்டும் ‘திரு வள்ளுவர் உணவகம்’ தொடங்கினேன். 10 மாதங்கள் கடந்த நிலையில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. முழுக்க முழுக்க சிறுதானியம் என்று செய்யமுடியவில்லை. சாதாரண சாப்பாடு, பலகாரங்களு டன் சிறுதானிய உணவுகளையும் இணைத்து தருகிறேன். ஆனாலும், ஆவாரம் பூ சாம்பார், தினைப் பொங் கல், கம்பு லட்டு, சோள கொழுக்கட்டை, வில்வம்பூ தண்ணீர், ஏதேனும் ஒரு கீரை, கொள்ளு சூப், மூலிகை டீ என தருகிறோம். மிக தொலைவில் இருந்தும் பலர் வந்து சாப்பிடுகிறார்கள்.
பல கட்ட சோதனைகளைத் தாண்டி இன்றைக்கு காலூன்றிவிட்டேன். பார்ட்டனாராக சேர்ந்த நண்பன் தாக்குப் பிடிக்காமல் பாதியில் சென்றுவிட்டான். சமையல் மாஸ்டர்கள் கூட, இந்த சமையலை விரும்பாததால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். அதே சமயம் எப்படியோ சில கைகள் ஒத்தாசைக்கு வந்து விடும். சிறுதானிய உணவுக்கான விழிப்பு உணர்வும் வரவேற்பும் பெருகிக்கொண்டே வருவது சந்தோஷம். 

கல்யாணம், பிறந்தநாள் விழா போன்ற விசேஷங்களுக்கு எல்லாம் இப்போது சிறுதானிய விருந்து கேட்கி றார்கள். வீட்டில் சிறுதானிய சமையலை செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதனால், அதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம். பக்கத்தில் உணவகங்கள் நடத்துபவர்கள் கூட சிறுதானிய பயிற்சி வகுப்பு களுக்கு வருகிறார்கள். அவங்களின் ஓட்டலில் ஏதாவது ஒன்று மட்டும் சிறுதானிய உணவாக தர முடியுமா என்று ஆலோசிக்கிறார்கள். இதுதான் என் ஆசை. சிறுதானிய உணவுப் பழக்கம் அதிகரித்தால் எனக்கு மகிழ்ச்சி. இதற்குத்தான் நான் உழைத்தேன்!’’ -கொள்ளு சூப்பை குவளையில் ஊற்றுகிறார், சுரேஷ் எம்.இ!
 
-சாவித்ரி கண்ணன்

ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி - 1

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன். 

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன். 

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.
எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.
நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு. 

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. 

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது. 

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.


அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை. 

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை. 

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர். 

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது.    

- டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து..

மனதில் நிற்கும் ரயில்கள்! By தஞ்சாவூர்க்கவிராயர்



மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான புதிய வசதிகள் சில அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ரயில் போக்குவரத்து சாமானியர்களின் பயணத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அறுநூறும் எழுநூறும் கொடுத்து ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வசதியில்லாத ஏழை எளிய மக்களின் பயணத்திற்கு எப்போதும் ரயில்தான் உதவுகிறது.

அந்தக் கால ரயில் என்றாலே புகை விட்டபடி போகும் ரயில் என்ஜின்தான் நினைவுக்கு வரும். ரயில் பற்றிய சித்திரங்கள் அப்படித்தான் வரையப்பட்டன.

இலங்கையில் புகை விட்டபடி செல்லும் ரயில்களை "புகை ரதங்கள்' என்றே சொல்வார்கள். என்ன ஒரு கவித்துவமான சொல்லாட்சி!

புகைவண்டிகளில் இருந்து இறங்கும் பயணிகள் கண்களைக் கசக்கிக் கொண்டுதான் இறங்குவார்கள். புதிதாகத் திருமணமான பெண்கள் ரயில்களில் கண்களைக் கசக்கிக் கொண்டு பயணிப்பதைப் பார்த்தால் கண்களில் ரயில் கரி விழுந்து விட்டதா அல்லது பிறந்த வீட்டை விட்டுச் செல்வதால் ஏற்படும் பிரிவாற்றாமை காரணமா என்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

பாசஞ்சர் வண்டியின் பெட்டிகள் தனித்தனி மரத்துண்டுகள் கோக்கப்பட்ட இருக்கைகளுடன் பார்க்கவே நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். ரயிலில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்களும் ரயில் புகையும் கலந்த வாசனை, ரயில் பூராவும் பரவி இருக்கும். இந்த வாசனை அலாதியானது.

ரயில் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தை மனம் கொண்ட எல்லாருக்குமே சலிப்புத் தராத வியப்புதான். பாசஞ்சர் வண்டிகள் எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அதுவும் கிராமங்களிலிருக்கும் சிறிய அழகிய ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்போது அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட மனமே இல்லாமல் புறப்படுவது போல் தோன்றும்.

கிராமத்து ரயில் நிலையங்களின் அழகு சொல்லி மாளாது. ரயில் வருகின்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலும் ஆள் அரவமற்றே காட்சி தரும். அவற்றின் பிளாட்பாரம் நெடுகிலும் மரநிழல் படுக்கையாய் விரிந்திருக்க அதன் மீது ஆங்காங்கே பூக்களும் இலைகளும் உதிர்ந்து அழகை அதிகரிக்கும்.

சில ஸ்டைஷன்களில் விழுதுகளைத் தொங்க விட்டபடி நிற்கும் அழகிய ஆல மரங்கள். அவற்றின் நிழல் எப்போதும் குளுமையாக இருக்கும். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளைச் சீருடையுடன் கையில் பச்சைக் கொடியும் கக்கத்தில் சுருட்டிய வைத்திருக்கும் சிவப்புக் கொடியோடும் சிலைபோல் நிற்பார்.

அவர் கொடியை ஒரு சொடுக்கு சொடுக்கி காண்பிக்கும் லாவகம் வியப்பளிக்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிராமத்து ரயில் நிலையங்களை புழுதிப்புயலுடன் கடகடத்தபடி கடந்து செல்லும்.

"கூஜா' என்கிற பாத்திரம் ரயில் பயணத்துக்கென்றே தயாரிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும். சற்று பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போதெல்லாம் ஒரு கையில் கூஜாவில் காபியை வாங்கிக் கொண்டு மறு கையால் வேட்டி நுனியைப் பிடித்தபடி ஓடி வரும் நடுத்தர வயது குடும்பஸ்தர்களைத் தவறாமல் பார்க்கலாம்.

ஹோல்டால்கள், டிரங்குப் பெட்டிகள் சகிதம் ரயிலில் பயணிக்கும் குடும்பங்களை அந்தக் காலத்தில் காணலாம். இரவு பத்து மணிக்கு தஞ்சாவூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் பாட்டிமார்கள், ரயில் நிற்கும் கொஞ்ச நேரத்தில் முறுக்கும் தேன்குழலும் நிரம்பிய டின்களை எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறி மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு பத்திரமாக மாம்பலத்தில் வந்திறங்கும் சாமர்த்தியம் படைத்தவர்கள்.

வெகுகாலத்திற்கு முன்னர் சில ஊர்களுக்கு முதன்முறையாக ரயில் வந்தபோது கிராமவாசிகள் பார்த்துவிட்டு மிரண்டு ஓடியிருக்கிறார்கள். முதல் திரைப்படம்கூட ஒரு ஊருக்கு புதிதாக ரயில் வருவதைப் பற்றித்தான்.

ரயில் பயணம் சில சமயம் மனிதர்களை விசித்திரமான சந்தேகப் பிராணிகளாக்கிவிடுகிறது. இதை வைத்து "எல்லார்வி' ஒரு கதையே எழுதியிருக்கிறார்.

ஒரு ரயில் பயணி கண்ணில் படுகிறவர்களிடம் எல்லாம் "சார் இந்த வண்டி விருத்தாசலம் வழியாத்தானே போகுது?' என்று கேட்டுக் கொண்டிருப்பார். டிக்கெட் பரிசோதகரிடமும் கேட்டு உறுதி செய்து கொள்வார். விருத்தாசலம் போய்ச் சேரும் வரை பக்கத்திலிருப்பவர்களை நச்சரித்துக் கொண்டே வருவார்.

முன்பெல்லாம் ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சார வசதி கிடையாது. அப்போதெல்லாம் ஒரு நபர் கையில் தீவட்டியுடன் நின்று கொண்டு "வடமதுரை.. வடமதுரை' என்று சத்தம் போடுவாராம். ஓடுகிற ரயில் என்ஜின் டிரைவரிடம் மூங்கில் வளையத்தில் கோத்த சாவியை பிளாட்பாரத்தில் நிற்பவர் லாவகமாக ஒப்படைக்கும் காட்சி ஆச்சரியமூட்டும்.

"ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில்' என்கிற தலைப்பில் ஜெயகாந்தன் எழுதிய கதையை மறக்க முடியுமா? பாசஞ்சர் வண்டியின் பயணிகள்தான் சக மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தனர்; கற்றுக் கொண்டனர். பிறருக்காக விட்டுக் கொடுக்கும் சுபாவம், பிறர் துன்ப துயரங்களுக்கு செவி கொடுக்கும் மனசு எல்லாம் பயணங்களின்போது சர்வ சாதாரணம்.

ஓடும் ரயில் பெட்டிகளில் முகிழ்க்கும் நட்பு அலாதியானது. இரண்டு பயணிகள் பேசிக்கொண்டே போகும்போது அவர்களிடையே பல வருஷ அன்னியோன்யம் ஏற்பட்டுவிடும். அவரவர் இறங்க வேண்டிய இடம் வரும்போது பிரியா விடைபெறுவார்கள்.

ஆனல் அந்த நட்பு சில நாட்களில் மறக்கப்பட்டு விடும். இதனை "ரயில் சினேகம்' என்றே குறிப்பிடுவது வழக்கம்.

கிராமத்து சிறுவர்களுக்கு ரயிலில் வரும் விருந்தினர்களை ரொம்பவும் பிடிக்கும். அதுவும் பட்டணத்திலிருந்து ரயிலில் வரும் சிறுவர்களை ஒருவித பொறாமையுடன் பார்ப்பார்கள்.

தனது ரயில் பயணம் பற்றிச் சொல்லும்போது, "ஏ, அப்பா! எங்க ரயில் எவ்வளவு புகை விட்டுக்கிட்டு வந்தது தெரியுமா?' என்று அந்தக் குழந்தை சொல்வதை கண்கள் விரியக் கேட்பார்கள்.

ரயில் போகும்போது "தடக்' "தடக்' என்ற சத்தம் ஒரு தாள லயம்போலக் கேட்கும். ரயிலின் இந்தத் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்குவதும் விழிப்பதும் தனி சுகம்.

அந்தக் காலத்து கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் ஒரு குடும்பம் ஊரைவிட்டு பட்டணத்துக்கு குடிபெயர்வதைச் சொல்ல, குபுகுபுவென்று புகை விட்டுக் கொண்டு போகும் ரயிலைக் காட்டுவதே வழக்கம்.

பழைய திரைப்படமொன்றில் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்று பாடியபடி ரயிலை ஓட்டி நடந்து செல்லும் சிவாஜியின் முகபாவங்களையும் நாகேஷின் சேட்டைகளையும் மறக்க முடியுமா?

"நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்' என்ற வரிகளைப் பாடும்போது சிவாஜியின் முகத்தில் தெரியும் பெருமிதத்திற்குக் காரணம் ரயில் அல்லவா?

"தில்லானா மோகனாம்பாள்' படத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் சி.கே. சரஸ்வதியும் அரங்கேற்றிய நகைச்சுவையுடன் கூடிய காவிய ரசத்தை மறக்கத்தான் முடியுமா?

ரயிலில் ஜன்னலோரம் உட்கார இடம் கிடைத்துவிட்டால் மனசு மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

அழகும் அமைதியும் கொஞ்சும் சில சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷன்களைப் பார்க்கும்போது அந்த ஸ்டேஷனில் இறங்கி மீதி வாழ்க்கையை அங்கேயே கழித்து விடலாமா என்று தோன்றும்.

ரயில் பயணங்களின்போது நாம் நம்மை ஒரு துறவியாக, ஒரு கவியாக சில சமயம் ஒரு குழந்தையாகக்கூட உணர நேரிடும்.

நண்பர் ஒருவர் ரயில்வே ஜங்ஷனை "கல்யாண சத்திரம்' என்று குறிப்பிடுவார்.

ரயிலுக்காகக் காத்திருக்கும்போது தூரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் ரயிலின் மஞ்சள் விளக்கு அருகில் வரவரப் பெரிதாவது நமக்குள் நம்பிக்கை வெளிச்சமாய்ப் பரவுவதை மறுப்பதற்கில்லை.

ரயிலைப் பற்றிய உருக்கமான கதை ஒன்றினை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார்:

ஒரு தாய். பெரியவனும் சிறியவனுமாய் இரு குழந்தைகள். ரயிலுக்குக் காத்திருக்கிறார்கள். அந்த ஊரில் ரயில் தண்டவாளம் மாற்றுகிற வேலை செய்த கூலி ஆட்களில் அந்தப் பெண்ணும் ஒருத்தி.

அந்த ஊரில் அவர்களுக்கு வேலை முடிந்துவிட்டது. பிழைப்பு தேடி மெட்ராஸ் போகிறார்கள்.

பெரியவன் அம்மாவை கேள்வி கேட்டு நச்சரிக்கிறான்.

"அம்மா இந்தத் தண்டவாளமெல்லாம் நீ போட்டதாம்மா?'

"பேசாம இருக்க மாட்டே?'

"நீ, அப்பா, ராமுத் தாத்தாவெல்லாம் தெக்குக் காடு வழியா தண்டவாளம் போட்டீங்களே? அந்த தண்டவாளம் தானேம்மா இது?'

"ஆமா... ஆமா... உயிரை வாங்காதே..'

மெட்ராஸ் போகிற ரயில் வருகிறது. அதில் அவசரத்தில் ரிசர்வேஷன் கம்பார்ட்மென்டில் ஏறிவிடுகிறார்கள்.

உள்ளே இருந்தவர்கள் அவளை இறங்கச் சொல்லி விரட்டுகிறார்கள். ரயில் கிளம்பி விடுகிறது.

"ரிஸர்வேஷன் கோச்சில் வருகிறவர்களின் கோபமும் நீதிவேட்கையும் லேசுப்பட்டதா என்ன?

அடுத்த ஸ்டேஷனிலேயே இறக்கி விடப்பட்டு ரயில்வே போலீஸிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

ரயில் புறப்பட்டுப் போகிறது.

குழந்தை கேட்கிறது.

"அம்மா ரயில் போற இந்தத் தண்டவாளம்கூட நீ போட்டதுதானம்மா?'



கட்டுரையாளர்: எழுத்தாளர்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...