Friday, June 22, 2018

புழல் சிறையில் பயங்கரம்; ஹாலிவுட் படப் பாணியில் பிரபல தாதா கொலை: சக கைதிகள் வெறிச்செயல்

Published : 20 Jun 2018 17:19 IST

சென்னை




கொலைசெய்யப்பட்ட பாக்சர் முரளி, கைது செய்யப்பட்டவர்கள்- படம் சிறப்பு ஏற்பாடு

புழல் சிறைக்குள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடியை ஹாலிவுட் பட பாணியில் சக கைதிகளே கழுத்தை அறுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் மத்திய சிறைக்குள் பாக்ஸர் வடிவேலு உயிரிழந்ததால் நடந்த கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டது பழைய வரலாறு. தற்போது இன்னொரு பாக்ஸரும், கைதியுமான பாக்ஸர் முரளி சக கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

சென்னை, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மல்லி காலனியைச் சேர்ந்தவர் முரளி என்கிற பாக்ஸர் முரளி (31). கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், மாதவரம் ஆகிய காவல் நிலையங்களில் 16 வழக்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு அரிவாளால் கேக் வெட்டி பிரபலமான ரவுடி பினு கைது செய்யப்பட்டபோது, சென்னையில் ஒரே இடத்தில் இவ்வளவு ரவுடிகள் எப்படி குவிந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சென்னை முழுவதும் ரவுடிகள் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

சென்னை முழுவதும் போலீஸார் சோதனை நடத்தி ‘ஏ’ கிரேடில் இருந்த பல ரவுடிகளை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது ஆயுதங்கள் சுற்றியதாக பாக்ஸர் முரளியை வியாசர்பாடி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த பாக்ஸர் முரளி, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் விசாரணைக் கைதிகள் பிரிவில் இருந்த முரளியை, தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு போலீஸார் மாற்றினர்.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடியாக இருந்த நாகேந்திரன் என்பவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்று, புழலில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார். நாகேந்திரனுக்கும், பாக்ஸர் முரளிக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி சிறைக்குள்ளேயே மோதலில் ஈடுபட்டு வந்தனர். பாக்ஸர் முரளி வெளியில் இருந்தபோது அடிக்கடி அவர்கள் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். நாகேந்திரனை சிறையிலேயே கொலை செய்வதற்காக பாக்ஸர் முரளி பலமுறை முயற்சி செய்துள்ளார். நாகேந்திரனும் சிறையில் இருந்து கொண்டே, வெளியே இருக்கும் தனது கூட்டாளிகள் மூலம் பாக்ஸர் முரளியைக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சி செய்த நிலையில், நாகேந்திரன் - முரளி இருவரும் சிறையில் ஒரே இடத்தில் அடைக்கப்பட, அங்கேயும் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதைக் கண்காணிக்க வேண்டிய சிறைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் விளைவு சிறைக்குள்ளேயே கொலை நடந்துள்ளது.

புழல் சிறையில் இன்று கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து கைதிகளும் அவரவர் அறைகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கழிவறை பக்கமாகச் சென்று கொண்டிருந்த பாக்ஸர் முரளியை, சக கைதிகளான சரண்ராஜ், ஜோசப், ரமேஷ், கார்த்தி, பிரதீப் குமார் ஆகிய 5 பேரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர் கழிவறையில் தயாராக வைத்திருந்த தகரத்தை எடுத்து, முரளியின் கழுத்தையும், பிறப்புறுப்பையும் அறுத்தனர். உடனே சக கைதிகள் சத்தம்போடவே, சிறைக்காவலர்கள் விரைந்து வந்து, முரளியை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முரளியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறைக்குள்ளே கைதி சக கைதிகளால் கொல்லப்பட்டது குறித்து புழல் சிறைச்சாலை ஜெயிலர் அளித்த புகாரின்பேரில், புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புழல் போலீஸார் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினர், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றினர். அங்கிருந்த கைதிகளிடம் விசாரணையும் நடத்தினர்.

கொலை நடந்தது எப்படி?

ஹாலிவுட் படங்களில் சிறைக்குள்ளே கொலை நடக்கும் காட்சிகளைப் பார்த்திருக்கலாம். அது போன்று கொலை செய்ய நன்கு திட்டமிட்டு, அதற்கான ஆயுதத்தையும் அங்கேயே தயாரித்து பின்னர் அதை ஒரு இடத்தில் ஒளித்து வைத்து திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர்.

பாக்ஸ்ர் முரளி வலுவானவர் என்பதால் அவரை எளிதில் வீழ்த்த முடியாது என்பதால் ஐந்து பேர் சேர்ந்து தாக்குவது என்று முடிவு செய்துள்ளனர். பாக்ஸர் முரளியைக் கொலை செய்ய சிறைச்சாலை கழிவறையின் மேற்கூறையில் இருந்த தகரத்தை எடுத்து அதைக் கூர்மையாக மாற்றி, கழிவறையிலேயே மறைத்து வைத்துள்ளனர்.

காலை உணவுக்குப் பின் முரளி கழிவறை அருகே சென்றபோது, 5 பேரும் பின் தொடர்ந்து சென்று முரளியைத் தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் 4 பேர் முரளியை பிடித்துக்கொள்ள ஒருவர் மட்டும் முரளியின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் பிறப்புறுப்பையும் அறுத்துள்ளனர். சரியாக திட்டமிட்டு கொலையை நடத்தி முடித்துள்ளனர்.

கொலை செய்த கைதிகளான சரண்ராஜ், ஜோசப், ரமேஷ், கார்த்தி, பிரதீப் குமார் ஆகிய 5 பேரும் நாகேந்திரனின் கூட்டாளிகள். எனவே, நாகேந்திரன் தூண்டுதல் பேரில்தான் முரளி கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கருதுகின்றனர்.

கொலை செய்த ஆயுதம் கிடைக்காததால் மேற்சொன்ன ஆயுதம் அல்லது கூர்மையான கத்தி போன்ற பிளேடைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர். பாக்ஸ்ர் முரளியும், நாகேந்திரனின் கூட்டாளிகளும் எதிரெதிர் கோஷ்டி என தெரிந்தும் இரு தரப்பையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்தது ஏன்?, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் எச்சரித்த பின்னரும் கைதிகளை இடம் மாற்றாதது ஏன்? போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, டிஐஜி முருகேசன் ஆகியோர் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு பணியிலிருந்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலையில் அஜாக்கிரதையாக இருந்ததாக சில அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
உயிர் பலி வாங்கும் மெரினா கடற்கரை: 3 ஆண்டுகளின் அதிர்ச்சி புள்ளி விவரங்கள்

Published : 20 Jun 2018 20:32 IST


விவேக் நாராயண் சென்னை,

 

கோப்புப்படம்

தமிழகக் கடற்கரைகளிலேயே அதிகமான மனித உயிர்களைப் பலிவாங்கும் இடமாகச் சென்னை மெரினா கடற்கரை மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 64 பேர் பலியாகியுள்ளனர்.

ஆசியாவிலேயே அழகிய கடற்கரையை சென்னை மெரினா கடற்கரையாகும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக மெரினா கடற்கரை இருக்கிறது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் குளித்து, விளையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  ஆனால், அவ்வாறு கடலில் விளையாடுபவர்கள் அதிகமான ஆழத்தில் செல்லும்போது மிகப்பெரிய அலைகளில் சிக்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இதைத் தடுக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு, கடலில் குளிப்பவர்களை ஒழுங்குபடுத்துகின்றனர். ஆனால், அதையும் மீறி அதிதீவிர உற்சாகத்தில் குளிக்கும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.


இதைத் தடுக்கும் வகையில் சமீப காலமாகக் கடலோர பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கடலில் குளிப்பவர்களைக் கண்காணித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் கடலில் குளிக்கச் சென்று பலியான சம்பவம் சென்னை மெரினாவில் அதிகமாக நடந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் 40 பேரும், 2017-ம் ஆண்டில் 19 பேரும், 2018-ம் ஆண்டில் இதுவரை 5 பேரும் மெரினாவில் குளிக்கச் சென்று பலியாகி இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்த இடத்தில் சென்னைக்கு அருகே இருக்கும் மாமல்லபுரம் கடலில் குளிக்கச் சென்று அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு 14 பேரும், 2017-ம் ஆண்டு 16 பேரும், இந்த ஆண்டில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

விழுப்புரம் கடலில் கடந்த 2016-ம் ஆண்டு 9 பேரும், கடந்த 2017-ம் ஆண்டில் 9 பேரும் பலியாகி இருக்கிறார்கள். கடலூர் கடலில் கடந்த 2016-ல் 5 பேரும், 2017-ம் ஆண்டில் 3 பேரும், 2018-ம் ஆண்டில் இதுவரை ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் கடலில் கடந்த 2016-ல் 16 பேரும், கடந்த ஆண்டில் 12 பேரும் இறந்துள்ளனர். வேதாரண்யத்தில் கடந்த இரு ஆண்டுகளில் கடலில் குளித்து 11 பேரும், முத்துப்பேட்டையில் கடந்த ஆண்டு 2 பேரும் இறந்துள்ளனர்.

ராமேஸ்வரம் கடலில் கடந்த 2016-ல் 19 பேரும், கடந்த ஆண்டு 20 பேரும் கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி கடலில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருவரும், கடந்த ஆண்டு15 பேரும், இந்த ஆண்டு இருவரும் இறந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்து கடலோரப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், ''எங்களின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கச் சென்று மூழ்குபவர்கள்தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறார்கள். பெரும்பாலும் வெளியூரில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி சிக்கிக் கொள்கின்றனர். இங்குள்ள மீனவர்கள், போலீஸார் முடிந்தவரை கடலில் சிக்கியவர்களை மீட்கிறார்கள். அதிலும் மெரினா கடற்கரை என்பது, நதிகளின் முகத்துவாரத்தில் இருப்பதால், அங்கு அலைகளின் வேகம் அதிகமாகவும், ஆழமாகவும், நீச்சல் அடிப்பதும் கடினமாக இருக்கும். சென்னை கடற்கரையைத் தவிர்த்து கடலூர், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்கரையும் மிகவும் ஆபத்தானவை.



சுற்றுலாத்துறையுடன் இணைந்து கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக ரோந்துப் பணியிலும், உயர்கோபுரம் அமைத்தும் பயணிகளைக் கண்காணிக்கிறோம். அதிகமான படகுகள், உயிர்களைப் பாதுகாக்கும் நீச்சல் தெரிந்தவர்கள் ஆகியோர் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 21 படகுகள் இதற்காகவே உள்ளன. சென்னையில் இரு படகுகள் இருக்கின்றன. அடுத்து வரும் மாதங்களில் 19 படகுகள் வரவுள்ளன. மெரினா கடற்கரையில் மட்டும் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்க இருக்கிறோம், உயிர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நபர்களையும் நியமிக்க இருக்கிறோம்.

கடலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்க உடனடியாக கடற்கரை பாதுகாப்பு எண் 1093க்கு அழைக்கலாம். உடனுக்குடன் உதவிக்கு வருவார்கள். கடந்த ஆண்டு கடலில் சிக்கித் தவித்த 261 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.
திருடுபோன ஐபோன்; மெத்தனம் காட்டிய போலீஸார்: தானே துப்பறிந்து கண்டுபிடித்த இளைஞர்

Published : 21 Jun 2018 16:24 IST


மு. அப்துல் முத்தலீஃப் சென்னை

 


செல்போனை திருடிய பங்கஜ் குமார், துப்பறிந்து பிடித்த சிமியோன்: படம் சிறப்பு ஏற்பாடு

சென்னையில் திருடுபோன ஐபோன் பற்றிய புகாரின் மீது போலீஸார் வழக்கமான மெத்தன நடைமுறையில் ஈடுட்டதால், வேறு வழியின்றி தானே துப்பறிந்து குற்றவாளியைப் பிடித்து செல்போனை மீட்டு போலீஸிலும் குற்றவாளியை ஒப்படைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

சென்னையில் பொதுமக்களை அன்றாடம் பாதிக்கும் விஷயம் வழிப்பறி. முன்பெல்லாம் நகை பறித்துச்சென்றவர்கள் பின்னர் எளிதாக காசு பார்ப்பதற்காக செல்போனைப் பறிக்கத் தொடங்கினர். நாளடைவில் சென்னையில் செல்போன் பறிப்பு மிகச் சாதாரண நிகழ்வாக மாறிப்போனது.

செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு இரண்டையுமே போலீஸார் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை, காரணம் வாங்கியவர்கள் அதை 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அதன் மதிப்பு சில ஆயிரம் மட்டுமே என்று நினைக்கின்றனர். ஆயிரம் புகாருக்கு மத்தியில் இது ஒரு புகாரா? என்ற எண்ணம் போலீஸார் மத்தியில் உள்ளது.

இரும்புத்திரை படக்கதை நிஜமானது

அப்படி ஒரு எண்ணத்தில் போலீஸார் அணுகிய ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட இளைஞரே தானாக துப்பறிந்து தனது செல்போனை கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இரும்புத்திரை படத்தில் கதாநாயகன் விஷால் தனது சேமிப்பான ரூ.10 லட்சத்தை அநியாயமாகப் பறிகொடுத்து விடுவார்.

அவரது வங்கிக் கணக்கிலிருந்து கையாடப்பட்ட பணத்தை போலீஸிடமும் சொல்ல முடியாமல் தானே துப்பறிந்து கண்டுபிடிப்பார். இதே போன்றதொரு சம்பவம் போலீஸ் புகாரில் அலட்சியம் காட்டியபோதும் தனது சேமிப்பில் வாங்கிய செல்போனைத் தானே தேடி துப்பறிந்து கண்டுபிடித்துள்ளார் இளைஞர் ஒருவர்.

விருப்பப்பட்டு வாங்கிய ஐபோன்

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிமியோன் (23). மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். சிமியோன் தனது சேமிப்பின் மூலம் தனக்கு விருப்பமான ஐபோனை வாங்கியுள்ளார். விலை உயர்ந்த செல்போன் அவரது வருமானத்துக்கு அதிகமான ஒன்று என்றாலும் ஆசைப்பட்டதால் வாங்கி உபயோகித்து வந்தார்.

திருடுபோன செல்போன்

கடந்த 13-ம் தேதி தனது சிம் கார்டு சம்பந்தமாக சென்னை புரசைவாக்கத்திலுள்ள சிம் கார்டு ஷோரூமுக்குச் சென்றுள்ளார். அப்போது டேபிள் மீது வைத்திருந்த அவரது ஐபோன் திருடு போனது. தனது விருப்பமான செல்போன் திருடு போனதால் பதற்றமடைந்த அவர் சிம்கார்டு விற்பனை செய்யும் ஷோரூம் மேலாளரிடம் கேட்டபோது, 'அவர் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகின்றனர், நான் என்ன செய்வது?' என்று தெரிவித்தார்.

இதையடுத்து தனது செல்போன் காணாமல் போனது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தனது நண்பர் ஜாஃபருடன் சென்று புகார் அளித்தார் சிமியோன். ஆனால் போலீஸார் புகாரை வாங்கவில்லை. மூன்று நாள் போராட்டத்திற்குப் பின் ஆய்வாளர் வெறும் சிஎஸ்ஆர் மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி விட்டார்.

தனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதும், போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் ஒரு சிஎஸ்ஆர் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டதையும் கண்டு சிமியோனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானே செல்போனைத் தேடி கண்டுபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். எப்படி தேடுவது எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

தானே களத்தில் இறங்குவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து தனது நண்பரான பொறியாளர் ஜாஃபருடன் களம் இறங்கியுள்ளார் சிமியோன். முதலில் சிம் கார்டு நிறுவன மேலாளரை சந்தித்து தான் சிம் கார்டு வாங்க வந்த தேதி, நேரத்தைச் சொல்லி அந்த நேரத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளைக் காட்டும்படி கேட்டுள்ளார்.

மேலாளர், 'இதெல்லாம் போலீஸ் செய்கிற வேலை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?' என்று சலித்துக்கொண்டே கேட்க, ’சார் 30 ஆயிரம் ரூபாய் போன். வலி எனக்குத்தான் தெரியும்’ என்று கெஞ்சி சிசிடிவி பதிவுகளை வாங்கிப் பார்த்துள்ளார். அப்போது தன்னருகில் இரண்டு வட மாநில இளைஞர்கள் நிற்பதும், அவர்கள் வெளியே செல்லும்போது பதற்றத்துடன் தன்னை திரும்பிப் பார்த்துச் செல்வதும் தெரியவந்தது.

அந்தக் காட்சிகளைப் பெற்றுக்கொண்ட சிமியோன், அவர்கள் எதற்காக வந்தனர் என்று கேட்டபோது வேறு நிறுவனத்திலிருந்து சிம்கார்டை மாற்றியது தெரிய வந்தது. அவர்களது சிம் கார்டு நம்பரை வாங்கிக்கொண்ட சிமியோன் இரண்டையும் போலீஸாரிடம் கொண்டு வந்து கொடுத்து இவர்தான் தனது செல்போனை எடுத்துச்சென்றவர் என்று கூறி அவரது செல்போன் நம்பரை போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் தானே களம் இறங்கித் தேடுவது என்று முடிவு செய்து நண்பருடன் சேர்ந்து தேடத் தொடங்கி உள்ளார். இது குறித்து சிமியோனிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

போலீஸில் புகார் அளித்த பின்னர் நீங்கள் ஏன் தேட முயன்றீர்கள்?

போலீஸ் முறைப்படி புகாரைப் பெற்றார்கள். ஆனால் போலீஸுக்கு வழக்கமான நடைமுறை காரணமாக லேட்டாகும் என்பதால் நானே தேடலாம் என்று முடிவு செய்தேன். அதுவுமில்லாமல் அந்த செல்போனை நான் தவணை முறையில் வாங்கினேன், இன்னும் மூன்று தவணை பாக்கி உள்ளது. அதனால் நாமே முயன்று கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

எப்படி அந்த நபரைக் கண்டுபிடித்தீர்கள்?

முதலில் என் செல்போனை திருடிய நபர் அணைத்து வைத்திருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் அந்த நபர் வாங்கிய சிம் கார்டுக்கு போன் செய்தாலும் அதுவும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம். அந்த நம்பரை வைத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எதிலாவது இருக்கிறாரா? என்று சோதித்தபோது ஃபேஸ்புக்கில் இருப்பது தெரியவந்தது. அதில் அவர் பெயர் பங்கஜ்குமார் பிஹார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் அவர் அதிகம் செயல்படுவதாகத் தெரியவில்லை. அவருக்கு யாராவது நண்பர்கள் கமெண்ட் செய்துள்ளார்களா என்று அவர்கள் லிஸ்ட்டை எடுத்தோம்.

பின்னர் எப்படி நெருங்கினீர்கள்?

அந்த நண்பர்கள் எண்ணை எடுத்து அவர்களுக்கு போன் செய்து பங்கஜ் குமார் பற்றி மேலுக்கு விசாரித்தோம். அவர் வேலை கேட்டிருந்ததாகக் கூறி அவரை தற்போது எப்படி தொடர்புகொள்வது என்று கேட்டபோது ஒரு போன் நம்பரைக் கொடுத்தனர்.

பங்கஜ் குமாருக்குப் போன் செய்து வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் பேசி எங்கு வேலை செய்கிறாய் என்று கேட்டோம். ஆனால் மாதவரம், பர்னிச்சர் கடை என்று சொன்ன பங்கஜ்குமார் திடீரென உஷாராகி செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

இது பற்றி போலீஸில் கூறினீர்களா?

போலீஸில் அனைத்து விவரங்களையும் அளித்து, சிசிடிவி பதிவுகளையும் அளித்து விபரமாகச் சொன்னேன். ஆனால் எனக்கு என் செல்போன் உடனே கிடைக்க வேண்டும், போலீஸாரின் நடைமுறை எப்படி எனக்கு தெரியாது, ஆகவே கையில் கிடைத்த துப்புகளை வைத்து அந்த நபரைப் பிடித்துவிட வேண்டும் தப்ப விட்டுவிடக்கூடாது என்ற வேகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நள்ளிரவில் நானே கிளம்பி விட்டேன்.

செல்போன் திருடிய நபர் சிக்கினாரா?

இரவு முழுதும் மாதாவரம் பகுதியில் சுற்றினோம், அப்போது பர்னிச்சர் கடையில் வட மாநில இளைஞர்கள் அதிகம் வேலை செய்யும் கடை பற்றிய தகவல் கிடைத்தது. நள்ளிரவு ஆனதால் அதிகாலையில் அங்கு சென்றோம். ஏராளமான வட மாநில இளைஞர்கள் அங்கு இருந்தனர். அனைத்து முகங்களும் ஒரே மாதிரியாகத் தெரிந்தன.

ஆனாலும் சிசிடிவி பதிவில் இருந்த பங்கஜ் குமார் முகம் எனக்கு நன்றாக நினைவிருந்தது. சரியாக 6.30 மணிக்கு வேறொரு நபருடன் போயஸ் கார்டனில் வேலைக்குச் செல்ல வாகனத்தில் ஏற வந்த பங்கஜ் குமாரைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டேன்.

பங்கஜ் குமார் ஒப்புக்கொண்டாரா?

முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் நான் சிஎஸ்ஆர் காப்பியைக் காட்டினேன், அவரது முதலாளி அதைப்பார்த்து மிரட்டி கேட்டவுடன் ஒப்புக்கொண்டார். போனையும் கொண்டு வந்து கொடுத்தார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் திருட்டு குற்றத்தில் பங்கஜ் குமாரை கைது செய்தனர்.

உங்கள் அறிவு சாதூர்யம் வியக்க வைக்கிறது, ஆனால் அந்த நபர் கொடூரக் குற்றவாளியாக இருந்திருந்தால் உங்கள் நிலை என்னவாகியிருக்கும்?

இதைத்தான் அனைவரும் சொன்னார்கள், ஆனாலும் எனக்கு என் செல்போன் வேண்டும், கடன் தவணை கூட முடியாத நிலையில் காணாமல் போனது என்னால் தாங்க முடியவில்லை. அது ஒருவகை குருட்டு தைரியம் தான், ஆனால் இதன் மூலம் சாதித்துவிட்ட திருப்தி இருக்கிறது. என்று ஆர்வத்துடன் சிமியோன் தெரிவித்தார்.

போலீஸாரின் வழக்கமான நடைமுறை தாமதத்தால் திருட்டு கொடுத்த செல்போனை சாமர்த்தியமாக துப்பறிவாளர் மன நிலையில் தேடி சாதூர்யமாக பேசிக் கண்டுபிடித்த இளைஞரை பாராட்டினோம்.

இந்த சம்பவம் மூலம் போலீஸாருக்கு ஒரு சவால் மறைமுகமாக விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண குடிமகனால் தனது காணாமல் போன செல்போனை ஒரு வாரத்தில் நெருங்க முடிகிறது. மிகப்பெரும் தகவல் தொழில் நுட்பம் ஆள்படை உள்ள போலீஸார் இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்பதே அந்த சவால்.
நான்கு வழிச்சாலை ரூ. 50 கோடியில் சீரமைப்பு

Added : ஜூன் 22, 2018 00:09

விருதுநகர், மதுரையில் இருந்து விருதுநகர் வரையிலான நான்கு வழிச்சாலை ரூ. 50 கோடியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.விருதுநகர் மாவட்ட பகுதியான கே.உசிலம்பட்டியில் நேற்று சீரமைப்பு பணி நடந்தது. அங்கிருந்து புல்லலக்கோட்டை பாலம் வரை இப்பணி நடக்க உள்ளது. பணி நடப்பதால் நான்குவழிச்சாலையின் ஒருபுறம் மட்டும் போக்குவரத்து நடக்கிறது. தேசியநெடுஞ்சாலை தொழில்நுட்ப மேலாளர் மதிவாணன், ''சமயநல்லுார் முதல் விருதுநகர் வரை உள்ள 8.75 மீட்டர் அகலம் உள்ள 48 கி.மீ., சாலையை சீரமைக்கும் பணியில் 40 பேர் ஈடுபட்டு உள்ளனர். விருதுநகர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலையை மூன்று பிரிவுகளாக பிரித்து சீரமைப்பு பணி நடக்க உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இப்பணி துவங்கும்,'' என்றார்.
தாய்ப்பால் ஊட்டும் அட்டை படம்ஆபாசம் இல்லை என கோர்ட் அதிரடி

Added : ஜூன் 21, 2018 20:15



புதுடில்லி: குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் புகைப்படத்தை, அட்டையில் பிரசுரித்த மலையாள பத்திரிகையின் மீது போடப்பட்ட வழக்கை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மாத்ருபூமி' நாளிதழ் நிறுவனத்தில் இருந்து, 'கிருஹலஷ்மி' என்ற வார இதழ் வெளியாகிறது.இதன் சமீபத்திய இதழின் அட்டையில், ஒரு பெண், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை போன்ற புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் கட்டுரை, அந்த இதழில் வெளியானது.அந்த அட்டைப் படத்துக்கு, கிலு ஜோசப், 27, என்ற பெண், 'மாடலாக' நடித்திருந்தார்; இதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில், மிகப்பெரிய விவாதத்தை, இந்த அட்டைப் படம் ஏற்படுத்தியது. கிலு ஜோசப், ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.இந்த அட்டைப் படம், பெண்களை தரக்குறைவாக சித்தரிப்பதாகவும், அதில் பாலியல் தன்மை அதிகம் இருப்பதாகவும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பெலிக்ஸ் என்பவர், அந்த அட்டைப் படத்தில், பால் குடிப்பதைப் போல நடிக்க வைக்கப்பட்டு இருக்கும் குழந்தை, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்தார்.இதையடுத்து, பத்திரிகை மீதும், அதில் நடித்திருந்த கிலு ஜோசப் மீதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆண்டனி டோமினிக் மற்றும் நீதிபதி, தாமா சேஷாத்திரி நாயுடு ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:மனித உடலை, இந்திய கலைஞர்கள், எப்போதுமே கொண்டாடுகின்றனர்; அதற்கு, ராஜா ரவிவர்மா ஓவியங்கள், அஜந்தா சிற்பங்கள் ஆகியவையே சான்று.ஆபாசம் என்பது, பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது. ஒருவர் கண்களுக்கு அழகாக தெரிவது, மற்றொருவர் கண்களுக்கு ஆபாசமாக தெரியலாம். எனவே, அந்த அட்டைப் படத்தில் பிரசுரமான புகைப்படம், எந்தவிதத்திலும், பெண்களை இழிவுபடுத்துவதைப் போல இல்லை; எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அரசு மருத்துவமனையில் டாக்டருடன் கைகலப்பு

Added : ஜூன் 21, 2018 23:13

தஞ்சாவூர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டாக்டரும், ஆண் செவிலியரும், ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால், ஏற்பட்ட களேபரத்தில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல், ஒரு மணி நேரம் பரிதவித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின்,குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் ரவிச்சந்திரன், 50.இவர், நேற்று முன்தினம் காலை குழந்தைகள் நலப்பிரிவுக்குள் சென்ற போது, வெளியே வந்த ஆண் செவிலியர் முகமதுபாரூக்,50, என்பவரிடம், 'உன்னை, யார் இங்கே வரச் சொன்னது' என டாக்டர் கேட்டுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கை கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் சாம்பசிவத்திடம், ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.நேற்று காலை, அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்த டாக்டர்கள், 'பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். செவிலியர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, ஒரு மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக, கண்காணிப்பாளர் உறுதியளித்ததை அடுத்து, டாக்டர்கள் மீண்டும் பணியை தொடர்ந்தனர்.இந்த சம்பவத்தால், நேற்று காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
கலப்பு திருமண தம்பதிக்கு அவமதிப்பு பாஸ்போர்ட் அதிகாரி, 'டிரான்ஸ்பர்'

Added : ஜூன் 21, 2018 20:13



லக்னோ,:உ.பி.,யில், பாஸ்போர்ட் எடுக்க வந்த, கலப்பு திருமண தம்பதியை, மத ரீதியாக அவமானப்படுத்திய, 'பாஸ்போர்ட்' அதிகாரி, அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நொய்டாவை சேர்ந்தவர், முகமது அனாஸ் சித்திக். இவரது மனைவி, தன்வி சேத். நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில், இருவரும் பணிபுரிகின்றனர்.முஸ்லிம் மதத்தை சேர்ந்த சித்திக்கும், ஹிந்து மதத்தை சேர்ந்த தன்வியும், 2007ல், காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.சித்திக், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காகவும், தன்வி, புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கும், விண்ணப்பித்து இருந்தனர்.

வேடிக்கை

இதற்காக, இருவரும், நேற்று முன்தினம், நொய்டாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்றனர்.அப்போது, தன்வி சேத்தின் விண்ணப்பத்தை பார்த்த, விகாஸ் மிஸ்ரா என்ற பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி, 'இஸ்லாமியரை மணந்த நீங்கள், ஏன் இன்னும் மதம் மாறவில்லை; பெயரையும் மாற்றிக் கொள்ளவில்லை?' என, கேட்டுள்ளார்.கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறி, அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்றினால் மட்டுமே, பாஸ்போர்ட் வழங்க முடியும் எனக் கூறி, அவர்களது விண்ணப்பத்தை நிலுவையில் வைத்தார்.தன்வி சேத்தை, அவமானப்படுத்தும் விதமாக, அந்த அதிகாரி சத்தம் போட்டு பேசியதை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் பலரும் வேடிக்கை பார்த்தனர்.இதனால், அவமானத்துக்கும், கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளான, தன்வி சேத், இந்த சம்பவம் குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜுக்கு, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' வாயிலாக புகார் அளித்தார்.

பணியிட மாற்றம்

இதையடுத்து, அமைச்சர் சுஷ்மாவின் உத்தரவின் அடிப்படையில், விகாஸ் மிஸ்ரா என்ற அந்த பாஸ்போர்ட் அதிகாரி, அதிரடியாக நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, வெளியுறவு அமைச்சகம் சார்பில்,'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கிடையே, சித்திக்கின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும், தன்விக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கவும், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

NEWS TODAY 25.07.2026