Friday, June 22, 2018

அரசு மருத்துவமனையில் டாக்டருடன் கைகலப்பு

Added : ஜூன் 21, 2018 23:13

தஞ்சாவூர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டாக்டரும், ஆண் செவிலியரும், ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால், ஏற்பட்ட களேபரத்தில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல், ஒரு மணி நேரம் பரிதவித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின்,குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் ரவிச்சந்திரன், 50.இவர், நேற்று முன்தினம் காலை குழந்தைகள் நலப்பிரிவுக்குள் சென்ற போது, வெளியே வந்த ஆண் செவிலியர் முகமதுபாரூக்,50, என்பவரிடம், 'உன்னை, யார் இங்கே வரச் சொன்னது' என டாக்டர் கேட்டுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கை கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் சாம்பசிவத்திடம், ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.நேற்று காலை, அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்த டாக்டர்கள், 'பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். செவிலியர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, ஒரு மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக, கண்காணிப்பாளர் உறுதியளித்ததை அடுத்து, டாக்டர்கள் மீண்டும் பணியை தொடர்ந்தனர்.இந்த சம்பவத்தால், நேற்று காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026