Sunday, November 2, 2014

மூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்!

நாட்டு விடுதலைக்காகப் போராடி வெள்ளையனை விரட்டிய காங்கிரஸ் கட்சியில் நடக்கும் குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடக்காத அளவில், தமிழ் நாட்டுக் காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி உள்ளதை, தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. 

கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள்  நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது கருத்து தெரிவித்த ஜி.கே.வாசன் த.மா.கா.  மீண்டும் உருவாகும் என்ற கேள்வி பொழுது போக்கானது என்று கூறி இருந்தார்.
அநத சமயத்தில் நாடளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. அதனால் அப்போது இதற்கான முக்கியத்துவம் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்த சூழலில் தமிழக அரசியல் களத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு, குறிப்பாக ஜி.கே. வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பழைய தலைமுறைக்கு பதிலாக புதிய வீச்சோடு புறப்படும் இளம் தலைமுறை தொண்டர்களின் தேவை உருவாகி உள்ளதாலேயே இந்த சூழல் தோன்றி உள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

அந்த வகையில்,மறைந்த கருப்பையா மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்க காரணம் என்ன? அந்த கட்சி சாதித்தது என்ன? தொடர்ந்து இந்திய காங்கிரசில் ஐக்கியமானது எதனால்? என்பது குறித்த ப்ளாஷ்பேக் இது...

1931 ஆகஸ்ட் 19 ஆம் தேதி  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில்கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.கே.மூப்பனார். இளம் வயதில் இருந்தே காங்கிரஸ் இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்த மூப்பனார், தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக 1965 ல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்புகளை வகித்த அவர் ராஜ்ய சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு   சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். அதனையடுத்து  ஜி. கே. மூப்பனார் தனது தலைமையில் எதிர்ப்பாளர்களை அணி திரட்டி  ”தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற பெயரில் புதிய கட்சியைத்  தொடங்கினார்.

கட்சித் தொடங்கிய உடனே  தேர்தலைச்  சந்தித்த  த.மா.க., 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. அத்தோடு சட்டமன்ற தேர்தலுடன்  நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும்  20 இடங்களில் வென்றது. இந்த வெற்றிக்கு, திமுக - தமாகா  கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த "வாய்ஸும்' பக்க பலமாக இருந்தது.
1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் சார்பில்  ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர்.

பின்னர்,1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. பின்னர் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளால்  1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை விட்டு வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தமிழக அரசியலில் வளர்ந்து வந்த இயக்கமான  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் , புதிய தமிழகம் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்தத்  தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை.

தொடர்ந்து  2001 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களைப்  பிடித்தது. இந்நிலையில், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூப்பனார் மறைந்தார். பின்னர் அவரின்  மகன் ஜி. கே. வாசன் த.மா.க. வின்  தலைவரானார். ஜி.கே வாசனின் தலைமைக்குப் பிறகு டெல்லி தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டால்,  2002 ஆம் ஆண்டில்  த.மா.க. இந்திய தேசியக் காங்கிரசுடன் ஐக்கியமாகி விட்டது.

இதுதான் 12 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சுருக்கமான வரலாறு.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் வருவதற்கான சூழல் தோன்றியுள்ளதைக் காட்டுவதாகவே உள்ளது.  இவற்றையே இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில்  ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சூசகமாக உணர்த்தி  உள்ளார்.

அவ்வாறு தனிக்கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில் அது பழைய தமிழ் மாநில காங்கிரஸ்  என்ற நாமகரணத்தை கொண்டிருக்குமா அல்லது இன்றைய தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, காங்கிரஸ் என்ற வார்த்தையே இல்லாதவாறு, புதிய நாமகரணத்தை கொண்டிருக்குமா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

- தேவராஜன்

No comments:

Post a Comment

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra Published On 4 Apr...