Tuesday, March 15, 2016

குவியும் மின்னணுக் கழிவுகள்

குவியும் மின்னணுக் கழிவுகள்
By எஸ். சந்திரசேகர்
First Published : 15 March 2016 01:27 AM IST
சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் எடுத்துள்ள கணக்கெடுப்பில், மக்கிப் போகாத கழிவுகளில் பாலிதீன் பைகளுக்கு அடுத்த இடத்தில் மின்னணு மற்றும் மின்பொருள் கழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, தயாரிப்பு நிறுவனங்களே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்
துள்ளது.
திறன்மிகு தொழிலாளர்கள் இல்லாததும், பயன்படுத்தி வீசியெறியும் கலாசாரமும் (யூஸ் அண்டு த்ரோ)தான் இதற்கு முக்கிய காரணம்.
உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்விசிறிகள் பழுது என்றால் அவற்றில் "பேரிங்', "கண்டன்சர்', "வைண்டிங்' அல்லது இணைப்புகளில் தான் பழுது ஏற்பட்டிருக்கும். பழுதை நீக்கி மீண்டும் செயல்பட வைத்துவிடுவார்கள்.
ஆனால், இப்போது சிறு பழுது என்றால் கூட மின்விசிறியையே தூக்கியெறிந்துவிட்டு, புதிதாக மாற்றும்படி தொழிலாளர்கள் கூறத் தொடங்கிவிட்டனர். அதற்குக் காரணம், அதில் பழுது நீக்கும் திறன் இல்லாதது மற்றும் அதற்கான நேரம் இல்லாதது.
மின்விசிறி உள்ளிட்ட பொருள்களில் "ரீவைண்டிங்' செய்து மீண்டும் ஓட வைக்கும் வழக்கம் வழக்கொழிந்து வருகிறது. "ரீவைண்டிங்' செய்தால் அதிக நாள் உழைக்காது என்று கூறி புதியதை வாங்க வைத்து விடுகின்றனர். அதற்கேற்ப முன்புபோல் ரீவைண்டிங்குகளை தரமாக செய்வதற்கான தொழிலாளர்கள் இல்லை. மேலும், கட்டணமும் அதிகரித்துவிட்டது.
பழுதை நீக்குவதற்கு, செலவழிப்பதற்குப் பதில் புதியதை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதன் விளைவாக, கழிவுகள் அதிகரித்து வருகின்றன. மின்விசிறிகள், "மிக்ஸிகள்', "கிரைண்டர்கள்', தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் என மின் பொருள் கழிவுகள் அனைத்து பழைய இரும்புக் கடைகளிலும் காணப்படுகின்றன. வீடுகளிலும் இடத்தை அடைக்காமல் கிடைத்த விலைக்கு தள்ளிவிடுவோம் என எடைக்குப் போட்டுவிடுகின்றனர்.
மின் பொருள்களுக்குத்தான் இந்த நிலை என்றில்லை. அதைவிட அதிகமாக மின்னணு கழிவுகள் தொல்லை தருகின்றன. ஆரம்பகாலத்தில் வந்த சலவை இயந்திரங்கள் அனைத்தும் இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்டவை. "ஸ்ப்ரிங்' கடிகாரத்தை அடிப்படையாக் கொண்ட "டைமர்' என்ற கருவியின் மூலம் அவை இயங்கின. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்ததும், அவை மின்னணு முறைக்கு மாற்றம் பெற்றன.
இயந்திரத்தின் செயல்பாடு முற்றிலும் மின்னணு பலகைகளால் ("போர்டு') கட்டுப்படுத்தப்படுகிறது. லேசான மின்சார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் கூட இந்த பலகைகள் பழுதடைகின்றன. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பலகைகளையும் பழுது பார்க்க முடிந்தது.
ஒவ்வொரு ஊரிலும் இதற்கான திறன்மிக்க ஓரிரு தொழிலாளர்கள் இருந்தனர். இயந்திர தயாரிப்பு நிறுவன பழுதுநீக்கும் மையத்திலும் பழுது நீக்கிக் கொடுத்தனர்.
ஆனால், தற்போதுள்ள பலகைகளில் எதுவும் செய்ய முடியாது. பலகை பழுதானால் அதை மாற்றிவிட்டு, புதியதைத்தான் பொருத்த வேண்டும். தயாரிப்பு நிறுவனங்களின் பழுதுநீக்கும் மையங்களும் அதைத்தான் செய்கின்றன. அப்படியானால் அந்த பழைய பலகை... அது வீசியெறியப்படுகிறது.
பண்டிகைக் காலங்களில் அனைத்து நிறுவனங்களும் உபயோகித்த பொருள்களை "எக்சேஞ்ச்' என பெற்றுக்கொள்ளும். அவற்றில் பெரும்பாலானவை அந்த நிறுவனங்களால் பெறப்படுபவை அல்ல. அந்தந்த ஊர்களில் உள்ள பழம்பொருள் விற்பனையாளர்கள் தான் விலை வைத்து பெற்றுக்கொள்வார்கள்.
பயன்படுத்திய பொருள்கள் சந்தை மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வந்தது. 10 ஆயிரம் ரூபாய்க்கு புது குளிர்சாதனப்பெட்டி விற்கும்போது, பயன்படுத்திய பெட்டியை 3 ஆயிரத்துக்கு இவர்கள் விற்பார்கள். நடுத்தர வர்க்கத்துக்கு அது பயன்பட்டு வந்தது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பொருள்களில் இருந்த தரம் இப்போதுள்ள பொருள்களில் இல்லை. இதனால் பயன்படுத்திய பொருள்களை வாங்குவோர் அவற்றுடன் போராடவேண்டிய நிலை உருவானது.
பல வீடுகளில் அந்தக் காலத்தில் பாடல் கேட்கும், விடியோ பார்க்கும் மின்காந்த நாடாக்களை (கேசட்கள்) என்ன செய்வது எனத் தெரியாமல் சேர்த்து வைத்துள்ளனர். இப்போது அவற்றுடன் குறுந்தகடுகளும் சேர்ந்து கொண்டுவிட்டன.
இந்தக் கழிவுகளே குவிந்து வரும் நிலையில் "மிக்ஸி', "கிரைண்டர்', மின்விசிறி போன்றவையும் கழிவுகளாகக் குவியும் போது அவற்றை அழிப்பதே சவாலான விஷயமாகிறது. இந்த நிலையில் மின்னணு கழிவுகளும் குவியும்போது எப்படி அழிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு மருத்துவமனைகள் உதவியுடன் தனி அமைப்பு செயல்பட்டு வருவது போன்று, மின்சாதன, மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கு எந்த அமைப்பும் இல்லை.
குறுந்தகடுகளை சாலைகளில் வீசுகின்றனர். அதில் உள்ள பிளாஸ்டிக், ரசாயனப்பூச்சு என அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. அவற்றை மொத்தமாகக் குவித்து தீ வைத்து விடும்போக்கே உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் நச்சுக்காற்று பரவுகிறது.
இந்தக் கழிவுகளை மேலாண்மை செய்ய தயாரிப்பு நிறுவனங்களே ஏற்பாடு செய்யலாம். "எக்சேஞ்சில்' பெறப்படும் பொருள்களை பழுதுநீக்க திறன் மிக்க தொழிலாளர்களை நிறுவனங்கள் உருவாக்க
வேண்டும்.
பழுதுநீக்கி தரப்படுத்தி அவற்றை பழுது நீக்கப்பட்ட பொருள் என்றே விலையைக் குறைத்து உத்தரவாதம் வழங்கி விற்கலாம். இதன்மூலம் கழிவுகள் பெருமளவு குறைக்கப்படும்.
மின்னணு பலகை உள்ளிட்ட பொருள்களையும் பழுதுநீக்கி பயன்படுத்தும் விதத்தில் தயாரித்தால், அந்தக் கழிவுகளையும் தவிர்க்கலாம். குறுகிய லாப நோக்கங்களை விடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே இது சாத்தியம்... நடக்குமா?

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...