Monday, August 21, 2017

இலவச வில்லங்க சான்று சேவை திடீர் முடக்கம்?

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:25

சொத்துக்களின் முந்தைய பரிவர்த்தனை விபரங்களை, இலவசமாக மக்கள் அறிந்து கொள்ள, பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்ட, வில்லங்க சான்று அறியும் சேவை திடீரென முடங்கி உள்ளது. தமிழகத்தில், புதிதாக வீடு, மனை வாங்குவோர், அது குறித்த முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெற வேண்டும். சொத்து அமைந்துள்ள பகுதிக்கான, சார் - பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, அதை பெறலாம். இதில், ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக அறிந்து கொள்ள, புதிய வசதி பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டது. சொத்து உரிமையாளர்கள் நில மோசடியில் இருந்து தப்பிக்க இது, பேருதவியாக அமைந்தது.
இந்த சேவை, தற்போது, திடீரென முடங்கி உள்ளது. பதிவுத்துறை இணையதளத்தில், இதற்கான பகுதியில் உரிய தகவல்களை அளித்தால், வில்லங்க சான்று விபரங்கள் வருவதில்லை. இதனால், பொதுமக்களுக்கு, சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலவச வில்லங்க சான்று சேவை திடீரென முடங்கியது குறித்து, தொழில்நுட்ப பிரிவிடம் விசாரித்து வருகிறோம். ஆன் - லைன் முறையில் பத்திரப்பதிவு செய்வதற்காக, பதிவுத்துறை இணையதளத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால், இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறோம்' என்றார். பதிவுத்துறை தலைமையகத்தில், கூடுதல், ஐ.ஜி., நிலையில் உள்ள சில அதிகாரிகள், இந்த இலவச வசதியை கட்டண சேவையாக்க முயன்று வருகின்றனர். அவர்களின் தலையீட்டால், இந்த சேவை முடக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகமும், துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது.

-நமது நிருபர் -

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...