Wednesday, August 30, 2017

திருமணத்திற்கு முன்தினம் இரவு மண்டபத்தில் இருந்து காதலனை தேடி ஓடிய மணப்பெண் ஏமாற்றத்துடன் திரும்பிய அவலம்
2017-08-30@ 01:09:17

DINAKARAN




திண்டிவனம் : திருமணத்திற்கு முன்தினம் இரவு காதலனை தேடி மண்டபத்தில் இருந்து ஓடிய மணப்பெண், குறிப்பிட்ட இடத்தில் அவனை காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். அதற்குள் மணமகனும் வெளியேறியதால் திருமணம் நின்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் சிலம்பரசி(24). திண்டிவனம் வண்ணாரபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முருகன்(24). இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். பள்ளி படிப்பு முடிந்த பிறகும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் கண்டித்த சிலம்பரசியின் பெற்றோர், மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிலம்பரசிக்கும், அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை அச்சிறுப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

அதற்கு முன்தினம் மாலை மண்டபத்திற்கு பெண் வீட்டார் வந்து தங்கினர். அன்றிரவு சிலம்பரசிக்கு போன் செய்த அவரது காதலன் முருகன், அச்சிறுப்பாக்கம் மலையடிவாரத்தில் நிற்பதாகவும், நீ உடனே வந்தால் இருவரும் ஊரை விட்டு போய் திருமணம் செய்து கொள்வோம் என்று அழைத்து இருக்கிறார். இதை நம்பி சிலம்பரசியும் நள்ளிரவில் மண்டபத்தை விட்டு வெளியேறி காதலனை தேடி சென்றார். மறுநாள் காலை மணப்பெண்ணை அலங்காரம் செய்ய தேடியபோது சிலம்பரசியை காணவில்லை. இதனால் பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. தகவலறிந்து மணமகன் வீட்டார் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர். திருமணம் நின்றதால் உறவினர்களும் கலையத் தொடங்கினர்.

இதனிடையே மதியம் வரை காதலனுக்காக காத்திருந்த சிலம்பரசி, அவர் வராததால் ஏமாற்றம் அடைந்து, மீண்டும் திருமண மண்டபத்துக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறியழுதார். இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிலம்பரசி தன்னை ஏமாற்றிய காதலன் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...