Wednesday, May 23, 2018

வவ்வால் கடிச்ச பழமாக இருக்குமோ?'நிபா' பீதியால் விற்பனை சரிவு!

Added : மே 23, 2018 01:07

பெ.நா.பாளையம்;கேரளாவில் 'நிபா' வைரஸ் பீதி காரணமாக, கோவை பழக்கடைகளில் விற்பனை சரிந்துள்ளது.அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் பீதி, தமிழகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனைகட்டி உள்ளிட்ட, தமிழக - கேரள பகுதிகளில், சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் சிகிச்சை பெறுபவர்களின் முகவரிகளை, சுகாதாரத்துறையினர் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
நிபா வைரஸ், பழங்கள் வாயிலாக பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், பழங்கள் வாங்குவதில் மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழக்கடைகளில், பழ விற்பனை வழக்கத்தை விட, நேற்று குறைவாக இருந்ததாக, பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பழ வியாபாரி ஒருவர் கூறுகையில்,'விற்பனையில் பெரிதாக பாதிப்பு இருப்பதாக கூற முடியாது என்றாலும், நேற்றைய தினத்தை விட, இன்று(நேற்று) விற்பனை சற்று குறைவுதான். இதற்கு நிபா வைரஸ்தான் காரணம் என்று கூறி விட முடியாது. எதுவாக இருந்தாலும், பழங்களை நன்கு கழுவி உண்டால், எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறியதாவது:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இருந்தால், அவரது சுற்றுச்சூழல் எத்தகையது என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக, காடு மற்றும் பழ மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்து வருபவராக இருந்தால், அவரை உடனடியாக அரசு ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து வவ்வால்களும் நிபா வைரசால், பாதிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. ஆகவே, பயப்படத் தேவையில்லை. தற்போதைய சூழலில், அடிபடாத பழங்களை தேர்வு செய்து உண்பதே நல்லது. லேசாக அடிபட்ட பழம் என்று, வியாபாரி கூறும் பழம், வவ்வால் கடித்ததாக இருக்கலாம். பழக்கடைகளில் அடிபட்ட பழங்களை, விலை குறைவாக தருகிறார்கள் என வாங்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் முகமது அலி கூறுகையில்,''இந்த நோய்க்கான வைரஸ், 5 முதல் 14 நாட்கள் வரை, மனித உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், சோர்வு, தலைவலி, மயக்கம் இதன் அறிகுறிகள். ''இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அதற்கு பொருத்தமான சிகிச்சையை, உடனடியாக பெற வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...