Wednesday, May 2, 2018

‘கேரளாவில்தான் இப்படி நடக்கும்’: மே தினத்தில் நடத்துநராக மாறிய போக்குவரத்துக் கழக இயக்குநர்

Published : 01 May 2018 18:02 IST

ஐஏஎன்எஸ் திருவனந்தபுரம்




கேரள போக்குவரத்துக்கழகத்தின் இயக்குநர் தச்சங்காரி பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய காட்சி - படம் உதவி: ட்விட்டர்

கேரள போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநில போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநர் நீண்ட தொலைவு செல்லும் அரசுப் பேருந்தில் இன்று நடத்துநராகப் பணியாற்றினார்.

கோட், சூட் என்று மிகவும் மிடுக்கான தோற்றத்தில் இருக்கும் போக்குவரத்து இயக்குநர் தோமின் தசங்காரி திடீரென நடத்துநருக்கான சீருடையை அணிந்து பேருந்து நிலையத்துக்கு வந்ததும் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஐஏஎஸ் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி நடத்துநராக வந்ததும் மக்களும் பதற்றமடைந்தனர்.

அதன்பின் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லா செல்லும் அரசுப் பேருந்தில் டிக்கெட்டுகளுடன் ஏறிய தஞ்சங்காரி நடத்துநராக தனது பணியைத் தொடங்கினார். உதவிக்கு அலுவலர்கள் வந்தபோதும் யாரும் தன்னுடன் வரத்தேவையில்லை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

தன் கையில் இருந்த விசிலை ஊதி, 'ரைட் போய்க்கோ' என்று சொல்லிக் கிளப்பினார்.

கேரள போக்குவரத்துத் துறை நீண்ட ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை இழப்பில் இருந்து மீட்க முடியாமல் அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இயக்குநராக கடந்த மாதம் தஞ்சங்காரி நியமிக்கப்பட்டார்.

அரசு போக்குவரத்துக்கழகத்தின் நஷ்டத்துக்கான காரணத்தை அலுவலகத்தில் இருந்து கவனித்தால் தெரியாது என்பதை உணர்ந்த இயக்குநர், நடத்துநராக, ஓட்டுநராக இருந்தால் என்னவிதமான சிரமங்கள் இருக்கின்றன பேருந்துகள் ஓடக்கூடிய தகுதியில் இருக்கிறதா என்பதை அறிய முடிவு செய்தார். இதையடுத்து, மே தினமான இன்று நடத்துநராக தனது பணியைத் தொடங்கினார்.

இது குறித்து போக்குவரத்துக் கழக இயக்குநர் தோமின் தச்சங்காரி நிருபர்களிடம் கூறியதாவது:

''போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநரான நான் நடத்துநராக இன்று பணி செய்வதைப் பார்த்து சிலர் சிரிக்கலாம். ஆனால், உண்மையில் நான் போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் கொண்டு வர இதை செய்துவருகிறேன். முறைப்படி நடத்துநர் உரிமம்பெற்று இப்போது நடத்தநராக இன்று ஒரு நாள் பணியாற்றுகிறேன், அடுத்து ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். கிடைத்தவுடன் ஓட்டுநராகவும் ஒருநாள் பணியாற்றுவேன்.

கேரள போக்குவரத்துக் கழகத்தில் 32 ஆயிரம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் சிரமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பேருந்துகளின் தரத்தை உயர்த்தி, பழுதுகள் நீக்கப்படும். தனியார் பேருந்துகளின் தரத்துக்கு இணையாக கேரள அரசு பேருந்துகளும் விரைவில் சீரடையும். ஊழியர்களுக்கு ஊதியம், போனஸ், பிஎஃப் போன்றவற்றை கொடுப்பதில் சிரமமாக இருக்கும் சூழலை விரைவில் மாற்றி, லாபத்தில் கொண்டுவருவேன்.''

இவ்வாறு தோமின் தச்சங்காரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...