Thursday, September 12, 2019

சிங்கப்பூர் பெண்ணுடன் சென்னிமலை வாலிபர், 'டும்டும்!'

Added : செப் 11, 2019 22:10

சென்னிமலை : சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் பெண்ணை, சென்னிமலை வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, பசுவப்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மோகன்குமார், 31; பிஎச்.டி., பட்டதாரி. இவர், சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி பிரிவில், சீனியர் ஆராய்ச்சி இன்ஜினியராக பணிபுரிகிறார்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், ராசாம்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர், மூன்று தலைமுறைகளுக்கு முன், சிங்கப்பூர் சென்று, வாழ்ந்து வருகின்றனர்.அந்த குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி, 26, என்பவரும், மோகன்குமாரும் காதலித்து வந்தனர். இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர், ஒரு வாரத்துக்கு முன், கோவை வந்து தங்கினர்.நேற்று, காங்கேயம் நால்ரோடு அருகேயுள்ள, மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன், பட்டு வேட்டி,- சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, உற்றார், உறவினர்கள் வாழ்த்த, திருமணம் நடந்தது.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள், டாக்டர், எம்.எஸ்., உதயமூர்த்தி எழுதிய, 'எண்ணங்கள்' புத்தகம், இலவசமாக வழங்கப்பட்டது.

மணமகள் தனலட்சுமி கூறுகையில், ''நான், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தை படித்துள்ளேன். இதுவரை தமிழகம் வந்தது இல்லை.''இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகு முறை, உபசரிப்பு போன்றவை, மிகவும் பிடித்துஉள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026