Thursday, September 12, 2019

தஞ்சாவூர் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

By DIN | Published on : 12th September 2019 02:52 AM


தஞ்சாவூர்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புக் குழு செயலாளர் ஜி.அரவிந்த் குமார் தாக்கல் செய்த மனு: 

தஞ்சாவூர்-நாகப்பட்டினம் இடையே தற்போது உள்ள சாலை பழுதடைந்து மோசமான சூழலில் உள்ளது. 

இந்த தேசிய நெடுஞ்சாலை 67-ஐ சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.601 கோடி செலவில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனியாருக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது. ஆனால், இந்தப் பணிகள் பல மாதங்களாக முடங்கியுள்ளது. 

இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை விரிவுப்படுத்தப்பட்டு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தால் பயண நேரம் வெகுவாக குறையும். 

மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். எனவே, இந்த சாலை சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் பல மாதங்களாக முடங்கி கிடக்கிறது. மணல் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு என பல்வேறு காரணங்களை மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. 

இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியவில்லை. எனவே, இந்தப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. 

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பணிகளை விரைவாக முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரர் அனுப்பிய கோரிக்கையை ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்த நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...